அரசியல்

Saturday, November 18, 2017

இந்தியா இஸ்லாமிய நாடாக ஆகிவிடுமாம்! அச்சமூட்டி ஆதரவு பெறத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.



- மஞ்சை வசந்தன்

என்னுடைய முக நூலை 16.11.2017 அன்று இரவு 9 மணியளவில் பார்த்தேன். என்னுடைய பதிவுகளைப் பார்ப்பதற்கு முன், மற்றவர் பதிவிடுவதை முதலில் படிப்பேன். அந்த வழக்கத்திலே நேற்று பார்த்த போது ஒருவர் (பெயர் சொல்லி அவரை விளம்பரபடுத்த விரும்பவில்லை) செய்திருந்த பதிவைப் படித்தேன். அவர் நிச்சயமாக ஆர்.எஸ்.எஸ். இல் பயிற்சி பெற்றவராகத்தான் இருக்கமுடியும். இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ். தரும் போதையில் மயங்கி பிதற்றுகிறவராக இருக்கமுடியும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

இவருடன் ஒரு பகுத்தறிவாளர் பேசுவதாக ஒரு கற்பனைப் பாத்திரத்தை இவரே உருவாக்கிக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். பலவருடங்களாய் பரப்பி வரும் உண்மைக்கு மாறான, அச்சம் உருவாக்கும் ஒரு நச்சுக் கருத்தை இவர் பரப்பியிருக்கிறார். எனவே இக்கருத்துக்கு பதில் சொன்னால், பலவகையில் அது தெளிவையும் பயனையும் பலருக்கும் தரும் என்பதோடு, ஆர்.எஸ்.எஸ். பித்தலாட்டத்தை நொறுக்கப் பயன்படும் என்பதால் இதை எழுதுகிறேன்.

அந்த நபர் பதிவில் குறிப்பிட்டுள்ளதை முதலில் சொல்லி, பின் எனது மறுப்பை சொல்ல விரும்புகிறேன்.

“இன்று ஒரு பகுத்தறிவாள நண்பர், கும்பகோணம் வந்திருந்தவர் என்னை தொடர்பு கொண்டு சந்திக்க விருப்பம் தெரிவித்தார். மாலை 5 மணிக்கு மேல் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தேன். எனக்காக காத்துக் கொண்டு இருந்தார். வயதில் பெரியவர். ஐம்பது ப்ளஸ் இருக்கும். இனிமையாக பேசினார்.

அவர் சுருக்கமாக என்னைப் பற்றி கூறிய வார்த்தை ரசிக்கும் படியாக இருந்தது. வழி தவறிப் போன வெள்ளாடு நீங்கள் என்றார். நான் சிரித்துக் கொண்டே செம்மறி ஆடு என்றேன். அதில் பொதிந்து இருந்த பொருளை புரிந்து கொள்ளும் அளவிற்கு ஞானம் இருந்தது. சிரித்து அதை வெளிப்படுத்தினார். “இந்துத்வ ஆதரவு வேண்டாம். அது மக்களுக்கு கேடு விளைவிக்கும். சமதர்ம பாதையை நோக்கி எழுதுங்கள். சமத்துவம் திகழ வேண்டும். அண்ணலையும், தந்தையையும் போற்றுங்கள். சாதி, மதம் ஒழிய வேண்டும்’’ என்று நிறைய பேசினார்.

கிட்டத்தட்ட அவர் முழுக்க பேசி முடித்ததும் 45 நிமிடங்கள் கடந்து விட்டு இருந்தன. நீங்கள் ஏன் எதுவுமே பேச வில்லை? ஏதாவது சொல்லுங்கள் என்றார். எனக்கு நேரம் ஆகி விட்டது. இருந்தாலும் ஒன்றே ஒன்று கேட்கிறேன். யோசித்து விட்டு பிறகு பேசுங்கள், என்றேன். சொல்லுங்கள் என்றார்.

இந்துத்துவம் 2000 வருடமாக சாதியை முன்னிறுத்துகிறது. மக்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்கிறீர்கள். சரி, அது ஒரு புறம் இருக்கட்டும். இஸ்லாமிய அடிப்படை வாதமான வஹாபியஸம் உள்ளிட்டவற்றின் மீது உங்கள் பார்வை என்ன? என்று கேட்டேன். முற்றிலும் எதிர்க்கிறேன். எல்லா மதமும் எதிர்க்க வேண்டியவை. மனிதர்க்கு மதமே தேவையில்லை என்றார்.

யூஷுவலான பதில், எதிர்பார்த்தது தான். ஒரே ஒரு கேள்வி உங்களிடம் கேட்கிறேன். உள்ளத்தை தொட்டு பதில் சொல்லுங்கள் என்றேன்.

2000 வருடமாக ஆதிக்கம் செலுத்திய பின்னரும் இந்துத்வாவை எதிர்த்து உங்களால் இந்த மண்ணில் பேச முடிகிறது. இந்து மத விரோத கருத்துகள் சொல்லி விட்டு இந்துக்களை ஆள முடிகிறது. இதே போல், இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு நாட்டில், ஆட்சியில் இருக்க வேண்டாம். ஒரு சாதாரண குடிமகனாகக் கூட இஸ்லாம் உட்பட எந்த மதமும் வேண்டாம் என்று சொல்ல முடியுமா என்றேன்.

சற்று திகைத்து நின்று உடனே சுதாரித்துக் கொண்டார். நான் எதிர்பார்த்த அதே பதிலை கூறினார். “அவை வேறு நாடுகள். நம் போன்ற நாகரிகம் இல்லா நாடுகள். அவற்றை நம் நாட்டோடு பொருத்திப் பார்க்கக் கூடாது’’ என்ற ரீதியில் பதில் அளித்தார்.

மறுபடியும் ஒரு புன்னகையுடன் சொன்னேன். சுதந்திரத்துக்கு முன் இருந்த மக்கள் தொகையை ஒப்பிடும்போது இப்போது படிப்படியாக இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெரியுமா என்றேன்.

“இதே வேகத்தில் போனால், இன்னும் ஐம்பது வருடங்களில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர் இந்நாட்டில் சரிசமமாக இருப்பார்கள். அடுத்து வரும் சில வருடங்களில் இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாத்திகர், இப்போது உள்ள இதே சுதந்திரத்துடன் பேச முடியுமா? எல்லா மதமும் ஒழிய வேண்டும், அதாவது இஸ்லாம் உட்பட எல்லா மதமும் ஒழிய வேண்டும் என்று சொல்ல முடியுமா? அப்படி சொல்ல முடிகிற ஏதாவது ஒரு நாட்டை உலகில் நீங்கள் காட்ட முடியுமா?”

அவர் வெறித்துப்பார்த்து ஏதோ பேச வந்தார். இடை மறித்தேன்.

“இப்படிப்பட்ட ஒரு நிலை இந்நாட்டிற்கு வரக் கூடாது என்று விரும்புகிறவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் அதற்காக செயல்படுகிறவர்கள் இந்துத்துவ அமைப்பினர் மட்டும்தான். இந்துத்வாவில் உள்ள குறைகளை கூறுங்கள். அது வேறு. ஆனால் அவர்களை பலவீனப்படுத்த முயற்சி செய்யாதீர்கள். பிறகு நாளை உங்களைக் காப்பாற்ற வேறு ஆள் இல்லாமல் போய்விடும். இந்நாட்டு நாத்திகர்களுக்குக் கூட தேவையான ஒன்று இந்துத்வம் அதை ஒழிக்க நினைப்பதும் தற்கொலை செய்து கொள்வதும் ஒன்று. நீங்கள் தற்கொலை செய்து கொள்ள எனக்கு ஆட்சேபனை இல்லை. நான் வாழ நினைக்கிறேன்.” இதுவே அவர் செய்துள்ள பதிவு.

இந்த நபரின் முதன்மை நோக்கம் இஸ்லாமியர்கள் அதிகளவில் பெருகி பெரும்பான்மையினராகி, இந்துக்களை அடக்கி ஆள்வார்கள். இஸ்லாமிய அடக்குமுறை இறுதியில் வந்து இந்துக்களெல்லாம் அடிமைகளாக ஆகி அல்லல்படுவார்கள் என்று இந்துக்களை அச்சமூட்டி இஸ்லாமியர் மீது வெறுப்பும், விரோதமும் கொள்ளச் செய்வதேயாகும்.

இதற்கு இவர் தேர்வு செய்த எதிராளி பகுத்தறிவாளர்.  பகுத்தறிவாளர் என்று அவர் சொல்ல வருவது திராவிடக் கழகத்துக்காரர் என்பதே!

பகுத்தறிவாளராகவோ, திராவிடர் கழகத்தவராகவோ உண்மையில் ஒருவர் இவரைச் சந்தித்திருந்தால் இவரது பேச்சைக் கேட்டு வாயடைத்து போயிருக்க மாட்டார்.

இவரின் பித்தலாட்டத்தை அக்கு அக்காய் அலசி, அவர் முகத்திலேயே காயவிட்டிருப்பார். எனவே, இவர் கருத்தைத் திணிக்க இவர் ஓர் பகுத்தறிவாளரை உருவாக்கிக் கொண்டு அவரை சிந்திக்க வைத்துவிட்டதாகக் காட்டி, இந்துத்துவா பிரச்சாரம் செய்துள்ளார்.

இந்த நபருக்கு மட்டுமல்ல, இப்படிப் பேசித் திரியும் அத்துணை மோசடிப் பேர்வழிகளுக்கும் சில விளக்கங்களை இதன்வழி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இஸ்லாமியர்கள் இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஆங்கிலேயர் இந்தியாவிக்குள் வருவதற்கு முன்பே, அவர்களிடம் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆட்சியிருக்கும்போதே அதைச் செய்திருப்பார்கள். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அக்பர் போன்று இந்து மதத்தை மதித்த இஸ்லாமிய மன்னர்கள் உண்டு. இறுதியில் வந்த திப்புசுல்தான் கூட அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. அந்த திப்புசுல்தானைப் பற்றியே அபாண்ட அவதூறுகளைப் பரப்பி இந்துக்கள் வெறுக்கும்படியாகச் செய்கின்ற மோசடிப் பேர்வழிகள்தான் ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் இந்துத்வா பேர்வழிகளும்.

இஸ்லாமியர்களும் இந்துக்களும் அண்ணன் தம்பி, மாமன் மச்சான் முறையில் தான் இவ்வளவு காலமும் பழகி வருகிறார்கள். இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்ட முடியும். அப்படிப்பட்ட நல்லிணக்கத்தை நொறுக்கி எதிர் எதிராய் மோதவிட்டால், மதவெறி ஏறி இந்துக்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். பின்னால் வந்துவிடுவார்கள் என்பது இந்த இந்துத்வா பேர்வழிகளின் நப்பாசை!

எனவே, இந்த நப்பாசைப் பேர் வழிக்கு பதில் சொல்லுவதன் மூலம், ஏராளமானவர்களுக்கு இதில் ஓர் தெளிவை உண்டாக்க சில உண்மைகளைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கீட்டு ஆவணங்களிலிருந்து முதலில் சில விவரங்களை தந்து விளக்க விரும்புகிறேன்.

1951 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி:

இந்துக்கள் 84.1%
இஸ்லாமியர்கள் 9.8%

1961 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி:
இந்துக்கள் - 83.4%
இஸ்லாமியர் - 10.7%

1971 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி:
இந்துக்கள் - 82.7%
இஸ்லாமியர் - 11.4%
1981 மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி:
இந்துக்கள் - 82.6%
இஸ்லாமியர் - 11.4%
1991 கணக்கீட்டின்படி:
இந்துக்கள் - 82.0%
இஸ்லாமியர் - 12.1%

2001 கணக்கீட்டின்படி:
இந்துக்கள் - 80.5%
இஸ்லாமியர் 13.4%
2011 கணக்கீட்டின்படி:
இந்துக்கள் - 79.80%
இஸ்லாமியர் - 14.23%
60 ஆண்டுகளில் இந்துக்கள் இஸ்லாமியர்களின் சதவீதத்தில் பெரிய அளவில் குறைவோ உயர்வோ இல்லை.

1951 இல் 10% ஆக இருந்த இஸ்லாமியர்கள் சதவீதம் 60 ஆண்டுகளில் 4% மட்டுமே உயர்ந்துள்ளது.

1961இல்            இந்துக்கள் தொகை              36,65,26,886
இஸ்லாமியர்கள்   4,69,40,799

2011இல்            இந்துக்கள்    96,62,57,353
இஸ்லாமியர்கள்   17,22,45,158
ஆக 50 ஆண்டுகளில், 36.5 கோடியாக இருந்த இந்துக்கள் 96.5 கோடியாக உயர்ந்துள்ளார்கள்.

4.5 கோடியாக இருந்த இஸ்லாமியர்கள் 17 கோடியாக ஆகியிருக்கிறார்கள்.

உண்மை இப்படியிருக்க இன்னும் 50 ஆண்டுகளில் அப்படியே இஸ்லாமியர் பெருகி இது இஸ்லாம் நாடாக ஆகிவிடும் என்பது அயோக்கியத்தனம் அல்லவா?

வஞ்சகப் பேர் வழிகள் எவ்வளவு வாஞ்சையாக மக்கள் மனதில் நஞ்சை ஏற்றுகிறர்கள் என்று பாருங்கள்.

எனவே, இந்துக்கள் நலம் விரும்பிபோல் நயவஞ்சகமாய் பேசி, இந்துத்வாவை பரப்பி, ஆரிய ஆதிகத்தை சமஸ்கிருதத் திணிப்பைச் செய்ய இவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். அதற்கு இவரைப் போன்றவர்கள் எல்லா, இடங்களிலும் ஊடுறுவியுள்ளனர். எச்சரிக்கையாய் இருந்து மத இணக்கம் காக்க வேண்டியது மக்கள் கடமை, பகுத்தறிவாளர்கள் பணி ஆகும்.

இதில் இன்னொரு முக்கிய கருத்து என்னவென்றால் பகுத்தறிவாளர்!

“சமதர்ம பாதையை நோக்கி எழுதுங்கள். சமத்துவம் நிகழ வேண்டும். அண்ணலையும் (அம்பேத்கர்), தந்தையையும் (பெரியாரையும்) போற்றுங்கள். சாதி, மதம் ஒழிய வேண்டும்” என்று சொன்னதுபற்றி இவர் மூச்சுவிடவே இல்லை!

இந்த நபருக்கு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்ல வேண்டும்.

இந்துமதம் என்பது எது? அதன் நூல் எது? அதன் கடவுள் எது? அதன் கொள்கைகள் எவை? இவரால் கூறமுடியுமா?

இந்துமதம் என்பதே இல்லாத ஒன்றை வைத்து செய்யும் பித்தலாட்டம். எதிர் எதிர் கொள்கை உடையவர்களை வைத்துக் கொண்டு இந்துக்கள் என்று கூட்டு சேர்க்கும் மோசடி வேலை.

இவர்கள் கருத்துப்படி இந்து மதத்தவர்களிலே ஒருவர் உயர்ந்தவர். இன்னொருவர் தீண்டப்படாதார். சமஸ்கிருதம் தேவை பாஷை, தமிழ் நீசபாஷை என்று பேதம் சொல்லப்படும் போது, அதை எப்படி எல்லோரும் ஏற்கமுடியும்?

இந்துமதம் தான் பாதுகாப்பு என்கிறார் இவர். இந்துமதம் தான் அத்தனை அழிவிற்கும் காரணம் என்பதை மறைக்கிறார். நாம் மதமே வேண்டாம் என்கிறோம். ஆசியாவில் ஆட்சியில் மதமே கூடாது என்கிறோம். அதை கேட்டு மக்கள் திரளவேண்டும்!

அதை மறைத்து, வேறுவகையில் திசை திருப்பி தன்கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இது தான் ஆர்.எஸ்.எஸ். மூளை என்பது. அவர்களிடம் எச்சரிக்கையாய் இருப்பதே நமது பகுத்தறிவுக்கு அழகு.
====

Friday, November 17, 2017

எம்.ஜி.ஆர் மக்கள் தலைவர்! கமலும், இரஜினியும் இரசிகர்களின் தலைவர்கள்!

இந்த வேறுபாடு புரியாததாலேதான் கமலகாசன், இரஜினிகாந்த் போன்ற சினிமா நடிகர்கள் அரசியல் நுழைவு, ‘காற்றுள்ள போதே தூற்ற வேண்டும்’ என்ற முனைப்பேயன்றி வேறில்லை.

எம்ஜிஆர் தி.மு.கழகத்தோடு தன்னைப் பின்னிப் பிணைத்துக் கொண்டு வளர்ந்து, திரையின் வழி, பொதுமக்களின் உள்ளத்தில் இடம் பிடித்தார். அவருடைய கொடையுள்ளமும், ஏழைகளின் மீதான பற்றும் அவரை அந்த இடத்தில் அமர்த்தின.

எம்ஜிஆரின் செல்வாக்கால் வந்த அ.தி.மு.க.வை அப்படியே கைப்பற்றிக் கொண்டதால்தான் ஜெயலலிதாவால் அரசியலில் வெல்ல முடிந்தது.

ஆனால், கமலும், இரஜினியையும் இந்த இரண்டு வகையிலும் வராதவர்கள் இரசிகர்களின ஆதரவை நம்பி அரசியலுக்கு வரத் துடிக்கிறார்கள். கமலின் அண்ணன் சாருகாசன் மிகச் சரியாகச் சொல்கிறார். அதுதான் நடக்கும். பிரகாஷ் இராஜ் எதிலும் சரியாகக் கருத்து கூறுகிறார்.

கமல், இரஜினி என்ற இந்த இரு நடிகர்களுக்கும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், தொண்டு அமைப்புகளை நிறுவி தொண்டு செய்ய வேண்டும்; ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை போராட்டங்கள் மூலம் நீக்க வேண்டும்; ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மக்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். இதைச் செய்யாது அரசியலுக்கு வருவது பதவியாசையேயன்றி வேறில்லை! 

தமிழக மக்கள் இனி மிகவும் விழிப்பாக இருப்பார்கள்!
===

Saturday, November 4, 2017

ஜெயமோகனுக்கு “சவுக்கடி’’ கொடுத்த எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிற்கு நமது பாராட்டுகள்!

ஜெயமோகனுக்கு “சவுக்கடி’’ கொடுத்த 
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிற்கு நமது பாராட்டுகள்!
======================
ஆதவன் தீட்சண்யா, ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து இடதுசாரி எழுத்தாளராய் அறியப்படுபவர். ஆழமான சிந்தனையாளர். அர்த்தமுள்ள எழுத்தாளர்.
இவரைப்பற்றி எழுத்தாளர் ஜெயமோகனிடம் கேட்டற்கு,
“ஆதவன் தீட்சண்யாவை எழுத்தாளர் என்று பொருட்படுத்த முடியாது’’ என்று பதில் அளித்துள்ளார்.
அதற்கு ஆதவன் தீட்சண்யா,
“என்னையும் அவரைப்போன்ற எழுத்தாளர் என்று சொல்லியிருந்தால் அது எவ்வளவு பெரிய அவமானம் எனக்கு? காலாகாலத்துக்கும் துரத்தும் அந்தத் தீராப்பழி எனக்கு நேராததற்கு மகிழ்ச்சிதான்!’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
ஜெயமோகன் என்ன எழுத்தாளர்களுக்கு மிஷிமி முத்திரை வழங்கும் ஆளா?
ஒரு எழுத்தாளரிடம் மற்றொரு எழுத்தாளரைப் பற்றி கேட்கையில், மரபின் மாண்புகூட சிறிதும் இன்றி, மமதையில், மனதில் உள்ள வெறுப்பைக் கொட்டியுள்ளார் ஜெயமோகன்.
ஆர்.எஸ்.எஸ். மதவாத பாஸிஸ சித்தாந்தங்களை இளைய தலைமுறைக்கு தேன்தடவி தரும் மோசடிப் பேர்வழி ஜெயமோகன். மாற்றுச் சிந்தனையாளர்களை குறிப்பாக திராவிட இயக்க, மார்க்சிய சிந்தனையாளர்களை “ஒன்றுமில்லை’’ என்பதே இவரது பிறவித் தொழில்.
பெரியாரையே வைக்கம் வீரர் இல்லை என்றவர் இந்த ஜெயமோகன். அவருக்குப் பதில் தந்து நான் எழுதியதற்கு இதுவரை பதில் எழுத வக்கற்ற இவர் இன்னொரு எழுத்தாளரை ஒதுக்கித் தள்ளி உதாசீனப்படுத்துவது அற்பத்தனம்! அசல் அற்பத்தனம்!
அவருக்கு ஆதவன் தீட்சண்யா கொடுத்த பதிலே அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், அதுவும் மானமுள்ள எழுத்தாளர், மாண்புள்ள எழுத்தாளர் என்பதற்கு அடையாளம்.
ஆதவன் தீட்சண்யாவிற்கு நமது பாராட்டுகள்!

ஆரிய நரித்தனங்களின் (அயோக்கியத்தனங்களின்) அச்சு வடிவமே “துக்ளக்“!

ஆரிய நரித்தனங்களின்
(அயோக்கியத்தனங்களின்) 
அச்சு வடிவமே “துக்ளக்“!
========================
நடுநிலையில் நடப்பதாய், நியாயங்களைக் கூறுவதாய்ச் சொல்லிக்கொண்டு, பித்தலாட்டப் பிரச்சாரம்தான் துக்ளக்கில் செய்யப்படுகிறது.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மோடியின் மத்திய ஆட்சியின் பாஸிச நடவடிக்கைகள் அனைத்தையும் மறைத்து திரித்து நல்லனவாகக் காட்டும் மோசடிப் பிரச்சாரங்கள்; மதச் சிறுபான்மையினரை வெறுத்து ஒதுக்கும் சிறுமை; இந்துத்வா வெறியர்கள் செய்யும் அநியாயங்களை மூடிமறைக்கம் முயற்சி, திராவிட இயக்கங்களின் மீது அவதூறுகள், மனிதநேய அமைப்புகளை தேச விரோத அமைப்புகளாய் சித்தரிக்கும் மோசடி.
இப்படிப்பட்ட “துக்ளக்“ இதழின் வாசகர்களாய் ஏமாறும் தமிழர்கள் எச்சரிக்கையாய் அதிலிருந்து விடுபட வேண்டும்! “விஜயபாரதம்“ என்ற ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை இதைவிட மோசடியானது.
எனவே, “துக்ளக்“, “விஜயபாரதம்“ இரண்டையும் தமிழர்கள் வாங்கக் கூடாது, படிக்கக் கூடாது! இதில் உறுதியாய் இருக்க வேண்டும்.
இச்செய்தியை எல்லோருக்கும் பரப்புங்கள். எச்சரிக்கையாய் இருங்கள். தமிழர்களிடம் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், ஆரியர்களிடம் ஏமாறக் கூடாது! எச்சரிக்கை!