அரசியல்

Friday, July 31, 2015

கிரேக்கம், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் இவற்றின் ஆதிக் குடிகள் தமிழர்கள்

கிரேக்கம், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் இவற்றின் ஆதிக் குடிகள் தமிழர்கள்

உலகின் பல நாடுகள் தமிழர்க்கு உரியவை!

கிரேக்க நாட்டில் கிரேக்கர்களுக்கு முன்
வாழ்ந்தவர்கள் தமிழர்கள்!

பல நாடுகளின் பழங்குடி தமிழ்க்குடியே!



பழைய ஏதென்ஸ் நகரமக்களின் தலைவன் பெயர் “பாண்டியேன்” என்பதாகும்.

கிரேக்க மொழி தமிழை கடன்பெற்று வந்தது வளர்ந்தது.

“Tamil loan words inGreat"  - Legrand F. என்ற நூல் இதை உறுதிசெய்கிறது.

“இத்தாலியில்  வாழ்ந்த எத்ருஸ்கர்கள் என்பார் திராவிடர்களேயாவர்.
:-- வரலாற்றாசிரியர்கள், ஆய்வாளர்கள் கருத்து.

அதே போல்,

பிரான்ஸ், ஸ்பெயின்  நாடுகளில் கிராமப் புரங்களில் வாழும் பாஸ்கு இன பழங்குடிகள் திராவிடர்கள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஏடன் நகரத்தை உருவாக்கியவர்கள் தமிழர்கள் (தமிழ் வணிகர்கள்)

ஆதாரம் : பெரிபுலுஸ் என்னும் நூல்



FOLLOW :

 https://www.facebook.com/manjaivasanthan


Thursday, July 30, 2015

நம் உள்ளம் கலாம் வாழும் இல்லம்!

நம் உள்ளம் கலாம் வாழும் இல்லம்!..............

 

 கள்ளமில்லா கருணை உள்ளம்!
கடும் உழைப்பில் உயர்ந்த உள்ளம்!
அள்ள அள்ளக் குறையா அறிவு உள்ளம்!
காலமெல்லாம் கண்ணியம் காத்த
சீலம் நிறைந்த சிந்தனை உள்ளம்!
ஞாலம் சிறக்க நற்கருத்துக்களை
நாளும் அளித்த நல்ல உள்ளம்!
கலாம் என்ற பெயரில்
காட்சி தந்து ஆட்சி செய்தது!

 உலக இயற்கை அவர் உயிர் பறித்தாலும்
விலகல் இன்றி அவர் புகழ் நிலைக்கும்!
வாழ்க அப்துல் கலாம் புகழ்!

 

உறுதி ஏற்போம்!..............

 
 அய்யா அப்துல் கலாம் அவர்களை நேசிக்கின்ற இளைஞர்கள் இன்று முதல் ஓர் உறுதியேற்க வேண்டும்.

 குடிப்பதில்லை! புகைப்பிடிப்பதில்லை!

 பிறரைக் கெடுப்பதில்லை!

 வன்சொல்லும் செயலும் பின்பற்றுவதில்லை!

 பெண்ணிற்குக் கேடு செய்வதில்லை!

 நன்நெறியிலிருந்து பிறழ்வதில்லை!

 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கொண்டு பேதம் ஒழிக்க மறப்பதில்லை!

 சாதி,மதவெறி ஏற்பதில்லை!

 தன்னலம் கொண்டு அலைவதில்லை!

 பொதுநலம் காக்க முனைந்து நிற்பேன்!

 புவியின் தூய்மை பேணிநிற்பேன்!

 மரங்கள் வளர்த்து வளங்கள் காத்து வருங்கால தலைமுறைக்கு உலகைத் தருவேன்!

 இந்த உறுதிகளை ஏற்று வாழ்வது ஒன்றே அப்துல்கலாம் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான மரியாதை!

 நன்றி! வீரவணக்கம்! எல்லாம்!

 - அன்புடன்
மஞ்சை. வசந்தன்

 @ https://www.facebook.com/manjaivasanthan

Saturday, July 25, 2015

தினகரன் முகநூல் மூக்கை உடைத்த முகநூலாளர்கள்

வாகனங்களுக்கு முன்னால் வறமிளகாய், எலுமிச்சம்பழம் கட்டுவது அறிவியலா?

தினகரன் முகநூல் மூக்கை உடைத்த முகநூலாளர்கள்



எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா  (Cidronic amilga)  என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid)  என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட்  (Methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid)   என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது. அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பார்த்துக்கொள்கிறது.

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டவை அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது..!

வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது ..!!!

நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..! விஞ்ஞான அடிப்படையில்தான் செயல்பட்டிருக்கிறார்கள்..!

நம் முன்னோர் பெருமையை உரக்க சொல்வோம்..!

இதற்கு முகநூலில் நமது இளைஞர்களும் சிந்தனையாளர்களும் கூறிய கருத்தை கட்டாயம் படியுங்கள்.

அத்தனையும் சிந்திக்க, சிரிக்க, உண்மை உணர உதவும்.

அய்ட்ரிஷ் கா.: எலுமிச்சை பழத்தை இந்த பதிவை போட்டவரின் மண்டையில் தேய்த்தால் அவருக்கு பிடித்துள்ள பைத்தியம் நீங்கும்..

ராதாகிருஷ்ணன் சுந்தர் : அந்தக் காலத்தில் ஏதுடா டீசல் வண்டியெல்லாம் _ இதில் முன்னோர் எப்படி சொல்லியிருப்பார்கள். காசா? பணமா? சும்மா அடுச்சிவிடுங்கடா.

முகம்மது ஹாஜி: அதை வண்டியில் கட்டுவதைவிட ஓட்டுநரின் கழுத்தில் கட்டுங்கள். ஓட்டுநர் தூங்கவே மாட்டார்.

அய்சக் ஞானராஜ்: அப்போ... தூக்கத்துல நடைமேடை  (Platform) மேல வண்டிய ஏத்தி சாவடிச்சவனெல்லாம் எலுமிச்சை பழத்துக்கு பதிலா கொய்யா பழத்த வச்சிருப்பானோ? ரூம் போட்டு யோசிப்பாங்களோ....

சிவக்குமார் கலியபெருமாள்:  வெளிநாடுகளில் கார் விபத்து மிகவும் குறைவு ஏன்? அதற்கு எலுமிச்சை பழம், மிளகாய் காரணம் கிடையாது. சாலை விதிகள் மிகவும் தெளிவாக உள்ளன. காருக்கு முன்னால் எந்தப் பழம் கட்டியிருந்தாலும் சாலை விதிகள் சரியில்லை எனில் சங்குதான்...

முத்துராஜ் ஜானி:  இப்படி சொல்லியே ஏமாத்திக்கொள்ள வேண்டியதுதான். அந்த காலத்துல ஏதுடா இப்பொ உள்ள மாதிரி மோட்டார் வாகனம். காதுல பூ சுத்திட்டு அதுக்கும் ஒரு வியாக்கியானம் சொல்ல பலரும் அதற்கு ஒத்துக் கொள்ள பலர் உண்டு.

ஜமால் முகம்மது:  மிளகாய் போட்டுதான் தயிர் சாதம் செய்ரோம். தொட்டுக்க எலுமிச்சம் பழம் ஊறுகா சாப்ட்ரோம். தூக்கம் பயங்கரமா வரும். 

அல்ஜாஸ்மின் பாபு உசேன் ஜமால்:  இதை மத நம்பிக்கை அடிப்படையில் செய்வதை நாம் விமர்சிக்கக் கூடாது. ஆனால் முன்னோர்கள் விஞ்ஞானம் என்று அள்ளிவிடுவதை ஏற்க முடியாது. காரை நம் முன்னோர்கள் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் மாட்டு வண்டியில் இதே எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டி வண்டி ஓட்டியவர்கள். மாட்டு வண்டியில் இஞ்சின் எங்கே இருந்தது?

தமீம் அன்சாரி அப்துல் கறீம்: ஹா ஹா ஹா... என்னமா யோசிச்சிருக்கானுங்கையா. இத நெனச்சி சிரிக்குறதா இல்ல வருத்தபட்றதா...???

லூசு பயளுகளா பத்திரிகையோட கடமை உணர்ச்சின்னு ஒன்னு இருந்தாதானடா நீங்கல்லாம் உண்மைய பேசுவீங்க. உங்களை சொல்லியும் தப்பில்ல உங்களையெல்லாம் இன்னும் நம்ம மக்கள் நம்புறாங்கள்ல இதுவும் சொல்வீங்க வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கிட்டுத்தான் இருப்பிங்க...

ஓகே இது உண்மையா இருக்கட்டும். இது எந்த நாட்டுல நடத்துன ஆராய்ச்சி..??? எப்ப நடந்தது..???இந்த ஆதாரமாவது நீங்க சொல்லுவீங்களா..????

வாகனத்துல தொங்க விட்டதுக்கு நீங்க அள்ளி விட்டுட்டீங்க சரி, அப்போ வீட்டுல கடை-ஙல்ல தொங்க விட்ருக்காங்கள்ளே அது எதுக்கு...????

உங்க பீலாவுக்கு ஒரு வரைமுறை வச்சிக்கோங்கடா. அளவுக்கு மீறுன கற்பனையா இருக்கு...  

ஜோசப்  எம்.வி. :  இப்படிச் சொல்லியே இன்னும் மனுசன முட்டாளாக்குங்கடா?

முகம்மது ஹாஜி:  எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga)  என்னும் அமிலமானது பிரேக் ஆயிலை வற்றாமல் பாத்துக்கொள்கிறது.

அப்போ நெல்லிகாயை டீசல் டேங்கில் போடுங்கள். டீசல் வெளியாகிற குழாயை அடைத்து டீசல் வற்றாமல் பார்த்துக்கொள்ளும்.

கண்ணன் ஜீசஸ்: வண்டிக்கு கீழே கட்டி வச்சா? வாயு டிரைவருக்கு எப்படி கிடைக்கும்?

ஷாய்க் தம்பி: மாட்டிடம் பாலை கறந்து கல்லுக்கும் மண்ணுக்கும் கொட்டிவிட்டு மாட்டின் மூத்திரத்தை குடிக்கும் குறைமதியாளர்கள் இருக்கும் நம் நாட்டில் இன்னும் என்ன எழவெல்லாம் நடக்கப்போகுதோ பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரான்சிஸ் ராஜா:  ஹாஹாஹா டே கூமுட்டை மரமண்டைகளா! என்னே உங்க அதீத அறிவு. இதல்லாம் கட்ற இந்தியாலதான் அதிக விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறதாம்.

டேனியல் ராஜா: இதை கண்டுபுடுச்ச விஞ்ஞானி யாருப்பா... எதை போட்டாலும் ஆட்டு மந்தை மாதிரி நம்புறதுக்குனு ஒரு கூட்டம்.

புருனோ என்னாரெஸ்: கேக்குறவன் கேனப்பயலா இருந்தா கேப்பையில நெய் வடியுதுன்னு சொல்லுவானுங்கலாம்! மோட்டார் வாகனங்களை கண்டுபிடித்த வெளிநாடுகளில் மிளகாயும், எலுமிச்சையும் கட்டுவதே இல்லையே, அங்கே மிகக்குறைவாகவே விபத்துகள் நடக்கின்றன. ஆனால் இந்த இரண்டையும் கட்டும் இந்தியாவில்தான் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன! முதலில் இது போன்ற உணவுப்பொருட்களை வீணடிப்பதை பொறுப்புள்ள ஊடகமாக கண்டியுங்கள், இது போன்ற மூட நம்பிக்கைகளை பரப்புவதுதான் தினகரனின் தலையாய பணியாக இருக்குமோ என்னவோ! 

 ஜாகீருசேன் அகமது எஸ்ஸா : இவர்களை எல்லாம ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.

எஸ்எம்ஜேஎம் எஸ்எம்ஜேஎம்: எலுமிச்சம் பழத்தை டயருக்கடில விட்டு நசுக்கி நாறடிப்பாங்களே! அதை இந்த பீலா வுடுற கதையில காணாம். ஒரு லெமன் ஒரு வரமிளாயாயில ஒரு வாயு பேக்டரியே இருக்குன்னு அற்புதமான கதை. ஆனால் பாவம். இதையும் இன்னும் நம்புறாங்க பாரு!

முகமது இக்பால்: ஓட்டுநர்களுக்கு சரியான ஓய்வு கொடுத்தால் போதும். ஓட்டுநர்களுக்கு தூக்கம் வராதாம். பிரேக் ஆயில் வற்றதாம், என்ன ஒரு மூடநம்பிக்கை.

தினகரன் முகநூல் கருத்தும் அதற்கு எதிர்வினையாக முகநூலில் பலரும் பதிவு செய்த கருத்துக்களையும் இதுவரைப் பார்த்தோம்.

 இதிலே ஓரளவு உங்களுக்கு உண்மைத் துலங்கியிருக்கும். என்றாலும் முறையான விளக்கத்தை இனிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

இங்கு சில முதன்மையான கருத்துகளை சிந்திக்க எடுத்துக் கொண்டோம் என்றால் உண்மை பளிச்சிடும்.

1. எலுமிச்சைப் பழம், மிளகாய் இரண்டும் இரசாயன மாற்றம் அடையும் வகையில் ஒன்று சேர்த்து பிய்த்து கசக்கி சாறு சொட்ட யாரும் கட்டுவதில்லை. எனவே, அங்கு இரசாயன விளைவு ஏற்பட்டு மிதீரியட் வாயு வெளியாவதில்லை.

2. வெள்ளிக்கிழமை படையல் என்பது வாகனத்துக்கு மட்டுமல்ல. எல்லா காரியங்களுக்கும் வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமை நடக்கிறது. இது தொடர்புப்படுத்திக் கொள்ளும் புத்தியால் கூறப்படும் கருத்து. எனவே, மிதீரியட் வாயு ஒரு வாரம் இருக்கும் என்று தெரிந்து செய்த செயல் அல்ல இது.

3. இதைக் கட்டியதால் வாகன ஓட்டி தூங்காமல் இருந்ததில்லை. பிரேக் ஆயில் வற்றாமல் இருந்ததும் இல்லை. வாகன ஓட்டிகளைக் கேட்டால் இந்த உண்மையை உச்சந்தலையில் அடித்துச் சொல்வர்.

மேற்கண்ட மூன்றையும் நன்கு சிந்தித்தால் இக்கருத்து பொருத்திப் புனையப்பட்ட, வலிந்து காரணம் கற்பிக்கும் முயற்சி என்பதைக் காட்டும். காரில், வாகனங்களில் கருப்புக் கயிறு கட்டுகிறார்களே அது எதற்கு அதிலும் ஏதாவது அறிவியல் இருக்கிறதா?

இங்கு ஒரு கருத்தை மிக முக்கியமாகச் சிந்திக்க வேண்டும். அக்காலத்தில் மாட்டு வண்டிதான். எஞ்சின் இல்லை. அதில் எலுமிச்சை, மிளகாய் கட்டினார்கள். அங்கு எந்த அறிவியல் வேலை செய்கிறது? முன்னோர் கார்களுக்கு கட்டவில்லை. மாட்டுவண்டிகளுக்குத்தான் கட்டினார்கள். எனவே செயலும் தவறு. அதற்குக் காரணம் கற்பிப்பதும் தவறு.

ஏதாவது பரபரப்புச் செய்தி வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்வது மக்களை மேலும் மடையராக்கும் முயற்சியாகும்.

சக்கரத்தில் எலுமிச்சை பழத்தை காவு கொடுக்கிறான். அதற்கு என்ன அறிவியல் காரணம்?

பூசணிக்காயை நடுரோட்டில் போட்டு உடைக்கிறான். அதனால்தான் சாலையில் விபத்துகளே ஏற்படுகின்றன. இதற்கும் ஏதாவது அறிவியல் உண்டா?

எனவே, இதுபோன்ற விளக்கங்களைக் கூறி முட்டாள் தனத்திற்கு, மூடநம்பிக்கைக்கு முட்டுக் கொடுப்பதற்குப் பதில் நல்ல அறிவியல் சிந்தனைகளை, விழிப்புணர்வைக் கொடுப்பதுதான் பெரியாரின் வெளிச்சத்தில் பெரிதும் பயன்அடைந்த பரம்பரையினர்க்கு அழகு!

- மஞ்சை வசந்தன்
____

Thursday, July 23, 2015

மதுரையில் உள்ளது மாட்டுத்தாவணியா?


 மதுரை நுழைவாயிலில் உள்ளது “மாட்டுத்தாவணி” என்ற இடம். இது என்ன மாட்டுக்குத் தாவணி என்று கேள்வியெழுப்பாதவர் எவரும் இருக்கமுடியாது.

என்றாலும் அதன் பொருள் அறிய எவரும் முயற்சிப்பதில்லை எனவே அதன் உண்மைப் பெயரை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

 “மாட்டுத் தாம்பு அணி” என்பது மருவி மாட்டுத்தாவணீ என்று ஆனது.
"தாம்பு" - என்றால் மாடுகட்டும் கயிறு (தாம்பு கயிறு என்பர்). மாடுகளை வரிசையாக தாம்புக் கயிற்றால் பிணைத்து கட்டுவார்கள். இவ்வாறு மாடுகள் அணி அணியாய் நிற்கும்.

 மாடுகள் தாம்புக்கயிற்றால் அணியணியாய் கட்டப்படும் இடம் என்பதால் அது மாட்டுத் தாம்பணி எனப்பட்டது.

அதுவே மாட்டுத் தாவணியாக மாறியது. மதுரைக்காரர்கள் இனி தாராளமாய் விளக்குங்கள்.

 யாருக்கும் குழப்பம் வராது.

அதோடு இச்செய்தியை எல்லோருக்கும் பரப்புங்கள்.

மேலும் ஆதாரங்களுடன் பல செய்திகளை ஒவ்வொரு நாளும் உங்களுக்குச் சொல்வேன்.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது !!! ஆதாரம் இதோ

ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது !!!
ஆதாரம் இதோ...........




 W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :

 Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.

Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.

Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.

Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது

 இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.

 ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.



 ஆதாரம் கேட்கும் நண்பர்களுக்காக இந்த ஆதாரத்தைக் காட்டியுள்ளேன்.
மேலும் ஆதாரங்களுடன் பல செய்திகளை ஒவ்வொரு நாளும் உங்களுக்குச் சொல்வேன்.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

Mud - என்பது தமிழ்ச்சொல்.......



மண் என்பதன் திரிபு இது. மண்பாண்டம் என்பதை மட்பாண்டம் என்போம். அதுவே ஆங்கிலத்தில் Mud என்று சொல்லப்படுகிறது.
Path - என்பது தமிழ்ச் சொல்!....

 பாதை என்பதே ஆங்கிலத்தில் path என்றானது.

Prize என்பது தமிழ்ச்சொல்......

பரிசு என்பதே ஆங்கிலத்தில் Prize என்றானது.

நாளை மேலும் சில சொற்கள்............

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

கால்மேல் கால்போட்டால் பெண்களின் கருப்பை பாதிக்குமா? தினகரன் நாளிதழ் முகநூலுக்கு மறுப்பு.


 பெண்கள் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தால், அவர்கள் கருப்பைப் பாதிக்கப்படும் என்று படத்துடன் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. பெண்களை இழிவானவர்களாக, அடிமைகளாக, உரிமையற்றவர்களாக வைத்திருக்க ஆணாதிக்கச் சமுதாயமும் ஆரிய சனாதனிகளும் பலவற்றைக் கற்பித்தனர்.

 பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது; படிக்கக் கூடாது, வேகமாய் பேசக் கூடாது, ஆண்களுக்கு எதிரில் உட்காரக் கூடாது; கால்மேல் கால்போட்டு உட்காரக் கூடாது என்று பலக் கட்டுப்பாடுகள் விதித்தனர்.

 இவற்றையெல்லாம் தந்தை பெரியாரின் பிரச்சாரத்தால் தகர்த்து, பெண்கள் ஆண்களுக்கு நிகராய் நடை, உடை, கல்வி, பணியென்று வந்து கொண்டிருக்கும் நிலையில், முன்னாளில் செய்த மோசடி, முட்டாள் செயல்களுக்கெல்லாம், தப்புத்தப்பாய் அறிவியல் காரணங்களைச் சொல்லி அர்த்தம் கற்பிக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். அந்த வகையில் ஒரு முயற்சிதான் மேற்படிச் செய்தியே ஒழிய அதில்உண்மை ஏதும் இல்லை!

 பெண்கள் கருப்பை இருப்பது வயிற்றுப் பகுதியில் (இடுப்பிற்கு மேல்) கால்மேல் கால் போடும்போது, கருப்பை எவ்வகையிலும் அழுத்தப்படுவதில்லை. எனவே, காரணமேயில்லாத ஒரு காரணத்தைக் கூறுவது கண்டிக்கத்தக்கது.

 இதுகுறித்து மருத்துவர் சிவ.மஞ்சுளா M.D., D.G.O., அவர்களைக் கேட்டோம்.

பெண்கள் கால்மேல் கால் போட்டால் கர்ப்பப்பை பாதிக்கப்படும் என்று படித்ததும் ஆச்சரியமாய் இருந்தது. கால்மேல் கால் போடுவதற்கும் கர்ப்பப்பை பாதிக்கப்படுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கால்மேல் கால் போடுவதால் கர்ப்பப்பை பாதிக்கப்படாது. பெண்கள் ஆண்களைப் போன்று வேண்டுமானால், வசதிப்படி கால்மேல் கால் போட்டு அமரலாம் என்று கூறியவர், கர்ப்பப்பை வேறு காரணங்களால்தான் பாதிக்கப்படும். அவற்றைத்தான் தவிர்க்க வேண்டும் என்று கூறி அக்காரணங்கள் சிலவற்றைக் கூறினார்.

 1. சுகப்பிரவசத்தில் தாய் முக்கிமுக்கி குழந்தைப் பெறுவதால் கர்ப்பப்பை கீழிறங்க வாய்ப்புண்டு. 40 முதல் 45 வயதிற்குள் கர்ப்பப்பை கீழிறங்கலாம்.

 2. ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் போதிய இடைவெளியின்றி அடிக்கடி பிள்ளை பெற்றால் கர்ப்பப்பை வலுவிழக்கும்.

3. பிரசவத்தின்போது ஆயுதங்களைப் பயன்படுத்தினால் கருப்பை வலுவிழக்கும்.

என்று விளக்கம் அளித்தவர், பெண்கள் கால்மேல் கால் போடக்கூடாது என்ற மூடக் கருத்தைப் பரப்புவது, பெண்ணடிமைத் தனத்தை மீண்டும் கொண்டுவரவே உதவும். எனவே, தவறான செய்திகள் பரப்பப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

இதுபோன்றவற்றில் மருத்துவர்களைத் தவிர மற்றவர்கள் கருத்துக் கூறுவது கூடாது. பொதுமக்களும் மற்றவர்கள் கருத்தை நம்பக் கூடாது என்றார்.

Market என்பது தூய தமிழ்ச்சொல்..........


உலகிலுள்ள பலமொழிகளும் தமிழிலிருந்து வந்தவை என்ற உண்மையை உறுதிசெய்ய Market என்ற சொல் சரியான ஆதாரம். இதை கேட்கும்போது உங்களுக்கு நம்பமுடியாது. வியப்பு ஏற்படும். என்றாலும் அதுதான் உண்மை.

 “மாறுகடை” என்ற தூயதமிழ்ச் சொல்லே Market என்ற ஆங்கிலத்தில் ஆனது.

மாறுதல் என்றால் விற்றல் வாங்குதல் என்று பொருள். ”கங்கை நதிப்புரத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு “மாறு” கொள்ளுவோம்” என்ற பாரதி பாடலில் மாறு என்ற சொல் விற்றல் வாங்கலைக் குறிக்கும்.

 மாறுதல் (விற்றல் வாங்கல்) செய்யும் கடை என்பதால் “மாறுகடை” எனப்பட்டது. பேட்டை என்பது pet என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும்.
அதே போல் கடை என்பது Ket என்றாகி மாறுகடை என்பது Market என்று ஆங்கிலத்தில் ஆனது.

 நாளை வேறு ஒரு சொல் பற்றி அறியலாம்.

படிக்கின்றவர்கள் எல்லோருக்கும் அனுப்பி தமிழின்பெருமை பரப்புங்கள். அது உங்கள் கடமை.

 - மஞ்சை வசந்தன்

இணையர் எப்படியிருக்க வேண்டும்?


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தந்த வரையறை.............................
பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு,
 
உருவு, நிறுத்த காம வாயில், நிறையே, அருளே, உணர்வொடு, திரு என
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.

1. நற்குடிப் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

2. பிறந்தால் போதாது. அந்நற்குடிக் கேற்ற நல்லொழுக்கம் இருவரிடமும் இருக்க வேண்டும். பிறப்பு வேறு, குடிமை வேறு எனப் பிரிக்கிறார்.

3. இருவரிடமும் ஆண்மை _ ஆளுமை ஒத்திருக்க வேண்டும்.

4. அகவை ஒப்புமை வேண்டும். காலத்திற்கு ஒப்ப வயது ஒப்புமை பார்க்க வேண்டும்.

5. உருவு _ வடிவ ஒப்புமையும் வேண்டும். பார்ப்பவர் பொருத்தமான சோடி என்னும்படி உயரம், பருமன் இருக்க வேண்டும்.

6. நிறுத்த காம வாயில் என்பது தொல்லாசான் சிந்தித்துச் சொன்ன அரிய கருத்து. உடலில்அமைந்த காம நுகர்வுக்கான உடல், உள்ளக் கூறுகள். ஒருவர் மிக்க காமவெறியுடையவராகவும் மற்றவர் அளவாகத் துய்ப்பவராகவும் இருந்தால் ஒத்துவராது.

7. நிறை_ மனத்தைத் திருமணமான பின் கண்டவாறு ஓடவிடாது தடுத்து நிறுத்துதல். நிறுத்துதல் நிறை. மறை பிறர் அறியாது நிறுத்தல். இது மன நிறை, அடக்குதல், தடுத்து நிறுத்துதல் யாவும் அடங்கும்.

8. அருளுடைமையும் அதன் அடிப்படையான அன்பும் உடையவர்களாக இருவரும் திகழ வேண்டும்.

9. உணர்வு - ஒருவரை ஒருவர் அறிதல்; புரிந்து கொள்ளுதல்; உலகியலறிதல் வேண்டும். 10. திரு _ செல்வம்.

‪#‎குறிப்பு‬: இங்கு வரும் பிறப்பு என்பது ஜாதி அல்ல. நல்லொழுக்கக் குடும்பச் சூழல். குடிமை - நல்ல இல்வாழ்விற்குரிய பண்புகள்.

(தொல்காப்பியம் - பொருள் - 1219)

Monday, July 20, 2015

மதுக்கடைகளை மூடு! - எங்கும் ஒலிக்கட்டும் இம்முழக்கம்!

இலவசம் வேண்டாம்!
மதுக்கடைகளை மூடு!
எங்கும் ஒலிக்கட்டும் இம்முழக்கம்!
- மஞ்சை வசந்தன்


நான்கு வயது சிறுவனுக்கு தாய்மாமன் சாராயம் ஊற்றிக் கொடுக்கிறான். அக்குழந்தை அதை வாங்கிக் குடித்துவிட்டு ஊறுகாயைத் தொட்டு நக்குகிறது!
இந்த அவலத்திற்குப் பிறகு மதுக்கடைகளை ஓர் அரசு திறந்து வைத்துக்கொண்டு, அந்த வருமானத்தை அச்சாகக் கொண்டு அரசு நடத்தி வருவதைவிட மக்கள் விரோதச் செயல் - மானங்கெட்ட செயல் வேறு என்ன இருக்க முடியும்?

ஊருக்கு நான்கு பேர் ஒளிந்து ஒடுங்கிக் குடித்தது மாறி, உழைத்துக் களைத்தவன் குடித்தது போய், வயது வந்தவர்கள் குடித்ததற்கு மாறாய், பள்ளி மாணவர்களும் குடிக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வந்து மறைவதற்குள் பச்சிளம் குழந்தை குடிக்கிற நிலையும் வந்துவிட்டது! பெண்களும் குடிக்கத் தொடங்கிவிட்டார்கள்!

இப்படி, சமுதாயத்தைச் சாக்கடையாக்கி, அழித்து நாசமாக்கி, ஒழித்து ஒன்றுமில்லாமலாக்க ஓர் அரசு எதற்கு? அதுவும் மக்கள் நல அரசு ஏன்? மானம், வெட்கம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல்  ஆட்சி நடக்கலாமா? மக்களின் எதிர்கால வாழ்வுக்கு, வாரிசுக்கு, வளர்ச்சிக்கு என்ன உத்தரவாதம்? கண்ணியமாய் மானத்தோடு வாழ நினைக்கின்றவர்கள் வாழ்வதற்கு என்ன பாதுகாப்பு?

பெண்கள் நடமாட முடியாத அவலநிலை! வீட்டில்கூட இளம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கூலிக்குக் கொலை செய்தல், வன்புணர்ச்சி, அடிதடி, வன்முறை, மோசடி, தாக்குதல், திருட்டு, வழிப்பறி என்று எத்தனை கொடுமைகள் உண்டோ அத்தனையும் அன்றாடம், அனைத்து இடங்களிலும் நடக்கிறது.

நல்லவர்கள் நாட்டில் வாழவே முடியாது என்ற சூழல் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பெற்ற மகளை குடிகார அப்பன் பலாத்காரமாய் உறவு கொள்வதும், சகோதரியை சகோதரன் சாராயப் போதையில் வலுக்கட்டாயமாய்ப் புணர்வதும், மாமனார் மருமகளை அச்சுறுத்தி இச்சையைத் தீர்ப்பதும் என்று என்னென்ன அயோக்கியச் செயல்களும், அவலங்களும், கேவலங்களும் உண்டோ அத்தனையும் அன்றாட நிகழ்வுகளாக அதிகரித்து வருகின்றன.

அனைத்திந்திய பெண்கள் அமைப்பு கோவையில் ஜூலை 2ஆம் தேதி, குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கை மாநாடு ஒன்றை நடத்தியது. அங்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர், தங்களுக்குக் குடியால் நேர்ந்த கொடுமைகளை வெந்த மனத்திலிருந்து வெளிப்படுத்தினர்.

நெஞ்சு பதைக்கும் அந்த உள்ளக் குமுறல்களைப் பாருங்கள்.

கோவை நகரைச் சேர்ந்த பெண், என்ர வூட்டுக்காரர், பையன் ரெண்டு பேருமே தினமும் மூக்கு முட்ட குடிப்பாங்க. வூட்டுக்காரராச்சும் போதையில வந்து சோத்த கொட்டிட்டு, என்னையும் நாலு சாத்து சாத்திட்டு அக்கடான்னு படுத்துடுவாரு. ஆனா, என்ர பையன் ரொம்ப கேவலமான ஜென்மங்க. இத சொல்றதுக்கே கூச்சமா இருக்குது... தண்ணிய போட்டுட்டு வந்து என் மகளை (குடிகார பையனின் அக்கா) தப்பான நினைப்போட ரொம்பவே டார்ச்சர் பண்ணுவானுங்க. நான் அடிச்சுப் பார்த்தும் போலீஸ் வரைக்கும் விஷயம் போயும் அவன் திருந்தலை. ஒரு கட்டத்துல இவனோட டார்ச்சர் தாங்க முடியாம அவ, தன்னை விட சின்னப்பையனை கல்யாணம் பண்ணிட்டு வூட்டை விட்டுப் போயிட்டா என்றபோது அரங்கம் அதிர்ச்சியில் உறைந்தது.

கிணத்துக்கடவு வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஊருக்கு நடுவுல டாஸ்மாக் கடையை வெச்சிருக்காங்க. ராப்பகலா குடிகாரனுங்க பண்ற அழும்பு தாங்க முடியலைங்க. தண்ணீர் பிடிக்கப்போற பொம்பளைங்களை அசிங்கம், அசிங்கமா பேசி வம்பிழுக்கிறாங்க. காரைக் கொண்டு வந்து நிப்பாட்டி, ஸ்கூல், காலேஜ் போற பொண்ணுங்களை கிண்டல் பண்ணுறாங்க. எங்க ஏரியா பொம்பளைங்களுக்கு தினமும் போராட்டமாதான் இருக்குதுங்ணா வாழ்க்கை என்றார்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த இளம்பெண், எங்க வூட்டுக்காரருக்கு குடிக்குறது மட்டும்தானுங்க பொழப்பு. வருமானத்துக்காக தேங்காய் நார் கம்பெனியில நான் வேலைக்கு போறேனுங்க. சம்பாதிச்சுட்டு வர்ற காசை அடிச்சு, மிதிச்சு பிடுங்கி குடிக்கிறதுக்கு கொண்டு போயிடுறார். இந்தாளு டார்ச்சர் தாங்கமுடியாம வேலைக்கு போனா அங்கே ஓனரும் தறிகெட்டு குடிச்சுட்டு வந்து கையைப் பிடிக்குறான். பெத்த புள்ளைங்க மூஞ்சிக்காக இன்னும் உசுரோட உலவுறேன்.... என்று வெடித்தபோது ஒலிபெருக்கிகூட உறுமியது.
கோவை நகரில் கூட்டுக் குடும்பத்தில் வாழும் ஒரு பெண்ணின் வீட்டில் மாமனார், கணவர், கணவரின் தம்பி, நாத்தனாரின் கணவன் உட்பட ஆறு ஆண்களுமே மொடாக் குடிகாரர்கள். கண்ணு மங்க குடிச்சுபோட்டு வந்து தினமும் எங்க குடும்பத்துல அட்லீஸ்ட் ஒரு ஆளாச்சும் டிச்சுல (சாக்கடை) வுழுந்து கெடப்பாங்க. பொம்பளைங்க போய்தான் தூக்கி கூட்டிட்டு வருவோமுங்க. புருஷனைக்கூட தோள்ல கை போட்டுக் கூட்டியாந்துடலாமுங்க, மாமனாரையும் கொழுந்தனையும் எப்படிங்க? என்று முடிக்க முடியாமல் அப்பெண் முகம் கவிந்து கொண்டார். அவர் முகத்தைப் பார்க்கும் திடம் பார்வையாளர்களுக்கும் இல்லை. வெட்கித் தலை குனிந்தார்கள்.

பாதிக்கப்பட்டோரை அமைதிப்படுத்திய  மனநல ஆலோசகரான டாக்டர் இந்துமதி, உங்க உணர்வுகளைப் புரிஞ்சுக்க முடியுது. எங்ககிட்ட பேஷன்டுகளைக் கூட்டிட்டு வர்ற சில பெண்ணுங்களோட கதை இதைவிட அதிர்ச்சியாகவெல்லாம் இருக்கும். இன்னைக்கு 25 வயசுல இருந்து 40 வயசுக்குள் இருக்கிற ஆண்களில் கால்வாசிப் பேருக்கும் மேலே மதுவால்தான் இறக்கிறாங்க. ஜாலியா ஆரம்பிச்ச குடிப்பழக்கத்துக்கு தங்களை அறியாமலே அடிமை ஆகிடுறாங்க. அந்த நேரம் வந்தாலே கைகால் உதறுது. மனசு பதறுதுன்னாலே அவர் குடிக்கு அடிமையாகிட்டதா அர்த்தம். அவங்க, குடிக்கான சிகிச்சை எடுக்கிறதை அவமானமா நினைக்கிறதுதான் அவலம். அழுதோ, ஆர்ப்பாட்டம் செய்தோ அவங்களை எங்ககிட்டே கூட்டிட்டு வாங்க. நாங்க மீட்டெடுக்கிறோம் என்று நம்பிக்கையூட்டிப் பேசினார்.
இறுதியில் பேசிய உ.வாசுகி, குடி அப்படிங்கிறது ஒரு சமூக நோய். குடியால பாதிக்கப்படுற பெண்களோட கதையை கேட்டு கேட்டு மனசு மரத்துப்போச்சு. குடிக்கிறதை தட்டி கேட்கிற தன் மனைவியின் வாயை அடைக்க 99% ஆண்கள் பயன்படுத்தும் ஒரே ஆயுதம் நடத்தை மீது சந்தேகப்படும் செயல்தான். நீ யார்கூட சுத்துற? அப்படிங்கிற ரேஞ்சுல ஏதாச்சும் கேள்வி கேட்டுட்டா போதும். இந்த பொம்பளைங்க ஒரு ஓரமா உட்கார்ந்து அழ ஆரம்பிச்சுடுவாங்க. தற்போது குடிப்பழக்கமுடையவர்களின் குறைந்தபட்ச வயது 13 என்று வரும் புள்ளிவிவரம் பதற வைக்குது!

மது இல்லாத தமிழகம்தான் தமிழக பெண்களின் கனவு. அந்த இலக்கை அடைய அடுத்தடுத்த நிலைகளாய் முன்னேறுவதுதான் சாத்தியம். எனவே, அரசாங்கம் முதல் கட்டமாக பகல் நேரங்களில் மதுபானக் கடைகளை மூட வேண்டும். 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்கக் கூடாது. வாரத்தில் ஓரிரு நாட்களாவது மது விற்பனையை நிறுத்த வேண்டும். ஒரு பகுதியில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கினர், அங்கே டாஸ்மாக் வேண்டாம் என்று சொன்னால் அக்கடையை உடனே அகற்ற வேண்டும். இதையெல்லாம் அமல் செய்தாலே கூடிய விரைவில் மது இல்லாத தமிழகம் சாத்தியம்தான் என்றார்.
குடி எந்த அளவிற்கு இன்றைய இளைஞர்களை நாசப்படுத்தியுள்ளது என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு. திருமணமான வாலிப ஆண் குடியால் உடலுறவு ஆற்றல் இழந்து நித்தம் நித்தம் அவமானத்தால் சுருண்டுகிடக்கிறான். அவனது மனைவியின் குமுறலைப் பாருங்கள்.

முதலிரவு அன்னைக்கி ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு இருந்தார். என் மீது கை வெச்சார். முத்தம் கொடுத்துக் கட்டிப்பிடிச்சார். அப்புறம் படுத்துத் தூங்கிட்டார். மறுநாள் என்னைத் தொடவே இல்லை. இன்னொரு நாள் பக்கத்துல வந்தவுடனே படுத்துவிட்டார். இந்த ஒரு மாசத்துல நான்கைந்து தடவை என்னைக் கட்டிப்பிடிச்சாரே தவிர, வேறு எதுவுமே நடக்கலை என்று அந்தப் பெண் சொன்னார். அதை வைத்து, அந்தப் பையன் ஒரு (இம்பொட்டென்ட்) இணைந்தியங்க இயலான் ஆக இருக்கலாம் என்று சோதிக்க, அதுதான் உண்மை என்பது உறுதியானது.

பையனின் பெற்றோரை விசாரித்தபோது பள்ளிக்கூட வயதிலேயே அந்தப் பையன் குடிக்க ஆரம்பித்துவிட்டான் என்று சொன்னார்கள். சிறு வயதிலேயே குடிப்பழக்கத்தை ஆரம்பித்ததன் காரணமாக, அவனுடைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுவிட்டது. அதனால், ஆண்மைத்தன்மையை இழந்துவிட்டான். அதாவது, பெண்ணுடன் உறவுகொள்ள ஆசை இருக்கும். ஆனால், அவனுடைய ஆண் உறுப்பு விரைப்புத்தன்மை அடையாது.  மனதளவில் ஆசை இருந்தாலும் அவனால் உடலுறவு கொள்ள முடியாது. அப்படிப்பட்ட நிலைக்கு இந்தப் பையன் வந்துவிட்டான். அதனால், பையனின் பெற்றோரையும் வரச் சொல்லி, முறையான சிகிச்சை அளித்தால் அவனை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று பல ஆலோசனைகள் சொல்லப்பட்டது. ஆனால், என்ன காரணத்தாலோ அதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இப்போது அவனிடம் இருந்து அவன் மனைவிக்கு சட்டப்படி விவாகரத்து வாங்கிவிட்டனர்.

தமிழ்நாட்டில் இன்றைக்கு மது அருந்துபவர்களின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டி கோடியை எட்டிவிட்டது. குடிப்பவர்களில் பலர் கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் படிக்கும் மாணவர்கள் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம். சிலர், 12-13 வயதில்கூட குடிக்கிறார்கள். இதுதான் மிகப்பெரிய ஆபத்து. மனிதர்களின் மூளை வளர்ச்சி 18 வயதில்தான் முழுமை அடையும். மூளை வளர்ச்சி முழுமை அடைவதற்கு முன்பே குடிக்க ஆரம்பித்து, பல வருடங்கள் தொடர்ந்தால் நிச்சயம் அவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டுவிடும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். திருமண வயது வரும்போது, தாம்பத்திய உறவுக்கான தகுதியை இழந்துவிடுகிறார்கள்.

குடிநோயாளிகள், பலவிதமான பாலியல் பாதிப்புகளுக்கு (Sexual dysfunction) ஆளாகிறார்கள். அவர்களுக்கு பாலியல் உறவு மீதான ஆர்வம் குறைந்துவிடும். சிலருக்கு உடலுறவு மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும். ஆண் குறி விரைப்புத்தன்மை குறைந்துவிடும். சிலருக்கு முற்றிலுமாக விரைப்புத்தன்மையே இருக்காது. உடலுறவின்போது, முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியாது. உடலுறவு ஆரம்பிக்கும்போதே துவண்டுவிடும். அதனால், இருவருக்குமே விரக்தியும் ஏமாற்றமும் ஏற்படும் என்கிறார் மருத்துவர் நாராயண ரெட்டி.

கணவன் ஆண்மையிழந்ததால் மாமனார் மன்மத லீலைத் தொடங்கினார்.

தமிழ்நாடு காவல் துறையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர், அந்த போலீஸ் அதிகாரி. அவரது மகனுக்கு 25 வயது. அவனுக்குத் தீவிரமாகப் பெண் தேடினார்கள். அவன் குடிப்பழக்கம் உள்ளவன் என்பதால், அவனுக்குப் பெண் தர யாரும் முன்வரவில்லை. ஓர் ஏழைக் குடும்பத்துப் பெண்ணை கட்டி வைத்தார்கள். 8ஆம் வகுப்பு படித்தவள். ஆனாலும், நல்ல அழகு. 10வது மாதத்தில் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் உண்மையான தகப்பன் கணவன் அல்ல, அந்த போலீஸ் அதிகாரி (மாமனார்) என்பதுதான் அதிர்ச்சி.

அவன் பள்ளியில் படிக்கும்போதே குடிக்க ஆரம்பித்தான். அதனால், மிக மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தான். ஆண்மைத்தன்மை பாதிக்கப்பட்டது (Impotency). ஏழைப் பெண்ணை ஏமாற்றி அவனுக்குக் கட்டிவைத்தனர். அந்தப் பெண்ணை அவன் தொட்டுக்கூட பார்க்கவில்லை. மாமனாராகிய அந்த போலீஸ் அதிகாரி, என் மகனால் இயங்க முடியாது. உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி அந்தப் பெண்ணை மிரட்டி தகாத உறவு வைத்துக்கொண்டார். இதற்கு மாமியாரும் உடந்தை, வெளியே சொல்லிடாதம்மா... என்று கெஞ்சியவாறு அப்பெண்ணை அடக்கியுள்ளனர். இப்போது, அந்தப் பெண்ணுக்கு மூன்று குழந்தைகள்.

எவ்வளவு ஆபாசம், அவலம், அசிங்கம் பாருங்கள். இவையெல்லாம் மதுக்கடை தந்த விளைவுகள் அல்லவா? விபரீதங்கள் அல்லவா?

இப்படி குடும்பத்தைக் குலைத்து, பண்பாட்டை அழித்து, ஒழுக்கத்தை உருக்குலையச் செய்து, சமுதாயத்தைச் சாக்கடையாக்கி, பள்ளி மாணவர்களை 10 வயதிலே குடிக்கச் செய்து, அவர்களை எதிர்கால இல்வாழ்வுக்கு இயலாதவர்களாக்கி, இருளடையச் செய்து மதுவால் வருவாய் பெற்று, இலவசங்கள் வாங்குகிறோம் என்றால், அப்படியொரு இலவசத்தை எவர் கேட்டார்? கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கி என்ன பயன்? சிந்திக்க வேண்டாமா?

வாக்கு வாங்க, இலவசம் வழங்க, வருவாய் ஈட்ட, மக்களை சீரழித்து மதுக்கடைகளை இந்த ஆட்சித் தொடருமேல் இதுவே இந்த ஆட்சிக்கு இறுதிகட்டும் என்பது உறுதி!

படிப்படியாக அல்ல பரிசுச் சீட்டைத் தடை செய்ததுபோல ஒரேயடியாக மூடவேண்டும். பக்க விளைவு, ஓர விளைவுகளைப் பேசி பம்மாத்து வேலைகள் செய்யாது, உறுதியான முடிவுடன் மூட வேண்டும். அதேநேரத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்காமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச் சாராய பேர்வழிகளை குண்டர் சட்டத்தில் தள்ள வேண்டும்; தண்டிக்க வேண்டும்.

எங்களுக்கு இலவசம் வேண்டாம்; மதுக்கடைகளை உடனே மூடு என்று மக்கள் எழுச்சி வீறு கொண்டு எழும். அரசு மூடவில்லை என்றால், அவர்களே மூடுவர் என்பது உறுதி என்பதற்கான கோபம் மக்கள் மனதில் கொழுந்துவிட்டு எரிகிறது என்பது அப்பட்டமான உண்மை!

சாராயம் விற்கும் ஆட்சி எதிர்காலத்தில் இருக்காது. இதை ஆட்சியாளர்களும் அடுத்து ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளவர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். மதுக்கடைகளை ஒட்டுமொத்தமாக உடனே மூடவேண்டும்.

மனம் வைத்தால் மதுவை கட்டாயம் ஒழிக்க முடியும். எதிர்காலத் தலைமுறையை சீரழிவிலிருந்து மீட்க முடியும்.

இல்லையேல் காலிகள் கை ஓங்க எவருக்கும் வாழ்க்கை உத்திரவாதம் கிடைக்காது!
எச்சரிக்கை!

Saturday, July 11, 2015

தின (இன) மலரே! - மேம்புல் மேய்ந்து மேதாவிலாசம் காட்டுவதா?

தின (இன) மலரே!

சிந்தனைச் சிற்பியை சிந்திக்கச் சொல்லும் சிறுமதிக் கூட்டமே!
 
மேம்புல் மேய்ந்து மேதாவிலாசம் காட்டுவதா?


 
இந்திய வரலாற்றில் குப்தர்களின் ஆட்சிக் காலம் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. காரணம், சந்திரகுப்த மவுரியரின் ஆட்சிக் காலத்தில்தான் சமணமும், பவுத்தமும் இந்தியாவில் தழைத்தோங்கியது என்று குறிப்பிட்டுள்ள வீரமணியின் வரலாற்று அறிவு பாராட்டுக்குரியது. ஆனால், இந்த அளவிற்கு புலமை இலக்கியத்தில் இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. கி.வீரமணி இனிமேலாவது தமிழ் இலக்கியத்தையும் வரலாற்றையும் ஆழ்ந்து படித்து, சிந்தித்து அதன்பின் இந்து சமயம் குறித்து புத்தகம் எழுத வேண்டும்; செய்வாரா?

எழுதியவர்: என்.நர்மதா, இது உங்கள் இடம் - தினமலர் - சென்னை _ 09.07.2015)

ஆழ்ந்து படிக்க அறிவுரைச் சொல்லும் இந்த அம்மையார், மேம்புல் மேய்ந்துவிட்டு உளறியிருக்கிறார். திரு.கி.வீரமணி அவர்களின் கீதையின் மறுபக்கம் நூலில் கூறியிருப்பதாக இவர் காட்டும் பகுதி முழுமையாக வெளியிடப்படாது மக்களை ஏமாற்ற முதல் இரண்டு வரிகளை எடுத்துக் காட்டியுள்ளார். இதுவே அறிவு நாணயம் இல்லா அயோக்கியத்தனமாகும். எனவே, முழுப்பகுதியையும் கீழேத் தருகிறேன்.

சந்திரகுப்த மவுரியரின் காலத்தில் சமணமும், அசோகர் காலத்தில் பவுத்தமும் தழைத்தோங்கிய பிறகு கி.மு. இரண்டாவது நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் அதாவது மவுரிய வம்சத்து கடைசி மன்னான பிரசுத்ருதனைப் புஷ்யமித்ர சுங்கன் கொன்று ஆட்சியைக் கைப்பற்றியவுடன் வந்த ஆட்சியில் (கி.மு.184க்குப் பிறகு) வேகமாகப் புகுத்தப்பட்ட பல மாறுதல்களில் குறிப்பாகப் பண்பாட்டுப் படையெடுப்புகளில்தான் மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரண்டு காவியங்களின் பாடல்களில் தங்களுக்கு ஏற்ற வகையில் அவைகளில் பல கருததுகளைப் புகுத்தி மக்களிடையே பரப்பியிருக்கக் கூடும் என்று ஃபர்குஆர் (FarQuhar) என்ற ஆய்வாளர் 1971இல் எழுதிய “The Crown of Hinduism” என்ற நூலில்  243, 259 ஆகிய பக்கங்களில் குறிப்பிடுகிறார். மகாபாரத்தை ஆங்கிலத்தில் தொகுத்த அறிஞர்கள் ஹாப்கின்ஸ் என்பவரும் மாக்டொனால்டு என்வரும் இதே கருத்தை ஏற்கின்றனர்.  - (கீதையின் மறுபக்கம் - 3. அவதாரப் புரட்டு)

மேற்கூறிய பகுதி கி.வீரமணி அவர்கள் கூறியதா? அறிஞர்கள் கூறியதா? அறிஞர்கள் கூறிய கருத்தை திரு.கி.வீரமணி கூறியதா? திரித்துக் கூறுவது மோசடியல்லவா?

தினமலர் என்றாலே அது இனமலர். அசல் ஆரிய நரித்தனங்கள் எல்லாம் அன்றாடம் வெளிவரும். அவர்களே எழுதிக் கொண்டு சென்னை நர்மதா எழுதுகிறார், மதுரை கோதாவரி எழுதுகிறார் என்று போட்டு அரிப்பு தீர்த்துக் கொள்வது அதன் வாடிக்கை!

அதற்கு திரு.வீரமணி அவர்களிடம் உரசுவானேன். திரு.வீரமணி அவர்கள் ஆதாரமின்றி எதையும் பேசக் கூடியவர் அல்ல. அறிவுத் திறன்பற்றி யெல்லாம் விமர்சிக்க உங்களுக்கு ஏது அருகதை! ஒரு விவாத மேடைக்கு ஏற்பாடு செய்யுங்கள்! எது சரி என்று பேசிவிடலாம். அதை விட்டுவிட்டு ஒருதலையாக செய்திகளை அள்ளித் தெளித்து அற்ப ஆதாயம் தேட முயலுவது அடாவடித்தனம் ஆகும்.

கீதையின் மறுபக்கம் நூலில் அவதாரப் புரட்டு என்ற தலைப்பின்கீழ் அறிஞர்களின் கருத்தைக் குறிப்பிடும் திரு.கி.வீரமணி அவர்கள், அதே தலைப்பின் இறுதிப் பகுதியில்,
குப்தர்களின் காலம் புராணிக இந்து மதத்தின் பொற்காலமாக இருந்தது. குப்தர்கள் பாகவதர்களாக (வைணவர்களாக) இருந்தனர். அதனால், விஷ்ணுவின் வாகனமாகிய கருடனைத் தங்கள் அரசின் சின்னமாக வைத்திருந்தனர் என்று கி.வீரமணி அவர்கள் கூறுவதன் மூலம் குப்தர்களின் காலம் சனாதனிகளின், புராணிகளின் பொற்காலம் என்றுதான் குறிப்பிடுகிறார். குப்தர்கள் காலத்தை பொற்காலம் என்று முப்போக்காளர்கள் ஏற்பதில்லை. ஆரிய பார்ப்பன வரலாற்றாசிரியர்கள் தங்கள் ஆதரவு ஆட்சி என்பதால் அதைப் பொற்காலம் என்று உண்மைக்கு மாறாய் எழுதினர்.

எனவே, சந்திரகுப்த மவுரியரின் ஆட்சி சமண, புத்த நெறிகள் பரவிய காலம் அல்ல. அது ஆரிய சனாதனம், ஆதிக்கம் பரப்பப்பட்ட, கோலாச்சிய காலம் என்பதே திரு கி.வீரமணி அவர்களின் கருத்து.

ஒரு பொய்யான தகவலைச் சொல்லி அதன் மீது பசுவைக் கொல்லாதே என்ற கருத்து கி.வீரமணியின் கருத்துக்கு ஏற்றதுபோல் காட்ட முயலுவது கடைந்தெடுத்த கயமைத்தனம் ஆகும்.

புத்தமும், சமணமும் பசுவை மட்டுமே கொல்லக் கூடாது என்று சொல்லவில்லை. எந்த உயிரையும் கொல்லாதே என்று கூறுபவை என்பதை மண்ணுருண்டை மண்டைகள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆரிய பார்ப்பனர்கள் பசுமாட்டை அடித்து சாப்பிட்டதற்கு எத்தனை ஆதாரங்கள் வேண்டும்?

சந்தடி சாக்கில் தாலியைப் பற்றி ஒரு செருகல் செருகியுள்ளீர். தாலிபற்றி விரிவாக விடுதலை, உண்மை ஏடுகளில் விளக்கப்பட்டுள்ளது. தமிழர்க்குத் தாலியில்லை யென்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசன் அவர்களே தமிழர்க்குத் தாலியில்லை என்பதை அறுதியிட்டு உறுதிபட கூறியுள்ளதையும் உண்மை ஏட்டில் வெளியிடப்பட்டுள்ளனர். 

அறிவு நாணயம் இருந்தால், யோக்கியதை இருந்தால், அவற்றிற்கு பதில் சொல். அதை விட்டுவிட்டு அள்ளித்தெளித்தாற்போல் கருத்துக் கூறுவது பித்தலாட்டப் பிரச்சார யுக்தியாகும்.

தாலியகற்றல், மாட்டுக்கறி உண்ணல் இரண்டும் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டதால் ஏற்பட்டக் குடைச்சல் இன்னும் தீராத நிலையில் அதைக் கொட்டித் தீர்க்க கீதையின் மறுபக்கத்தை கிளறியுள்ளது இனமலர்.

ஆய்வுப் பட்டறைக்கு ஆய்வுபற்றி அறிவுரை சொல்லாதீர்!

திரு.கி.வீரமணி அவர்கள் ஆய்வே வாழ்வாகக் கொண்டவர்.

- மஞ்சை வசந்தன்
____

(கெளரவக்) கர்வக் கொலைகள்

 - மஞ்சை வசந்தன்

 
 
கௌரவக் கொலைகள்! தற்போது தமிழகம் முழுவதும் சூடாக பேசப்படும் செய்தி! காட்டுமிராண்டிச் செயலுக்கு கவுரவம் என்று கூறுவதே முதலில் கண்டிக்கத்தக்கது.
 
கவுரவம் என்பதை பெருமை என்று தமிழில் கொள்ளலாம். பெருமை என்பதற்கு என்ன பொருள்? எது பெருமை? மானம் என்பதன் பொருள் என்ன? மதிப்பு  என்பதன் அர்த்தம் என்ன? இவைபற்றி ஒன்றும் தெரியாத அறியாமையில் உழலும் உணர்வு வயப்படும் பேர்வழிகள் நிகழ்த்துகின்ற அநியாயப் படுகொலைகள்தான் கவுரவக் கொலைகள் என்று கூறப்படுகின்றன.
 
பெருமையானவர் (கவுரவமானவர்), பெருமையான குடும்பங்கள் (கவுரவமான குடும்பம்) என்றால் என்ன?
 
குடும்பத்தில் உள்ளவர்கள் பொய் பேசாது, களவு செய்யாது, புறம் கூறாது,  பிறரை வஞ்சிக்காது, பிறருக்கு உதவி, நேர்மையாய் சம்பாதித்து, ஒழுக்கத்தோடு, கட்டுப்பாடோடு நல்வழியில் வாழ்வோரே பெருமைக்குரியவர். அப்படிப்பட்டவர்களைக் கொண்ட குடும்பமே பெருமைக்குரிய குடும்பம் ஆகும்.
 
குடித்துவிட்டு ஆடுவான்; பொய் சொல்லிப் பிழைப்பான்; திருடுவான்; மோசடி செய்வான், தீயவழியில் தான் நடப்பான்.  இதனால் குடும்பப் பெருமை போகாது! ஆனால், அப்படிப்பட்ட ஒருவன் பெண் தன் ஜாதியைவிட்டு இன்னொரு ஜாதிப் பையனை காதலித்தால் மணம் செய்ய முயன்றால், அவன் குடும்பப்பெருமை போய்விடுமாம்! அதற்குத் தீர்வு என்ன? அந்தப் பெண்ணைக் கொன்றுவிட்டால் அவன் பெருமை காப்பாற்றப்படுகிறதாம்; அவன் குடும்பத்துப் பெருமையும் காக்கப்படுகிறதாம்! எப்படிப்பட்ட அயோக்கியத் தனம் இது?
 
தன் மகள் பிற ஜாதியானை மணம் செய்யக்கூடாது என்கின்ற எத்தனைத் தந்தை தன் மனைவியோடு மட்டுமே வாழ்பவன்? நாணயத்தோடு இதற்குப் பதில் சொல்ல வேண்டும்!
 
தன் தினவு தீர்க்க நாயினும் கேவலமாய் அலைகிறான்; காசுக் கொடுத்து விபசாரிகளிடம் செல்கிறான்; அவள் என்ன ஜாதியென்று பார்த்தானா? கள்ள உறவு வைக்கிறான் அப்போது ஜாதி பார்த்துத்தான் உறவு கொள்கிறானா? ஊர் அறிய சின்ன வீடு வைக்கிறான் அங்கு எந்த ஜாதியும் பார்ப்பதில்லை!
 
சாராயத்தை ஊற்றியவனுக்கு சாயந்தரம் வந்தால் ஜாதி தெரியாது! ஆனால், தன்மகள் ஜாதிமாறி துணை தேடினால் ஜாதி, பெருமை, மானம் எல்லாம் வருகிறது? இது என்ன யோக்கியதை?
 
தமிழன் தமிழன் என்று முழங்குகிறான். தமிழனுக்குள் கல்யாணம் செய்யப் போனால் கொலைப் பண்ணுகிறான்! அப்ப இவன் பேசர தமிழன் பேச்சு பித்தலாட்டம் அல்லவா? தமிழனுக்கு ஜாதியுண்டா? யாராவது ஆதாரம் காட்ட முடியுமா? தமிழர் பெருமை பேசுகிறான் தமிழன் காதல் வாழ்வு வாழ்ந்தவனாயிற்றே!
 
உன் தந்தை, உன் தாய் யார் என்று தெரியாது. எந்த ஊர் என்று தெரியாது. என் தந்தை தாய், ஊர் பற்றி உனக்கும் தெரியாது என்ற நிலையில், காதலால், கருத்தொற்றுமையில், விருப்பத்தால் உள்ளங்கள் இரண்டு கலந்து, மணந்து  வாழ்ந்தன என்று தானே தமிழ்மரபு சொல்கிறது.
 
அதைத்தானே பெருமையாக ஊர் ஊராய் பேசுகிறாய்! ஆனால் உன்மகள் ஒருவனை விரும்பிச் சென்றால் ஜாதிவெறி கொண்டு அலைகிறாய், சதிசெய்து கொல்கிறாயே! என்ன நியாயம்?
 
சொல்வது போல வாழ்வது தானே பெருமை? அப்படி வாழ்பவன் தானே பெருமைக்குரியவன்? ஆனால், பெருமைக்கு தகுதியில்லாதவனுக்கு பெருமை, மானம் இதுவெல்லாம் எப்படிவர முடியும்?


 
வேறு ஜாதி ஆணை காதலித்தாள்; கல்யாணம் முடிக்கப்போகிறாள் என்று அறிந்ததும், பெண்ணைப் பெற்றவர் உடன் பிறந்தவன் ஒன்று சேர்ந்து அவளை மரத்தில் கட்டிவைத்து, மண்ணென்னை ஊற்றிய போது, அவள் எவ்வளவோ கெஞ்சி, விடும்படி கதறியும் கொஞ்சங் கூட இரக்கமில்லாமல், தீ வைத்துக் கொளுத்திய கொடுமை இங்கு நடக்கிறது என்றால், நாமெல்லாம் மனிதர்களா?
அப்பெண் செய்த தவறு என்ன. ஒருவனை விரும்பினாள், அவனைத் திருமணம் செய்ய முயன்றாள். அதற்கு அவளைக் கொளுத்தி இவர்கள் குலப்பெருமை காக்கிறார்கள் என்றால், இவர்களெல்லாம் மனிதர்களா? மனிதர்களாக இருக்கத் தகுதி இல்லாதவர்களுக்கு பெருமை ஏது? மானம் ஏது? சூடு ஏது? சொரணை ஏது? இன்றைக்கு ஜாதி பார்க்கும், குலப்பெருமை பேசுகிறோமே, நாம் எல்லோருமே காட்டுமிராண்டிகளாய்த் திரிந்தவர்களின் வழிவந்தவர்கள்தான்.
 
அக்காலத்தில் வாழ்ந்தவர்களெல்லாம் கண்டபடி புணர்ந்து பிள்ளை பெற்றவர்களாயிற்றே அப்படியானால், இரத்தத் தூய்மை, ஜாதித் தூய்மை பேச என்ன தகுதியிருக்கிறது? நம் உடலில் ஓடும் இரத்தத்தில் எந்த ஜாதி என்று அடையாளம் இருக்கிறதா?
 
ஜாதிவெறி கொண்டு பெற்ற பிள்ளையையே கொளுத்தும் கொடியவர்கள், தண்டவாளத்தில் தள்ளி கொலை செய்யும் கயவர்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும்.
 
உயிருக்குப் போராடும் போது, இரத்தம் தேவை உடனே இரத்தம் ஏற்றவில்லை என்றால் உயிர் போய்விடும் என்ற நிலை வரும் போது, எவன் இரத்தம் கிடைக்கும் என்று அலையும் போது, அடுத்த ஜாதிக்காரன் இரத்தத்தை வேண்டாம் என்கிறோமா? கீழ்ஜாதிக்காரன் இரத்தம் ஏற்றாதே என்கிறோமா?
இன்றைக்கு நாடுவிட்டு நாடு திருமணம், ஹிந்தி பேசுகிறவனுக்கும், தமிழ் பேசுகிறவனுக்கும் திருமணம், ஒரு மதத்தாருக்கும் இன்னொரு மதத்தாருக்கும் திருமணம், அப்படி ஏராளமாய் நடக்கும் நிலையில், ஜாதிவெறியில் பெற்ற பிள்ளைகளையே கொல்லும் வெறி எவ்வளவு கொடுமையானது என்பதைச் சிந்திக்க வேண்டாமா? 75 ஆண்டுகளுக்கு முன்பே பெரும் பெரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களெல்லாம் ஜாதிமறுப்பு, மதமறுப்பு திருமணம் செய்துள்ளனர். அவர்களின் வாரிசுகளெல்லாம் சிறப்பாக வாழும் போது இருபத்தோறாம் நூற்றாண்டில் ஜாதிக்காக கொலைகள் செய்வது சரியா?


 
இன்றைக்கு மிகச்சிறந்த திரைப்பட இயக்குநராக இருக்கும் எஸ்.பி. முத்துராமன் அவர்களும், மிகச் சிறந்த பேச்சாளரான சுப.வீரபாண்டியன் அவர்களும் உடன்பிறந்த அண்ணன் தம்பிகள், அவர்களின் பெற்றோர், கலப்பு மணம் செய்துக் கொண்டவர்கள். அவர்களின் குடிப்பெருமை கெட்டுவிட்டதா? சுப.வீரபாண்டியன் அவர்களுடைய மூன்று பிள்ளைகளும் சாதி மறுப்பு மணம் செய்து கொண்டவர்கள். மகிழ்வோடும் சிறப்போடும் வளத்தோடும் வாழ்கிறார்கள். சாதிக்காக கொலை செய்கிறவன் குடும்பம் இவர்களைவிட பெருமை பெற்று பேசப்படுகிறதா? சிந்திக்க வேண்டாமா? ஏன், அன்றைக்கு காந்தியார் (வாணியர்) மகனுக்கும் இராசகோபாலாச்சாரியார் (பார்ப்பனர்) பெண்ணுக்கும் திருமணம் நடந்ததே, அவர்களின் கௌரவம் போய்விட்டதா? இவர்கள் குடும்பத்தைவிட இன்றைக்கு கர்வக் கொலை செய்யும் குடும்பம் கவுரவத்தில் பெரிய குடும்பமா? சிந்திக்க வேண்டாமா?
 
தமிழன் என்று சொல்லிக்கொள்கிறவன் காதல் திருமணத்தை ஏற்க வேண்டும். சாதியை மறுக்க வேண்டும். காதலை ஏற்காதவனும், சாதியை மறுக்காதவனும் தமிழன் அல்ல என்பதுதானே உண்மை! அவர்களுக்குத் தமிழர் பெருமை பேசத் தகுதியும் இல்லை. தமிழர்களின் வளர்ச்சிக்கும் அவர்கள்தான் எதிரிகள். காரணம், தமிழர் சாதி இல்லாதவர்கள், காதலை ஏற்றவர்கள்.
 
ஒரு தாழ்த்தப்பட்டவரும் ஒரு நாயுடுவும், ஒரு வன்னியரும்-, ஒரு தாழ்த்தப்பட்டவரும், ஒரு கவுண்டரும் ஒரு தாழ்த்தப்பட்டவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால், அவர்களெல்லாம் தமிழர்களா? இல்லையா? தமிழர்கள்தான் என்னும்போது அவர்களுக்குள் திருமணம் செய்துகொள்வதில் என்ன குற்றம்? என்ன கேவலம்? தமிழரிலே கேவலத் தமிழன், உயர் தமிழன் உண்டா? கேவலமும், உயர்வு தாழ்வும் வாழும் முறையில் வரலாமேயன்றி பிறப்பால் எப்படி வரமுடியும்? சிந்திக்க வேண்டாமா?
 
தமிழக அரசின் பாராமுகம் தமிழகத்தை அழிக்கும் செயலாகும்!
 
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் கவுரவக் கொலைகளே இல்லையென்று அறிக்கைப் படிக்கிறார். இது எவ்வளவு பெரிய மோசடி! காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு இப்படி அறிக்கைப் படித்தால் காவல் துறையின் நடவடிக்கை எப்படி குற்றவாளிகளுக்கு எதிராய், கடுமையாய் இருக்கும்? கர்வக் கொலை செய்யும் குற்றவாளிகள் எப்படி அஞ்சுவர்? கர்வக் கொலைகளையெல்லாம் தற்கொலையாக்கி அறிக்கையளித்தால் கர்வக் கொலை செய்கின்றவர்கள் அச்சமின்றி செய்ய மாட்டார்களா? இச்செயல் அதிகரிக்காதா?
 
எனவே, அரசு கர்வக் கொலைத் தொடர்பாகக் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகள் தப்பிக்காமல் அதிகப்படியான, கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
 
கற்பழிக்கிறவன்; கூலிக்குக் கொலை செய்கிறவன்; பெற்ற மகளையே வன்புணர்ச்சி செய்கிறவன்; திருடுகிறவன், விபசாரம் செய்கின்றவர், மோசடி செய்கின்றவர் இவர்களெல்லாம் குற்றம் வெளியில் தெரிந்த பின்னும் சூடு சொரணையின்றி, மான வெட்கமின்றி, உணர்வும் தலைகுனிவும் இன்றி வாழ்கிறான், அவனைக் குடும்பம் ஏற்கிறது, அவனை குடும்பத்தைவிட்டு விரட்டுவதில்லை, அவனால் குடும்ப கவுரவம் போய்விட்டது என்று அவர்களை குடும்பத்தினர் சொல்வதில்லை.
 
ஆனால், ஒரு ஆணோ, பெண்ணோ, ஆரிய பார்ப்பான் செய்த சாதி (சதி)யை ஏற்று, அதிலே வெறிகொண்டு, பெற்ற பிள்ளையைக்  கொல்வது, கொளுத்துவது, தண்டவாளத்தில் தள்ளுவது மனிதத் தன்மையற்ற, கொடுஞ்செயலல்லவா? அப்படிச் செய்கின்றவர்கள் கவுரவம் பேச கடுகளவாவது தகுதியுண்டா? அடுத்த சாதியில் திருமணம் செய்துகொண்டால் எப்படி கவுரவம் குறையும்? ஏதாவது காரணம் கூற முடியுமா? விளக்க முடியுமா?
 
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? இந்த உணர்வுதான் இவர்களை ஆட்டிப்படைப்பது. அந்த மற்றவர் யோக்கியதை என்ன? ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? நாற்றமெடுக்கும் ஆயிரம் கேவலம் அந்த மற்றவர்கள் மத்தியில் இல்லையா?
 
நாம் வறுமையில் வாடும்போது, படிக்க வைக்க முடியாமல் தவித்தபோது, கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்பட்டபோது, திருமணம் செய்ய பொன் கொடுக்க முடியாமல் வேதனைபட்டபோது அந்த மற்றவர்கள் வந்தார்களா? வருவார்களா? அப்படியிருக்க எதற்காக அந்த மற்றவர்கள் பற்றி கவலைப்பட வேண்டும்? அந்த மற்றவர்கள் நாம் நன்றாக இருந்தால் வயிறு எரிகிறார்கள்; வழுக்கி விழுந்தால் கைகொட்டிச் சிரிப்பார்கள்; நல்ல பெயர் வந்தால் களங்கம் சொல்வார்கள்? இவர்களுக்காகவா நாம் வாழ்வது?
 
நம் பிள்ளை விருப்பம் மகிழ்வு, வாழ்வு இதையல்லவா நாம் நினைத்துச் செயல்பட வேண்டும். கொல்லப் போகிறார்கள் என்று தெரிந்தபின்னும் நான் அவனோடுதான் வாழ்வேன் என்று சொல்கிறாள் என்றால் எந்த அளவிற்கு அவள் அவனை விரும்புகிறாள் என்பதை உணர வேண்டாமா? அப்படிப்பட்ட ஓர் உன்னதமான காதலர்கள். எவ்வளவு மகிழ்வாக அவர்கள் வாழ்வார்கள்! அவர்களைப் பிரித்து அழிக்கலாமா?
 
ஏமாற்றி, வஞ்சித்து, நாடகமாடி ஒருவன் ஒரு பெண்ணை ஏமாற்றி விடுவது இன்றைக்கு அவ்வளவு எளிய செயலா? ஏமாற்றும் மோசடியும் தொன்மைக்கால தமிழர்களிடமும் இருந்திருக்கிறது. அதற்குப் பின்தான் பலர் அறிய திருமணம் செய்தனர். (பொய்யும் வழுவும் தோன்றிய பின் அய்யர் யாத்தனர் கரணம்).
 
அப்படி காதலன் மோசடியானவன் என்றால், அதை மகளிடம் சரியான காரணத்தைச் சொல்லி அவளைத் திருத்தலாமே, அவனைத் துரத்தலாமோ!
அதை விட்டுவிட்டு எல்லாமே மோசடி நாகடம் என்று பேசுவதும், வாதிடுவதும் சமுதாய அழிவுக்கே வித்திடும் என்பதை உரியவர்கள் உணர வேண்டும்.
 
இந்தக் கர்வக் கொலைகளை சமுதாயத் தொண்டர்களும், முற்போக்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து தீவிரமாய் எதிர்த்து, காதலர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்பு மையங்களை அமைக்க வேண்டும். ஆட்சியாளர்கள் இதில் அதிக அக்கறையெடுத்து, குற்றவாளிகளை அடக்கி, தண்டித்து கலப்பு மணங்களை ஊக்குவிக்க வேண்டும். இதுவே இந்தக் கர்வக் கொலைகளுக்கான தீர்வாகும்.
 
யார் எத்தனை தடை போட்டாலும், கொன்றாலும், கொளுத்தினாலும், காதல் மணங்கள் காலத்தின் கட்டாயம். காதல் மணங்கள்தான் எதிர்கால உலகை ஒரு குடும்பம் ஆக்கப் போகின்றன. வரதட்சணை கொடுமையைக் கொளுத்தப் போகின்றன. சாதி, மதம், இனம், நாடு என்று எல்லா பேதங்களையும் தகர்த்து மனிதர் என்ற சமநிலையை நிலைநிறுத்தப் போகின்றன! இந்த மாற்றத்தை, வளர்ச்சியை, ஒன்றிணைவை ஒருவரும் தடுத்துவிட முடியாது. இன்றில்லை யென்றால் நாளை நடந்தே தீரும்! இந்த கால மாற்றத்தை இன்றே ஏற்று, உண்மையாய் விரும்புகின்றவர்களைச் சேர்த்து வைத்து வாழ்த்துவதே அறிவுடைமையாகும். சாதிய காரணங்களுக்காய் படுகொலை புரிவது மனிதத் தன்மையற்ற மாகொடுஞ்செயல் ஆகும். சாதி உணர்வை, வெறியை சரியான நெருப்புகொண்டு எரிக்க வேண்டும். அதற்குரிய சரியான நெருப்பை அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும்.
 
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில்,
எங்க ஊர் நெருப்பு
வீடெரிக்கும்; காடெரிக்கும்;
ஆளெரிக்கும்; நீதி யெரிக்கும்!
பாவி மக்கா! சாதியை
எரிக்கும் நெருப்பை
எப்பப்பா கண்டுபிடிக்கப் போறீங்க!     


- உண்மை இதழ் ஜுலை 16-31 இதழில் எழுதியது.

Friday, July 10, 2015

தொன்மை தமிழரின் வார்த்தை விளையாட்டு!

- மஞ்சை வசந்தன்
 
"வந்ததனால் வரவில்லை வராவிட்டால் வந்திருப்பேன்!"
"செத்ததனால் சாகவில்லை சாகாட்டி செத்திருப்பேன்!"
இது என்ன உளறல் என்கிறீர்களா?

இல்லை இது அக்கால தமிழ்க் காதலியின் நுட்பமான வார்த்தை.

விளக்கம் :

அக்கால தமிழரிடம் ஜாதியில்லை, கர்வக் கொலையில்லை, வயதுவந்த ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்து காதல் வளர்த்து பின் இல்வாழ்வு ஏற்பர்.

அப்படி காதல் கொண்டு பழகிய காதலியைப் பார்த்து காதலன் முழுநிலவில்  வருவதாய்ச் சொன்னாயே ஏன் வரவில்லை யென்கிறான், அதற்கு அவள், "வந்ததனால் வரவில்லை வராவிட்டால் வந்திருப்பேன்!" என்கிறாள். உங்களைப் போலவே அவனும் புரியாமல் அவளையே பார்க்கிறான்.

அவள் கண்ணை மூடிக் கொண்டு "மாதவிலக்கு" என்கிறாள்.

இப்போது புரிகிறதா?

மாதவிலக்கு வந்ததனால் அவள் இவனைச் சந்திக்க வரவில்லை, அது வராமலிருந்தால் வந்திருப்பாள்! என்பதே அதற்குப் பொருள்.

ஓ! "செத்ததனால்...." என்று அதற்கு விளக்கம் கேட்டான். இன்று உங்களைப் பார்க்க வந்தபோது வழியில் ஒரு பாம்பு. அது செத்த பாம்பு. அது செத்ததால் நான் சாகவில்லை இல்லையென்றால் நான் அது கடித்து செத்திருப்பேன்! என்றாள்.

என்னங்க... தமிழர் அறிவுக்கு இணை இவ்வுலகில் எங்காவது உண்டா?
_____


Thursday, July 9, 2015

உணவு சார்ந்தும் உடல் சார்ந்தும் இரண்டு முக்கோணங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காலையில் பட்டினியாக இருக்கக் கூடாது
இரவு முழுவதும் சாப்பிடாமல் இருக்கும் நம் வயிறு காலையில் காலியாக இருக்கும். அப்படியிருக்க உடனடியாகக் காலி வயிற்றுக்கு உணவு கொடுக்க வேண்டியது கட்டாயம். இல்லையென்றால் வழக்கமாகச் சுரக்கும் செரிமானச் சுரப்பு நீர்கள் இரைப்பையை அரித்துப் புண்ணாக்கிவிடும். இது குடல்புண் வர வழிவகுக்கும். மேலும், உடலும், உடல் உறுப்புகளும் சோர்வு அடையும். எனவே, காலை உணவைக் கட்டாயம் உண்ண வேண்டும்.
காலைச் சிற்றுண்டி என்பர். அது சரியல்ல. காலையில்தான் அதிகப்படியான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். வயிறு காலியாகவுள்ளதால் மட்டுமல்ல, உழைக்கத் தொடங்கும் நேரம். எனவே, வேண்டிய அளவு சக்தியளிக்கும் உணவு தேவை. மதிய உணவு அதைவிடக் குறைத்து உண்ண வேண்டும். பலர், இரவில்தான் அதிக உணவு எடுப்பர். குறிப்பாக, இறைச்சி, மீன் உணவுகள் அதிகம் உண்பர். இது அறியாமை. இரவு ஓய்வெடுக்கப் போகும்போது அதிகம் உண்பது உடலில் கொழுப்பாகவும், சர்க்கரையாகவும் சேர்ந்து, பல நோய்களை உருவாக்கும்.


இரு முக்கோணங்கள்
உணவு சார்ந்தும் உடல் சார்ந்தும் இரண்டு முக்கோணங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உடலின் தோள்பாகம் விரிந்து இருக்க வேண்டும். இடைப்பகுதி குறுகியிருக்க வேண்டும். கால் பகுதி மேலும் மெலிந்து இருக்க வேண்டும். மாறாக, வயிறு பெருத்துத் தோள் ஒடுங்கியிருப்பது நலக்குறைவின் அடையாளம்.
எனவே, இந்த இரண்டு முக்கோணங்களையும், உணவு, உடல்நலம் இவற்றின் அளவுகோலாகக் கொண்டு, அதற்கேற்ப உடலையும், உணவையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
வயிறு முழுக்க உணவு உண்ணக்கூடாது:
எப்போதும் வயிறு நிறைய உண்ணக்கூடாது. அவ்வாறு உண்பதுஇரைப்பைச் சுருங்கி விரிவதைப் பாதிக்கும். உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
அரைவயிறு உணவு, கால்வயிறு நீர், கால்வயிறு காலியாக இருக்குமாறு உண்ண வேண்டும்.
கடினமான உழைப்புச் செய்யக் கூடியவர்கள் இறைச்சி, கொழுப்பு, அரிசி உணவுகள் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுழைப்பு இல்லாத பணி செய்வோர், காய்கறி, கீரை உணவுகளை எடுத்துக் கொண்டு, கொழுப்பு உணவுகளை, அரிசி உணவுகளைக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நேரம் கடந்து உண்ணக்கூடாது
பசிக்கும் முன்னும் உண்ணக்கூடாது
நேரங் கடந்து உண்பதால், குடற்புண்ணும், உடற்சோர்வும், மயக்கமும் ஏற்படும். பசிக்கும் முன்பே உண்பதால் முன்பு உண்ட உணவு செரிக்காத நிலையில், புதிய உணவு கலந்து செரிமானப் பாதிப்பையும் நோய்களையும் உருவாக்கும். எனவேதான், பசித்துப் புசி என்றனர். அதில் ஒரு சின்ன திருத்தம். பசித்துப் புசி என்பதை, பசித்ததும் புசி என்றால் மிகச் சரியாக இருக்கும். காரணம், பசித்த பின்னும் நீண்ட நேரம் உண்ணாமல் இருப்பது தவறு என்பதால் பசித்ததும் புசி என்பது சரியானது. இவ்வாறு சொல்லும்போது பசித்த பின் உண்ண வேண்டும் என்பதும் பசித்ததும் உண்டுவிட வேண்டும் என்பதும் அடங்கிவிடுகிறது.
பதற்றத்தோடும் விரைவாகவும் உண்ணக் கூடாது
மனஇறுக்கத்தோடும், பதற்றத்தோடும் உண்பது மிகவும் கேடு பயக்கும். உண்ணும்போது சுவைத்து மெல்ல, நிதானமாக, நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்போதுதான் உணவு நன்றாக அரைக்கப்படுவதுடன், அது செரிப்பதற்குத் தேவையான உமிழ்நீரும் உணவுடன் கலக்கும்.
இதைத்தான், நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர். பதற்றத்தோடு, மன இறுக்கத்தோடு, உண்ணும் உணவைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் அள்ளி வாயில் போட்டு அவசர அவசரமாய் விழுங்கினால், அவ்வுணவு உள்ளுக்குச் சென்று கேடே விளைக்கும்.
காரணம், உணவு சரியாக மெல்லப்பட்டிருக்காது; உணவுடன் உமிழ்நீர் போதிய அளவு கலந்திருக்காது. உள்ளே சென்ற உணவு செரிக்க நேரம் ஆகும். இதனால் செரிப்பு உறுப்புகளுக்குக் கூடுதல் வேலை; மனஇறுக்கத்தாலும், பதற்றத்தாலும், இரத்த அழுத்தத்தாலும் உள்ளுக்குள் தேவையற்ற சுரப்புகள் சுரந்து உணவு நஞ்சு போல மாறும். எனவே, உண்ணும்போது நிமானமாக, மகிழ்வாக, நன்றாக மென்று உண்ண வேண்டும்.
உண்ணும்போது பேசக்கூடாது
உண்ணும்போது கவனம் முழுவதும் அதிலே இருக்க வேண்டும். சுவைத்து மென்று மகிழ்வோடு உண்டால் பேசத் தோன்றாது. மாறாகப் பேச்சு இடையூறாக இருக்கும்.
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு சாப்பிடுவதும் சரியல்ல. படித்துக் கொண்டு உண்பதும் உகந்ததல்ல. நடந்து கொண்டு, படுத்துக் கொண்டு, சாய்ந்து கொண்டு உண்பதும் ஏற்றதல்ல. நமது தமிழர் மரபுப்படி தரையில் கால்மடக்கி அமர்ந்து உண்பதே நன்று.
சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது
இரவு உணவிற்குப் பின் குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்தே தூங்க வேண்டும். சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. பகல் உணவிற்குப் பின் அரைமணி நேரம் கழித்து ஒரு 10 நிமிடங்கள் படுத்து இளைப்பாறினால் புத்துணர்ச்சியுடன் மீண்டும் உழைக்க முடியும். பகலில் நீண்ட நேரம் உறங்கக் கூடாது.
இரவு 12 மணி வரை கண்விழிக்க வேண்டியவர்கள். பிற்பகல் இரண்டு மணி நேரம் தூங்கியெழுவது நல்லது. இரவில் பணியைச் சுறுசுறுப்புடன் பணியாற்ற அது பயன்படும். மாறாக, இரவில் 7 மணி நேரம் தூங்கியவர்கள் பகலிலும் 2 மணி நேரம் உறங்குவது கூடாது. அவ்வாறு உறங்கினால் உடல் பருக்கும்; நோய்க்கும் இடம் கொடுக்கும். இரவு 11 மணிக்கு மேல் விழிக்காமல் இருப்பதும் காலை 5 மணி வரை உறங்குவதும் கட்டாயம்.

Saturday, July 4, 2015

சீதை இராமனுக்குத் தங்கை!

இராமாயணம் எத்தனை இராமாயணம்!
சீதை இராமனுக்குத் தங்கை!
இராமனுக்கு நான்கு மனைவி!
- மஞ்சை வசந்தன்


இராமன் சீதை இருவரும் ஒருதாய் பிள்ளை. அதாவது அண்ணன் தங்கை என்று பவுத்த இராமாயணத்திலும், பம்ப இராமாயணத்திலும், ஜைன இராமாயணத்திலும் எழுதப்பட்டுள்ளது!

இன்னுமொரு இராமாயணத்தில் சீதை இராவணனின் மகள் என்று சொல்லப்பட்டுள்ளது.

இராமன் பல பெண்டிரைத் திருமணம் செய்தான் என்று ஜைன இராமாயணம் சொல்கிறது. 1.சீதை, 2.பிரபாவதி, 3.ரதினிபா, 4.ஸ்ரீதாமா என்ற நால்வரும் இராமனின் மனைவியர் என்கிறது இந்த இராமாயணம்.

இலட்சுமணனுக்கு எட்டு மனைவி

இலட்சுமணனுக்கு எட்டு மனைவிகள் 250 பிள்ளைகள் என்கிறது ஜைன இராமாயணம். விசல்யா, ரூபவதி, வனமாலா, கல்யாண மாலிகா, ரத்தினமாலிகா, ஜீதபத்மா, பாக்கியவதி, மனோரமா என்ற எட்டு மனைவிகள் என்று விவரிக்கிறது.
 
ஸி.ஆர்.ஸ்ரீநிவாஸ அய்யங்கார்

இவர் 1.ஜைன இராமாயணம், 2.பௌத்த இராமாயணம், 3.யவன இராமாயணம், 4.கிறிஸ்துவ இராமாயணம் என்ற நான்கு இராமாயணங்களை ஆய்வு செய்து 1928இல் இதர இராமாயணங்கள் என்ற பெயரில் நூல் எழுதியுள்ளார்.

இருபத்து நான்கு இராமாயணம்

நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும் இறுதியில் 24 இராமாயணங்கள் நிலைக்கின்றன.

பவுத்தர்கள் பிராகிருத மொழியிலும், இந்துக்கள் வடமொழியிலும், தமிழ், தெலுங்கு முதலிய மொழிகளிலும் இராமாயணம் எழுதியுள்ளனர்.

கி.பி.முதல் நூற்றாண்டில் விமலசூரி என்பவர் இராமாயணத்தை பவுமசகியம் என்ற பெயரில் எழுதினார்.


அதன்பிறகு சவுமியன், சுயம்புவன், குணபக்த ராச்சாரியன், ரவிசேனன், தேவச்சந்திரன், பிரவரசேனன் என்ற சமணர்கள் இராமாயணத்தை எழுதியுள்ளனர்.
 
பவுத்தர்கள் தசரத ஜாதகம், சாம ஜாதகக் கதை, செச்ந்திர ஜாதகம், சம்புல ஜாதகம், இலங்காவதார சூத்திரம் என்ற இராமாயண கதைகளை எழுதியுள்ளனர்.

7ஆம் நூற்றாண்டில் ரவிசேனன் மகாராமாயணம் எழுதினார். கி.பி.12ஆம் நூற்றாண்டில் திரிசஷ்டிகாலக்கா என்ற பெயரில் இராம கதையை எழுதினார்.
கி.பி.16ஆம் நூற்றாண்டில் தேவ விஜயர் இராம சரிதம் எழுதினார்.

இராமாயணம் என்பது கற்பனைக் கதை. உண்மை நடப்பாயிருந்தால் ஒரே மாதிரி இருக்கும். கற்பனை என்பதால் கண்டபடியிருக்கிறது! பலவிதமாக இருப்பதே பொய் என்பதற்கான ஆதாரம்.

தந்தை பெரியாரின் இராமாயண ஆய்வு

தந்தை பெரியார் அவர்கள் இராமாயணக் குறிப்புகள், இராமாயண பாத்திரங்கள் என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார்கள். இவை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட இராமாயணத்தைத்தான் இந்தியா முழுக்கப் பரப்பி மதவெறியைத் தூண்டப் பார்க்கிறது மதவெறிக் கூட்டம்.

இந்த இராமனைத்தான் இந்தியாவின் ஏகக் கடவுளாக ஆக்கப் பார்க்கிறார்கள். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும்கூட அதை ஏற்க வேண்டும் என்கின்றனர்.
 
 வடநாட்டில் தடம் பதிக்கும் பெரியார்

அறிவியலின் உச்சத்தில் உலகம் சென்று கொண்டிருக்கையில் நாட்டை 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துத் தங்களின் மனுதர்ம ஆட்சியை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது ஆரியப் பார்ப்பனக் கூட்டம்.
இச்சூழலில் தந்தை பெரியாரின் தேவை வடபுலத்தாரால் உணரப்பட்டு பெரியாரின் இராமாயணப் பாத்திரங்கள் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு பரப்பப்படுகிறது.

வடநாட்டு பத்திரிகைகள் தந்தை பெரியாரின் தேவையை வலியுறுத்தி எழுதுகின்றன. ஆரிய ஆதிக்கம் வீழ்த்தப்பட, மதச்சார்பற்ற நெறி பின்பற்றப்பட தந்தை பெரியாரின் கொள்கைகள் முதற்கட்டமாக  இந்திய மயமாக்க வேண்டியது இன்றியமையாக் கடமையாகும்.

வட்டப் பரப்பு காண வழியை முதலில் சொன்னவர் தமிழர்!

 வட்டப் பரப்பு காண வழி 
முதலில் சொன்னவர் தமிழர்!

                                                               - மஞ்சை வசந்தன்

 வட்டத்தின் பரப்பளவு πr2 என்பது தற்காலத்தில் கணிதச் சூத்திரமாக  பயன்படுத்துகின்றனர். இச்சூத்திரம் சொல்லப்படுவதற்கு சில ஆயிரமாண்டுகளுக்கு முன்பே, கணக்கதிகாரம் என்னும் நூலில் பாடல்வடிவில், அதற்கான வழியைப் பதிவு செய்துள்ளனர் தமிழர்கள்.

வட்டத்தரை கொண்டு விட்டத் தரைதாக்கச்
சட்டெனத் தோன்றும் குழி

                                                    -  (கணக்கதிகாரம் 46)

இதன் பொருள்:

வட்டத்தரை என்பது சுற்றளவில் பாதி
விட்டத்தரை = விட்டத்தில் பாதி
சுற்றளவில் பாதியை விட்டத்தில் பாதியால் பெருக்க பரப்பளவு கிடைக்கும் என்றனர்.

எடுத்துக்காட்டு:

விட்டம்: 14; வட்டம்: 44

விட்டத்தில் அரை = ஆரம்(r) = 7

r = 7
வட்டத்தில் அரை 44/2 = 22. 
22 X 7 = 154

வட்டத்தின் பரப்பு = 154

தற்கால சூத்திரப்படி வட்டத்தின் பரப்பு = π r2

=  22 / 7 X 7X7 = 154    


படியுங்கள் தமிழர் பெருமை பரப்புங்கள்.

நாளை இன்னொரு பெருமையுடன்.





_____

Friday, July 3, 2015

பித்தகரஸ் தேற்றம் முதலில் சொன்னவர்கள் தமிழர்கள்!

பித்தகரஸ் தேற்றம்   

முதலில் சொன்னவர்கள் தமிழர்கள்!

- மஞ்சை வசந்தன்

பித்தகரஸ் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் தமிழர்களின் அறிவைப் பெற்றே அத்தேற்றத்தை கூறினார் என்று அப்போலாலியசு என்பவர் குறிப்பிடுகிறார்.

(ஆதாரம்: கடலடியில் தமிழர் நாகரிகம் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு. பக்கம் 40)

ஆம். பித்தகரசுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் முக்கோணவியலின் தத்துவத்தைப் பாடலாக எழுதி வைத்தனர். அப்பாடல் இதோ:

”ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறாக்கி
 கூறதில் ஒன்றைத் தள்ளி
 குன்றத்தில் பாதி சேர்த்தால்
 நீடிய கர்ணந் தானே!”
- கோதையனார்

இதன் பொருள்: முக்கோணத்தின் கர்ணம் கண்டுபிடிக்க, நீளத்தை எட்டால் வகுத்து, கிடைப்பதை நீளத்தில் கழித்து, செங்குத்து உயரத்தில் பாதியை இத்தோடு சேர்த்தால் கர்ணம் கிடைக்கும்.

எடுத்துக்காட்டு:


விடை:

நீளம் 4. அதில் எட்டில் ஒரு பாகம் 0.5. அதை நீளத்தில் கழித்தால் 3.5. இத்தோடு உயரத்தில் பாதி (1.5) சேர்க்க 3.5 + 1.5 = 5. ஆக BC (கர்ணம்) = 5.

பிதாகரஸ் தேற்றப்படி கர்ணம் காண சூத்திரம்

AB^2 + AC^2  = BC^2

4^2 + 3^2 = 16 + 9 = 25 = 5^2

BC = 5

தமிழர் பெருமைக்கு ஆதாரம் கேட்பவர்கள் ஆதாரத்திற்கு இதை புரிந்து கொள்ளட்டும். தமிழர் பெருமை இன்னும் வரும்.