அரசியல்

Tuesday, November 24, 2015

திருவண்ணாமலை தீபம் எரிமலை வெடிப்பே!.



சிவபெருமான் மண்ணுக்கும் விண்ணுக்கும் ஜோதியாக நின்றார். அதன் அடையாளமாக கார்த்திகையில் மலையுச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது என்பது பொய். உண்மையில் நிகழ்ந்தது என்ன?

திருவண்ணாமலை இமயமலையை விட பழமையானது. அதன் உச்சியில் எரிமலை வெடித்து வானுயர நெருப்பு எழுந்தது எரிமலை வெடிப்பு என்பதை அறியாத மக்கள் கடவுள் நெருப்பாக எழுந்துள்ளதாக எண்ணி வணங்குனர்.

10 ஆண்டுகளுக்கு முன் இச்செய்தியை எழுதி நிலவியல் ஆய்வாளர்கள் சோதனை செய்தால் இதை அறியலாம் என்று கூறினேன். சோதனை முடிவில் எரிமலை வெடிப்பு என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மலையில் உள்ள பாறைகள் நெருப்பு குழம்பு உருகியதால் உருவானது என்று அறிவித்தனர்.

(ஆய்வுச் செய்தி தினமணி 01-08-2012 பக்கம் 7)

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

Monday, November 23, 2015

நீர் மேலாண்மையை நிறுத்திவிட்டு சாராயத்தை ஓடவிடுவது சரியா?

கல்லணையைப் பார்த்தே கற்றுக்கொண்டேன் பிரிட்டிஸ் பொறியாளர் ஒப்புதல்!

- மஞ்சை வசந்தன்
கடலா, ஏரியா என வியக்கும் அளவுக்கு பெரிய ஏரி, வீராணம் ஏரி! சென்னை மாநகருக்கே இன்று தண்ணீர் தரும் ஏரி! அப்படியொரு ஏரியை நிர்மாணித்தவர் நம் தமிழ் மன்னர் _ முதலாம் பராந்தக சோழன் என்றாலும், அதை வற்றவிடாமல் வளம் காப்பது ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயர் உழைப்புதான்.
தரிசாய்க் கிடக்கும் நிலங்கள் ஒருபுறம், ஒதுங்க ஆற்று நீர் வீணாய் கடலில் கலக்கும் நிலை. இப்படியிருந்த தென்னிந்தியாவை அணைக்கட்டுகளால் முறைப்படுத்தி வளம் ஆக்கியவர் ஆர்தர் காட்டன். சுமார் நூற்றி அய்ம்பது வருடங்களுக்கு முன்பே இந்தியாவின் அனைத்து நதிகளையும் இணைத்து ஒரு சொட்டு நன்னீர் கூட வீணாகாமல் விவசாயம் செய்ய வேண்டும் என திட்டமிட்டு முயன்றவர் ஆர்தர். அதற்காக அன்றைய ஆங்கில அரசிடம் போராடி, வாதாடி சாதித்தவர். இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தையாக இவர் கருதப்படுகிறார்.
மிலிட்டரி மாணவராக பிரிட்டிஷ் இந்தியாவுக்கு 15 வயதில் வந்தவர் ஆர்தர். பிறவிக் கலைஞன் என்பதுபோல, அப்படியொரு பிறவிப் பொறியாளர் இவர். பொறியியல் துறையிலேயே படித்து, படிப்படியாக உயர்ந்து. சென்னை மாகாண பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் ஆனவர். தமிழகம் மட்டுமின்றி அன்றைய ஆந்திர மாநிலமும் அணைக்-கட்டுகளால் வளம் பெறச்செய்தவர். ஆர்தர் காட்டன் நிர்மாணித்த அணைகளில் திருச்சி முக்கொம்பில் உள்ள மேலணையும், தஞ்சை  அரியலூர்  கடலூர் ஆகிய 3 மாவட்டங்களின் எல்லையான அணைக்கரையில் உள்ள கீழணையும் முதன்மையானவை, முக்கியமானவை.
கர்நாடக மாநிலம் குடகிலிருந்து தமிழகம் நோக்கிப் பாயும் காவிரி ஆற்றிலிருந்து பிரியும் கிளை நதிதான்  கொள்ளிடம் ஆறு. திருச்சி முக்கொம்பில் பிரியும் இந்த நதி, தாய் நதியான காவிரியை விடவும் அதிகப் பள்ளமான பிரதேசங்களில் பாய்கிறது. எனவே, நீர் இதன் வழியே வெகுவேகமாகப் பயணித்து கடலில் வீணாகக் கலந்துவிடும். இதனால் காவிரியின் நீர் இருப்பே கூட வெகுவாகக் குறைந்துவிடும். இதைத் தடுத்து, நீரைத் தேக்குவதற்காக சர் ஆர்தர் காட்டன் 1835_1836ஆம் ஆண்டுகளில் கொள்ளிடம் ஆற்றில் மேலணையைக் கட்டினார். இதன் மூலம் காவிரி நீர் சேமிக்கப்பட்டு, தஞ்சை, நாகப்பட்டினம் டெல்டா பகுதிகளுக்கு பாசன நீரைப் பகிர்ந்தளிக்க முடிந்தது. மேலும் காவிரியில் வெள்ளம் கரை புரண்டோடிய காலங்களில் கல்லணைக்கு பாதிப்பில்லாமல் இருக்க மேலணை வழியாக உபரி நீர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வழிசெய்யப்பட்டது.
இந்த உபரி நீரும் வீணாகக் கடலில் கலக்கக் கூடாது என நினைத்தார் ஆர்தர். இந்த நீரைத் தேக்கி வைத்தால் கடலூர். தஞ்சை, நாகப்பட்டினம் பகுதி நிலங்களின் பாசனத்திற்கு பயன்படுத்தலாம் என்ற நோக்கில் அவர் கட்டியதுதான் அணைக்கரையில் உள்ள கீழணை. தனது அணைக் கட்டுத் திட்டங்களை முடிந்தவரை சிக்கனமாகவும் தொலைநோக்குப் பார்வையோடும் செய்து முடிப்பதில் வல்லவர் ஆர்தர். இதனால்தான் அன்றைய நலிந்த பொருளாதாரத்தைக் கொண்டே ஆங்கில அரசின் அனுமதியுடன் இத்தனை அணைகளை அவர்கட்டினார்.
கீழணையின் அமைப்பைப் பார்த்தால் ஆர்தரின் பொறியியல் வல்லமையைப் புரிந்து கொள்ளலாம். மூன்று மாவட்டங்களின் தாகத்தையும் பசியையும் தீர்க்கும் இந்தக் கீழணை மூலம் மொத்தம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 304 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
கொள்ளிடம் ஆறு ஓரிடத்தில் மட்டும் இரண்டாகப் பிரிந்து 2கி.மீ பயணத்துக்குப்பின் மீண்டும் ஒன்று சேருகிறது. இந்த இரு நதிகளுக்கிடையே தீவு போல் அமைந்திருந்த இடம்தான் அணைக்கரை. நதி பிரிந்து ஒன்று சேரும் இடத்தில் மட்டும் சின்ன அணைக்கட்டு கட்டி நீரைத் தேக்கிவிட்டால், தீவாக இருக்கும் பரப்பு முழுவதும் நீரை நிறுத்தி வைக்க முடியும் எனக் கணக்கிட்டார் ஆர்தர். இதன் விளைவுதான் கீழணை. கொள்ளிடம் ஆறு அதிகப்பட்சமாக 1500 மீட்டர் அகலம் கொண்டது. ஆனால், கீழணை கட்டப்-பட்டிருக்கும் பகுதி மொத்தமே 400 மீட்டர்தான். தன் பொறியியல் திறமை முழுவதையும் தென்னிந்திய மக்களுக்காக செலவிட்டு, தன் வாழ்வை அர்ப்பணித்து  இதைச் சாதித்தார்.
1850_1851 காலகட்டத்தில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் கட்டப்பட்ட அணைக்-கட்டும் சர் ஆர்தர் காட்டன் கட்டியதாகவே கருதப்படுகிறது. அந்த அணையில்லையென்றால் ஏராளமான நீர் வீணாகும். அந்த அணையின் மூலம் சிதம்பரம் வட்டம் வளம் பெற்றது. காவிரி, கொள்ளிடம் மட்டுமல்லாது வெண்ணாறு, வெட்டாறு உள்ளிட்ட ஆறுகளின் தண்ணீரைப் பாசனத்துக்குப் பயனுள்ளதாக மாற்ற பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொடுத்த ஆர்தர் காட்டன், மேட்டூர் அணை கட்டுவதற்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளிலும் அணைகளைக் கட்டி பாசனத்தை ஒழுங்கு செய்திருக்கிறார்.
ஆர்தர் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களைக் கையாண்டு அங்கே மாபெரும் அணைக்கட்டை எழுப்பினார். இந்தியாவின் மிக முக்கிய நீராதாரமாக கோதாவரியை மாற்றிக் காட்டினார். யாராலும் தடுக்க முடியாத காட்டாற்றுப் பெருவெள்ளத்தைத் தடுக்கும் தொழில்நுட்பத்தை ஆர்தர் காட்டன் பெற்றதை அவரே கூறுகிறார் அந்தப் பெருமை என்னுடையதல்ல.... தமிழர்களின் முப்பாட்டனுடையது என ஆர்தரே விளக்கம் தந்துவிட்டார். ஆழம் காண முடியாத மணற்படுகையில் அடித்தளம் அமைப்பது எப்படி என்பதை கல்லணையைப் பார்த்துத்-தான் நான் கற்றுக்கொண்டேன்! என மனம் திறந்து ஒப்புக்கொண்ட ஆர்தர் காட்டன். நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத அந்தக் காலத்திலேயே தமிழர்களின் அணை கட்டும் திறனும், தொழில் நுட்ப அறிவும், பாசன மேலாண்மையும் சிறந்து விளங்கியதை உலகறியச் செய்தார் அதனால்தான் பெருமைமிகு கல்லணைக்கு கிராண்ட் அணைகட் என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
இந்திய நதிகள் அனைத்தையும் இணைத்-தால் ஒடிஷாவில் நிலவும் வறட்சியைப் போக்கலாம் எனும் விண்ணப்பத்தை ஆர்தர் 1858ஆம் ஆண்டே இங்கிலாந்து அரசிடம் கொடுத்தார். ஆனால், அதற்கு அவருக்கு அவகாசம் போதவில்லை. 1860 ஆம் ஆண்டே பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பிவிட்டார். தனது 96 வயது வரை வாழ்ந்த அவர், 1899ஆம் வருடம் இறந்துவிட்டார்.
வறண்ட நிலங்களையெல்லாம் நதிநீரால் வளம் செய்ததற்காக ஆர்தர் காட்டனை ஆந்திர மக்கள் இன்றும் தங்கள் குலதெய்வமாகப் பார்க்கிறார்கள். அங்கு அவருக்கு கிராமங்கள் தோறும் சிலை வைக்கப்பட்டுள்ளன. கோதாவரி மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆர்தர் காட்டன் சிலைகள் உள்ளன. இன்னும் தங்கள் பிள்ளைகளுக்கு ஆர்தர் காட்டனின் பெயரை வைக்கிறார்கள் அப்பகுதி மக்கள். ராஜ முந்திரியில் அவருக்கு அருங்காட்சியகமும் வைத்திருக்கிறார்கள்.
தமிழர்கள் இருசிலைகள் நிறுவி அவருக்கு மரியாதை செலுத்தினர். ஆனால், அவருக்குச் செலுத்தும் உண்மையான மரியாதை தமிழத்தில் ஒரு சொட்டு நீர்க்கூட கடலில் சென்று வீணாகாதவாறு அணைகள், ஏரிகள் கட்டி நீரைத் தேக்குவது ஒன்றே. சாராயத்தை ஆறாக ஓடவிடும் அரசு, அதை மூடிவிட்டு ஒடிவரும் நீரை ஒழுங்குப்படுத்துவதில் முழுகவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் மக்களுக்கு அதைவிடப் பெரிய துரோகம் வேறு எதுவும் இல்லை! நீர் மேலாண்மை செய்யாத அரசை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

Sunday, November 15, 2015

மெட்ராஸ்-ஐ பார்த்ததும் தொற்றுமா?


பொதுவாக மழைக்காலங்களில் மெட்ராஸ்_ஐ என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு கண்நோய் பரவலாகத் தொற்ற ஆரம்பிக்கும். அப்போது கண் உறுத்தல் அதிகம் இருக்கும், கண் கடுமையாகச் சிவந்திருக்கும்.

இந்நோய் வந்தவர்கள் கண்ணாடி போட்டுக் கொள்வார்கள். நோய் வந்தவர்கள் கண்ணைப் பார்த்தால் பார்த்தவருக்குத் தொற்றும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், இது தவறான எண்ணமாகும். கண்ணைத் தூரத்திலிருந்து பார்ப்பதால் இந்நோய் தொற்றுவதில்லை.
கண்ணோய் உள்ளவர் அடிக்கடி கையாலோ, விரலாலோ, கைக்குட்டையாலோ கண்ணைத் துடைப்பர். அவ்வாறு துடைத்தவுடன் அந்த விரலால் வேறு பொருளைத் தொடுவர். அப்போது நோய்க் கிருமி அதன் வழி அப்பொருளில் தொற்றும் (ஒட்டும்). அதை வேறொருவர் தொடும்போது அவர் விரலில் அக்கிருமி தொற்றி, அவர் தனது கண்ணைத் துடைக்கும்போது அவரது கண்ணைக் கிருமிகள் தாக்குகின்றன.
குறிப்பாகப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது, இந்நோய் எளிதில் தொற்றம். காரணம், பேருந்துக் கம்பிகளை மாற்றி மாற்றி நோய் உள்ளவரும் இல்லாதவரும் தொடுவர். இதன் மூலம் கண்ணோய் எளிதில் தொற்றும்.
ஆகவே, இக்கண்ணோய் பரவும் காலத்தில் நமது கைகளைத் தூய்மையாய் வைத்துக் கொள்வதும், கண்ணைத் தூய்மையாய் வைத்துக் கொள்வதும் இந்நோய் பரவாமல் தடுக்கும். மற்றபடிப் பார்ப்பதால் இந்நோய் தொற்றுவதில்லை. தொற்றுவதாக எண்ணுவது தவறு ஆகும்.

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
___

கியாஸ் சிலிண்டர் விபத்து... ரூ. 50 லட்சம் வரை இழப்பீடு உண்டு!


கியாஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்து விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினருக்கு இன்ஷூரன்ஸ் மூலமாக நிவாரணம் பெற முடியும்.
ஒருவர் எரிவாயு இணைப்பைப் பெற்றாலே, இந்த இன்ஷுரன்ஸ் தானாகவே அவருக்கு வந்துவிடும். கியாஸ் சிலிண்டர் வெடித்து உயிர் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டால், ரூ. 50 லட்சம் வரை இதன் மூலமாக இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம். இழப்பீடு சேதத்தின் அளவைப் பொறுத்தது. அதிகப்பட்ச இழப்பீடு ரூபாய் 50 லட்சம்.
இழப்பீடு பெறுவது எப்படி?
விபத்து நடந்தால், உடனடியாக கியாஸ் ஏஜென்சியிடம் எழுத்துப்பூர்வ புகார் கொடுக்க வேண்டும். இன்ஷூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் குழு வந்து ஆய்வு செய்யும்வரை விபத்துக்கான தடயங்களை அப்படியே வைத்திருக்க வேண்டும்.
போலீஸ் ஸ்டேஷனில் எஃப்.அய்.ஆர் பதிவு செய்ய வேண்டும். உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தால், மரணச் சான்றிதழ், போஸ்ட்மார்ட்டம் அறிக்கை ஆகியவற்றை பெற வேண்டும். காயங்களுக்குச் சிகிச்சை எடுத்திருந்தால், மருத்துவ மற்றும் மருந்து ரசீதுகளைப் பத்திரப்படுத்த வேண்டும். உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனமே ஒரு சர்வேயரை நியமித்து சேத மதிப்பைக் கணக்கிடும்.
இழப்பீடு பெற நாம் பயன்படுத்தும் அடுப்பு, கியாஸ் டியூப், லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் அய்.எஸ்.அய் தரச்சான்று பெற்றவையாக இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் உரிய கட்டணம் செலுத்தி, தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். சமையல் அறை அல்லாத இடங்களில் கியாஸ் சிலிண்டரைப் பயன்படுத்திருக்கக் கூடாது. உங்கள் பெயரில் வாங்கிய கியாஸ் சிலிண்டர் மட்டுமே பயன்படுத்திருக்க வேண்டும். இவை சரியாக இருப்பின் இழப்பீடு நிச்சயம் கிடைக்கும்.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

பீகாரைப் பின்பற்றுங்கள்!


மக்கள் நலக்கூட்டணிக்கும் தே.மு.தி.க.விற்கும் எமது கனிவான வேண்டுகோள்! தனிப்பட்ட வெறுப்புகளைத் தள்ளுங்கள்!
தமிழகத்தின் நலனைக் கொள்ளுங்கள்!
- மஞ்சை.வசந்தன்
ஊழல் கேடானது! மதவெறி ஆபத்தானது! ஊழலை வெறுத்து மதவெறிக்குத் துணை நிற்கலாமா? முதலில் ஒழிக்கப்பட வேண்டியது மஅதவெறி பின்னர் களையப்பட வேண்டியது ஊழல்!
ஊழலற்ற நிதிஷ்குமார் ஊழல் காரணத்திற்காக லாலுவை ஒதுக்கியிருந்தால் மதவெறிக் கும்பலை வீழ்த்தியிருக்க முடியுமா?
தமிழக அரசியல் கட்சிகள் குறிப்பாக கம்யூனிஸ்ட்கள் இதைச் சிந்திக்க வேண்டும்.
ஊழல் காரணத்திற்காக தி.மு.க.வை ஒதுக்கும் கம்யூனிஸ்டுகள் ஊழல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க முயன்றது ஏன்?
இரட்டை அளவுகள் இடதுசாரிகளுக்குச் சரியா? நியாயமா?
பி.ஜே.பி.க்கும் அ.தி.மு.க.விற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று பி.ஜே.பி. அறிவித்துவிட்டது. இதை அ.தி.மு.க. மறுக்கவில்லை.
ஆக, தமிழகத்தில் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது அ.தி.மு.க.வும் பி.ஜே.பி.யும்.
தி.மு.க. ஊழல் குற்றச்சாட்டுக்காக ஒதுக்கப்பட்டு, ஊழலற்ற கூட்டணி என்று அமைந்தால் வாக்குகள் சிதறி, அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவே வழிசெய்யும்.
2016 தேர்தலை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க. தவிர்த்த வேறு அணி வர வாய்ப்பே இல்லை. எனவே, இத்தேர்தலில் தி.மு.க தலைமையில் மதச்சார்பற்ற அணி அமைத்து போட்டியிடுவதே தமிழ்நாட்டுக்கு நல்லது.
அதன்பின் 2021அய் இலக்கு வைத்து புதிய முயற்சிகளை மேற்கொள்வதே புத்திசாலித்தனமாகும்.
தத்துவார்த்தம் யதார்த்தத்தை ஒட்டியதாக இல்லையெனில் தோல்வியே மிஞ்சும். கற்பனையில் களம் காணக் கூடாது! சிந்திப்பீர்! முடிவெடுப்பீர்!
தமிழ்நாடு டில்லி அல்ல. கெஜ்ரிவால் சாதனை இங்கு சாத்தியப்படாது. டில்லி படித்த பலதரப்பு மக்கள் வாழும் பகுதி. அங்கு உடனடிக் காரணங்கள் உடனடி விளைவுகளை உருவாக்கும். ஆனால், தமிழகம் நிலையான வாக்கு வங்கிகளை உடைய ஒரு மாநிலம். இங்கு ஒட்டுமொத்த மாறுதல் உடனே நிகழாது.
கொள்கைவாதிகளை, நல்லவர்களை அடையாளம் கண்டு வாக்களிப்போர் குறைவு.
எழுத்தாளர் ஞானி, கம்யூனிஸ்ட் மகேந்திரன் தேர்தலில் நின்றார்களே, அவர்களைவிட தகுதியான ஆட்கள் உண்டா? அவர்களுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன.
சகாயம் முன்னிறுத்தப்பட்டாலும் அதுதான் நடக்கும். நடுநிலை வாக்குகள் கிடைக்கும். ஆனால், வெற்றிக்கு உதவாது, விரயம்தான் ஏற்படும்.
எனவே, வாக்கு வங்கியை கணக்கிட்டு அணி சேர்ந்து வீழ்த்த வேண்டிய அ.தி.மு.க., பி.ஜே.பி.யை வீழ்த்த வேண்டும். தி.மு.க. குறையுள்ள கட்சி. ஆனால், ஆபத்தான கட்சியல்ல! ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள்!
திருந்தி வருந்தும் திமுகவிற்கு மீண்டும் வாய்ப்பளித்தால் நேர்மையான நல்லாட்சி கிடைக்க நிறைய வாய்ப்புண்டு!

___

தீ மிதிப்பது கடவுள் சக்தியாலா? தீ மிதிக்கும்போது சுடாமல் இருப்பது ஏன்?

தீ மிதிப்பது கடவுள் சக்தியாலா?
தீ மிதிக்கும்போது சுடாமல் இருப்பது ஏன்?
ஆணிச் செருப்பு குத்தாதது ஏன்?
இதோ அதற்கான காரணங்கள்!
கீழே கிடக்கும் ஒரு சிறு நெருப்பை மிதித்தால்கூட சுரீர் என்று சுடுகிறது. அப்படி இருக்க இறைவன் அருள் இல்லாமல் எப்படி தீ மிதிக்க முடியும்? எனவே தீ மிதிப்பது இறைவன் அருளால்தான் என்று பலர் நினைக்கிறார்கள். நம்புகிறார்கள். ஆனால், இந்த நம்பிக்கை முற்றிலும் தவறு.
கோயிலில் தீ மிதிக்கின்றவர்களை அழைத்து ஒரே ஒரு நெருப்புத் துண்டை சாம்பல் நீக்காமல் தரையில் போட்டு மிதிக்கச் சொன்னால் எப்படிப்பட்ட பக்தனாய் இருந்தாலும் சுட்டுவிடும்.
பின் ஏன் தீக்குழியில் இறங்கி நடக்கும்போது சுடுவதில்லை?
தீக்குழியில் தீ சுடாமல் இருப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. 1. நெருப்பு அதிக அளவில் சமமாகப் பரப்பப்பட்டிருக்க வேண்டும். 2. நெருப்பில் நீறுபூத்த சாம்பல் இருக்கக்கூடாது. 3. கால் ஒரே இடத்தில் நிற்காமல் விரைந்து மாறி மாறி எடுத்து வைக்கப்பட வேண்டும் (விரைந்து நடக்க வேண்டும்). இந்த மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு மட்டுமே தீ மிதிக்க முடியும்.
சாம்பல் நீக்கப்படாத நெருப்பில் யாரும் தீ மிதிக்க முடியாது. சுடுசாம்பல் பிசின்போல காலில் ஒட்டி வெந்துவிடும். அதனால்தான் முறத்தால் அல்லது வேப்பிலையால் விசிறி சாம்பலை நீக்குவார்கள்.
மேடு பள்ளமான நெருப்பில் தீ மிதிக்க முடியாது. அதனால்தான் அடித்து நொறுக்கிச் சமப்படுத்துகிறார்கள்.
ஒரே இடத்தில் நின்று தீ மிதிக்க முடியாது. அதனால்தான் விரைந்து ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.
உள்ளங்கையில் ஒரு நெருப்புத் துண்டைப் போட்டு இரண்டு உள்ளங்கைக்கும் அதை விரைந்த மாற்றிக் கொண்டேயிருந்தால் சுடாது. ஆனால், ஒரே உள்ளங்கையில் சற்று நேரம் நெருப்பை வைத்திருந்தால் சுட்டுவிடும்.
அடுப்பில் சிதறி விழும் தணல் நெருப்பைப் பெண்கள் விரலால் சட்டென்று எடுத்து மீண்டும் அடுப்பில் போடுவார்கள். ஆனால், சாம்பல் பூத்த நெருப்பை தொடமாட்டார்கள். தொட்டால் சுடுவத மட்டுமல்ல; கொப்பளித்து விடும். சுடுசாம்பல் பசை போல் ஒட்டிக் கொள்வதே அதற்குக் காரணம்.
ஆக, இக்காரணங்களால் தீ மிதிக்கும் போது சுடுவதில்லையே தவிர மற்றபடி இறைவன் அருளால் அல்ல. ஒரே இடத்தில் நின்று எந்த பக்தனாலும் தீ மிதிக்க முடியாது.
பின் எப்படி அக்கினிச் சட்டி கையில் ஏந்துகிறார்கள்? அது ஏன் சுடுவதில்லை?
அக்கினிச் சட்டி ஏந்தும் எந்தவொரு பக்தனும் வெறுங்கையில் நெருப்பை ஏந்த முடியாது. சட்டியின் அடியில் தடவப்படுகின்ற சாறு மற்றும் வேப்பிலைதான் சுடாமல் இருக்கக் காரணம்.
இறைவன் அருள் என்று எவனாவது கூறினால் அவன் கையில் ஒரு கரண்டி தணல் நெருப்பை அள்ளி வையுங்கள். அப்போது புரியும் சுடுகிறதா என்று!
ஆணிச் செருப்பு காலில் குத்தாததற்குக் காரணம் ஆணிகள் அதிக அளவிலும் கூர்முனை சமமாக இருப்பதும்தான். ஒரே ஒரு ஆணியின் கூர்முனை நீட்டிக்கொண்டிருந்தால் காலில் ஏறிவிடும். கூர்முனை சமமாக இருப்பதால்தான் குத்துவதில்லை. எந்த பக்தனாவது நிற்க முடியுமா? ஒரே ஒரு ஆணி நீட்டிக்கொண்டு நிற்கும்போது உடலின் எடை முழுவதும் அதன்மேல் வர ஆணி ஏறிவிடும். அதிக ஆணிகள் சமமாக இருந்தால் எந்த ஒரு ஆணியும் காலில் ஏறாது. காரணம் எடை பரவலாக்கப்படுகிறது.
ஆக, இவையெல்லாம் கடவுள் சக்தியால் அல்ல. அறிவியல் காரணங்களால்தான். பக்தியினால் அல்ல; புத்தியினால்தான்.

வாயில் அடைகாக்கும் மீன்.................


கேட்பிஷ் எனும் ஒருவகை மீன் இனம் உள்ளது. இந்த இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் பெண்மீன் முட்டையிடுகிறது. ஆண் மீன்கள், முட்டைகளை வாயிலேயே அடைகாத்து குஞ்சு பொரிக்க வைக்கிறது.
குஞ்சு வெளிப்பட்ட 2வாரம் வரை மீன் குஞ்சுகள் தந்தையின் வாய்க்குள்ளேயே பத்திரமாக இருக்கும். அதிகபட்சம் 50 முட்டைகள் வரை வாயில் அடைகாக்கிறது. அடைகாக்கும் இந்தக் காலத்தில் சுமார் 6 வாரம் வரை ஆண் மீன்கள் உணவு உண்ணாமல் இருப்பது அதிசயமாகும்

கீதையும் எனது கேள்வியும்.......(5)


 கொலை செய்ய அஞ்சாதீர்!

 கூறுகிறது பகவத் கீதை!

 “ஆன்மா அழிவில்லாதது. எனவே, யாரைக் கொலை செய்வது பற்றியும் அஞ்சவேண்டாம்!”
(பகவத்கீதை அத்தியாயம் 2, சுலோகம் 30)

 இப்படி கொலைவெறியைத் தூண்டும் பகவத்கீதை ஒருபுனித நூலா?
இதைப்படித்துவிட்டுத்தான் கோட்சே காந்தியைக் கொன்றான்.

 கொலை வெறியைத் தூண்டும் பகவத்கீதையைத் தடைசெய்ய வேண்டாமா?
மாறாக இதை மாணவர்களுக்குப் பாடமாகச் சொல்லித்தர வேண்டும் என்பது சரியா? சிந்திப்பீர்!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
படியுங்கள்! சிந்தியுங்கள்! மற்றவருக்கும் பகிருங்கள்!

கீதையும் எனது கேள்வியும்.......(4)



 கொலை செய்யப்படுகிறவன் மகிழ்ச்சியடைய வேண்டுமாம்!
பகவத்கீதை சொல்கிறது!

 எப்படி ஒருவன் நைந்து போன துணியைத் தள்ளிவிட்டு புதுத்துணியை மகிழ்வுடன் எடுத்துக் கொள்வானோ, அப்படி பழைய உடல் போல் புதிய உடல் கிடைப்பதை எண்ணி மகிழவேண்டும். புதிய உடல் கிடைக்க இந்த உடல் கொலை செய்யப்படுவது தானே காரணம். எனவே, கொலை செய்யப்படும் போது மகிழ்ச்சியடைய வேண்டும்.
(பகவத்கீதை – அத்தியாயம் 2, சுலோகம் 22)

 ஒரு தகப்பனை நம்பி குடும்பம் உள்ளது. அத்தகப்பனை ஒருவன் கொலை செய்தால் அக்குடும்பமே ஆதரவற்று வருவாய் அற்றுப்போகும்.
உண்மைநிலை இது. ஆனால், கொலை செய்யப்பட்டால் மகிழ வேண்டும் என்கிறது கீதை! இதுதான் ஒரு புனித நூலா? பயனுள்ள நூலா?

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

 படியுங்கள்! மற்றவருக்கும் பகிருங்கள்!

Friday, November 6, 2015

தீபாவளி கொண்டாடுவோரே சிந்திப்பீர் தீபாவளி கொண்டாடுவது சரியல்ல


தீபாவளி இந்து பண்டிகை அல்ல

தீபாவளி கொண்டாடுவோரே சிந்திப்பீர்

தீபாவளி கொண்டாடுவது சரியல்ல


கிருபாநந்தவாரியாரே சொன்னது


.......சமண சமயப் பண்டிகையே தீபாவளி...........

தீபாவளி சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசித் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது.

வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர். வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார்.

உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டுஅவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தனர். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவளி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடபடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.

ஆனால் பொருத்தமற்ற புராணக்கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள், திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று.

(கல்வெட்டராய்ச்சி அறிஞர் “மயிலை சீனி வேங்கடசாமி” அவர்கள் எழுதிய “சமணமும் தமிழும்” என்ற நூலில், பக்கம் 79 – 80)



தீபாவளி எனற் பெயர் சமண பண்டிகைக்கு மட்டுமே பொருந்தும்

நரகாசுரன் கதைக்கு பொருந்தாது. எனவே சமண பண்டிகையை

இந்து பண்டிகையாக ஆக்கிக்கொண்ட மோசடி இதில் வெளிப்படுகிறது. இதை வாரியாரே கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

· .........அசுரர் கொலைக்கு விழாவா?...........

தீபாவளியின் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரே ஆவார்கள். பெரும்பாலோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சம்கரித்தார். அந்த அரக்கனை அவர் அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள். நரகாசுரனை கொன்றக் காரணத்தினால் கொண்டாடப்படுவது தீபாவளி என்பது பிழை. ஓர் அசுரனைக் கொன்றதற்காக ஒரு கொண்டாட்டம் இருக்கமுடியாது.

அப்படியானால் இராவணன், இரணியன், இடும்பன் மகன் சலந்தரன், அந்தகன் முதலிய அரக்கர்களைக் கொன்றதற்கும் கொண்டாட்டம் இருக்க வேண்டும். (ஆனால் அவ்வாறு இல்லையே) நரகாசுரனைக் கொன்றதற்கும், தீபாவளிக்கும் தொடர்பு இல்லை என உணர்க. நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று.

(“திருமுருக கிருபானாந்த வாரியார்” சுவாமிகள் எழுதிய “வாரியார் விரிவுரை விருந்து” என்ற நூலில், பக்கம் 95)

எனவே தீபாவளி இந்து பண்டிகை அல்ல. என்பதையும் அது தமிழர்க்குரிய பண்டிகையும் அல்ல. இப்பொழுது கொண்டாட படுவது பட்டாசு வெடித்து மாசுபடுத்துவது ஒரே நாளில் பல பலகாரங்களை தின்று உடலை கெடுத்துக்கொள்வது அறிவுக்கும் உகந்தது அல்ல. என்பதை உணர்ந்து மக்கள் இப்பண்டிகையை கை விடவேண்டும். அது நாட்டுக்கும் வீட்டுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நல்லது.


ஒரே நாளில் இந்தியா முழுக்க புகையாக்கி காற்றை மாசுபடுத்துவது அதனால் குழந்தை முதல் வயோதிகர் வரை அனைவரின் உடல் நலத்தைக் கெடுப்பது. சமுதாய துரோகச் செயல் என்பதை கருத்தில் கொண்டு இவற்றைக் கைவிடவேண்டும்.

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

படியுங்கள்

முத்து எப்படி உருவாகிறது?

மழைத்துளி சிப்பியில் விழுந்து முத்து வருவதில்லை
பின் முத்து எப்படி உருவாகிறது?
உண்மை விவரம் இதோ :




 சிப்பிக்குள் மழைநீர் வீழ்ந்து, அதுதான் பின்னர் முத்தாக மாறுகிறது என்ற கருத்து பரப்பப்படுகிறது. கண்ணதாசன்கூட தனது கவிதை ஒன்றில் இப்படித்தான் எழுதினார். ஆனால், இக்கருத்து முற்றிலும் தவறானதாகும்.
முத்துச் சிப்பிகள் கடலின் அடி ஆழத்தில் வாழக் கூடியவை. முத்துக் குளிக்கின்றவர்கள் கூட கடலின் அடியில் மூழ்கிச் சென்றுதான் முத்து எடுக்கின்றனர். எனவே, முத்துச் சிப்பிக்குள் மழைத்துளி வீழ்வதற்கான வாய்ப்பு இல்லை. அப்படியிருக்க மழைத்துளிதான முத்தாக மாறுகிறது என்பது மடமை.

 முத்துச்சிப்பி கடலடியில் வாழ்வதால், அதனுள் செல்லும் மணல் ஒன்றின்மீது, முத்துச் சிப்பியுள் சுரக்கும் சுரப்புநீர் படிந்து படிந்து முத்தாக மாறுகிறது.
மணலை ஆதாரமாகக் கொண்டு சுரப்புநீர் படிந்தே முத்தாக உருவாகிறது. மாறாக மழைத் துளியால் அல்ல.

திசைகாட்டி தாவரம் தெரியும்?.


தென் ஆப்பிரிக்க பாலைவனங்களில் காணப்படும் ஒரு தாவர இனம் பாட்டிபோடியம் நாம குவானம் (Pachypodium namaguanam). இந்த செடியில் நீளமான ஒரு கிளை மட்டுமே காணப்படுகிறது. மேலும் தண்டு எப்போதும் வடக்கு திசை நோக்கியே சாய்ந்து நிற்க்கும் இயல்புடையது. பாலைவனங்களில் பயணம் மேற்கொள்பவர்கள் இந்த செடியை திசைகாட்டும் கருவியாக பயன்படுத்துகின்றனர்.

’டாலரின்’ கதை


அமெரிக்க நாயணம் டாலர் என அழைக்கப்படுகிறது. இந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

 16ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பொஹிமியாவில் உள்ள செயிண்ட் ஜோகிம்ஸ் தால் என்ற இடத்தில் வெள்ளி நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன. இது ‘ஜோகிம்ஸ் தாலர்’ என அழைக்கப்பட்டது.

 நாளடைவில் இந்த பெயரே சுருங்கி ‘தாலர்’ என்று அமெரிக்கர்கள் அழைத்தனர். இதுவே பிற்காலத்தில் டாலர் என மாறி இன்னும் புழக்கத்தில் இருந்து வருகிறது.

வேப்பமரத்தில் பால் வடிவது அம்மன் சக்தியாலா?..


சில வேப்பமரங்களில் திடீரென்று பால்போன்ற நீர் சுரக்கும். இதை மாரியாத்தாள் மகிமை என்று கூறி சூடம் கொளுத்தி வழிபடுகின்றனர். இது அறியாமையின் அடையாளம். இதற்கு எந்தவிதத் தெய்வீகக் காரணமும் இல்லை.

 பொதுவாக (இயல்பாக) வேப்பமரத்தில் உள்ளமாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும். வேப்பமரத்திற்கு அருகில் நீர்ப்பகுதி அதிகம் இருப்பின், மரத்திலுள்ள தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப்பட்டையின் அடியிலுள்ள திசு (புளோயம்) பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்து பட்டை வழியே (அதைப் பிளந்து கொண்டு) இனிப்புப் பால் போன்று வடியும். இதைதான் பால்வடிகிறது என்கின்றனர்.

 மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் வடிவது நின்று போகும்.

இப்படி பால்வடிகின்ற மரங்கள், நீர்நிலைகளின் அருகில்தான் இருக்கும் என்பது இந்த உண்மையை அய்யத்திற்கு இடமின்றி உணர்த்துகிறது. எல்லா வேப்ப மரங்களிலும் பால் வடிவதில்லை யென்பதும், வறண்ட நிலத்திலுள்ள வேப்ப மரத்தில் பால் வடிவதில்லை யென்பதும் இவ்வுண்மையைத் தெளிவாய் உணர்த்தும்.

 எனவே, காரணம் புரியாததற்கெல்லாம் கடவுள் மகத்துவம் என்று கண்மூடி வாழ்வதைத்தவிர்த்து, காரணம் அறிந்து, அறிவு வழியில் செயல்படுவதே மனிதர்க்கு அழகாகும்.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது

எச்சரிக்கை செய்தி...............
முட்டையை
ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது...............

 முட்டையை வாங்கியவுடன் ஃப்ரிட்ஜி'ல் வைக்கிறோம்!

இப்படிச் செய்வதன் மூலம் அதிலிருக்கும் சத்துகள் அழிந்து போவதோடு உடலுக்கும் கேட்டை உருவாக்கும்.

 வெளியில் வைத்தால் வாங்கிய ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே முட்டை நன்றாக இருக்கும். அதற்கு அறை வெப்பநிலையில் அதனை வைத்திருப்பதே காரணம்.
ஆனால், பல நாட்கள் வரை கெடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் அதனை 'ஃப்ரிட்ஜி'ல் வைத்துவிடுகிறோம்.

 ஃபிரிட்ஜில் முட்டையை வைத்தால் பாலைப் போல் திரிந்து கெட்டியாகிவிடும் வாய்ப்பு உண்டு. அதைப் பயன்படுத்தவும் முடியாது.

 மேலும், 'ஃப்ரிட்ஜி'ல் வைத்து விட்டு வெளியே எடுக்கும் போது முட்டை அறை வெப்பைநிலைக்குத் திரும்பும்.அப்போது முட்டை ஓட்டின் மேற்பரப்பில் வியர்க்கும். பார்க்கும் போதே நீர்த் துளிகள் இருப்பது தெரியும். முட்டையின் நுண்ணிய துளைகளின் வழியே பாக்டீரியாக்கள் உள்ளே போய்விடும்.
முட்டையில் இருக்கும் பாக்டீரியா டைபாய்டு காய்ச்சலை உருவாக்கும்!


 "பொதுவாக அதிக வெப்பம் அல்லது அதிக குளிரைத் தாங்கும் பாக்டீரியாக்கள் உண்டு. அந்த வகையில் “சால்மோனெல்லா டைஃபி” என்கிற பாக்டீரியாதான் மனிதர்களுக்கு டைபாய்டு காய்ச்சலை உருவாக்குகிறது

 முட்டையில் இந்த வகை பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் என்பதால், அவை எளிதில் அழியாது. செயலிழக்காது. குறிப்பாக ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் போது தூங்கும்(!) பாக்ட்டீரியாக்கள் அறை வெப்ப நிலைக்குத் திரும்பும் போது பழைய நிலைக்கு வரும்.

 சூடுபடுத்தும்போது பாக்டீரியா அழிந்துவிடும். என்றாலும் அரைவேக்காட்டில் முட்டை சாப்பிடும் போது கேடு வரும்!

 ஃபிரிட்ஜில் வைத்த எந்த வகையான உணவுப் பொருளையும் எடுத்து உடனே பயன்படுத்தக்கூடாது. அறை வெப்பநிலைக்கு கொண்டு வருவது அவசியம். அதாவது அதிலுள்ள குளிர்ச்சி முழுமையாக நீங்கி, பொருளை இயல்பு நிலைக்கு வந்த பின்னே பயன்படுத்த வேண்டும்!

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

பெண்களே எச்சரிக்கை! எல்லோரும் இதைத் தெரிந்து கொள்வது கட்டாயம்!

இதோ ஓர் எச்சரிக்கைச் செய்தி!
மயக்கிச்சீரழிக்கும் மாத்திரை!
பெண்களே எச்சரிக்கை!

எல்லோரும் இதைத் தெரிந்து கொள்வது கட்டாயம்!
---------------------------------------------
R எழுத்தில் தொடங்கி L எழுத்தில் முடியும் 8 எழுத்துக்களைக் கொண்ட மாத்திரை காமுகர்களின் கை ஆயுதமாய் விற்பனைக்கு வந்துள்ளது.

 இந்த மாத்திரையை, பாலிலோ, பழச்சாற்றிலோ கலந்து கொடுத்துவிட்டால், அதைப் பருகுகின்றவர்களின் மூளை தன் செயல்பாட்டைக் குறைத்துக் கொள்ளும்.பருகியவர்களை எதிர்த்துப் போராட இயலாதவர்களாக்கிவிடும். அந்த நிலையைப் பயன்படுத்தி, ஆண் தன் காமவெறியைத் தினித்துக் கொள்கிறான்.

 இந்த மாத்திரையை உட்கொண்ட பெண் கருவுறமாட்டாள். அவளது ரத்தத்திலும் இந்த மாத்திரையின் தன்மை வெளிப்படாது.
தான் சீரழிக்கப்பட்டதை அவளால் உணர முடிந்தாலும் அதை டி.என்.ஏ. சோதனை மூலம் கண்டறிய இயலாது.

 எனவே, இப்படி ஒரு மாத்திரை இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெண்ணும் அறிந்துவைத்திருக்க வேண்டும். மற்றப் பெண்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.

 ஆண்களோடு பழகும் போது எச்சரிக்கை வேண்டும். விருந்து, கேளிக்கையென்று கலந்து கொள்ளும் போது பானங்கள் பருகுவதைத் தவிர்க்க வேண்டும், சந்தேகம் எழும் சூழலில் கொடுத்தாலும் பருகுவதை பக்குவமாய் தவிர்க்க வேண்டும்.

 இரவு நேரங்களில் தனியே கார், ஆட்டோவில் செல்ல நேர்ந்தால், அதை வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரிவித்துவிட வேண்டும். இது அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். கார், ஆட்டோ ஓட்டுவோர் மோசடியில் ஈடுபட அஞ்சுவர்.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan
படியுங்கள்! மற்றவருக்கும் பகிருங்கள்!