அரசியல்

Tuesday, December 29, 2015

குற்றத்திற்கேற்ற தண்டனையே நீதி!


குற்றத்திற்கேற்ற தண்டனையே நீதி!
வயது வரம்பைக் காட்டி விடுவிப்பது அநீதி!.....................................

18 வயது நிறைந்த சிறார் என்ற காரணத்தைக் கூறி, ஓர் அயோக்கிய, கொடூர கொலைகாரனை மூன்றாண்டு சிறைத் தண்டனையோடு விடுதலை செய்வது என்பது இந்திய நீதித்துறை, இந்தியாவின் சட்டத்துறை இரண்டிற்கும் அவமானம், கேவலம், கீழ்நிலை!

சட்டத்தில் இடம் இல்லை என்பதைப் போன்ற அயோக்கியத் தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. சட்டம் என்பது என்ன வானிலிருந்து வந்ததா-? மனிதர்களாகிய நாம் உருவாக்குவதுதானே! இதில் ஆட்சியாளர்களே குற்றவாளி, நீதிமன்றம் அல்ல.
தேவையென்பதை உருவாக்கிக்கொள்ள வேண்டியதுதானே! சரியில்லை யென்றால் மாற்றிக் கொள்ள வேண்டியது தானே! அதிலென்ன தயக்கம், தாமதம்!

18 வயதுக்குள் உள்ளவன் கொலை செய்தால் தண்டனை இல்லையென்றால், இனி கொலைசெய்ய முயல்கின்றவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவனுக்குக் கூலி கொடுத்து கொலை செய்யச் சொல்வானே! அப்படியொரு நிலை வந்தால்தான் சட்டம் இயற்றுவார்களா?

குற்றத்திற்கும் வயதிற்கும் தொடர்புபடுத்துவது தவறான அணுகுமுறை. குற்றத்தைச் சூழலோடு வேண்டமானல் தொடர்புபடுத்தலாம்! அதற்கேற்ப தண்டனையின் கடுமையை மாற்றலாம். மாறாக வயதோடு தொடர்புப்படுத்துவது தவறு.

எந்த வயதில் செய்தாலும் குற்றம் குற்றம்தான். குற்றம் அறியாமல் செய்யப்படுகிறது என்பது உண்மைக்கு மாறான கருத்து.

5 வயது பையன் ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்ய முடியாது. காமவேட்கை ஏற்பட்ட, அதன் தீர்வாக ‘விந்து’ வெளிப்படுத்தும் தகுதியுள்ளவன்தான் ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்கிறான். அந்த நிலை வந்தவன் வன்புணர்ச்சிக்குரிய தண்டனையை பெற்றேத் தீரவேண்டும். அதில் 18 வயது என்ற அளவுகோல் கண்மூடித்தனமான கணக்கு.

அதேபோல் 5 வயதுடைய பிள்ளை கொலை செய்வதில்லை. கொலை வெறிகொண்டு, அதற்கு ஆயுதமேந்தத் தகுதியுள்ளவன்தான் கொலை செய்கிறான். இதில் 18 வயது என்ற அளவுகோல் சரியல்ல.

அறியா பருவம் என்பதற்கு பொருள் என்ன தெரியுமா? தனக்கு அல்லது பிறருக்கு அச்செயல் கேடு தரும் என்று தெரியாமல் இருக்கும் பருவம்தான்.
ஒரு குழந்தை நெருப்பை, தீயை தொடுகிறது. அதற்கு அது சுடும் என்பது தெரியாது. தண்ணீரில் மூழ்கினால் சாவோம், ஊசி குத்தும், உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடிபடும என்று அறியாத வயதுதான் அறியா பருவமாகும்.

பேருந்தில் நிர்பயா என்ற பெண்ணை முதலில் வன்புணர்ச்சி செய்தவன் அந்த ‘சிறார்’ குற்றவாளிதான், அதன்பின் சிலர் அப்பெண்ணிடம் வன்புணர்ச்சி செய்த பின் மீண்டும் இரண்டாம் முறையாக வன்புணர்ச்சி செய்துவிட்டு ஒரு இரும்புக் கம்பியை எடுத்து அப்பெண்ணின் பிறப்புறுப்பில் நுழைத்து அவள் குடல் பாதிக்கும் அளவிற்கு குடைந்தெடுத்த கடைந்தெடுத்த அயோக்கியனை சிறார் என்று சொல்கிறவன் எவனும் அவனைவிட அயோக்கியனாகத்தான் இருக்க முடியும்!
ஒருவன் எக்குற்றம் செய்கிறானோ அது குற்றம் என்ற தெரிந்து செய்தால் அவன் குற்றவாளியே! அதை அறியும் நிலை 10 வயதுக்குள்ளே வந்துவிடுகிறது.

குற்றம் என்று அறிய முடியாத வயதில் ஒருவன் குற்றமே செய்ய முடியாது. செய்யவும் மாட்டான்.
எனவே, எந்த வயதில் குற்றம் செய்யப்பட்டாலும் தண்டினை கொடுத்தே தீரவேண்டும். தண்டனை காலத்தில் அவன் திருந்த, தன்னை சீர் செய்துகொள்ள ஆலோசனை, கல்வி, பயிற்சி அளிக்கலாம்.

மாறாக, இரண்டுமுறை உடலுறவு கொண்டு, பிறப்புறுப்பில் கம்பியைச் செருகிக் குடைந்த கொடியவனை விடுதலை செய்தால், மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்தக்கொள்வார்கள்.

ஆம். நாடு முழுக்கவுள்ள மக்கள் அந்தக் கொடியவன் மீது வெறிகொண்டுள்ளனர். அவன் அறைக்குள் வாழ்ந்துவிட முடியாது. வெளியில் வந்தால் கும்பலாகச் சேர்ந்து அவனைப் படுகொலை செய்துவிடுவர்.

அவனுக்கெல்லாம் இசட் பிரிவு காவலா தர முடியும்?

அந்தக் கொடியவனை மட்டுமல்ல, இனி வயதைக் காரணம் காட்டி எந்த கொடியவன் விடுதலை செய்யப்பட்டாலும், மக்கள் அவனைத் தண்டிக்கவே செய்வர். கும்பலாக மக்கள் தண்டிக்கும்போது யார் மீது நடவடிக்கை எடுக்க முடியும்?

எனவே, வயது வரம்பை அறவே நீக்கி விட்டு, குற்றம் செய்தவர்கள் எவராயினும் அவர்களுக்கு தண்டனை வழங்குவது ஒன்றே சரியான தீர்வாகும்.

சந்தர்ப்பச் சூழல், மனநல பாதிப்பு போன்றவற்றை வேண்டுமானால் கருத்தில் கொண்டு, தண்டனை அளவை மாற்றலாம்.

மக்கள் சட்டத்தை கையிலெடுத்து தண்டனையை தாங்களே நிறைவேற்ற முற்படுவதற்கு முன், 18 வயது என்ற வரம்பை நீக்கி, குற்றவாளி எவராயினும் அதற்கேற்றத் தண்டனை வழங்கி ஆவன செய்ய வேண்டியது அவசிய அவசர தேவையாகும்.

ஏழைகளிம் நிலத்தை அபகரிப்பதற்கு பலமுறை முயற்சிக்கும் மத்திய அரசு சிறார் குற்றவாளி வயதைக்குறைக்கும் சட்டத்தை திருத்த முயலாதது ஏன்?

No comments:

Post a Comment