அரசியல்

Friday, May 12, 2017

ஆரத்தழுவும் ஆர்.எஸ்.எஸ். ஆக்டோபஸ்! தாழ்த்தப்பட்டோர் தலைவர்களே! எச்சரிக்கை!


- மஞ்சை வசந்தன்

ஆர்.எஸ்.எஸ். முதல் பி.ஜே.பி. வரை உள்ள சங்பரிவார் அமைப்புகள் எல்லாம் பல பெயர்களில், பல அமைப்புகளாய் செயல்பட்டாலும் எல்லாவற்றிற்கும் இலக்கு, செயல்முறை ஒன்றே!
ஆர்.எஸ்.எஸ். குடும்ப அமைப்புகளின் அடித்தளமே கபட வேடம், கபடச் பேச்சு, கடப செயல். அதாவது உள்ளொன்று வைத்து வேறுவிதமாய் நடப்பது(நடிப்பது).
இதை மனிதநேயத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் அவர்கள்,

“தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற, மக்களை ஏமாற்ற பல வடிவங்களில் வரக்கூடியவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். எத்தனை வடிவம் எடுத்தாலும் எல்லாவற்றையும் இயக்கக்கூடிய அடிப்படை அமைப்பு ஆர்.எஸ்.எஸ். வன்முறைக் கும்பல்தான்’’ என்று தீர்க்கமாகத் தெளிவாகச் சொன்னார். (ஆதாரம்: செக்குலர் டெமாக்ரசி ஆண்டு மலர்)
ஜவகர்லால் நேரு அவர்கள்,

“இந்து மகா சபையானாலும் சரி, அந்தக் கொள்கையுடைய மற்ற (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்புகளானாலும் சரி, அவர்கள் நடவடிக்கைகள் எனக்கு ஆத்திரத்தைத் தருகின்றன. அவர்கள் சுயநலமும், தீவிரவாதமும் குறுகிய புத்தியும் கொண்டவர்கள். தேசியம் என்ற பெயரில் இதை மறைக்கப் பார்க்கும் கூட்டம். இந்து முதலாளிகளும், மன்னர்களும் மேல்தட்டு, நடுத்தரவாதிகளையும் கொண்ட வகுப்புவாதிகள் கூட்டம் அது’’ என்று அவர்களைச் சரியாகக் கணித்து, காட்டமாகக் கூறியதோடு,
“தேசியம் என்ற போர்வையில், தங்கள் மதவெறியை வகுப்புவாதத்தை மறைத்துக் கொள்ளப் பார்க்கும் இவர்கள், இந்து முதலாளிகளை, இந்து நிலக்கிழார்களைப் பாதுகாக்க வந்திருப்பவர்கள்.’’ என்று உறுதிபடக் கூறினார்.

(ஆதாரம்: Selected Works of Jawaharlal Nehru vol.6 page-156, 157) 
சவுத்திரி பிரம்பிரகாஷ் அவர்கள்,

“ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பும், பயிற்சியும் சிறுவர்களை வேண்டுமானால் கவரலாம், ஏமாற்றலாம். ஆனால், என்னைப் போன்று முழுமையாய் அறிந்தவர்களை ஏமாற்ற முடியாது!
வதந்திகளைப் பரப்புவதற்கும், எதிராளியை இழிவுபடுத்துவதற்கும் இந்த அமைப்பு தன் தொண்டர்களுக்குப் பயிற்சியளிக்கிறது’’  என்று  அவர்களின் உண்மை உள்ளத்தை திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
(ஆதாரம்: டி.ஆர்.கோபால் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ்.’ நூல்: பக்கம் 9-10)

ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட காலத்திலே இவ்வளவு நுட்பமாய் தீர்க்கமாய் பல தலைவர்கள், அதன் நோக்கத்தையும், செயலையும் துல்லியமாய் எடைபோட்டுக் காட்டியுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறிப்பாக தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான அமைப்பு என்று நன்கு தெரிந்தும்,  பங்காருலட்சுமணன், கிருபாநிதி போன்றோர், ஆர்.எஸ்.எஸ். இயக்கும் பி.ஜே.பி.யில் சேர்ந்து அந்த சமுதாயத்திற்கு துரோகம் இழைத்து, மூக்குடைபட்டது போதாது என்று, தற்போது இராம்விலாஸ் பாஸ்வான் போன்றவரை முகமூடியாக்கும் செயலைச் செய்து வருகையில், தமிழகத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பதவி மற்றும் பல்வேறு வாய்ப்புகளுக்காக அரிப்பெடுத்து  ஒடுக்கப்பட்டவர்களுக்கு, பச்சைத் துரோகம் செய்துவருகிறார். (எப்படியாவது பா.ஜ. அணியில் சேர்ந்து பலன் பெற விரும்புகிறார்.)

அவர் பேட்டிகளில் கூறுவதைக் கவனிக்கும் போது, அவரது முக மாற்றங்களைக் கவனித்தாலே, அவர் உளச்சான்றை அடகுவைத்துவிட்டு, ஆட்சி அதிகார வேட்கையில் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் துரோகம் செய்து வருகிறார் என்பது நமக்குப் புரியும்.

நீட் தேர்வு வேண்டும் என்று அவர் கூறி வருவதும், பி.«-ஜ.பி.க்கு ஆதரவாகப் பேசி வருவதும், இந்தித் திணிப்பை வரவேற்பதும் தமிழக மக்களுக்கு அவர் செய்திடும் மிகப் பெரும் கேடாகும். ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு வழிகாட்ட வேண்டியது கற்றுத் தெளிந்தவர்களின் கடமையாகும். ஆனால், இவர் சுயநலத்திற்காக சமுதாயத்தைக் காவு கொடுக்க களப் பணியாற்றி வருகிறார். பி.ஜே.பி.யுடன் சேரவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டு, தற்போது அதற்கான வசதியான காரணங்களைத் தேடி வருகிறார்.
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி போன்ற அமைப்பினர், ஜாதி வெறியை வளர்த்து, வர்ணாசிரமத்தைக் காத்து, ஆரிய மேலாண்மையை நிலைநாட்ட, சூத்திர, பஞ்சம மக்களைத் தொடர்ந்து நசுக்கும் வேலையை நாலு வழிகளிலும் செய்து வருபவர்கள்.

வருணதர்மம் காக்கவே இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்

“வருணாசிரமப்படி நடக்கவில்லையென்றால் பிராமணர்கள் ஆயுதம் எடுக்க வேண்டும்’’ என்கிறது மனுதர்மம். (அத்தியாயம்_8, சுலோகம் 348)
வருணாசிரமத்தை இடஒதுக்கீடு தகர்க்கிறது. சூத்திரன் கற்கவும், அதிகாரப் பதவிகளில் அமரவும், ஜாதி ஒழியவும், இடஒதுக்கிடு பெருமளவு உதவுகிறது. எனவேதான், இடஒதுக்கீட்டை முழுமையாக அவர்கள் எதிர்க்கிறார்கள்.

உயர்கல்வியில் ஒடுக்கப்பட்டோரைச் சேரவிடாமல் தடுப்பதும், சேர்த்தாலும் அவர்களைக் கொடுமை செய்து ஒழிப்பதும், மதவாதக் கூட்டத்தின் செயல்திட்டம். ரோஹித் வெமுலாவும், முத்துக்கிருஷ்ணனும் அண்மையில் அவர்களின் பலிகடாக்கள். இப்படிப்பட்ட கொடுமைகளுக்குப் பின்னும் பி.ஜே.பி.யை தாழ்த்தப்பட்டோர் ஆதரிக்கலாமா?
நம் விரலே நம் கண்ணைக் குத்தலாமா?

தேவேந்திர குல வேளாளர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்று மதுரையில் மாநாடு கூட்டி, அமித்ஷாவை அழைத்து அறிவித்த சிலர் முந்தைய அரைவேக்காட்டின் அடையாளம்!
இடஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்டோரை உயர்த்திக் கொண்டுவர உதவும் அரிய கருவி! அதை எதிரிகள் நன்றாகப் புரிந்து வைத்து எதிர்க்கிறார்கள். ஆனால், அதனால் பயன் அடையும் மக்களே அதை வேண்டாம் என்பது எவ்வளவு அபத்தம்; அறியாமை, அரைவேக்காட்டுத்தனம்!

இடஒதுக்கீடு என்னும் வலுவான சமூகநீதிக் கொள்கையை நீர்த்துப் போகச் செய்கின்ற வாதத்தைத் தங்கராசு வைக்கிறார்.

“நாங்கள் ஜாதிப் பெருமை உடையவர்கள். இடஒதுக்கீட்டின் மூலம் அதை இழக்க விரும்பவில்லை’’ என்கிறார். இது எவ்வளவு பெரிய அறியாமை! (இந்த 21ஆம் நூற்றாண்டிலும் ஜாதிப் பெருமையா? மகா வெட்கம்!)

ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் பரிவார அமைப்பான பா.ஜ.க.வும், ஆரிய சனாதன வெறிகொண்டவை.
ஆரியர்கள் தவிர மற்றவர்களெல்லாம் விலங்கினும் கீழான இழிமக்கள் என்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்த கர்த்தாவான கோல்வால்கர், தனது சிந்தனைக் கொத்துகள் என்ற நூலில்,

“ஆரியர்களின் மூலாதாரம் எது என்பது சரித்திர மேதைகளுக்கே தெரியாது. நாம் தொடக்கம் இல்லாத அநாதிகள். பெயர் இல்லாமல் வாழ்ந்திருக்கிறோம். நாம் நல்லவர்கள்; அறிவுத் திறன் கொண்டவர்கள். ஆன்மாவின் விதிகளை யெல்லாம் அறிந்தவர்கள் நாம் மட்டுமே! அப்பொழுது நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இரண்டு கால் பிராணிகளாக, அறிவற்ற மாக்களாக வாழ்ந்து வந்தனர். எனவே, தனிமைப்படுத்தி நமக்குப் பெயர் எதையும் சூட்டிக் கொள்ளவில்லை. சில நேரங்களில் நமது மக்களை மற்றவரிட மிருந்து பிரித்துக்காட்ட நாம் ஆரியர்கள் ­_ அதாவது அறிவுத் திறன் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள்’’ என்கிறார்.

ஆரிய பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இழிமக்கள் என்கின்றனர் ஆரிய ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அமைப்பினர். அப்படியிருக்க, தேவேந்திரகுல வேளாளர்கள் உயர்ந்தவர்கள். அந்த உயர்வு இடஒதுக்கீட்டால் பறிபோகிறது என்று தங்கராசு கூறுவது வேதனை தரும் வேடிக்கையல்லவா?

தாழ்த்தப்பட்டவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதில் பெருமை கொள்ளும் அற்ப எண்ணத்தைத் தவிர, அறியாமையைத் தவிர இதில் அறிவார்ந்த, மானம் சார்ந்த பெருமை என்ன உள்ளது?

ஆரிய சனாதன சட்டப்படியும் சாஸ்திரப்படியும் தேவேந்திரகுலத்தவர் தீண்டத்தகாத, தீட்டு உடைய, கோயில் கருவறையில் நுழையத் தகுதியில்லா இழி பிறவிகள்தானே?
இவர் இடஒதுக்கீடு வேண்டாம் என்றதும் இவர் சாதியினரை ஆரிய பார்ப்பனர்கள் கோயில் கருவறையில் செல்ல அனுமதித்து விடுவார்களா?
இதைவிட அறியாமை, அரை வேக்காட்டுத்தனம் வேறு உண்டா?குருமூர்த்தி அய்யரின் சூழ்ச்சிக்கு தங்கராசு பலியானார் என்ற கேவலத்தைத் தவிர இதில் பெருமை கொள்ள என்ன உள்ளது?

மதுரை மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த திலீப் என்ற இளைஞரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விமலாதேவி என்ற பெண்ணும் மனம் விரும்பி திருமணம் செய்து கொண்டனர். அதைப் பிரிக்க பெண்ணின் குடும்பத்தினரும் உறவினர்களும் முயற்சி செய்தனர். இதன் விளைவு அந்தப் பெண்ணை பெற்றவர்களே எரித்து படுகொலை செய்த சம்பவம் நடந்தது. சமுதாயத்தில் “தேவேந்திரகுல வேளாளர்’’ உயர்வாகக் கருதப்பட்டிருந்தால் பிற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இத்திருமணத்தை எதிர்த்திருக்க மாட்டார்களே, பிற்படுத்தப்பட்டோரை விட “தேவேந்திரகுல வேளாளர்’’ கீழ் சாதியினர் என்ற எண்ணம்தானே இப்படுகொலைக்குக் காரணம். உண்மை இப்படியிருக்க, நாங்கள் உயர்சாதி என்று கூறிக்கொண்டு இடஒதுக்கீடு வேண்டாம் என்பது எப்படிச் சரியாகும்? அறிவுக்குகந்ததாகும்?

இவர் அந்த ஜாதியின் ஒரே ஏகப் பிரதிநிதியா? இடஒதுக்கீடு வேண்டாம் என்பதை தேவேந்திரகுல வேளாள மக்கள் எல்லோரும்  ஏற்கிறார்களா? 200 கிராமங்களில் அம்மக்களைச் சந்தித்து இடஒதுக்கீடு வேண்டாமா? என்று கேட்டபோது, அவர்கள் பதறிப்போய், “இடஒதுக்கீடு இல்லை என்றால் நாங்கள் அதளபாதாளத்தில் அழுத்தப் படுவோம்’’ என்று ஆவேசப்பட்டார்கள்.

பி.ஈ. படிக்கும் தேவேந்திரகுல வேளாள மாணவர் ஒருவர்,

“இடஒதுக்கீட்டால்தான் கல்வி உதவித் தொகை ரூ.40 ஆயிரம் கிடைக்கிறது. இரண்டு வருடம் உதவித் தொகையைக் கொண்டு படித்துவிட்டேன். இடஒதுக்கீடு பறிபோய், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் போனால், என் படிப்பே பாதியில் நிறுத்தப்பட்டுவிடும்!

+2 முடித்துவரும் மாணவர்கள் இடஒதுக்கீடு இல்லையென்றால், உயர்கல்வி கிடைக்காதே!’’ என்றார் ஆவேசத்துடன்.
ஜான் பாண்டியன் (தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம்)

தேவேந்திரகுல வேளாளர் என்று ஒரே பெயரில் உட்பிரிவுகள் அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வரவேற்கிறேன். ஆனால், இடஒதுக்கீடே தேவையில்லை என்று சொல்வதை ஏற்க முடியாது. அது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று. இந்த மாநாட்டை நடத்தியவர்கள் எல்லாம் படித்தவர்கள் என்று அறிகிறேன். இடஒதுக்கீடு இல்லை என்றால், அவர்கள் பெரிய படிப்புகளை படித்திருக்க முடியுமா? என்று கேட்டார்.

மருத்துவர் எம்.காளிராஜன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அதிமுக)

தேவேந்திரகுல வேளாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் நீக்கக் கோருவது, முற்றிலும் தவறான அணுகுமுறை.
இடஒதுக்கீடு இருந்ததால்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த நான், மருத்துவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் ஆக முடிந்தது. இடஒதுக்கீடு வேண்டாம் என்று சொன்னால், கிராமப்புற, ஏழை தேவேந்திரகுல மக்களின் குழந்தைகள் யாரும் மருத்துவராக, அய்.ஏ.எஸ். அதிகாரியாக, அரசு ஊழியராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக வர முடியாமல் போய்விடும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ள தங்கராஜ், ஆர்.எஸ்.எஸ்.காரர். தேவேந்திரகுல வேளாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து, தமிழக அரசின் உதவியின்றி மத்திய அரசால் நீக்க முடியாது. அவ்வாறு நீக்க முயன்றால் நான் சார்ந்துள்ள அதிமுகவும், அதைக் கடுமையாக எதிர்க்கும் என்று எச்சரித்தார்.
ச.தங்கவேலு (மாநிலங்களவை உறுப்பினர், திமுக)

தாழ்த்தப்பட்டோரைவிடத் தாங்கள் மேலானவர்கள் என்று தங்கராசு பெருமை கொள்வது ஆரியர்கள் செய்த சாதிய அடுக்குமுறையின் சூழ்ச்சி புரியாமையே ஆகும்! அம்பேத்கர் இச்சூழ்ச்சியை மிகத் தெளிவாக அம்பலப்படுத்திய பின்னரும் தங்கராசு போன்றோர் தடம் மாறி ஆரிய சூழ்ச்சிக்குப் பலியாவது அந்தோ பரிதாபம்! என்ற அவல நிலையாகும்!
ஆரிய ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு தங்கராசு கையாளாய் ஆனதால் அவர் இடஒதுக்கீட்டிற்கு எதிராய் கொக்கரிக்கிறார்.
“இடஒதுக்கீட்டைப் பெற்றவர்களே இடஒதுக்கீடு வேண்டாம் என்று கூறுகிறார்கள். எனவே, இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும்’’ என்று இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, குருமூர்த்தி அய்யர் குதிக்கிறார்.

“ஒரு பக்கம் இடஒதுக்கீடு வேண்டாம் என்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாராட்டு; இன்னொரு பக்கம் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்வது போல் பாசாங்கு. இந்த இரட்டை வேடத்தை தாழ்த்தப்பட்டோரும், சமூகநீதி காப்போரும் அம்பலப்படுத்தி சதியை முறியடிக்க வேண்டும்’’ என்ற ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறியது அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய அரிய கருத்து ஆகும்.

தங்கராசு நடத்திய கூட்டத்திற்கு தேவேந்திர குல வேளாளர்கள் 300 பேரே வந்திருந்தனர். அங்கு கூடிய மற்றவர்கள் எல்லாம் பி.ஜே.பி.யினர். ஆக, அது தங்கராசு பெயரில் நடந்த பி.ஜே.பி. மாநாடு ஆகும்.

தங்கராசுகளுக்கு அடுத்து கிருஷ்ணசாமி

ஆர்.எஸ்.எஸ். ஆரியக் கூட்டத்தின் கையாளாய் அடுத்து களம் இறங்கியிருப்பவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
இடஒதுக்கீட்டால் படித்து முன்னேறி, திராவிடக் கட்சிகளால் வளர்ந்து இன்று இரண்டையும் எட்டி உதைக்கின்றார்!
திராவிடக் கட்சிகள் ஒழிய வேண்டும் என்கிறார். சுயநலக் கூட்டம் தவறாது ஒலிக்கும் முழக்கம் இது. இதை வைத்தே சுயநலமிகளையும், ஆரியர்களின் அடிமைகளையும் எளிதில் கண்டறியலாம்!

தி.மு.க. ஆட்சியில்தான் ஆதிதிராவிடர் களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவிகிதம் இடஒதுக்கீட்டில் இருந்து 3 சதவிகிதம் அருந்ததியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

தி.மு.கழக ஆட்சியில் இவ்வாறு உள் ஒதுக்கீடு  வழங்கப்பட்டதன் காரணமாக 2009-_2010இல்  அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த  56 மாணவ மாணவியர் மருத்துவக் கல்லூரிகளிலும்,  1,165 மாணவ மாணவியர் பொறியியல் கல்லூரி களிலும்  சேர்ந்து,  மொத்தம்  1,221 பேர் பயன் பெற்றனர்.
2010_-2011இல்  இந்த எண்ணிக்கை மருத்துவக் கல்லூரிகளில் 70 என்றும்,  பொறியியல் கல்லூரி களில் 1,813 என்றும்  மொத்தம்  1,883 என்றும்  மேலும் அதிகரித்தது.
ஆக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உள்ஒதுக்கீடு கொடுத்து, அவர்களை உயர்த்திக் காட்டிய தி.மு.கழகத்தை வீழ்த்த அதனால் பலன் பெற்றவர்களே துடிப்பது, துரோகத்திலும் பெரும் துரோகம் அல்லவா?

ஆர்.எஸ்.எஸ். அபாயம் அல்லவா?

தாழ்த்தப்பட்டோர் நலனில் அக்கறை யுள்ளவர்கள் போலவும், அம்பேத்கர் மீது அக்கறையுள்ளவர்கள் போலவும் ஆர்.எஸ்.எஸ்.காரரும் பி.«-----ஜ.பி. ஆட்களும் கபடநாடகம் ஆடுகிறார்களே அவர்களின் உண்மையான உள்ளம் என்ன? தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் வரலாற்று நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க வேண்டாமா? தாழ்த்தப்பட்டோரை ஒழித்துக்கட்ட பல வகையிலும் முயன்றுவரும் ஆபத்தானவர்கள்  அவர்கள் என்பதை மறக்கலாமா?

அம்பேத்கரை கொலை செய்ய முயன்ற ஆர்.எஸ்.எஸ்.!

அம்பேத்கரின் நெருங்கிய நண்பரும் இந்தியக் குடியரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பெல்காமைச் சார்ந்த டி.ஏ.காட்டி D.A.Katti  ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார். 02.02.1980இல் பெங்களூர் அம்பேத்கர் கல்லூரியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
“வீர சவர்க்கரின் தம்பி பாபா சவர்க்கார் நாசிக் பீட ஜகத் குருவிடம், தமக்கு 500 ரூபாய் பணம் தர வேண்டும் என்று கேட்டார். அந்தப் பணம் அம்பேத்கரின் சமையல்காரருக்கு லஞ்சமாகத்தர கேட்கப்பட்ட பணம்! அதாவது அம்பேத்கர் உணவில் விஷம் கலந்து கொடுத்து, சாகடிக்க அவரது சமையல்காரரிடம் ரூ.500 லஞ்சம் கொடுக்க பாபா சவர்க்கார் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ஆனால், சங்கராச்சாரி இதற்கு பணம் தர மறுத்துவிட்டார். இத்தகவலை பிரபல மராத்திய எழுத்தாளர் நாடக ஆசிரியரான பி.கே.அட்ரே (P.K.Atre) அவர் நடத்திய ‘மராத்தா’ என்ற மராத்திய நாளிதழில் வெளியிட்டார்.

காந்தியார் கொலையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த வீர சவார்க்காரின் தம்பி, பாபா சவார்க்கார் ஆர்.எஸ்.எஸ்.சைத் தொடங்கிய அய்வர் குழுவில் ஒருவரான சித்பவன் பார்ப்பனர் ஆவார்.
(தலித் வாய்ஸ் ஏடு, 16.04.1982 )

இவ்வாறு அம்பேத்கரின் கொடும்பாவியை எரித்து, அவரை சட்ட அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றி, அவரைக் கொலை செய்யவும் முயன்றவர்கள்தான் இன்று அம்பேத்கரை, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் என்றும், இந்துத்வா அம்பேத்கர் என்றும், விதம்விதமாய்க் காட்டி, அம்பேத்கர் புகழ் பரப்புவதுபோல் கபட நாடகம் ஆடி, அம்பேத்கரை அணைத்து அழிக்க முயற்சிக்கின்றனர். .

இப்படிப்பட்ட கொலைவெறிக் கும்பலுடன் கைகோர்த்துக் களம் இறங்க தாழ்த்தப் பட்டோரின் தலைவர்கள் முற்படுவது ஆபத்தானது மட்டுமல்ல, தங்கள் சமுதாயத்திற்கு அவர்கள் செய்யும் மாபெரும் துரோகமும் ஆகும்.

திராவிடர் இயக்கம் பள்ளன், பறையன் இயக்கம்!

நீதிக்கட்சி காலந்தொட்டே திராவிட இயக்கத்தார் தாழ்த்தப்பட்ட மக்களின் இழிவுநீக்கவும், அவர்கள் எழுச்சி பெற்று முன்னேறவும் தேவையானதைச் செய்து வருகின்றனர். நீதிக்கட்சி, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன்,

ஆதிதிராவிடர்களுக்காக பல பள்ளிகளை உருவாக்கி நடத்துதல்.

ஆதிதிராவிடர்களுக்கு தொழிற்கல்வி அளிப்பதில், விவசாயத்துறை, கல்வித்துறை இரண்டும் இணைந்து செயல்படுவதை ஊக்குவித்தல்.
கூட்டுறவு இயக்கத்தை ஆதிதிராவிடர் களிடையே ஊக்குவித்தல்.

நீர் வசதியை மேம்படச் செய்தல்.

நிலங்கள் வழங்குவதை விரைவுபடுத்துதல்.
மதுவிலக்கை ஊக்குவித்தல்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலங்கள் வழங்குதல்:

வேளாண்மைக்காக ஏராளமான நிலங்கள் இருக்கும் சிற்றூர்களில் ஆதிதிராவிடர்கள் வேளாண்மை செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட பகுதி நிலங்களை அவர்களுக்காக ஒதுக்குதல்; மற்ற சிற்றூர்களிலும் தேவை என மாவட்ட ஆட்சியாளர் எண்ணுவாரானால் இவ்வாறு செய்யலாம் என்ற அனுமதி.

எண்ணற்ற புறம்போக்குப் பகுதிகளோ, அளக்கப்படாது உள்ள நிலங்களோ அயனுக்கு மாற்றப்படும்போது, எடுத்துக்காட்டாக ஒதுக்கப்பட்ட காடுகள் அழிக்கப்படும்போது, ஆதிதிராவிடர்களின் இன்றைய தேவைகளும் எதிர்காலத் தேவைகளும் குறித்து ஆராயலாம் என்ற உத்தரவு முதலியன செய்யப்பட்டன.

(முனைவர் பு.ராசதுரை எழுதிய ‘நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக’ என்ற நூல்)

பெரியார் பொது வாழ்க்கைக்கு வந்த காலத்தில், எத்தனையோ பள்ளிக் கூடங்களில், அதுவும் நாட்டுப்புறப் பள்ளிக் கூடங்களில், ஆதிதிராவிடர் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளவே மாட்டார்கள். அவர்களைப் பள்ளியில் சேர்க்க வைத்த சாதனை பெரியாருடையது.

சுயமரியாதை மகாநாடுகளில், கூட்டங்களில்  நாடார், நாயுடு, முஸ்லீம், தீண்டப்படாதார் என்கின்றவர்கள் எல்லோரும் கலந்து சமையல் செய்து, எல்லோருமே கலந்து பரிமாறி, சைவர் முதல் பெரிய ஜாதிக்காரர்கள், தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடச் செய்தவர் பெரியார்.

சென்னையில் அன்றைய மவுண்ட் ரோட்டிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில் பறையர்களும், நாய்களும், குஷ்ட ரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது என்று போர்டு வைத்திருந்தார்கள். உணவு விடுதிகளில் பிராமணாள் மட்டும் என்று எழுதப் பட்டிருக்கும். சூத்திரரும் பஞ்சமரும் உள்ளே நுழைய முடியாது என்று இருந்த நிலையை பெரியார் மாற்றினார்.
1938ஆம் ஆண்டு நீடாமங்கலத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மூன்று ஆதிதிராவிட தோழர்கள் சரிசமமாக உட்கார்ந்து விருந்து சாப்பிட்டார்கள் என்பதற்காக அவர்களை மொட்டை அடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்தார்கள். அவர்களுக்காக வாதாடியது நீதிக்கட்சி சர்.ஏ.டி.பன்னீர்செல்வம். அந்த நிலையை மாற்றியது திராவிடர் இயக்கம்.
1935ஆம் ஆண்டில் கும்பகோணம் நகராட்சியில் அக்கிரகாரத்தில் கக்கூஸ் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக்கூடாது - அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். பார்ப்பான் மலத்தைக்கூட தாழ்த்தப்பட்டவன் தொடக் கூடாது என்ற கொடுமை அப்போது நிலவியது. அதை மாற்றியது திராவிடர் இயக்கம்.
ராஜகோபாலாச்சாரியார் சேலம் நகரசபைத் தலைவராக இருந்தபோது தண்ணீர்க் குழாய்களைத் திறந்து விடும் வேலைக்கு ஒரு ஆதி திராவிடர் நியமிக்கப்பட்டதால், சேலத்தில் பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பையும், கூக்குரலையும் கிளப்பினார்கள். இந்த நிலைகளை முற்றாக மாற்றியது திராவிடர் கழகம்.

1935ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பேருந்துகளில் பஞ்சமருக்கு இடமில்லை என்று எழுதியதோடு, டிக்கட்களிலும் அவ்வாறு அச்சிட்டார்கள். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக்குழு தலைவராக இருந்த கீ.றி.கி. சவுந்தர பாண்டியன் அவர்கள்தான் அதை ஒழித்தார்.

1940ஆம் ஆண்டுகளில் - சென்னை வில்லிவாக்கத்தில் _- தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளில் வசித்தவர்களுக்கு வந்த கடிதங்களை -_ அஞ்சல்காரர்கள் ஊர் எல்லையிலே உள்ள ஒரு கோயிலிலே வீசி எறிந்துவிட்டுப் போனார்கள். அந்நிலை மாறியது பெரியார் தொண்டால்.

தாழ்த்தப்பட்ட சகோதரர்களை “பறையன்’’ என்றே அரசு ரிக்கார்டுகளில் குறித்து வந்ததை எதிர்த்து “ஆதிதிராவிடர்’’ என்றே குறிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, பிறகு அதை அரசே ஏற்கச் செய்தவர் நீதிக்கட்சி தலைவரான டாக்டர் சி. நடேசனார். இப்படிப்பட்ட திராவிடச் சாதனைகளை மறைத்து திராவிடம் ஒழிய வேண்டும் என்பது பச்சைத் துரோகம் அல்லவா?

திராவிடர் இயக்கம் பறையர், பள்ளர் இயக்கம் என்று பெரியார் சொன்னதோடு, தாழ்த்தப்பட்டவர்களுக்காக நாடெங்கும் பல மாநாடுகளை நடத்தினார்.
“தோழர்களே! திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்நாட்டில் பள்ளன், பறையன் என்று இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியைத் தருகிறேன்’’ என்றார் பெரியார்.

தாழ்த்தப்பட்டோரைக் கொண்டு தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க. முயற்சி

இவ்வாறு தமிழகம் பெரியார் பதப்படுத்திய, தமிழ் மக்கள் வாழும் பகுதியென்பதால், பி.ஜே.பி.யால் தேர்தலில் தனித்து நின்று வைப்புத் தொகைக்கூட வாங்க முடியாது என்ற நிலையில், அ.தி.மு.க.வை உடைத்து, வருமானவரித்துறை, சி.பிஅய். இரண்டையும் கொண்டு விரட்டி அ.தி.மு.க. தலைவர்களைத் தங்கள் விருப்பப்படி நடக்க வைத்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள்!

ஆனால், அ.தி.மு.க. தொண்டர்கள் எவரும் பி.ஜே.பி.க்கு வாக்களிக்க மாட்டார்கள். அதனால் அ.தி.மு.க.வுடன் தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளையும் சேர்த்து கூட்டணி அமைத்து அதிக இடங்களைப் பெற்று வெற்றி பெறலாம் என்று எண்ணுகின்றனர்.

அ.தி.மு.க. + பி.ஜே.பி இரண்டும் சேர்ந்தாலும், தற்போது அ.இ.அ.தி-.மு.க. சிதறுண்டு கிடக்கும் நிலையில், தங்கள் திட்டம் நிறைவேறாது என்பதால், தங்கள் கூட்டணிக்கு வலு சேர்க்க, தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளின் தலைவர்களுக்குப் பதவி ஆசைகாட்டி தங்கள் பிடியுள் கொண்டுவர தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

அவர்களின் தூண்டிலுக்கு முதலில் பலியகியுள்ளவர் டாக்டர் கிருஷ்ணசாமி. இவர் தற்போது பி.ஜே.பி.யின் கொள்கைப் பரப்பு செயலாளர் போல் பேசி வருகிறார். டாக்டர் கிருஷ்ணசாமியை நம்பி வந்த தொண்டர்கள் விழிப்போடிருந்து பி.ஜே.பி.யின் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

மற்றுமுள்ள தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளின் தலைவர்கள் விழிப்போடும் எச்சரிக்கையோடும் இருந்து, தமிழகத்தில் பி.ஜே.பி. வளராமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் கட்சியை சின்னபின்னாமாக்கிய பி.ஜே.பி.யை தங்கள் முதல் எதிரியாய் எண்ணி அவர்கள் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம் போன்றும், எடப்பாடி பழனிச்சாமி போன்றும் பி.ஜே.பி.க்கு பயந்து அடிபணிகின்றவர்களை விலக்கி, இனஉணர்வும், மொழியுணர்வும் உள்ள, பி.ஜே.பி.யை தீவிரமாய் எதிர்க்கக்கூடிய ஒருவரைத் தலைவராய்த் தேர்வு செய்து அ.தி.மு.க.வை திராவிடக் கட்சியாக இனியாவது நிலைநிறுத்த வேண்டும்.

இளைஞர்கள் மோடி வித்தைகளில் மயங்காமல் பி.ஜே.பி.யை அறவே வீழ்த்த வேண்டும்.

எனவே, இன்றுள்ள சூழலில் ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் தலைவர்கள் மிக எச்சரிக்கையாக செயல்பட்டு ஒடுக்கப்பட்டோர் உரிமையையும் நலனையும் காக்க வேண்டும்.

இளைஞர்கள் ஊழல் ஒழிப்பா, மதவாத ஒழிப்பா என்றால், மதவாத ஒழிப்பே முக்கியம் என்ற தெளிவோடும் உறுதியோடும் இருந்து வாக்களிக்க வேண்டும்.
ஊழல் தனிமனிதனின் மனநோய்; மதவாதம் சமூகத்தையே பாதிக்கும் தீராத புற்றுநோய்! மறவாதீர்!

-மஞ்சை வசந்தன்