அரசியல்

Tuesday, November 15, 2016

முந்திரிக்காட்டில் முகிழ்த்தெழுந்த அய்.ஏ.எஸ். அதிகாரி


 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள முத்தாண்டி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. மூன்றாம் வகுப்பு வரை கிராமத்தில் படித்தவர் 8 கி.மீ தொலைவிலுள்ள நெய்வேலியின் செயிண்ட்பால் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ வரை பயின்றார். கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். விரும்பிப் படித்தார். பெற்றோரின் ஊக்கத்தால் யூ.பி.எஸ்.சி. எழுத முடிவெடுத்தார். விரும்பிய ஐ.ஏ.எஸ். கிடைக்கும்வரை தொடர்ந்து ஐந்து முறை யூ.பி.எஸ்.சி. தேர்வுகளை எதிர்கொண்டார்.

கிராமத்தில் பிறந்து தமிழ்வழி பயின்ற தான் எப்படி மருத்துவராக, அய்.ஏ.எஸ். ஆக உயர்ந்தார் என்பதை அவரே விளக்குகிறார்.
“ஆறாம் வகுப்பு படிக்கும்போது வெ.இறையன்பு எழுதிய நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம் புத்தகத்தைப் படித்ததும் ஐ.ஏ.எஸ். ஆர்வம் துளிர்த்தது. இதனால் எம்.பி.பி.எஸ். முடித்த பின்னர்த் தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டே யூ.பி.எஸ்.சி. எழுத ஆயத்தமானேன்.
பிறகு சென்னை சென்று சங்கர் ஐ.ஏ.எஸ். கோச்சிங் அகாடமியில் பொதுக்கல்வி பாடப்பிரிவுக்காக மட்டும் பயிற்சி பெற்றேன். விருப்பப்பாடங்களான உயிரியல், மருத்துவ அறிவியலை நானே படித்தேன். மருத்துவ அறிவியலில் அதிகமாகப் படிக்க வேண்டி இருந்ததால் இரண்டாவது முயற்சியில் அதற்குப் பதிலாகப் புவியியல் எடுத்தேன். இரண்டாம்-நிலை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் நேர்முகத் தேர்வில் தேறவில்லை.
மூன்றாவது முயற்சியில் ஐ.பி.எஸ். கிடைத்தது. எனது நோக்கம் ஆட்சியர் ஆவது என்பதால் மீண்டும் இருமுறை எடுத்த கடுமையான முயற்சியில் எனது எண்ணம் நிறைவேறியது. அதே நேரத்தில் ஐந்து முயற்சிகளிலும் நான் முதல்நிலை தேர்வில் ஒருமுறை கூடத் தவறவில்லை. இதற்கு எனது பள்ளியில் பாடம் நடத்தப்பட்ட முறை முக்கியக் காரணம்’’ என்றார் ராஜா.
எதிர்காலத்தில் யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுத விரும்பும் பிள்ளை-களுக்குப் பள்ளிப் பருவத்தி-லிருந்தே ஆங்கிலம், தமிழ் நாளிதழ்களை வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என்பது ராஜாவின் யோசனை. இதன் மூலம், புரிந்து படிக்கும் திறனையும் வளர்த்தெடுக்கலாம். இணையதளத்தில் கொட்டிக்-கிடக்கும் தகவல்களையும் புத்தகங்களையும் பயன்படுத்தலாம். அதேபோல ராஜ்யசபா டிவி, லோக்சபா டிவி போன்ற சேனல்களில் வரும் நேர்காணல், விவாதங்களைப் பின்தொடர்வது மிகவும் உதவும் என வழிகாட்டுகிறார் ராஜா.
யூ.பி.எஸ்.சி.க்கான முயற்சிகளுக்கு இடையே ராஜாவுக்கு, 2009இ-ல் கடலூர் மாவட்டம் புலியூரில் தமிழக அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் ஒன்றில் மருத்துவப் பணி கிடைத்தது. இதில் சேர்ந்து யூ.பி.எஸ்.சி.க்கான மூன்றாவது முயற்சியைத் தொடர்ந்தபோது 239ஆ-வது ரேங்கில் 2011ஆ-ம் வருட பேட்ச்சில் கர்நாடகா மாநிலப் பிரிவின் ஐ.பி.எஸ். கிடைத்தது. இதன் பயிற்சியின் போது தாவன்கெரே, மைசூர் மாவட்டத்தின் நஞ்சன்கோடு ஏ.எஸ்.பி.யாகவும், கொப்பல் மாவட்டத்தின் எஸ்.பி.யாகவும் பணியாற்றினார். அப்போது, யூ.பி.எஸ்.சி. தேர்வின் இரு விருப்பப் பாடங்கள் ஒன்றாகக் குறைக்கப்பட்டது. இத்துடன் பொதுக் கல்வியிலும் பாடத் திட்டம் நான்காகக் குறைக்கப்பட்டது. இதனை அடிப்படையாக வைத்துத் தேர்வுக்குத் தயாரானவர் ஐந்தாவது முயற்சியில் ஐ.ஏ.எஸ். பெற்றார்.
“யூ.பி.எஸ்.சி. எழுத விரும்புபவர்கள் அதற்கு முன்பாக அதன் பழைய முதல்நிலை வினாத்தாள்களுக்கான பதிலை எழுதிச் சுயபரிசோதனை செய்வது முக்கியம். இந்தக் கேள்விகளைப் பாடங்களுக்கு ஏற்றபடி தனியாகப் பிரித்து எழுதினால் எதில் பின்தங்கியிருக்கிறோம் என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியும். இதைச் சோதித்துப் பார்க்கப் பயிற்சி நிலையங்கள் அவசியம் இல்லை. இதன் மூலமாக நமக்கு எதில் அதிகப்படியான பயிற்சி தேவை என்பதைக் கண்டுபிடித்து அதன் பிறகு பயிற்சி நிலையங்களை அணுகும்போது பலன் இருக்கும்.
குறிப்பாகக் கணிதம், அறிவியல் பாடங்களைச் சுயமாகப் படிப்பது கடினம். ஆகவே, கலை இலக்கியத் துறைகளில் பட்டம் பெற்றவர்கள் யூ.பி.எஸ்.சி. தேர்வில் கணிதம், அறிவியலை விருப்பப்பாடங்களாக எடுக்காமல் இருப்பது நல்லது. ஆனால், அறிவியலில் பட்டம் பெற்றவர்கள் பொது நிர்வாகம், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களை விருப்பப் பாடங்களாகத் தாராளமாக எடுக்கலாம்.
அடுத்து, ஒரே பாடத்தைத் தொடர்ந்து படிக்கும்போது சலிப்பு உண்டாகும், கவனச் சிதறல் ஏற்படும். இதனாலேயே ஒரு மணி நேரத்துக்கு மேல் அடுத்த பாடத்தை நான் படிக்க ஆரம்பித்துவிடுவேன். இந்த மாதிரிப் புதிய பாடங்களைப் படிக்கும்போது நம்முடைய புரிதல் திறன் புத்துணர்வு பெறும்.’’ என்று மாணவர்களுக்கு வழிகாட்டுவதோடு, தகுதி-திறமை பேசும் ஆதிக்க சக்திகளின் தலையில் ஓங்கிக் குட்டியுள்ளார்! வாய்ப்புக்கிடைத்தால் ஒடுக்கப்பட்டோர் சாதிப்பர் என்பதைச் செயலில் காட்டியுள்ளார். 

மூளையின் கூர்மை, சுறுசுறுப்பு, நினைவாற்றலுக்கு செய்ய வேண்டியவை!

மூளை எல்லோருக்கும் உள்ளது. அதுதான் உடலின் தலைமை நிலையம். மூளையின் கூர்மையும், நலமும், வளமும் அதன் செயல் திறனும் நன்றாக அமைய கீழ்கண்டவற்றை ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டும்.
1.தினமும் ஒருவாழைப்பழம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். காரணம், இதிலுள்ள “ட்ரிப்டோபன்’’, “டைரோசின்’’ என்ற அமினோ அமிலங்கள் மற்றும் “செரோடோனின்’’, “டோபமைன்’’ போன்ற இரசாயன சத்துக்கள்தான்.
கடினமான மூளை உழைப்பில் ஈடுபட்டாலும் சோர்வு ஏற்படாமல் தவிர்க்கவும், தொடர்ந்து சுறுசுறுப்புடன் வேலையில் ஈடுபடவும் இவை உதவுகின்றன.
வாழைப்பழத்தில் நிறைய உள்ள ‘சி’ வைட்டமின் மூளைக்குத் தேவையான ``நார் எபினெரின்’’ உருவாக்க உதவுகிறது. மூளையின் இரத்த நாளங்கள் சேதமடையாமலும் இது காக்கிறது.
2. பப்பாளி:
மூளையின் இரத்த நாளங்கள் சேதமடையாமல் இருக்க இதிலுள்ள ‘சி’ வைட்டமின் உதவுகிறது, மூளைக்குத் தேவையான செரட்டோன் கிடைக்க உதவும் ஃபோலிக் அமிலம் இதில் தேவையான அளவு உள்ளது. பப்பாளி கண் நலத்துக்கும், மலச்சிக்கல் வராமல் இருக்கவும் உதவும்.
3. கருப்பட்டி வெல்லம்:
பனஞ்சாற்றி-லிருந்து காய்ச்சி எடுக்கப்படும் கருப்பட்டி எனப்படும் பனை வெல்லம் மூளைச் சோர்வை நீக்க உதவுகிறது. இதிலுள்ள பி6, பி12 வைட்டமின்கள் அதற்கு உதவுகின்றன. வெதுவெதுப்பான சூட்டிலுள்ள பாலில் கருப்பட்டியைச் சேர்த்துக் குடித்தால் உடன் உற்சாகம் கிடைக்கும்.
4. சிவப்பரிசி:
இதிலுள்ள “வைட்டமின் பி’’ மூளைச் செயல் திறனை அதிகரிக்கிறது. இதில் உள்ள நயசின், தையமின், ஐனோசிடால் போன்ற ‘பி’ வைட்டமின்கள், ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலம், செரட்டோனாக மாற்றப்பட உதவுகின்றன.
இது மன அமைதிக்கும், நினைவாற்றலுக்கும், மன நிறைவிற்கும் உதவுவதோடு, நல்ல உறக்கம் வரவும் உதவுகிறது. மன அழுத்தம் வராமல் தடுக்கவும் இது பயன்படுகிறது.
5. மீன்:
புரதச் சத்து அதிகம் உள்ள மீனில் ‘டைரோசின்’ என்ற அமினோ அமிலம் அதிகம் உள்ளது. இதன் உதவியால் மூளைச் செல்கள் டோபமைன் என்னும், நியூரோடிரான் ஸ்மிட்டரை உருவாக்கு-கின்றன. இது சுறுசுறுப்பு, வேலைத் திறன் ஆகியவற்றை அதிகரிக்கிறது. நரம்பு மண்டலம் சிறப்பாகச் செயல்பட இவை உதவுகின்றன.
6. முட்டை:
மஞ்சள் கருவில் உள்ள கோலின், நியூரோடிரான்ஸ்மிட்டரைத் தயாரிக்க உதவுவதால் நினைவாற்றல் நன்றாக இருக்கும். கவனமாகவும், ஊன்றி உள்வாங்கவும் உதவுவதோடு, கவனச் சிதறலையும் தடுக்கிறது.
மூளை நரம்புச் செல்களைச் சுற்றியுள்ள செல்களுக்குத் தேவையான கொலஸ்ட்ரால் மஞ்சள் கருவில் உள்ளது. முட்டையில் உள்ள  ஞிபிகி என்னும் ‘ஒமேகா- 3’ என்னும் கொழுப்பு அமிலம் நரம்புச் செல்களின் இணைப்பிற்கு உதவுகிறது.
7. கீரைகள்: கீரைகளில் ஞிபிகி அமிலம் உள்ளது. வல்லாரைக்-கீரை நினைவாற்றலை தர அதிலுள்ள `ப்ரம்மிக் அமிலம்’ உதவுகிறது. இது குழந்தைகளின் மூளைக்கு டானிக் போன்றது. கீரைகள் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் நல்லது. பசலைக்கீரை மூளைக்கு பெரிதும் நலம் சேர்க்கும். மலிவானவை என்பதால் கீரைகள் ஏழைகள் கூட அதிகம் உண்ண ஏற்றவை.
8. வேர்க்கடலை:
மூளைக்கு வேர்க்கடலை மிகவும் நல்லது, உகந்தது. பாதாம், வால்நட் போன்ற விலை கூடுதலான பருப்பு-களைவிட இதுதான் சிறந்தது. இதில் வைட்டமின் ‘ஈ’ அதிகம். ஆக்சிஜன் எற்றத்திற்கு இது பெரிதும் பயன்படும். நரம்பு மண்டலத்தைப் பலப்-படுத்தவும். வேர்க்கடலை உதவுகிறது. இதிலுள்ள ‘தைமின்’ என்னும் அமினோ அமிலம் மூளை நரம்பு மண்டலத்திற்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. இதில் புரதம் நிறைய உள்ளது.
9. எள்:
இதிலுள்ள `செலினியம்’ என்னும் தாது உப்பு மூளை நரம்புகளை வலுவடையச் செய்கிறது. எள்ளில் உள்ள `ஜிங்க்’ என்னும் தாதுப்பொருள் நினைவாற்றலை அதிகரிக்கிறது. மூளை நலன் பாதுகாக்கப்படுவதற்கு எள் இன்றியமையாதது.
10. உறக்கம்: ஒரு நாளைக்கு ஏழு மணி நேர உறக்கம் கட்டாயம் தேவையாகும். இது மூளையின் நலத்திற்கும், சுறுசுறுப்பிற்கும் பெரிதும் பயன்படும். ஒரே வேலையைத் தொடர்ந்து செய்யாமல் வேலைகளை மாற்றி மாற்றி செய்தால் மூளை சோர்வடையாமல், சுறுசுறுப்படையும். 

உயிர்ப்பலியும் உடற்கேடும் உருவாக்கும் வெடிப்பொருட்களை உடனே தடை செய்க!

- மஞ்சை வசந்தன்
 “சல்லிக்கட்டு’’ விளையாட்டில் உயிரிழப்பும் விலங்குவதையும் இருக்கிறது என்று உச்சநீதி-மன்றம் வரை விவாதிக்கப்பட்டு தடை விதிக்கப்படுகிறது. ஒருசில மாடுகள் மிரளுவது “வதை’’; ஒருசிலர் இறப்பது உயிர்ப்பலி என்று கவலை கொள்ளப்படுகிறது; கண்டிப்புடன் தடை செய்யப்படுகிறது. சரி.

ஆனால், வெடிப்பொருட்களால் எத்தனை ஆயிரம் உயிர்கள் பலியாகின்றன; இந்தியாவே ஓரிரு வாரம் காற்று மாசால் கதிகலங்கிப் போகிறது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி நிகழ்ந்தும் அரசும், நீதிமன்றங்களும் கண்டுகொள்ளாததும் கவலைப்படாததும் ஏன்?
வெடிப்பொருட்களால் என்ன பயன்?
பாறைகளைப் பிளப்பதற்குப் பயன்படுவதைத் தவிர மற்றபடி வெடிப் பொருட்களால் பயன் என்ன? விபத்தும் காற்று மாசும் வெடிப்பொருட்களின் இரு பக்கங்கள் என்பது கண்கூடான உண்மை. இதனை அறிய, உறுதி செய்ய பெரும் முயற்சிகள், ஆதாரங்கள் எதுவும் தேவையில்லை. அப்படியிருந்தும் தடை செய்யப்படாதது ஏன்?
பண்பாட்டைவிட மதம் உயர்வா?
சல்லிக்கட்டை நாம் ஆதரிப்பதில்லை. ஆபத்தோடு விளையாடுவதை வீரம் என்று நாம் எப்போதும் ஏற்பதில்லை. ஓடும் வாகனத்தில் ஏறுவதும், இறங்குவதும் எவ்வளவு பெரிய குற்றமோ அப்படித்தான் இதுவும் என்பதில் மாற்றுக் கருத்து நமக்கில்லை. என்றாலும், ஒரு இனத்தின் பண்பாடாக, வீரத்தின் வெளிப்பாடாக பன்னெடுங்காலமாய் நடத்தப்பட்டு வரும் சல்லிக்கட்டு விளை-யாட்டை தடை செய்யும் நீதிமன்றம், வெடிப்-பொருட்கள் உற்பத்தியையும், விற்பனையையும், வெடிப்பதையும் தடை செய்யாதது ஏன்? மதம் சம்பந்தப்பட்ட தீபாவளி விழா என்பதால் நீதிமன்றம் தயங்குகிறது என்பதுதான் உண்மை! அப்படியாயின் பண்பாட்டைவிட மதம் உயர்ந்ததா?
தீபாவளிக்கும் பட்டாசுக்கும் என்ன தொடர்பு?
தீபாவளி என்றால் தீபம் + ஆவளி = தீபாவளி. ஆவளி என்றால் வரிசை. ஆக, தீபாவளி என்றால் தீபவரிசை என்பதே பொருள்.
சமண மதத்தின் 24ஆம் தீர்த்தங்கரர் உபதேசம் செய்து கொண்டிருக்கையில் விடியற்-காலை இறந்துவிட்டார். அதன் நினைவாய் அகல்விளக்கை வரிசையாய் ஏற்றி வழிபட்டனர். அதுவே தீபாவளி.
ஆனால், சமணப் பண்டிகையை இந்துப் பண்டிகை ஆக்க நரகாசுரன் கதை புனைந்தனர். நரகாசுரன் கதைக்கும் தீப வரிசைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? ஆக, எந்த உண்மையும் இல்லாத, பொய்க் கதையைப் பின்புலமாகக் கொண்டு கொண்டாடப்படும் தீபாவளிக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும்? அரசு தவறு செய்தாலும் நீதிமன்றம் செய்யலாமா?
விளக்கு வரிசைப் பண்டிகைக்கு விளக்கு தானே ஏற்ற வேண்டும்? வெடி வெடிப்பது ஏன்? சிந்திக்க வேண்டாமா? இன்னும் சொல்லப் போனால், வெடிதான் தீபாவளியின் அச்சாணி என்று ஆக்கிவிட்டார்களே!.
மூடநம்பிக்கையில், மூடக் கொண்டாட்டத்-தில் இளைய தலைமுறையினரை என்றென்றும் ஈர்த்து வைத்திருப்பதற்கான கவர்ச்சித் திட்டந்தானே இது?
மதவாதிக்கு சுயநலம்; ஆதிக்க முனைப்பு; சுரண்டல் நோக்கு. ஆனால், நீதிமன்றங்கள் வெடிப்பொருட்களை அனுமதிக்கலாமா? மக்கள் உயிருக்கும், உடலுக்கும் பெரும் தீங்காய் அமையும் வெடிப் பொருட்களை தடை செய்ய காலம் தாழ்த்தலாமா?
கட்டுப்பாடுகள் தீர்வல்ல:-
இந்த இடத்தில்தான் விற்க வேண்டும். இந்த இடத்தில்தான் வெடிக்க வேண்டும். இத்தனை மணிவரைதான் விற்கவோ வெடிக்கவோ வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும், நிபந்தனை-களும் தீர்வுகள் ஆகா. அவை பாதிப்புகளை குறைக்க உதவுமேயன்றி, நீக்க உதவா.
நீதிமன்றங்களின் கட்டாயக் கடமை!
கோடிக்கணக்கான குழந்தைகள், நோயாளி-கள் உடலாலும் மனதாலும் பாதிக்கப்படு-கின்றனர். ஒரே நாளில் இந்தியா முழுவதும் வெடிக்கப்படுவதால் காற்று மண்டலமே மாசடைந்து சுவாசிக்கத் தகுதியற்றதாக்கப்-படுகிறது.
வெடிப்பொருட்களால் காற்று மாசு அடைவதோடு, நில மாசு, நீர் மாசும்  ஏற்படுகிறது. தீவிபத்துகள் ஆயிரக்கணக்கில் நிகழ்ந்து உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்படுகிறது.
எனவே, அரசைவிட நீதிமன்றங்கள்தான் பொதுநல நோக்கில் தாங்களே வழக்கைப் பதிவு செய்து, வெடிப்பொருட்களுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்; விபரீதங்களைத் தடுக்க வேண்டும்.
தலைவர்களின் கடமை:
சமூக ஆர்வலர்கள்; ஆசிரியர்கள், ஊடகங்கள், திரைத்துறையினர் வெடிப்-பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும்.
நடிகர் விஷால் வெடி வெடிக்காதீர்கள் என்று துணிவுடன் வேண்டுகோள் விடுத்துள்ளது பாராட்டத்தக்கது. மற்றவர்களும் அதைப் பின்பற்ற வேண்டும்.
பிள்ளைகள் விளைவுகளை அறியாது, ஆர்வத்தில் ஆவல் கொள்வது இயற்கை. அவர்களுக்கு பெரியவர்கள் பெற்றோர்கள்தான் எடுத்துச் சொல்லி, வழிகாட்டி கட்டுப்படுத்த வேண்டும்.
ஒலி அளவு கட்டுப்பாடு பின்பற்றப்படாமை!
இவ்வளவு அளவு ஒலி எழுப்பும் வெடிப் பொருட்கள்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு அறவே கடைபிடிக்கப்-படுவதில்லை.
யார் வெடிப்பது அதிக சத்தம் எழுப்புகிறது என்று போட்டி போட்டுக் கொண்டு அதிக சத்தமுள்ள வெடியை வெடிக்கின்றனர்.
ஆயிரம் வெடி, அய்யாயிரம் வெடி, பத்தாயிரம் வெடி என்று ஒரே நேரத்தில் ஒரேயிடத்தில் தொடர்ந்து வெடிக்கப்படுவதால் உடலும் உள்ளமும், செவியும் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் அளவுக்கு அதிகமான புகையால் மூச்சுத்திணறலும், நுரையீரல் நோய்களும் ஏற்படுகின்றன.
எல்லா நிகழ்வுகளிலும் வெடிப்பொருட்கள்:
தீபாவளிக்கு தொடங்கிய வெடிக் கலாச்சாரம் இன்றைக்கு அரசியல்வரை நீட்சி பெற்றுள்ளது.
கோயில் விழாக்களில் வெடிவெடிப்பது பெரும் பொருட்செலவில் நடத்தப்படுகிறது.
பிறந்த நாள், திருமணம், ஊர்வலம், இறப்பு, இறுதி ஊர்வலம் என்று எதற்கெடுத்தாலும் வெடி வெடிக்கப்படுகிறது. வெற்றியைக் கொண்டாட வெடிதான் முதன்மை இடம் வகிக்கிறது.
தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட வெடி கார்த்திகை தீபத்திலும் வெடிக்கப்படுகிறது. ஆக, வெடிப்பொருள் பயன்பாடு என்பது ஆடம்பரத்தின், ஆரவாரத்தின் அடையாள-மாகி-விட்டது.
சாலைகளில், பொது இடங்களில், கடைவீதிகளில் முன் அறிவிப்பின்றி திடீர் திடீர் என்று வெடிக்கப்படுகிறது. மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடும் அவலம் நடக்கிறது.
தடை செய்யப்பட்ட இரசாயனக் கலப்பு
தடை செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரைடு, சோடியம் குளோரைடு போன்றவற்றை பயன்படுத்தி வெடிகள் தயாரிப்பதால் கொடிய பாதிப்புகள் விளைகின்றன.
விபத்துகளில் சில:
1. டிசம்பர் 23, 1995 அரியானா மாநிலம், தப்வாலி என்ற ஊரில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 442 பேர் மரணமடைந்தனர். இதில் அதிகம் பள்ளிக் குழந்தைகள் ஆவார்கள்.
2. செப்டம்பர் 15, 2005 பிகாரில் உள்ள சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலை வெடித்து சிதறியதில் 36 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.
3. ஏப்ரல் 16, 1990 பிகார் மாநிலம் பட்னா சென்று கொண்டிருந்த ஓடும் ரெயிலில் பட்டாசு வெடித்து சிதறியதில் 7 பேர் மரணம். 12 பேர் காயம்.
4. ஜூன் 9, 2011 சென்னை பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் செகுசுப் பேருந்தில் பட்டாசு பார்சல்களை கொண்டு சென்றபோது பார்சல்-கள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பிடித்ததால் 31 பேர் மரணமடைந்தனர்.
5. நவம்பர் 20, தலைநகர் டில்லியில் திருமண விழாவில் வெடிக்க வைத்திருந்த பட்டாசுகள் பெட்டிகளில் தீப்பொறி பட்டு பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் மரணமடைந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
6. அண்மையில் சிவகாசி கடைவீதியில் வேனிலிருந்து பட்டாசுகள் இறக்கப்பட்ட போது வெடிகள் வெடித்துச் சிதறி ஸ்கேன் சென்டர் எரிந்து 10 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
அடுத்து கோவை காந்தி பார்க் அ-ய்.ஏ.எஸ். அகாடமியில் வெடிகளால் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம் அடைந்தனர்.
விழுப்புரம் வானூர் அருகே துருவை கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும்போது வெடித்து விபத்து ஏற்பட்டதில் 5 பேர் இறந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
இப்படி ஒவ்வொரு நாளும் இச்செய்திகள் வந்த வண்ணம் உள்ளதால்அரசும் நீதிமன்றமும் உடன் தலையிட்டு வெடிப் பொருட்கள் தயாரிப்பை கட்டாயம் தடைசெய்ய வேண்டும்.