அரசியல்

Tuesday, December 29, 2015

பெற்றோர் பிள்ளை உறவு என்பது புளியம் பழத்தைப் போன்றது.

பெற்றோர் பிள்ளை உறவு என்பது புளியம் பழத்தைப் போன்றது.

ஆம். புளியம் பழத்தைப் பார்த்து பெரியவர்கள் பெற்றவர்கள் பாடம் கற்க வேண்டும்.....................
புளியம் பழம் பிஞ்சாக, காயாக இருக்கும் போது அதன் ஓடும், உள்ளிருக்கும் பழமும் சுளையும் பின்னிப் பிணைந்து பிரிக்க-முடியாமல் இருக்கும். அதே காய் முற்றமுற்ற ஓடு சுளையிலிருந்து மெல்ல மெல்ல விலகும் நன்றாக முற்றி பழுத்ததும் ஓடும் சுளையும் தொடர்பற்று தனித்தனியே நிற்கும். என்றாலும் அந்த ஓடு உள்ளிருக்கும் சுளைக்கு கவசமாய் இருந்து காக்கும்.
இந்த முறையில் தான் பெற்றோர் பிள்ளை உறவும் இருக்க வேண்டும்.
அதாவது, பிள்ளைகள் பிஞ்சாக இருக்கும்போது பெற்றோர் பின்னிப் பிணைந்து அவர்களோடு உறவாட வேண்டும். புளியங்காய் முற்ற முற்ற அதன் ஓடு சுளையைவிட்டு விலகி வருவதுபோல், பெற்றோர் பிள்ளை வளர வளர பிள்ளைகளின் பிணைப்பிலிருந்து மெல்ல மெல்ல விலகவேண்டும்.
புளியம் பழம் நன்றாகப் பழுத்ததும் அதன் ஓடு சுளையைவிட்டு தனியே விலகி நிற்பது போல, பெற்றோர், பிள்ளைகள் ஆளான நிலையில் அவர்களிடமிருந்து விலகி நிற்கவேண்டும். அதேநேரத்தில், புளியம் ஓடு விலகிநின்றாலும் சுளைக்கு கவசமாய் நிற்பது போல, பெற்றோர் விலகி நின்றாலும் பிள்ளைகளைத் தங்கள் கண்காணிப்பு என்ற கவசத்துக்குள் வைத்து பாதுகாக்க வேண்டும்.
பெற்றோரின் கண்காணிப்பில்லா பிள்ளைகள் கரையில்லா நீரோட்டம் போல கண்டபடி ஓடி பாழாவதோடு, மற்றவர்களையும் பாழாக்குவர்.
வாகனத்தை இழுத்துச் செல்கின்ற எஞ்சின் மிகுந்த ஆற்றல் உடையதாயினும், விரைந்து இழுத்துச் செல்லும் வல்லமை உடையதாயினும், ஸ்டேரிங்கும், பிரேக்கும் இல்லையென்றால் என்னாகும். கண்ட படி ஓடி, கண்ட இடத்தில் மோதிச் சிதறும், மற்றதையும் சிதைக்கும்.
இன்றைய இளைஞர்கள் பேராற்றல் உள்ளவர்கள், சாதிக்கும் திறன் பெற்றவர்கள். ஆனால், அவர்களை பெற்றவர்களும், மற்றவர்களும் நெறிப்படுத்தி முறைப்படுத்தி வழிநடத்த வேண்டும்.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment