அரசியல்

Tuesday, August 31, 2010

கோழி முந்தியா? முட்டை முந்தியா? அறிவியல் சொன்ன பதில்

 

கோழி முந்தியா? முட்டைமுந்தியா? இது, நீண்ட நெடுங்காலமாய் எழுப்பப்படும் கேள்வி.


முட்டை முந்தியென்றால், கோழியில்லாமல் முட்டை எப்படி வந்தது? என்று மேலோட்டமாக ஆராய்ந்தால் இப்பிரச்சினை தீராது சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இப்பிரச்சினைக்கு விடை காண இயலும். இப்பிரச்சினைக்கு இரு வகைகளில் விடையளிக்க முடியும். (1) தர்க்க ரீதியாக விளக்கம் (2) அறிவியல் ரீதியான விளக்கம்.

1. தர்க்க ரீதியான விளக்கம்:

முட்டையென்று சொன்னால் அதை உருவாக்க ஒரு ஆண் கோழியும் ஒரு பெண் கோழியும் வேண்டும். ஆக, முட்டை தோன்ற வேண்டுமானால் இரண்டு கோழிகள் முதலில் வேண்டும். அதாவது கோழிகள் கலந்த பின்னே முட்டை தோன்றும். எனவே, இரண்டு கோழிகளின் சேர்க்கையால் தோன்றக்கூடிய முட்டை முதலில் தோன்றியது என்று சொல்வதைவிட, கோழியே முதலில் தோன்றியது என்று கொள்ளலாம்; சொல்லலாம்.

சுருக்கமாகச் சொன்னால் முட்டை என்பது ஒரு கரு அதேபோல் விதை என்பதும் ஒரு கரு. உயிர் தோன்றாமல் கரு தோன்ற முடியாது. எனவே, கோழியும், செடியுந்தான் முதலில் தோன்றின. முட்டையும், விதையும் பிறகுதான் தோன்றின. இது வாத ரீதியான முடிவு. 

அறிவியல் ரீதியான விளக்கம்:

உலகில் உயிரினங்கள் தோன்றி வளர்ந்த விதம் குறித்து தெளிவாய் நிரூபிக்கக்கூடிய அறிவியல் கொள்கையான பரிணாமக் கோட்பாடுகளின் (Evolution theories) துணை கொண்டு இப்பிரச்சினையை ஆழ்ந்து ஆராய்ந்தால் இறுதியான, உறுதியான முடிவிற்கு வர இயலும்.

இன்றைக்குள்ள உயிரினங்கள் அப்படியே தோன்றியவை அல்ல. ஆரம்பத்தில் தோன்றிய உயிரினங்களுடைய வளர்ச்சிதான் இன்றுள்ள உயிரினங்கள். இது அறிவியல் ரீதியாக நிரூபித்துக் காட்டப்படும் உண்மை. சில உயிரற்ற பொருட்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், தட்ப வெப்ப நிலையில், சூரிய ஒளியின் உதவியால் ஒன்றிணைந்போது அதற்கு உயிர்ப்பு ஏற்பட்டு அது உயிரியாக மாறி அசைய ஆரம்பித்தது.

அவ்வாறு தோன்றிய உயிரிகள் ஒரு செல் உயிரிகள் ஆகும். அவற்றிற்கு உறுப்புகள் இல்லை. அவற்றிற்குள் ஆண், பெண் பாகுபாடோ, தாவரம், விலங்கு என்ற வேறுபாடோ இல்லை. பின்னர்தான், தாவரம், விலங்கு வேறுபாடு தோன்றியது. அதன் பிறகுதான் ஆண், பெண் வேறுபாடு தோன்றியது. பின்னர் சிறிய செடியிலிருந்து பெரிய ஆலமரம் வரை தாவர இனமும்; சிறிய அமீபாவில் இருந்து மனிதன் வரை விலங்கினமும் வளர்ச்சியடைந்தது. இன்று பல்வேறு வகையான உயிரினங்கள் உலகில் காணப்படுகின்றன.

(உயிரற்ற பொருள்களிலிருந்து உயிர் உருவாகி இருக்க முடியும் என்பதை அண்மையில் உருவாக்கப்பட்ட செயற்கை உயிர் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. மேலும் விரிவாய்ப் படிக்க பெரியார் பிஞ்சு ஜூன் மாத இதழைப் பார்க்கவும்).

ஆண் பெண் வேறுபாடின்றி இனப்பெருக்கம் எப்படிசெய்தன?

அந்த ஒரு செல் உயிரிகள், தாமே பலவாகச் சிதைந்து இனப்பெருக்கம் செய்தன. இவ்வாறு இனப்பெருக்கம் செய்யும் ஒரு செல் உயிரிகளை, இக்காலத்தில்கூட விஞ்ஞானிகள் கண்டுபிடித்துக் காட்டுகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு செல் உயிரிகள்தான் காலப் போக்கில் பரிணாமம் அடைந்து, தாவரங்களாகவும் விலங்குகளாகவும் தனித்தனியே பிரிந்தன. இவ்வாறு தாவர வர்க்கமாகவும், விலங்கினமாகவும் வேறுபாடு அடைந்த ஒரு செல் உயிரிகள், பல ஆயிரமாண்டுகளாக பரிணாமம், அடைந்து ஆண் பெண் வேறுபாடு பெற்றன. அப்போது, ஆண், பெண் பாகுபாடு மிகவும் எளிய அமைப்புகளோடுதான் காணப்பட்டது. இப்பரிணாம வளர்ச்சியை இன்றைய விஞ்ஞானிகள் தெளிவாக நிரூபித்துக் காட்டுகின்றனர்.

இவ்வாறு பரிணாமம் அடைந்த ஒரு செல் உயிரிகள், பல செல் உயிரிகளாக பரிணாமம் அடைந்து; பல செல் உயிரி புழுவாகி; புழு நீந்துவனவாகி; நீந்துவன august ஊர்வனவாகி; ஊர்வன august பறப்பனவாகி; பாய்வனவாகி, குரங்காகி, மனிதக் குரங்காகி அதிலிருந்து மனித இனம் வந்தது; வளர்ந்தது.

இப்படித்தான், தாவர இனமும் ஒருசெல் உயிரியிலிருந்து பெரிய ஆலமரம் வரை பரிணமித்து வளர்ந்தது.

எனவே, இன்றுள்ள உயிரினங்கள் அனைத்தும், அது கோழியாய் இருந்தாலும் செடியாய் இருந்தாலும் அவை ஒரு செல் உயிரியிலிருந்து தோன்றியவை என்பது தெளிவாகிறது.

அந்த ஒரு செல் உயிரி, உயிரற்ற பொருட்கள் திடீரென சூரிய ஒளியின் உதவியால் ஒன்றிணைந்ததால் உருவாகியது.

எனவே, ஆரம்ப உயிரி முட்டையிருந்து தோன்றவில்லை. அது உயிரற்ற பொருளிலிருந்தே தோன்றியது என்பது விளங்குகிறது.

முட்டையென்பது கோழிக்கு மட்டும்தான் உண்டு என்பதில்லை. எறும்பைவிட சிறிய உயிரினத்திற்கும் உண்டு. விதை என்பது சிறிய தாவரத்திற்கும் உண்டு.

பறவைகளுக்கும் முட்டையிருப்பது போன்று குட்டி போடுகின்ற விலங்குகளுக்கு கரு உண்டு. (விந்துவும் சினை அணுவும் சேர்ந்து உருவானதே கரு) முட்டை என்றாலும் கரு என்றாலும் ஒன்றுதான். முட்டையென்றாலும் விதை என்றாலும் ஒன்றுதான்.

ஆண், பெண் பறவைகள் இணைவதால் உருவானது முட்டை. ஆணும், பெண்ணும் (விலங்குகளில்) இணைவதால் உருவாவது கரு. செடியில் பூவிலுள்ள ஆண் பகுதியும், பெண் பகுதியும் சேர்வதால் உருவாவது விதை, ஆக முட்டை, கரு. விதை இவை அனைத்தும் இயல்பில் ஒன்றே. எல்லாம் கரு தான்.

எனவே, இப்பிரச்சினையை ஆராயும் போது கோழியையும், கோழி முட்டையையும்; அவரைச் செடியையும் அவரை விதையையும் கருத்தில் கொள்வதற்குப் பதிலாக,

உயிரி முதலில் தோன்றியதா? அல்லது உயிரி, முட்டையிலிருந்து தோன்றியதா? என்று ஆராய்வதே சரியான முறையாகும்.

இவ்வாறு ஆராய்ந்தால், உயிரிதான் முதலில் தோன்றியது august உயிரற்ற பொருட்களிலிருந்து தோன்றியது என்பது august அறிவியல் கண்டுபிடிப்புகளின்மூலம் தெளிவாய் விளங்குகிறது. அந்த உயிரியிலிருந்து தோன்றியவையே பறவைகளும், செடிகளும். அவ்வாறு பறவைகளும், செடிகளும் தோன்றிய பிறகே முட்டையும், விதையும் தோன்றின. எனவே முட்டையும் விதையும் முந்தி தோன்றியவை அல்ல என்பது புலனாகிறது.

ஆகவே,செடி முந்தியா? விதை முந்தியா? என்றால்
செடிதான் முந்தி!

 கோழி முந்தியா? முட்டை முந்தியா? என்றால்
கோழிதான் முந்தி! என்பது தெளிவாகிறது.

- மஞ்சை வசந்தன்

Saturday, March 20, 2010

‘‘வைக்கம் வீரர்’’ யார்? (ஜெயமோகனுக்கு மறுப்பு) -2

ஆய்வாளர்கள் இருவகை:
1. எது சரியென்று தேடல் மேற்கொண்டு, அரிய தரவுகளைப் பெற்று, ஆய்வு செய்து, உண்மையை, சமரசத்திற்கு இடமின்றி, விருப்பு வெறுப்பு இன்றி வெளியிடுவோர் ஒரு வகை.

2. முன் முடிவு ஒன்றை எடுத்துக் கொண்டு, அதற்குத் தேவையான வகையில், கற்பனைகளை, யூகங்களை, திரிபுகளை, ஆதாரமற்ற செய்திகளைக் கூறியும், தொடர்பில்லா செய்திகளைத் தொடர்புபடுத்தும் முயற்சிகளைச் செய்தும், தனக்குச் சாதகமில்லாத செய்திகளை முற்றாக மறைத்தும் தனது கருத்தை (முடிவை) நிலை நாட்டுகிறவர்கள் மற்றொருவகை.

இவர்களுள் ஜெயமோகன் இரண்டாம் வகை.

இவர் எடுத்துக் கொண்டு நிறுவ வந்தது பெரியார் வைக்கம் வீரர் அல்லர் என்பதே. அப்படியாயின் அந்தக் கோணத்தில் அதற்கான ஆதாரங்களைச் சொல்ல வேண்டும் என்ற கோணத்தில் சொல்லாமல், பெரியாரின் உழைப்பை, தியாகத்தை, தொண்டை, புரட்சியை, உயர்வை, பங்களிப்பை, சாதனைகளை, பெருமையை, புகழை, உலகமே ஏற்றுப் போற்றிய இணையிலாப் பெருமையை ஒட்டு மொத்தமாக மறைத்து, மாற்றி, ஒன்றுமே இல்லை, அவர் ஒரு சாதாரண ஆள். திராவிட இயக்கத்தவர் அவரை ஊதிப் பெருக்கிக் காட்டுகின்றனர் என்கிறார்.

மேலும் “ஈ.வெ.ரா. வரலாற்றைப் பற்றிய புரிதலோ, தன் கருத்துக்களின் விளைவுகள் பற்றிய புரிதலோ இல்லாமல் பேசினார். இன்று சில வரலாற்றாசிரியர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சித்திரம் போலன்றி, பெரியார் என்றுமே ஒரு மாபெரும் மக்கள் தலைவராக இருக்கவில்லை. அவரது கருத்துக்களுக்கு பரவலான சமூகச் செல்வாக்கும் இருக்கவில்லை. திராவிட இயக்கம் அவரது தலைமையில் ஒரு குறுங் குழுவாகவே இருந்தது.”

“இன்றைய திராவிட இயக்கத்தின் நிறுவனராக பின்னால் சென்று பார்ப்பதனாலே ஈ.வெ.ரா. அவர்களின் ஆளுமை இன்றுள்ள வடிவை அடைகிறது என்கிறார் இந்த ஜெயமோகன்.

இதைவிட, பைத்தியகாரப் பிதற்றல் வேறு என்ன இருக்க முடியும்?

மக்கள் செல்வாக்கில்லாதவரா பெரியார்? அவர் கொள்கையை மக்கள் ஏற்கவில்லையா? அண்ணாதான் பெரியாரை பெரியவராக்கினாரா? அற்பத்தனமும், அயோக்கியத்தனமும் இருந்தாலன்றி இப்படி எழுத முடியாது.

1. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் (பி.ஜே.பி. தவிர) பெரியார் படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்கின்றனவே அதன் அடித்தளம் என்ன? அவசியம் என்ன?

2. இடஒதுக்கீட்டில் எம்.ஜி.ஆர். கை வைத்ததும் மக்கள் அவரைப் புறக்கணிக்க, இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தி, தன்னைத் திருத்திக் கொண்டு மீண்டும் செல்வாக்கு பெற்றாரே அதன் உட்பொருள் என்ன?

3. பி.ஜெ.பி. என்ன தகிடுதத்தம் போட்டாலும் தமிழகத்திலும் காலூன்ற முடியவில்லையே அதன் காரணம் யார்?

4. உலகத்திற்கே உரித்தான தமிழ் நூல் திருக்குறள் என்று மக்களுக்கு அடையாளம் காட்டி, அதை மாநாடுகள் போட்டு மக்கள் மத்தியில் பரப்பியவர் யார்?

5. இளம் வயது திருமணத்தை எதிர்த்து, விதவைத் திருமணத்தைத் தூண்டும் விதத்திலே செயல்பட்டவர் யார்? அதுவும் தன் குடும்பத்திலே செய்து காட்டியவர் யார்?

6. பெண்ணுரிமைக்காகவே தன் வாழ்க்கையைச் செலவிட்டு பெண்களுக்கென அனைத்து உரிமைகளும் கிடைக்க வழி செய்தவர் யார்? நன்றியுள்ள பெண்கள் அவருக்கு அளித்த பெயர்தானே “பெரியார்” என்ற சிறப்புப் பெயர், பெரியாரைப் பேசாத பெண்ணுரிமைப் போராளிகள் உண்டா?

7. ஆரிய ஆதிக்கத்தை ஒழித்து, ஆரிய பார்ப்பனர்களின் கொட்டத்தை ஒடுக்கியது யார்?

8. இடஒதுக்கீட்டிற்காக இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தத்தை ஏற்படுத்தச் செய்து இலட்சோப லட்சம் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர வழி செய்தது யார்?

9. மூடநம்பிக்கை ஒழிய மூலைமுடுக்கெல்லாம் மூத்திரப்பையோடு சுற்றி, தன்மானமுள்ள தமிழர்களை உருவாக்கியது யார்?

10. மானம் கெட்ட மணமுறையை மாற்றி சுயமரியாதைத் திருமணத்தை செய்து காட்டி இன்று பெருவாரியான மணங்கள் அப்படி நடக்கச் செய்த சிற்பி யார்?

11. கருவறைக்குள் செல்ல அனைத்து சாதியினருக்கும் உரிமை கிடைத்தது யாரால்?

12. உலக அளவில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் மக்களிடம் ஆழப்பதிந்த கடவுள் நம்பிக்கையை அவர் அகற்றவும் முயற்சித்தார். அதுவும் “மலையை மயிரைக் கட்டி இழுக்கிறேன்; வந்தால் மலை போனால் மயிர்!” என்று அடைவு (முடிவு) அறிந்தே முயற்சித்தார்.

மக்கள் பெருவாரியாகக் கடவுளை கைவிடவில்லை என்பதை மட்டும் வைத்து பெரியார் கொள்கைகளை மக்கள் ஏற்கவில்லை, நிராகரித்தார்கள் என்பது எவ்வளவு பெரிய அறிவீனம்.

கடவுள் நம்பிக்கையை விடமுடியாமல் மக்கள் உள்ளனர் என்பதுதான் உண்மையேயன்றி, கடவுள் நம்பிக்கை ஆட்டங்கண்டு, கலகலத்து நிற்பது நிதர்சன உண்மையல்லவா?

ஆனால், பெரியாரின் பிரச்சாரத்தால் மூடநம்பிக்கைகள், முட்டாள் தனங்கள், சாமியார் பின் செல்லல், மானம் இழத்தல் என்று எத்தனையோ இழிவுகள் இன்று அகலவில்லையா?

கடவுள் இல்லையென்ற பெரியார் கருத்தை மக்கள் பெருமளவு ஏற்காததால் பெரியாரை மக்கள் நிராகரித்ததாகப் பொருளா? பெரியாரின் கொள்கைப் பிரச்சாரத் தொண்டில் கடவுள் மறுப்பு என்பது ஒரு விழுக்காடு மட்டுமே.

ஆனால், மனித நேயத்தோடு அவர் மக்களின் உரிமைக்காக, சமத்துவத்திற்காக, இழிவு அகற்ற அவர் ஆற்றிய தொண்டிற்கு அளவுண்டா?

கடவுள் நம்பிக்கை கொண்ட கோடானு கோடி மக்கள், பெரியாரின் இந்த அளப்பரிய தொண்டுகளை ஏற்று, அவரை அளவு கடந்து மதித்ததை கண்கூடாகக் காணலாமே!

தமிழகத்தில் கடவுளை ஏற்றுக்கொண்ட மக்களில் 90 விழுக்காடு மதிப்பதை விழுக்காடு மக்கள் பெரியாரை அவரது தூய தொண்டிற்காய் மதிக்கக் கூடியவர்களாயிற்றே! பெரியாரை மனமார ஏற்றுக் கொண்டவர்களாயிற்றே!

இன்று பக்தர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் தாங்கள் பெற்றிருக்கும் வாழ்வு பெரியார் போட்ட பிச்சையென்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்களே தெரியாதா?
(தொடரும்)

‘‘வைக்கம் வீரர்’’ யார்? (ஜெயமோகனுக்கு மறுப்பு) -1

* “ஈ.வெ.ரா. வைக்கம் வீரர் அல்லர்’’!

* “ஈ.வெ.ரா. அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார்’’.

* ‘‘அவரது உரைகள் முரண்பாடுகளின் தொகையாக உள்ளன’’.

* ‘‘திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க ஒரு பரப்பிய இயக்கம். பரப்பிய இயக்கம் என்றுமே பொது மேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது... எதிரிகளை உருவாக்கி, அவர்கள்மீது உச்ச கட்ட வசைகளைப் பொழிந்து அந்தக் கருமைச் சித்திரம் முன்பு தன்னை வெண்மையாகக் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு ஹீரோ X வில்லன் என்ற நாடகத் தன்மை தேவையாகிறது.’’

* ‘‘ஈ.வெ.ரா. என்றுமே ஒரு மாபெரும் மக்கள் தலைவராக இருக்கவில்லை’’.

* “திராவிட இயக்கத்தை மக்களிடையே கொண்டு சென்றவர் கவர்ச்சிப் பாவாதியான சி.என். அண்ணாத்துரை அவர்களே’’.

* “காந்திய யுகத்தின் இன்னொரு பெருந் தலைவர் அல்ல ஈ.வெ.ரா.’’

* ‘‘வரலாற்று நிகழ்ச்சிகளைப் பார்க்கையில் அவற்றை எளிமையான தப்பு, சரிகளின் ஆட்டமாக அல்லாமல், சிக்கலான ஊடுபாவுகளின் பின்னலாக உருவகித்துக் கொள்வது உகந்தது’’.

* ‘‘கேரளம் புறத்தொடர்பு இல்லாமல் பழங்குடி மனநிலையை அப்படியே நீட்டித்துக் கொண்ட நிலமாகவே பதினெட்டாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது.’’


அறிவு, நாணயம் அறவே இல்லாமல், மாபெரும் உண்மைகளை முழுப்பூசணிக்காயை பிடிசோற்றில் மறைக்கும் வகையில், உண்மை கலவா அப்பட்டமான பொய்களைக் கூறி, ஒரு பெரும் இமயத்தை மணற்குன்றாகக் காட்ட முயலுவதோடு பெரியார் என்ற மாபெரும் மனிதரின் மதிப்பீடுகளை வரலாறு அறிய வாய்ப்பில்லா இணையதள இளைஞர்களின் மத்தியில் தகர்த்து, தரம் தாழ்த்தும் அற்பத்தனமான அயோக்கிய வழியிலான முயற்சியில் இறங்கியுள்ள ஜெயமோகன் என்பவர் இணையதளத்தில் ஏற்றியுள்ள கருத்துகளே மேற்கண்டவை.

யார் இந்த ஜெயமோகன்?

பெரிய ஆய்வே தேவையில்லை.

“காந்தியும் வைக்கமும்’’ என்ற தலைப்பில் இணையத்தில் (http://www.jeyamohan.in) அவர் எழுதியுள்ள கட்டுரையைக் கூர்ந்து நோக்கினால் யார் இந்த ஜெயமோகன் என்பது அப்பட்டமாக விளங்கிவிடும்.

ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை அடிமனதில் ஏற்றிக் கொண்டு, கண்ணியவான்போல் கருத்துக்கூற முற்பட்டிருக்கும் ஒரு வஞ்சக வேடதாரி இந்த ஜெயமோகன் என்பது, இக்கட்டுரையை இவர் எழுதியுள்ள முறையிலேயே, இம்மியளவும் அய்யத்திற்கிடமின்றி தெளிவாகின்றது.

சங்கர நாராயணன் என்பவர்,
“வைக்கம்’’ போராட்டத்தில் காந்தியின் துரோகம் குறித்து பெரியாரின் மேற்கோளுடன் நிறையவே பேசப்படுகிறது. “வைக்கம் தெருவில் தாழ்த்தப்பட்ட சாதியினர் நடமாட உரிமையை வாங்கிக் கொடுத்தவர் “பெரியார்’’ என்ற வரிகளை சுவர்களிலெல்லாம் காண்கிறோம். உண்மையில் என்ன நடந்தது?’’ என்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முற்பட்ட இந்த ஜெயமோகன் இருபது பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையின் துவக்கத்திலேயே அவர் எழுதியுள்ள அற்ப செய்திகளே மேற்கண்டவை.

இருபது பக்கம் கொண்ட இக்கட்டுரையில்,
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை ‘‘காந்தி’’ என்றும் இராஜகோபாலாச்சாரியாரை ‘‘இராஜாஜி’’ என்றும் மக்கள் அன்போடு அழைக்கும் வகையிலே மதிப்போடு குறிப்பிடுகிற இந்த ஜெயமோகன், கோடானுகோடி மக்களால் உலக அளவில் “அண்ணா’’ என்று அழைக்கப்படும் அந்த அறிஞர் பெருந்தகையை அண்ணாத்துரை என்றே எழுதுகிறார். உலகமே ஏற்றுக் கொண்ட “பெரியார்’’ என்ற மதிப்பிற்குரியவரை ஈ.வெ.ரா. என்று மட்டுமே குறிப்பிடுகிறார். தப்பித் தவறிக்கூட அந்த இருபது பக்கத்தில் எந்த இடத்திலும் பெரியார் என்று குறிப்பிட்டுவிடக் கூடாது என்பதில் திட்டமிட்டு எச்சரிக்கையுடன் இருக்க ஈ.வெ.ரா. என்றே குறிப்பிடுகிறார்.

காந்தியாரை “காந்திஜி’’ என்று எல்லோரும் மதிப்போடு அழைப்பது வழக்கில் இருக்கையில் காந்திஜி என்று அவரைக் கூற மறுக்கும் இந்த ஜெயமோகன் இராஜகோபாலாச்சாரியாரை மட்டும் “இராஜாஜி’’ என்று அழைக்கிறார்.

முழுப்பெயரைச் சொன்னால் சிறுமையா? பகுத்தறிவுப்படி தவறா? என்ற கேள்வி எழலாம். அப்படியாயின் இராஜகோபாலாச்சாரியாரையும் பெயர் சொல்லியிருக்கலாம் அல்லது ஈ.வெ.ரா. என்று பெரியாரைச் சொன்னது போல சி.ஆர். என்று இராஜாஜியை அழைத்து மகிழலாம் அல்லவா? ஏன் அழைக்கவில்லை?

இங்குதான் சனாதன தர்மத்தைத் தாங்கும் இவர்களின் (ஜெயமோகன்களின்) உண்மை உருவம் புலப்படுகிறது. “அண்ணா’’ “பெரியார்’’ ‘‘காந்திஜி’’ என்று கூற மறுக்கும் அவரது உள்ளம் ‘‘இராஜாஜி’’ என்று குறிப்பிட மட்டும் தாராளமாக இடம் கொடுக்கிறது. இது வெறும் பெயர் பிரச்சினையல்ல. இது உளவியல் சார்ந்த அணுகுமுறை. ஓர் ஆள் யார் என்பதை அடையாளம் காட்டும் கருவி. அவர்கள் உணர்வை வெளிப்படுத்தும் தடயம்.

“துக்ளக்’’ சோ இராமசாமி அப்படித்தான் தன்னை நடுநிலையாளர் போலக் காட்டிக் கொண்டு, எல்லோரையும் விமர்சிப்பார். சங்கராச்சாரி அதுவும் பெரியவாள் என்று அவாள் அழைக்கும் சந்திரசேகர சரஸ்வதி சாமியாரை மட்டும் அவர் விமர்சிக்க மாட்டார். இராஜாஜி பெயர் வைத்தால் அதை ஏற்பார். அண்ணா பெயரை வைத்தால் ஏற்க மாட்டார். அண்ணா சாலையென்று பெயர் வைத்தால் அதை ஏற்காது மவுன்ட்ரோடு என்றே எழுதுவார்.

இதுதான் ஆர்.எஸ்.எஸ். அடிமனம் என்பது ஆரிய மனம் அல்லது ஆரிய அடிமனம் என்றும் கொள்ளலாம்.

(தொடரும்)