அரசியல்

Tuesday, July 26, 2016

யோகாசனம் - சில முக்கிய குறிப்புகள்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!
யோகாசனம் - சில முக்கிய குறிப்புகள்.............................
1. உணவு அருந்திய மூன்று மணி நேரத்திற்குப் பிறகுதான் ஆசனங்கள் பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், சில பள்ளிகளில் உணவு இடைவேளை முடிந்தவுடன் யோகா வகுப்புகள் நடைபெறுகின்றன. இது தவறு. வணிகநோக்கில் மாணவர்கள் உடல் நலத்தைப் பாழாக்கக்கூடாது.
2. குறிப்பிட்ட சில ஆசங்களைப் பெண்கள் சில நேரங்களில் செய்யக்கூடாது. அதை நன்றாக அறிந்து பின்பற்ற வேண்டும்.
3. ஒரு ஆசனத்திற்குரிய மாற்று ஆசனம் செய்யவேண்டும் இல்லையேல் பாதிப்பு வரும். இதையும் அறிந்து செயல்படவேண்டும்.
4. பயிற்றுநர் 5 ஆண்டாவது அனுபவம் உடையவராகவும் உடற் கூறு பற்றி அறிந்தவராகவும் இருக்க வேண்டும். ஒவ்வொருவர் உடலுக்கு ஏற்ற யோகா செய்யப்பட வேண்டும். ஏசி அறையில் யோகாசெய்வது தவறு.
5. கூட்டமாக யோகா கூடாது
பெரிய அரங்கம் அல்லது பெரிய திடலில் நூற்றுக்கணக்கானவர்களை அமரவைத்து அனைவருக்கும் ஒரே மாதிரியான யோகா பயிற்சி அளிப்பது தவறு. காரணம், ஒவ்வொருவர் உடல் நிலையைக் கேட்டறிந்து, அதற்கேற்ப பயிற்றுநரின் நேரடி கண்கானிப்பில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி பார்த்தால் மோடி நடத்தும் யோகா தவறானது மக்கள் நலத்திற்கு எதிரானது.
- மஞ்சை வசந்தன்

Monday, July 25, 2016

உண்மையான தமிழின இயக்கம் திராவிடர் கழகம்!

தமிழரின் தொன்மை மரபுகளை
மீட்டெடுக்கும் இயக்கமே திராவிடர் கழகம்!
உண்மையான தமிழின இயக்கம் அதுவே!

தமிழரின் தொன்மை மரபுகள் 1. இல்லறத்திற்குப் பின் தொண்டறம், 2. ஜாதியின்மை,  

 3. பெண்ணின் பெருமை, 4. விருப்ப மணம், 5.மூடநம்பிக்கையின்மை, 6. மானம், 7. கல்வி, 8.உலகளாவிய பார்வை இவற்றை மீட்டெடுக்க பாடுபடுவதே திராவிடர் கழகத்தின் நோக்கு. இதை உணராது அரைவேக்காடுகளின் பின்னே அணிவகுக்கும் இளைஞர்கள் இவற்றை ஊன்றிப் படித்து, உண்மையை உணர வேண்டுகிறோம்!

இல்லறத்திற்குப் பின் தொண்டறம்:

இல்லறத்திற்குப் பின் துறவறம் செல்வது தமிழர் மரபன்று. இல்லறத்திற்குப் பின் தொண்டறம் என்பதே தமிழரின் தொன்மரபு. அதை மீண்டும் மீட்டெடுக்க பாடுபட்டவர், பரப்புரை செய்தவரே தந்தை பெரியார். அதைத் தொடர்ந்து செய்து வருவதுதான் திராவிடர் கழகம்.

இல்லறத்திற்குப் பின் தொண்டறம் என்பது தமிழர் மரபா? என்ற வியப்பு, அய்யம் சிலருக்கு எழும். இதோ அதற்கான ஆதாரம்.

“காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களோடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”
(தொல்காப்பியம் - கற்-51)

இல்லற வாழ்வில் ஈடுபட்டு வாழ்பவர்கள், இல்வாழ்வின் துய்ப்பு போதும் என்ற நிலையில், அறிவும், அனுபவமும் பெற்ற பெரியவர்கள், பிள்ளைகளிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, பொதுமக்களுக்குத் தொண்டாற்ற வீட்டைவிட்டு வெளிவந்தனர்.

அப்படி அவர்கள் வெளியேறும்போது, மக்கள் பற்றைத் தவிர, பொருள், சுகப்பற்று ஏதும் இன்றி வெளியேறினர். அவ்வாறு வெளியேறும்பொழுது, வெய்யிலுக்குக் குடை, செருப்பு, நீர்ச்சொம்பு, ஊன்றுகோல், படுத்துறங்க பாய், அறநூல்கள் இவற்றை மட்டுமே உடன் எடுத்துச் சென்றனர்.
இதைத் தொல்காப்பியம், 

“நூலே கரகம் முக்கோல் மனையே
ஆயுங்காலை அந்தணர்க் குரிய”
- (தொல்.மர-70)

இப்படி இல்லறம் விட்டுத் தொண்டறம் செய்ய வெளியில் வந்து தொண்டாற்றியவர்களே அந்தணர் எனப்பட்டனர். அந்தணர் என்பது தொண்டறத் தமிழர்களுக்குரிய சொல். ஆரிய பார்ப்பனர்களைக் குறிப்பதாய்க் கொள்வது தப்பு. 

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்” 

என்பதன் மூலம் இதைத் தெளியலாம். ஆக, அந்தணர் என்போர் மக்கட் தொண்டாற்றிய, அறவோரான தமிழர்கள் என்பதுத் தெளிவு!

இப்படிப்பட்ட தொண்டற வாழ்வை மீட்டு, நடப்புக்குக் கொண்டுவரவே பெரியார் பாடுபட்டார். தானும் அவ்வாறே வாழ்ந்து காட்டினர். தனக்கென எதுவும் எடுத்துக்கொள்ளாது, எல்லா பொருளையும் மக்கள் தொண்டுக்குச் செலவிட்டு ஊர்ஊராய் அலைந்து தொண்டு செய்தார்.

உண்மையான தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியுடையவர்கள், பண்டைய தமிழர் முறையைப் பின்பற்றி, இல்லற வாழ்விற்குப் பின் தொண்டற வாழ்வை மேற்கொள்ள வேண்டும். அதுவே பழந்தமிழரின் பண்பட்ட மனிதநேய வாழ்வை மீட்டெடுக்கும் உரிய வழியாகும்! அதை செய்கின்ற தமிழர் அமைப்பே திராவிடர் கழகம். அதைத்தான் பெரியாரும், அவரது தொண்டர்களும் செய்து வருகின்றனர்.

ஜாதியின்மை:

தொன்மைத் தமிழரிடையே ஜாதியில்லை. அரசர், வணிகர், வேளாளர் என்ற கடமைப் பகுப்புகளே இருந்தன.

அரசர்: தமிழர்களைத் தலைமையேற்று காத்தவர்களே அரசர்கள். அரசர்கள் என்பவர்கள் காவலர்கள். அரசு என்றால் காவல் என்று பொருள். நாட்டை - மக்களைக் காப்பவர் அரசர்.
வணிகர்: விளைபொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டுசென்று விற்பவர்கள்.

வேளாளர்: உழவுத் தொழில் செய்தவர்கள் வேளாளர். இவர்கள் உழுது பயிரிட்டு பொருட்களை விளைவித்தனர்.

இப்பிரிவுகள் ஜாதிப் பிரிவுகளா என்றால், இல்லை. காரணம், இம்மூன்று பிரிவினரும் ஒருவருக்கொருவர் மணஉறவு கொண்டனர். ஜாதிப் பிரிவாக இருந்தால் மணவுறவு இருக்காது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மன்னன் இருஞ்சேட்சென்னியின் மனைவி அழுந்தூர் வேளின் (வேளாளர்) மகள். அவனுடைய மகன் கரிகாலன் மனைவி நாங்கூர் வேளின் மகள். சேரன் செங்குட்டுவனின் மனைவி கொங்குவேளின் மகள்.

உழவர் மகளை அரசனும், அரசன் மகளை உழவரும், வணிகர் பிள்ளைகளை உழவர் பிள்ளைகளும், அரசு குடும்பத்தவரும் மணந்து வாழ்ந்தமையால் இவை ஜாதிப் பிரிவுகள் அல்ல.

ஆக, தமிழரின் தொன்மை மரபு ஜாதியின்மையே. அதை மீண்டும் கொண்டுவருவதே தமிழரின் பண்பாட்டு மீட்பாகும். அதைத்தான் திராவிடர் கழகம் செய்கிறது. ஜாதி தமிழர் மரபல்ல என்பதால், ஜாதியைப் பிடித்துக் கொண்டுள்ள எவரும் தமிழர் என்று சொல்லும் தகுதியற்றவர் ஆவர்.

பெண்ணின் பெருமை:

தமிழரின் தொன்மை மரபு தாய்வழிச் சமுதாயமும், தாய்த் தலைமையுமே! பெண்கள் நிலையாக வாழ்வர், மணந்துகொள்ளும் ஆணே அங்கு சென்ற வாழ்வார்.

ஆணாதிக்க ஆரிய கலாச்சாரம் பரவிய பின்னர்தான் பெண் அடிமையானாள். பழைய தொன்மை மரபுப்படி பெண்ணுக்கு பெருமையும் உரிமையும், உயர்நிலையும் வேண்டும் என்பதே திராவிடர் கழகத்தின் கொள்கை. அதற்காகவே திராவிடர் கழகம் போராடுகிறது.

ஆக, திராவிடர் கழகத்தின் பெண்ணுரிமைப் போர் என்பது தமிழர் மரபை மீட்டெடுக்கும் முயற்சியே ஆகும். பெண்ணை அடிமயாக்கும் எவரும் தமிழர் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றவர் ஆவர். தமிழரின் அடையாளம் பெண்ணைச் சமமாக மதித்து நடத்துவதேயாகும்.

விருப்ப மணம்:

தமிழர் வாழ்வில் வயது வந்த ஆணும், பெண்ணும் தனிமையில் காதல் வளர்த்து, உளம் ஒத்த நிலையில் இல்வாழ்வில் இணைந்து ஈடுபடுவதே மரபு.

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும்  எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"       -  குறுந்தொகை - 40
என்ற பாடல் இதை நன்க உணர்த்துவதைக் காணலாம். 

பெற்றோர் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்துவைப்பது, பொருத்தமற்றவர்க்கு உறவுக் காரணமாய் மணம் செய்து வைப்பது போன்ற இழிநிலைகள் ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பால் வந்த அவலங்கள் - அழிவுகள். 

எனவே, அதை ஒழித்து மீண்டும் உளம் ஒத்த விருப்ப மணத்தை உருவாக்குதே தமிழர் இயக்கமான திராவிடர் கழகத்தின் இலக்கு, முயற்சி எல்லாம். எனவே, விரும்பி மணப்பதை தடைசெய்யும் எவரும் தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியிழந்தவர்கள் ஆவர். பிள்ளைகளின் விருப்பப்படியான மணவாழ்வே தமிழரின் தொன்மைப் பண்பாடாகும். உளம் ஒத்த இணையரை ஒன்றுசேர்த்து வாழவைப்பதே தமிழர் மரபு, தமிழர்க்கு அழகு! அதை மீண்டும் கொண்டுவர முயல்வதே திராவிடர் கழகம்.

மூடநம்பிக்கையின்மை:

தொன்மைத் தமிழரிடையே கடவுள், மதம், சடங்கு போன்ற எந்த மூடநம்பிக்கையும் இல்லை. எல்லாம் இடையில் வந்தவை. ஆரிய பார்ப்பனர்களால் திட்டமிட்டு தமிழர் மூளையில் ஏற்றப்பட்டவை.

நிலத்தலைவரை மதித்தல், சிறந்த பெண்டிரை மதித்தல், வீரரை மதித்தல், குலப் பெரியோரை மதித்தல், பயனுள்ளவற்றை மதித்தல், நன்றி செலுத்துதல் போன்றவையே தொன்மை தமிழரிடம் இருந்தவை. அம்மன், வீரன், வேலன், பொங்கல் கொண்டாட்டங்கள் அப்படிப்பட்டவையே.

மரியாதையும் நன்றியும் செலுத்தும் இம்முறையை வழிபாடாக மாற்றி, சடங்குகளைப் புகுத்தி, தமிழர்கள் மதித்தவற்றை கடவுளாகக் கற்பித்து, மூடநம்பிக்கைகளை வளர்த்தவர்கள் ஆரிய பார்ப்பனர்கள்.

எனவே, மூடநம்பிக்கையுடையவர் எவரும் தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியற்றவர்கள் என்பதே உண்மை வரலாறு உணர்த்தும் உண்மையாகும்! ஆகவே, மூடநம்பிக்கைகளை அகற்றி, அறிவுள்ள இனமாக தமிழினத்தை மாற்றி, நன்றி பாராட்டும் பண்பை உருவாக்கும் இயக்கமே திராவிடர் கழகம்.

மானம்:

தமிழர் மானத்தை உயிரைவிட மேலாக எண்ணினர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அப்படிப்பட்ட தமிழர்கள்தான், ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாய் மானம் இழந்து, மதியிழந்து அடிமையாய், இழிமக்களாய் ஆகினர். அவர்களை, மீண்டும் மானமும் அறிவும் உள்ளவர்களாக மாற்ற, தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட  தன்மான (சுயமரியாதை) இயக்கமே திராவிடர் கழகம். அதுவே, இவ்வியக்கத்தின் தலையாய இலக்கு. ஆகவேதான் அது சுயமரியாதை இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

எனவே, மான உணர்வற்ற எவரும் தமிழர் என்று சொல்லிக்கொள்ள சற்றும் தகுதியுடையவர்கள் அல்ல என்பதை உணர்ந்து தன்மான உணர்வு உடையவர்களாய் கிளர்ந்தெழ வேண்டும். நம் மானத்திற்கு எதிராய் உள்ள ஆதிக்கச் சக்திகளை எதிர்த்து முறியடிக்க வேண்டும்; வெற்றி கொள்ளவேண்டும்.

கல்வி:

கல்வி மனிதனுக்குக் கட்டாயம் என்று வாழ்ந்தவர்கள் தொன்மைத் தமிழர்கள். ஆண்-பெண் என்று இருபாலரும் கல்வியில் சிறந்து விளங்கினர். ஆரியர் கலப்பிற்குப் பின், அவர்கள் ஆதிக்கத்தின் விளைவாய், சாஸ்திர, சட்டங்களின்படி தமிழர் கல்வி கற்கக் கூடாது என்ற கட்டாயம் உருவாக்கப்பட்டது. அதை ஒழித்து, மீண்டும் கல்வி எல்லோர்க்கும் உரியது என்ற தமிழரின் உயர் மரபை உருவாக்கவே திராவிடர் கழகம் உருவாக்கப்பட்டது. அதற்காகவே அது அயராது பாடுபட்டு வருகிறது.
கல்வியும், அறிவும் தமிழரின் அடையாளம். எனவே, கற்று அறிவார்ந்த வாழ்க்கை வாழ்பவரே தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதிக்கு உரியவர்கள்! எனவே, தமிழர் அனைவரும் கட்டாயம் கற்றுத் தெளிய வேண்டும்; உயர வேண்டும்.
உலகளாவிய பார்வை:
தமிழர் குறுகிய வட்டத்திற்குள் என்றுமே தங்களைக் குறுக்கிக் கொள்ளாதவர்கள். உலகை ஒரு ஊராக எண்ணியவர்கள். உலக மக்களை உறவினர்களாக ஏற்றவர்கள்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்!”

என்ற தமிழரின் ஒப்பற்ற சிந்தனையே இதற்கு எடுத்துக்காட்டு!
எனவே, சாதி, மத வட்டத்திற்குள் சுருங்காது, சமத்துவம், கல்வி, மானம், விடுதலை, விருப்பப்படியான உயர்நெறி வாழ்வு, மனிதநேய மலர்ச்சி இவையே தமிழரின் தொன்மை மரபு என்பதால், அவற்றை மீண்டும் மீட்டெடுக்க முயலும், பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகமே தமிழரின் உண்மையான இயக்கம் என்பதை தமிழர்கள் உணர்ந்து, அதை ஏற்று, இணைந்து, அதன்வழி போராடி, தமிழரின் தொன்மை மரபுகளை மீட்டு, மீண்டும் மானமும், அறிவும் கல்வியும் உடைய, சமத்துவ, மனிதநேய, தன்மானச் சமுதாயமாய் தமிழ்ச் சமுதாயம் உருவாக்கப் பாடுபட வேண்டும். அது தமிழர் ஒவ்வொருவரின் தலையாய கடமை!

திராவிடர் கழகத்தில் சேர்வோம்! தமிழர் தொன்மைகளை மீட்போம்! தன்மானத்தோடு தலைநிமிர்ந்து தொண்டறம் செய்து மனிதநேயத்தோடு வாழ்வோம்!





Sunday, July 17, 2016

தமிழ்த் தேசியமும் தர்மபுரிகளும்

2012 -ல் எழுதிய கட்டுரை



காதல் தீ ஜாதியை எரிக்கும்; மோதல் தீ வீதியை எரிக்கும் என்பது தருமபுரி தந்துள்ள பாடம்.

காதலில் மோதலுக்கு வேலையில்லை; சாதலுக்கும் வேலையில்லை. ஆனால், இரண்டும் நடக்கிறது என்றால், அறியாமை, அறிவின்மை, ஆத்திரம், கோத்திரம், சாத்திரம், ஜாதிக்கட்டு. இப்படிப்பட்ட காரணிகள்தான் காரணம்.

இவையெல்லாம் ஆரியப் பண்பாட்டு படையெடுப்பால், கலப்பால், திணிப்பால், ஆதிக்கத்தால் வந்த விளைவுகள். ஆனால், இவற்றை முற்றாக மறைத்துவிட்டு, ஆரிய பார்ப்பனரும் தமிழர்களே என்று ஆரியத்தை அணைத்துக்-கொள்ளும் தமிழ்த்தேசியவாதிகளைப் பார்த்து நாம் கேட்க விரும்பும் கேள்விகள் இவைதான்:

1.    ஜாதிப் பிரிவுகளைக் காத்துக்கொண்டே, ஏற்றுக்கொண்டே தமிழ்த் தேசியம் அமைக்க முடியுமா?

2.    தமிழர் மரபுப்படியான வாழ்வமைப்பதே தமிழ்த்தேசியத்தின் இலக்கு என்றால், தமிழர் மரபில் ஜாதியில்லையே! ஜாதிப் பிளவு இல்லையே!

3.    தமிழ்த்தேசியத்திற்கு ஜாதி எதிரானது அல்லவா?

4.    தமிழ்த்தேசியவாதிகள் ஜாதித் தீ பற்றியெரியும் நேரத்தில் வேடிக்கை பார்த்து நிற்பது ஏன்? சம்மதமா? சண்டித்தனமா? இயலாமையா? எது காரணம்?

5.    தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டே ஜாதியை வளர்ப்பவர்களுக்கு எதிராக, தமிழ்த்தேசிய-வாதிகளின் செயல் திட்டங்கள் என்ன?

மேற்கண்ட கேள்விகளுக்கு விடையளிப்-பதோடு, தமிழ்த்தேசியம் வேண்டும் என்பதற்கு வெறும் தமிழ் உணர்வை மட்டும் ஊட்டிவிட்டால் போதுமா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

தமிழ்த்தேசியம் என்பதே தமிழர்களுக்கு தனி நாடு, தனி வாழ்வியல் (மரபு சார்ந்தது), தனி பண்பாடு, கலாச்சாரம், ஆதிக்கமற்ற விடுதலை, உரிமை, சமத்துவம், தற்சார்பு, ஒற்றுமை, உறுதி.

இத்தனைக் கூறுகளும் மக்களிடம் வளர்க்கப்பட வேண்டும். இவற்றிற்கு எதிரி யார்? நாம் யார்? என்ற விழிப்பு வேண்டும். நம்மிடம் உள்ள ஜாதிகள், ஆரிய பார்ப்பனர்களால் நம் மீது திணிக்கப்பட்டவை என்பது ஆழ்மனதில் பதிய வேண்டும்; பதிக்கப்பட வேண்டும்.

மூடநம்பிக்கைகள் களையப்பட வேண்டும். பகுத்தறிவு சிந்தனைகள் வளர்க்கப்பட வேண்டும். சமத்துவ உணர்வு ஊட்டப்பட வேண்டும். கல்வி, உயர்கல்வி, அடித்தட்டு மக்களுக்கும் உறுதி செய்யப்பட வேண்டும். கல்லாமை இல்லாமை நிலை வரவேண்டும்.
வேலை, கூலி என்ற நெருக்குதலால் கல்வி நிறுத்தப்படக் கூடாது. இடைநூற்றல் இல்லா நிலை முழுமையாக உறுதி செய்யப்படவேண்டும். காரணங்கள் கண்டறியப்பட்டு களையப்பட வேண்டும்; தீர்வுகள் காணப்படவேண்டும்.

ஜாதியொழிப்பு: தீண்டாமை ஒழிப்பு வேறு, ஜாதியொழிப்பு வேறு என்பதை உணரச் செய்யவேண்டும். காதல் திருமணம் வேறு, ஜாதி மறுப்பு மணம் வேறு. காதல் திருமணத்தில் ஜாதி மறுப்பு மணங்களும் அடங்கும் என்பது உண்மை. மாறாக, காதல் திருமணங்கள் எல்லாம் ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஆகாது. சொந்த ஜாதியில்கூட காதல் திருமணங்கள் நடக்கும். ஆனால் அதில் ஜாதி ஒழியாது.

எனவே, காதல் திருமணங்கள் ஆதரிக்கப்படவேண்டும்; ஜாதி மறுப்புத் திருமணங்கள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட வேண்டும். கட்டாயப்படுத்தியல்ல; கனிந்து கசிந்து காதல் பெருக்கில் தன்னுந்தலாய் வருமளவிற்கு விழிப்பு ஊட்டப்படவேண்டும்; பரப்புரைகள் பரவலாய் நடத்தப்படவேண்டும்.

அதற்கு முதல்படியாக தமிழ்த்தேசியம் பேசுவோர் திருமணங்கள் எல்லாம் ஜாதி மறுப்பு மணங்களாக நடைபெற வேண்டும்; நடத்தப்பெற வேண்டும்.

வயது வந்த ஆணும் பெண்ணும் விரும்பியவரை மணக்கத் தடைவந்தால், அதைத் தமிழ்த் தேசிய அமைப்புகள் முன்னின்று தடுக்க வேண்டும். அதற்கான தொண்டர்படை வேண்டும்.

ஏமாற்றியோ, வன்முறையாலோ எந்தவொரு ஆணையும், பெண்ணையும் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்-படுத்துவது குற்றம். அவர்களே விரும்பி மணம் புரிந்து-கொள்ள முன்வந்தால், அதைத் தடுப்பதும் குற்றம் என்பதை எல்லோருக்கும் புரியும்படி செய்ய வேண்டும்.

தருமபுரியில் எரிந்து சாம்பலானது குடிசைகள் மட்டுமல்ல; தமிழ்த் தேசியமும்தான் என்பதைத் தமிழ்த்தேசியம் பேசுவோரில் உள்ளச் சான்றும், தெள்ளிய சிந்தனையும் உடையோர் அறிவர்.

எனவே, தமிழ்த்தேசியத்தின் முதல்படி ஜாதியொழிப்பு! அடித்தளமும் அதுவே! ஜாதியொழிப்பு முயற்சியில்லா தமிழ்த்தேசிய முழக்கம் வெற்று ஆரவாரம்.
எந்த அணியில், எந்த அமைப்பில் இருந்தாலும் தமிழன் என்பவன் ஜாதியை ஏற்கக் கூடாது. ஜாதியை ஏற்பவன் உண்மையான தமிழனாகான்! காரணம் தமிழர்க்கு ஜாதியில்லை.

தமிழரிடையே என்றைக்கு ஜாதியை நுழைத்தார்களோ அன்றைக்கே தமிழன் இல்லாமல் போய், ஜாதிக்காரனாகி-விட்டான். இன்றைக்கு செட்டியார் உண்டு, வன்னியர் உண்டு, பறையர் உண்டு, கவுண்டர் உண்டு, உடையார் உண்டு, பிள்ளை உண்டு, கோனார் உண்டு, முதலியார் உண்டு, தமிழர் எவர்?
இப்போது புரிகிறதா ஜாதி வந்தால் தமிழர் இல்லை. தமிழர் என்றால் ஜாதியில்லை.

எனவே, மீண்டும் தமிழனாக வேண்டும் என்றால், ஜாதியை ஒழித்தால் மட்டுமே சாத்தியம். தமிழர் ஒற்றமைக்கு, தமிழர் உணர்விற்கு ஜாதியே முதல் தடை. அதை ஒழித்தால்தான் தமிழ்த்தேசியத்திற்கு விடை. தமிழ்த்-தேசியவாதிகளே தர்மபுரிகளில் முகாமிடுங்கள்! இல்லையேல் உங்கள் உண்மை முகம் வெளிப்படும்!

- .மஞ்சை.வசந்தன்

Thursday, July 14, 2016

கெட்டக் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கேழ்வரகுக்கு உண்டு!.

ஆறுமாத குழந்தை முதல் 100 வயதைக் கடந்த முதியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு.
நம் முன்னோர் வலுவுடனும், வளமுடனும் நலமுடனும் வாழ்ந்ததற்கு கேழ்வரகு உணவு மிக முதன்மையான காரணம். கால்சிய சத்து இதில் அதிகம். உடல் குளிர்ச்சியடைய உதவும். இரும்பு சத்தும், போலிக் ஆசிட்டும் இதில் அதிகம்.
ஆனால், இடைக்காலத்தில் அவ்வளவு கேவலமாகப் பார்க்கப்பட்டதன் விளைவு இன்று சத்தற்ற உணவுகளை உண்டு நோயாளியாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இரத்த சோகை வராமல் தடுக்க, வந்தால் போக்க இது பெரிதும் பயன்படும்.
எப்படிச் சாப்பிட வேண்டும்? :
மோருடன் கேழ்வரகுக் கூழ் வெங்காயம் பச்சை மிளகாய் கலந்து சாப்பிடுவது நல்லது.
கேழ்வரகை முளைகட்டி உலர்த்தி அதைப் பொடியாக்கி சலித்தால் கிடைப்பது “ராகிமால்ட்’’. இது பல மடங்க சக்தியுடையது.
கேழ்வரகு மாவு ஒரு ஸ்பூன் எடுத்து 5 ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கஞ்சியாக்கி குழந்தைக்குக் கொடுக்க வேண்டும்.
2 வயதுக்குப் பின் பெரியவர்கள் உண்பதுபோல குழந்தைக்குக் கொடுக்க வேண்டும்.
கேழ்வரகு மாவுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு பிசைந்து அடைசெய்து சாப்பிடலாம்.
கேழ்வரகு மாவுடன் வெல்லம் சேர்த்தும் அடை செய்து சாப்பிடலாம்.
செரிமானக் கோளாறு உள்ளவர்கள் கேழ்வரகு கூழ் மட்டுமே சாப்பிட வேண்டும்.
இது கெட்டக் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் பெற்றிருப்பதால், இதயநோய் வராமல் காக்கும்.
பெண்களுக்கு கேழ்வரகு மிகவும் நலம் தரும். பெண்களின் பால்சுரப்பு குறைபாட்டை நீக்கும்.
- மஞ்சை.வசந்தன்

கடலை மிட்டாய் கலாச்சாரத்தை கடைபிடிப்போம்!


 
- மஞ்சை வசந்தன்


50 ஆண்டுகளுக்கு முன் சிறுவர்கள் கடைகளில் வாங்கிச் சாப்பிடும் முதன்மையான தின்பண்டம் கடலை மிட்டாய். வேர்க்கடலையை வறுத்து, அதை வெல்லப்பாகில் கலந்து, உருண்டை பிடித்து விற்கப்படுவதே கடலை மிட்டாய். இன்றைக்கு உலகில் விற்கப்படும் அத்தனை நவீனத் தின்பண்டங்களையும் ஒரு பக்கம் வைத்து, கடலை உருண்டையை மறுபக்கம் வைத்து சத்துக்களைப் பட்டியல் இட்டாலும், உடலுக்குக் கேடில்லா நன்மையைப் பட்டியலிட்டாலும் முதலிடம் கடலை மிட்டாய்க்குத்தான்! யாராவது மறுக்க முடியுமா?
வேர்க்கடலை உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பை உள்ளடக்கியது. வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் இரத்தச்சோகை வராது. உடல் வளமாக நலமாக இருக்கும்.
கொழுக்கட்டை: அரிசிமாவை அரைத்துப் பிசைந்து, அதை பூவரசு இலையிலே மெல்லியதாய்ப் பரப்பி, அதிலே வேகவைத்த பருப்பில் வெல்லம் சேர்த்துப் பிசைந்த பூர்ணத்தை உருட்டி வைத்து இலையை மூடி அதை இட்டலி குண்டானில் வைத்து வேகவைத்து எடுத்தால் அதற்குப் பெயர் கொழுக்கட்டை. பூவரசு இலையை நீக்கிவிட்டுச் சாப்பிட்டால் சுவையோ சுவை. இதற்கு இணையான ஒரு நவீன தின்பண்டத்தைக் காட்ட முடியுமா?

பூவரசு இலையுடன் வேகவைக்கப் படுவதால் இலையின் மருத்துவப் பயனும் அந்த உணவுடன் சேர்கிறது. அதிலுள்ள மாவு நீராவியில் வேகுவதால் அதிக ஊட்டம் பெறுகிறது. பருப்பு, வெல்லம் சேர்ந்த பூர்ணம் உடலுக்குச் சத்துத் தரக்கூடியது. சுவையும் அதிகம். இப்படிப்பட்ட ஒரு உணவுப்பொருளை உலகில் எங்கும் காட்ட முடியாது!
பொரிவிளங்காய் உருண்டை: பொரித்த அரிசிமாவுடன் சிறுசிறு துண்டாக்கி வறுத்தத் தேங்காய், பொட்டுக்கடலை, ஏலக்காய் என்று பலவற்றைச் சேர்த்து, வெல்லப் பாகில் அவற்றைக் கொட்டிக் கிளறி உருண்டைப் பிடித்தால் அது பொரிவிளங்காய் உருண்டை. அதன் சுவையும், சத்தும் அது தரும் உடல் நலமும் அவ்வளவு சிறப்புக்குரியது.
அதிரசம்: வெல்லப் பாகில் அரிசி மாவைக் கலந்து மூன்று நாள் புளிக்கவைத்து, அதை வடைபோல் தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு வெந்தபின் எடுத்து, கிண்ணத்தால் அமுக்கித் (எண்ணெய்யை வெளியேற்றி) தட்டையாக்கினால் அதுதான் அதிரசம்.
எண்ணெய்ப் பண்டங்களில் கேடு பயக்காத தின்பண்டம். மென்மையும், இனிமையும், சிறப்பான சுவையும் உடைய இப்பண்டத்தைப் போன்று உலகில் எவரும் செய்ததில்லை.
இட்டலி: அரிசி மாவும், உளுந்து மாவும் அரைத்துக் கலந்து புளிக்கவைத்து, இட்டலிப் பானையில் வேகவைத்து எடுத்தால் அதுதான் இட்டலி. உலக உணவு ஆய்வுகளே, இதற்கு இணையான சத்தான நல்லுணவு உலகில் வேறு எதுவும் இல்லை என்று கண்டறிந்துள்ளன.
முடக்கற்றான் தோசை: இட்டலி மாவுடன் முடக்கற்றான் கீரையை அரைத்துக் கலந்து புளிக்க வைத்து, மறுநாள் காலை தோசையாக வார்த்துச் சாப்பிட்டால் உடலில் வாத நோய்கள் வராது. தின்னத் தின்ன சுவையாக இருக்கும்.
சுண்டைக்காய் சாம்பார்: காய்தான் சிறியது. ஆனால், அதன் மருத்துவக் குணமோ மிகப் பெரியது. சுண்டைக்காய்ச் சாம்பார் சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும். வயிற்றுப் பூச்சி அகற்றும், உடல் வலிவு பெறும், நோய்கள் அணுகாது. நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
முருங்கை: முருங்கையினுடைய கீரை, காய், பிசின், பூ அனைத்தும் உயர்வான மருத்துவக் குணம் உடையவை.
முருங்கைக் கீரையில் எல்லாச் சத்துக்களும் அதிகம் உள்ளன. கீரையைப் பருப்பிட்டு வேகவைத்துச் சாப்பிடலாம், வெங்காயம் தேங்காய்த் துருவல் போட்டு, வதக்கிச் சாப்பிடச் சுவையாய் இருக்கும். இதை மட்டுமே தனியே சாப்பிடலாம், கண்ணுக்கு நலம் தரும் கரோட்டினாய்டுகளை அதிகம் கொண்டுள்ளது. இரத்தக் கொதிப்பைக் குறைக்கும்.
முருங்கைக் காய் நரம்பைப் பலப்படுத்தும். இதில் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்கள் உள்ளன. ஆண்களுக்குப் பாலுறவு ஆற்றலை அளிக்கும். பெண்களுக்கும் வலிமை தரும். இதைச் சாம்பார், புளிக்குழம்பில் போட்டு சாப்பிடுவதோடு, பொரியல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இதைத் தினம் உணவில் சேர்த்தால் உடல் பலப்படும்; நலம் பெறும்.
பொன்னாங்கண்ணி: கண்ணிற்கு மிகவும் குளிர்ச்சியூட்டி, பார்வையைக் கூர்மையாக்கும். சத்துக்கள் நிறைய உள்ள உயர்தரக் கீரை இது. இதை வாரம் மூன்று நாள்கள் உணவில் சேர்த்தால் உடலில் நோய் அண்டாது. பருப்பிட்டுக் கடைந்துச் சாப்பிடச் சுவையாய் இருக்கும்.
எல்லாக் கீரைகளும் உடலுக்கு நலம் தரக்கூடியவை. மலிவானவை, கேரட்டில் உள்ளதைவிடக் கீரையில் சத்து அதிகம். கீரையில் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் வராது.
தூதுவளை: வேலியில் படரும் முள் நிறைந்த செடி. இதன் கீரை, பூ, பழம் எல்லாம் பயனுள்ளவை. மார்பில் உள்ளச் சளியை முற்றாக நீக்கும் ஆற்றல் தூதுவளைக் கீரைக்கு உண்டு. ஆண்களுக்குப் பாலுறவு ஆற்றல் அளிக்கும். வாரம் இருமுறை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மணத்தக்காளி: உடல் சூட்டைத் தணித்து வேக்காடு வராமல் காக்கும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீக்கும்.
மாதுளை: பழங்களில் முதன்மையானது. இதை நாள்தோறும் சாப்பிட்டால் நலவாழ்வு நிச்சயம். வயிற்றுப் பிரச்சினை எதுவும் வராமல் இது பார்த்துக்கொள்ளும். வெள்ளை முத்துக்களை உடைய மாதுளை மிகவும் சிறந்தது.
பப்பாளி: இது கண்ணுக்கு முதன்மையான பொருள். மலச்சிக்கல் அறவே வராது. ஆண்களுக்குப் பாலுறவு ஆற்றல் அளிக்கும்.
மாதுளையும் பப்பாளியும் நாள்தோறும் சாப்பிட வேண்டும். இந்த இரண்டையும் சாப்பிடுகின்றவர்களின் உடல் நலத்திற்கு உத்திரவாதம் உண்டு.
கேழ்வரகு: கேழ்வரகு மாவு + முருங்கைக் கீரை கலந்து அடைசெய்து சாப்பிட்டால் உடலுக்கு வலு உண்டாகும்.
கீழாநெல்லிக்கீரை: வாரம் ஒருமுறை கீழாநெல்லிக்கீரையைக் கூட்டு செய்து இரண்டு உருண்டைச் சோற்றில் அதைப் பிசைந்து சாப்பிட்டால் கல்லீரல் கோளாறு வராது.
வெள்ளரிப்பிஞ்சு: வெள்ளரிப்பிஞ்சை நறுக்கி மோரில் போட்டுக் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறு வரவே வராது. சிறுநீரகப் பிரச்சினை இருந்தால் நீங்கும். அறுவை சிகிச்சை செய்யும் நிலைகூட தவிர்க்கப்படும்.
முள்ளங்கி: வெள்ளை முள்ளங்கியுடன் வெல்லம் சேர்த்துப் பச்சையாகச் சாப்பிட்டால் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் கடுப்பு நீங்கும்.
வாழைப்பூ: வாழைப்பூவை பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும். வாழைப்பூ வடை சாப்பிடச் சுவையாய் இருக்கும். உடலுக்கு நல்லது.
வாழைத்தண்டு: பொரியல் செய்து சாப்பிட்டால் சிறுநீரகப் பாதைச் சீர்படும். கொழுப்பு அடைப்பு நீங்கும்.
வாழைப்பழம்: தினம் இரு பழம். (பூவம்பழம் சிறந்தது) சாப்பிட்டால் மலச்சிக்கல் அகலும். இரத்த அழுத்தம் குறையும்.
வெந்தயம்: இரவு ஒரு தேக்கரண்டி நீரில் ஊறவைத்து காலையில் அதை அப்படியே மென்றுச் சாப்பிட்டு, அந்நீரையும் பருகினால் உடல் குளிர்ச்சியடையும், சர்க்கரை நோய் வராது.
மஞ்சள்தூள்: காலை மாலை ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் தூள் கலந்து சாப்பிட்டால்    நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும். புற்றுநோய் வராது.
மிளகு நீர்: மிளகு + பனைவெல்லம் + தண்ணீர் கலந்து காய்ச்சி அரை டம்ளர் வாரம் இருமுறைப் பருகினால் உடல் நஞ்சு நீங்கும். நோய்கள் எளிதில் தாக்காது. பூச்சிக்கடி பாதிப்புகள் நீங்கும்.
மருதம்பட்டைப் பொடி: இரத்த நாளங்களில் அடைப்பு இருக்கும்போது, காலை மாலை இருவேளை ஒரு டம்ளர் பாலில் இரு கிராம் மருதம் பட்டைப் பொடியைக் கலந்து சாப்பிட்டால், இரத்தக் குழாய் அடைப்பு நீங்க, மாரடைப்பு தடுக்கப்படும்.
வேம்பு மஞ்சள் நீர்: வேப்பிலை + மஞ்சள் தூள் +  நீர் கலந்து அரை பங்காகக் சுண்டக் காய்ச்சி அந்த நீரை வடிகட்டி கால் டம்ளர் வாரம் இருமுறை பருகினால், அம்மை நோய் வராது, சர்க்கரை நோய் வராது, சுரம் வராது;  உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
அத்திப்பழம்: தினம் அய்ந்து அத்திப்பழம் குறிப்பாக பெண்கள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.
சோற்றுக்கற்றாழை: இதன் சோற்றை எடுத்து ஏழுமுறை அலசி அதனுடன் தேன் கலந்துச் சாப்பிட்டால் உடல்நலம் பெறும், குளிர்ச்சி பெறும், மூலநோய் வராது. வீட்டில் தொட்டிகளில் வளர்த்து தினம் பயன்படுத்தலாம். அச்சோற்றை முகம் மற்றும் உடல் முழுக்கப் பூசி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
எதையெதைச் சாப்பிட வேண்டும் என்று அறிந்துகொள்வது போலவே எவற்றைச் சாப்பிடக் கூடாது என்பதிலும் நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.
பாக்கட் உணவுகள்: இவை அனைத்துமே இரசாயனம் கலந்தவை. உடலுக்குத் தீங்கு செய்யக் கூடியவை. எனவே, கடையில் விற்கும் பாக்கட் உணவுகளை முற்றாக ஒதுக்க வேண்டும்.

குளிர்பானங்கள்: பாட்டிலில், டப்பாக்களில் அடைக்கப்பட்ட அனைத்துக் குளிர்பானங்களும் உடலுக்குக் கேடு செய்யக் கூடியவை. எலும்புச் சிதைவை உருவாக்கக் கூடியவை.
பிராய்லர் கோழி: ஸ்டிராய்டு ஊசிபோட்டு வளர்க்கப்படும் இக்கோழிக்கறி  உடலுக்கு, உடல் நலத்திற்கு எதிரானது, கேடானது. எனவே இதைத் தவிர்க்க வேண்டும். நாட்டுக் கோழி சாப்பிடலாம்.
துரித உணவுகள்: உணவு விடுதிகளில் செய்துத் தரப்படும் துரித உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
உணவே மருந்து என்று வாழ்ந்த நம் மக்கள் மத்தியில், நஞ்சே உணவு, உணவே நஞ்சு என்ற நிலை வந்துவிட்டது.
இவற்றை நாகரிகமாகக் கருதிப் பிள்ளைகள் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு நோய்கள் வருகின்றன. பெண் பிள்ளைகள் 8 வயதிலே பருவமடைந்து விடுகிறார்கள். எனவே, இவற்றை அறவே ஒதுக்க வேண்டும்.

- மஞ்சை வசந்தன்
____

பிள்ளைகள் விரும்பும் எல்லாவற்றையும் வாங்கித் தரக்கூடாது:


பிள்ளைகள் மீதுள்ள பாசத்தில், பற்றில், செல்லமாக வளர்க்க வேண்டும் என்ற விருப்பத்தில், குழந்தைகள் விரும்புவதைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பிள்ளைகள் கேட்பதையெல்லாம் சில பெற்றோர் வாங்கித் தருவர். இது சரியான செயல் அல்ல. குழந்தைப் பருவம் அறியாப் பருவம். எது நல்லது, எது கெட்டது என்று தெரியாத வயது. கவர்ச்சியை, சுவையை அவர்கள் விரும்புவர், கவர்ச்சியும் சுவையும் உடைய பலதும் கேடு பயப்பனவே.
எனவே, அவர்களுக்குச் சிறுவயதிலே இதைச் சாப்பிட வேண்டும். இதைச் சாப்பிடக் கூடாது. அதற்குரிய காரணம், அதனால் வரும் பாதிப்பு இவற்றை அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லி ஏற்கச் செய்ய வேண்டும். அடித்து, விரட்டி சொல்வதைத் தவிர்த்து அன்புடன் சொல்ல வேண்டும். பயன்படுத்தும் பொருட்களையும் அவ்வாறே தேர்வு செய்ய வேண்டும். ஒன்றை வேண்டாம் என்று சொல்லும்போது, எது ஏற்றதோ அதை வாங்கித் தர வேண்டும்.

பிள்ளைகளை அச்சுறுத்தி வளர்க்கக் கூடாது


பிள்ளைகளைக் கண்டிப்புடன் வளர்க்கிறேன் என்று சொல்லி, அச்சுறுத்தி, அடித்து வளர்ப்பது சரியான வளர்ப்பு முறையல்ல. அன்போடும், பாசத்தோடும், அக்கறையோடும், இனிய சொற்களால் எடுத்துக் கூறினால் பிள்ளைகள் பின்பற்றுவர். பிள்ளைகளின் விருப்பத்திற்கு முழுவதும் தடைவிதிக்காது, அவற்றில் சரியானவற்றை நிறைவேற்றி, நம்மீது அவர்கள் அன்புடையவர்களாய், நம்மை விரும்பக் கூடியவர்களாய் நாம் நடந்து கொண்டால், எல்லாப் பிள்ளைகளும் நம் பேச்சைக் கேட்டு நடக்கும். பிள்ளைகள் சொல்வது சரியென்றால் அதையும் பெரியவர்கள் ஏற்று நடக்க வேண்டும். பிள்ளைகளைத் தங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க பெற்றோர் தவறக்கூடாது. வெளியில் பிள்ளைகள் கெட்டுப் போக வாய்ப்பு அதிகம். எனவே, கண்காணித்து ஒழிங்குப்படுத்த வேண்டும்.

இதய, சர்க்கரை நோய்களை தடுக்கும் கால்பந்தாட்டம்


வயதான காலத்தில் பொழுதுபோக்காக கால்பந்து விளையாடுவது, 60 வயது மேற்பட்டவர்களிடையே இதய - ரத்தநாள நோய்கள், சர்க்கரை நோய் போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை கணிசமாக குறைப்பதாக அண்மையில் டென்மார்க் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
63-75 வயது முதியவர்களிடம் ஓராண்டுக்கும் மேலாக ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளனர்
கோபன்ஹெகன் பல்கலைக்கழகத்தின் உணவூட்டம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள். ஓராண்டு வாரம் இருமுறையாவது சேர்ந்து விளையாடுகிறார்கள்.
பயிற்சி முடித்த 4 மாதங்களிலேயே, அவர்களின் இதய ரத்தநாள ஆரோக்கியம் 15% அதிகரித்ததாம். செயல்திறனம் 30% அதிகரித்துள்ளது.
ஓராண்டுக்க பிறகு ரத்தத்தில் சர்க்கரையின் அளவுக் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளதுடன், உடலுக்கு தீங்க விளைவிக்கம் கழிவுகளும் குறைந்தது உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல், உடல் தசைகள் வலவுடன் இருக்க, உடல் எடையும் ஓரளவுக்கு குறைந்துள்ளது. உடல் வலுவாதல், நோய் தடுப்பு இவற்றுடன் ஒன்று சேர்ந்து விளையாடுவதால் நட்புறவும் மனநலமும் மேம்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்! அப்போ கட்டாயம் இதைப் படியுங்கள்!


¨ குளிர்பானத்தில் வைட்டமின், தாது உப்புக்கள், மாவுச் சத்து எதுவும் இல்லை.
¨ வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிட்டி) உருவாகி செரிமானக் கோளாறு வரும்.
¨ வயிற்றில் வாயுத் தொல்லை உருவாகும்.
¨ உடல் பருமன் ஏற்படும்.
¨ செயற்கைக் கலர் (சிந்தடிக்) சேர்க்கப்படுவதால் உடல்நலம் கெடும்.
¨ சுவைக்குச் சேர்க்கப்படும் இரசாயனங்களால் கேடு.
¨ நார்ச்சத்து இல்லை.
¨ கொடுக்கும் காசுக்கு பயன் இல்லை கேடு அதிகம்.
குளிர்பானத்திற்குக் கொடுக்கும் காசுக்கு திராட்சை பழத்தை வாங்கி நன்றாக அலசி மென்று சாப்பிட்டால் எவ்வளவு பயன் தெரியுமா?
<<<<<< திராட்சையின் நன்மைகள் >>>>>>
¨ வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், தாது உப்புக்கள் கிடைக்கிறது.
¨ நார்ச்சத்து முழுமையாய் கிடைக்கும்.
¨ இதயம் வலுப்பெறும்
¨ மென்று சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள், தடைகள் வலுப்பெறும்.
¨ உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் கிடைக்கும்.
¨ உமிழ் நீர் அதிகம் கலப்பதால் உடல் நலம் பெருகும்.
¨ நோய் எதிர்ப்பாற்றல் வளரும்.
¨ எலும்புகள் வலுப்பெறும்.
‪#‎குறிப்பு‬: பழச்சாறு பருகுவதைவிட பழமாக மென்று சாப்பிடுவதே சிறந்தது. பழச்சாறு சாப்பிட்டால் அய்ஸ் சேர்க்க வேண்டாம். ஜீனி சேர்க்க வேண்டாம்.
அய்ஸ் அசுத்த நீரில் செய்கிறார்கள். அதிலுள்ள கிருமி அய்ஸ் மூலம் நமக்கு வந்து பல நோய்களை உண்டாக்கும்.

இளைஞர்களே! நீங்கள் நலமாக, வளமாக, உயர்வாக, மதிப்பாக, மகிழ்வாக வாழ இவற்றைப் பின்பற்றுங்கள்!



1 பிறப்பினால் வந்த பாதிப்புகளை எண்ணிக் கவலைப்படாமல், ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்காகத் தொடர்ந்து முயலுங்கள். மூடநம்பிக்கைகளை விலக்கி அறிவார்ந்த வாழ்வை நடத்துங்கள்.
2 சாதித்து உயர்ந்த எளிய மனிதர்கள் பற்றிய நூல்களையும், தன் முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும் நூல்களையும் அதிகம் படியுங்கள்.
3 தாய்மொழியில் சிறப்பான அறிவும், ஆங்கிலத்தில் கருத்துப் பரிமாற்றத் திறத்தையும் கட்டாயம் வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ற சூழலில் பழகுங்கள்.
4 செயற்கை உணவுகளை அறவே விலக்கி, இயற்கையான பாரம்பரிய உணவுகளை உண்ணுங்கள். பரோட்டா, பிராய்லர் கோழியின் சுவைக்கு அடிமையாகாது அவற்றை அறவே விலக்குங்கள். காய்கறி, மலிவான பழங்களை நிறைய உண்ணுங்கள். கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களை அதிகம் சாப்பிடுங்கள்.
5 மது, புகை, போதை தீய வழக்கங்களை அறவே விலக்குங்கள், விளையாட்டிற்கோ, உல்லாசத்திற்கோகூட அவற்றைப் பயன்படுத்தாதீர்கள்.
6 படிக்கின்ற பாடத்தில் கவனம் செலுத்துவது போலவே, பல்துறைச் செய்திகளையும், உலக அளவிலான செய்திகளையும் தினம் தினம் தேடித் தெரிந்து கொள்ளுங்கள்.
7 பதட்டப்படாமல், வெறுப்பு கொள்ளாமல், சலிப்பு அடையாமல், எதையும் உறுதியோடு மனம் தளராமல் எதிர்கொள்ளுங்கள். அன்பாக, இனிமையாக அடுத்தவர் மீது அக்கறையோடு பழகுங்கள்! பல வகையில் உங்களுக்கு இவை உதவும்.
8 ஒரு நாளைக்கு 7 மணி நேரம் கட்டாயம் உறங்குங்கள். மீதியுள்ள நேரத்தை திட்டமிட்டு பிரித்துக் கொண்டு தவறாது அவற்றைச் செய்யுங்கள். நண்பர்களோடு மகிழ 2 மணி நேரம் ஒதுக்குங்கள். தனிமையை தவிருங்கள். நல்ல நண்பர்களை, உங்கள் முன்னேற்றத்தை விரும்பும் நண்பர்களைத் தேர்வு செய்யுங்கள்.
9 குடும்ப உறுப்பினர்களிடம் மகிழ்வாக மனம் விட்டுப்பேசி பழக நேரம் ஒதுக்குங்கள். உங்களைவிட சிறியவர்களுக்கு வழிகாட்டியாக இருங்கள்; முதியவர்கள் கூறுவதற்கு மதிப்பளியுங்கள்; சரியானவற்றைப் பின்பற்றுங்கள்.
10 வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை மட்டும் சம்பாதியுங்கள்; பணத்திற்காகவே அலைந்து வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கி அல்லல் படாதீர்கள். வாழ்வில் சுமைகளைக் குறைத்து சுகங்களை அதிகப்படுத்துங்கள். அன்போடு, விட்டுக் கொடுத்து வாழுங்கள், வீண் பிடிவாதம் வாழ்கை நாசமாக்கிவிடும். அன்பும், பற்றும் யாருக்கு அதிகம் இருக்கிறதோ அவர்கள்தான் விட்டுக் கொடுப்பர்.
11 நடிகர்களுக்கு ரசிகனாக, கிரிக்கட் அடிமையாக, அரசியல்வாதிகளின் எடுபிடியாக ஒருபோதும் ஆகாதீர்கள்.
12 தான் தனது குடும்பம் என்ற குறுகிய வட்டத்திற்குள் ஒடுங்கிவிடாது, பொது நலனுக்கும் வாழ்வைச் செலவிடுங்கள். 
மனக் கட்டுப்பாடும், திட்டமிட்ட செயலும், முயற்சியும் இருந்தால் இவை சாத்தியமே! இப்படி வாழ்ந்து பாருங்கள், உங்களுக்கே ஒரு பெருமிதம், மகிழ்வு தோன்றும். 
____

அம்பேத்கரை விழுங்க முயலும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்!

- மஞ்சை வசந்தன்
ஒரே காலகட்டத்தில் ஒரே இலக்கில் ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தையும், இந்துமத ஆதிக்கத்தையும், ஜாதி வேறுபாடுகளையும், இழிவுகளையும் மிகத் தீவிரமாய் எதிர்த்தவர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும்.
தேவைப்படும்போது இருவரும் சந்தித்தும், கருத்து பரிமாற்றங்கள் செய்து கொண்டு தங்கள் போராட்டங்களை மிகச் சரியாக நிகழ்த்தினர். இந்துமத எதி£ப்பின் உச்சக்கட்டமாக, இந்துமதத்தை விட்டே விலகி புத்த மதத்தில் இலட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் சேர்ந்தார் அம்பேத்கர்.
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கூட்டத்தின் இந்துத்வா திணிப்பு முயற்சிக்கும், இந்து ராஷ்ட்ரா அமைக்கும் முயற்சிக்கும் பெரும் தடையாக, பெரும் எதிர்ப்பாக இந்தியா முழுக்க இருப்பவை தந்தை பெரியாரின், அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளும், அவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வும், அவர்களின் சிந்தனை களின் தேவையுணர்ந்து இளைஞர்களும், மாணவர்களும் அவற்றை ஏந்தி நிற்பதும்தான்.
எனவே, தங்கள் இலக்கை, திட்டத்தை நிறைவேற்ற இவர்கள் இருவரையும் அவர்கள் பெயரிலான அமைப்புகளையும், கடுமையாக எதிர்த்துப் பார்த்தனர். விளைவு எதிர்ப்பை மேலும் வலுவாக்கி இவர்கள் திட்டத்தை தவிடுபொடியாக்கியது.
உதைக்க உதைக்க எழும் பந்தைப் போல பெரியார், அம்பேத்கர் உணர் வாளர்களின் எதிர்ப்பும், விழிப்பும் அதிகரிக்கவே, அடக்கி ஒடுக்குவதற்கு மாறாய் அணைத்து அழிக்கத் திட்டம் தீட்டி முயற்சியில் இறங்கியுள்ளனர்.
தமிழர் தலைவர் கி-.வீரமணி அவர்கள் கூறியதுபோல, பெரியார் ஓர் எரிமலை என்பதால் அவரை ஆதிக்கச் சக்திகளால் நெருங்க முடியவில்லை. அதனால், பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாய் பொய்கூறி இருவரின் ஆதரவாளர்களைப் பிரிக்க முயன்றனர். அதுவும் எடுபடவில்லை. ஆகையால், இறுதி முயற்சியாய் அம் பேத்கரை அணைத்து, ஆராதித்து அழிக்கத் திட்டம் தீட்டி செயல்படத் தொடங்கியுள்ளனர். அம்பேத்கருடன் தொடர்புடைய இடங்களையெல்லாம் சிறப்புச் செய்து, அதன்வழி அவரது பற்றாளர்களின் ஆதரவைப் பெற்று இறுதியில் அம்பேத்கரை ஓர் இந்துத்வா ஆதரவாளராக அணைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஆதரித்தார்; அவர் இந்து மதத்தைப் பெருமையாகப் பேசினார் என்று உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பி அம்பேத்கரை இந்துத்வா ஆதரவாளராகக் காட்ட தற்போது முயற்சிக்கின்றனர்.
ஆயிரம் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் வந்தாலும் அய்யாவையும் அம் பேத்கரையும் பிரிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது! அய்யா தொண் டர்களும், அம்பேத்கர் தொண்டர்களும் ஓரணியில் நின்று உங்கள் ஆதிக்கத்தை ஒழித்தேத் தீருவர்! இது உறுதி! ஜாதி ஒழிந்த, சமத்துவ சமூகநீதி நிலவும் சமுதாயத்தை சமைப்போம்! அதற்காகத் தொடர்ந்து உழைப்போம் என்று இன்று உறுதி ஏற்போம்!
---------------------------------
பி.ஜே.பி. அரசின் அணைத்து அழிக்கும் சூழ்ச்சி குறித்து
அம்பேத்கரின் பேரன் கூறியுள்ளதைப் படியுங்கள்!......................

அம்பேத்கரை பி.ஜே.பி. கையில் எடுத்து அரசியல் செய்வது அம்பேத்கரின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது. அம்பேத்கரின் கொள்கைகள், கனவுகள் அவரது எண்ணங்கள் ஒரு திசையில் பயணிக்கின்றன. பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் கொள்கைகள் வேறு திசையில் பயணிக்கின்றன. இரண்டும் ஒரே நேர்கோட்டில் செல்லவில்லை. பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் முற்றிலும் அம்பேத்கருக்கு எதிரானவை. அம்பேத்கரின் கொள்கைகள், தத்துவங்களை பி.ஜே.பி. அரசு கிடப்பில் போட்டுவிட்டது. ஆனால், சாமானியனின் பார்வைக்கு அம்பேத்கரைக் கொண்டாடுவதுபோல ஒரு பிம்பத்தை கட்டமைத்து இருக்கிறார்கள். உண்மையில் அவரின் கொள்கைகள் கொலை செய்யப்படுகின்றன.
“மோடியின் கொள்கை பணக்காரர்களை மேலும் பணக்காரர் ஆக்குவது. ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்குவது. அதேநிலையில் தொடரச் செய்வதுதான். இதற்கு மாற்றாக தலித் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்குத் தனியாக வங்கிகள் நடத்த வேண்டும். அவர்களுக்கு மத்தியில் பொருளாதார மாற்றம் கொண்டுவர இதுதான் சாத்தியம்.”
- பிரகாஷ் யஸ்வந்த்
ஆதாரம்: ஜூனியர் விகடன் (10.04.2016)

துணிவு இல்லையேல் ஆதிக்கம் ஆட்சி செய்யும்! இளைஞர்களே எச்சரிக்கை!

வீரம் வேறு - துணிவு வேறு!
துணிவு இல்லையேல் ஆதிக்கம் ஆட்சி செய்யும்!
இளைஞர்களே எச்சரிக்கை! எச்சரிக்கை!

- மஞ்சை.வசந்தன்
வீரம்; துணிவு இரண்டும் ஒரு பொருளில் கொள்ளப்படுவது சரியல்ல. இரண்டும் வேறுவேறு. சிறப்பிலும் ஒன்றைவிட மற்றொன்று மிக உயர்ந்தது.


மாட்டை அடக்குவது வீரம்; ஓடும் வாகனத்தில் ஏறுவது வீரம், பத்து பேரை வீழ்த்துவது வீரம் என்று பாராட்டப்படுகிறது! இவை சரியா? சிந்திக்க வேண்டியுள்ளது.
துணிவு, வீரம் இரண்டும் எழும் அடித்தளங்கள் வேறு வேறானவை.
வீரம் என்பது உடல் வலிமையால் வருவது. துணிவு என்பது உள்ளத்தின் வலிமையால் வருவது. இதற்கு உடல் வலு கட்டாயமன்று.
துணிவு என்பது காரணப் பெயர். துணிப்பு என்றால் வெட்டுதல் என்று பொருள். துணிக்கப்படுவதே துணி. துணி ஆடைக்கு ஒரு பெயர். அதேபோன்று துணித்துக்கொண்டு வருவதாலே துணிவு என்று வந்தது.
கண்ணெதிரே நடக்கும் கொடுமையைக் கண்டு, அதைத் தடுக்க முன்வராத மக்கள் கூட்டத்தில், யாரோ ஒருவரோ அல்லது சிலரோ அந்தக் கூட்டத்திலிருந்து தங்களைத் துணித்துக்கொண்டு வெளியில் வந்து, அக்கொடு¬யைத் தட்டிக் கேட்பதால் அதற்குத் துணிவு என்று பெயர் வந்தது.


இதற்கு உடல் வலு கட்டாயம் அல்ல. உள்ள வலுவே கட்டாயம். ஒத்த நாடியான ஓர் ஆள்கூட முன்வந்து தட்டிக்கேட்பார். அதுவே துணிவு.
இந்தத் துணிவு இச்சமுதாயத்தில் இன்று இற்றுப் போய்வருவது மிகமிக கேடாக மாறும். எனவே, இன்றைய சமூகம் குறிப்பாக இளைஞர்கள் இதற்கான ஒரு தீர்வை உருவாக்க வேண்டும்.
கொம்புள்ள மாட்டிடம் மோதுவதை பழம்பெருமை என்று பேசி ஆர்ப்பறிக்கின்றவர்கள், கொடுமைகள் நடப்பதைக் கண்டும் காணாமல் போகின்ற கோழைகள் என்பதற்கு வெட்கப்பட வேண்டாமா?
மாட்டிடம் மோதுவதால் என்ன லாபம்? ஓடும் வாகனத்தில் ஓடிச்சென்று ஏறுவதில் என்ன பயன்? அதில் உயிரைவிடத் துணிகிறவர்கள், நம் கண்ணெதிரே ஒரு கொலை, ஒரு வன்முறை, ஒரு கொள்ளை நடக்கும்போது அதைத் தடுக்க முன்வருவதில் தயங்குவது சரியா?
தமிழர் வீரத்திற்கு தவறான செயல்வடிவம் தரலாமா? ஆபத்தோடு மோதுவது வீரம் என்று தமிழன் என்றைக்கும் சொல்லவில்லையே! அறிவின்பட்டாக மட்டுமே வீரம் இருக்க முடியுமே தவிர, உணர்வு வயப்பட்டதாக இருக்க முடியாது!
கொல்லேறு தழுவுதல்கூட ஒரு பயிற்சியேயன்றி அதில் உயிர்விட வேண்டும் என்பதில்லையே!
குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள், பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்படுகிறார்கள், கழுத்துச் சங்கிலி அறுக்கப்படுகிறது. அய்ந்து நிமிட உடலுறவுக்கு 20 வயது பெண் கொல்லப்படுகிறார். அவளை வளர்க்க பெற்றோர் எவ்வளவு பாடுபட்டிருப்பர்!
பட்டப்பகலில் வெட்டப்படும்போதும், கொள்ளையிடும்போதும் பார்வையாளர்களாய் நின்றோம் என்றால், தடியெடுத்தவன் தண்டல்காரன், அறிவாள் ஏந்தியவன் ஆட்சியாளன் என்ற அவலம் அரங்கேறிவிடுமே!!
கொடுமை செய்கின்றவனுக்கு கூடுதல் துணிவு பிறந்துவிடுமே! இந்நிலை வளர்ந்து சென்றால் வெளியில் சென்று வீட்டுக்கு வந்துசேர உத்திரவாதமில்லாது போகுமே! குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை பரவிவிடுமே!
அற்பக் காரணங்களுக்காக தற்கொலை செய்து உயிர்விடுவதைக் காட்டிலும் அப்படிப்பட்டவர்களெல்லாம் ஒன்றுசேர்ந்து ஒரு படையமைத்து கொடுமையைத் தடுப்பதில் உயிர் விடலாமே! அதற்கு தனி மரியாதையும், புகழும், அங்கீகாரமும் கிடைக்குமே! அந்த இறப்புக்கு அர்த்தம் உண்டே!
காவல் துறையும், ஆட்சியாளர்களும் இக்கொடுமைகளை அதிக முயற்சி செய்து அடக்க வேண்டும் என்பது கட்டாயக் கடமை! அதேநேரத்தில் சமூகத்தில் அங்கம் வகிக்கும் நாமும் நம் கடமையை தயங்காது செய்ய வேண்டும்.
“தட்டிக் கேட்டால் வெட்டிவிடுவானே!’’ இதுதானே தயக்கம்? கூட்டமாகச் சென்று தட்டிக் கேளுங்கள். கொடியவர்கள் தோற்று ஒடுங்குவர், ஓடுவார்கள்! 
இன்று சமுதாயம் சிதிக்க வேண்டிய, தீர்வு காண வேண்டிய, முன்வர வேண்டிய துணிவு இது.

இருக்கின்றவர் எல்லோரும் எதிர்த்தால் எப்படிப்படிப்பட்டவனும் பயந்தோடுவான்! அஞ்சி வேடிக்கைப் பார்த்தால், கூட்டத்தைப் பார்த்து விரட்டிவிட்டுச் செல்வான்! இதுதான் உளவியல்.
பத்து இடத்தில் கூட்டாகச் சேர்ந்து தடுத்துப் பாருங்கள்; தாக்கிப் பாருங்கள் கொடுமை செய்ய அதன்பின் அஞ்சுவார்கள். இதுபோன்ற முயற்சியில் குற்றவாளி கொலை செய்யப்பட்டால்கூட அது கொலைக்குற்றமாகாது; தற்காப்பு நடவடிக்கையே என்கிறது சட்டம்!
வழக்கு, வம்பு, காவல் நிலையம் என்று அலைய நேருமே என்ற தயக்கங்களில் ஒதுங்கினால், வன்முறையாளர்கள் வளமாக தழைத்துவிடுவார்கள்!
கொடுமையைச் செய்வதும், கொடுமையைப் பார்த்து நிற்பதும் ஒன்றே! என்ற குற்ற உணர்வு நமக்கு வேண்டும்!
“உன்னைப்பற்றி மட்டும் கவலைப்படு! ஊரைப்பற்றி கவலைப்படாதே!’’ என்று தன்னலத்தை அறிவுரையாக பெற்றோர் வழங்குகின்றனர். இப்படி வளர்க்கப்படும் பிள்ளைகள் எப்படித் தட்டிக் கேட்பர்?
பொறுக்கிகளை கதாநாயகனாகக் காட்டுவதும், “வெட்ரா அவளை’’ பாடல்களை பரப்புவதும் கொலை குற்றத்தைவிட கொடிய குற்றமாகும்! பண்பாடு வளர்க்கும் யோக்கியதை இதுவா?
“கொடுமை கண்டு கொதித்தெழு!
கூட்டடாக எழு! துணிந்து தடு!’’

என்பதை இன்றைக்கு ஒவ்வொருவரும் உள்ளத்தில் உரமாக ஏற்றிக்கொள்ள வேண்டும்! குறிப்பாக இளைஞர்கள் ஏற்றிக்கொள்ள வேண்டும்!
பெண்கள், தந்தை பெரியார் நூறாண்டுகளுக்கு முன்பே சொன்னதுபோல், தற்காப்புப் பயிற்சியைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
சமுதாயம் என்பது கூட்டுப் பொறுப்பு. நமக்கென்ன என்று ஒதுங்கும் உளநிலை வளர்ந்தால் ஒருவருக்கும் பாதுகாப்பு இருக்காது!
இணையத் தொடர்பு உள்ள இன்றைய இளைஞர்களே! துணிவுடையவர்கள் முதலில் ஒன்று சேருங்கள். ஆங்காங்கே, “கொடுஞ்செயல் தடுப்புக் கூட்டமைப்பை’’ ஏற்படுத்துங்கள்.
பணிச் சுழற்சி முறையில் இரவு பகலில் அணியணியாக ரோந்து சுற்றுங்கள். இந்தப் பொதுநலத்தில் ஒவ்வொருவரின் சுயநலமும் உள்ளது. எனவே, உடனே செய்யுங்கள்!
கொடுமைகள் பொது இடங்களிலும், வீடுகளிலும் இனி நடக்காமல் விழிப்போடு செயல்படுவோம்!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
கூட்டாக எதிர்த்தால் கொடுமைக்கு வீழ்வு!