அரசியல்

Tuesday, January 9, 2018

அரசியல்வாதிகளே பிராட்லாவைத் தெரியுமா?

அரசியல்வாதிகளே பிராட்லாவைத் தெரியுமா?



-
மஞ்சை வசந்தன்

அரசியல் ஆதாயத்திற்கு ஓட்டுப் பொறுக்க ஆன்மீகம் பேசுவோர் 

பிராட்லா என்ற புடம்போட்ட அரசியல் தலைவரை அறிவார்களா?

இன்றைய இளைய தலைமுறையினர் அறிவார்களா? அறிந்தால் இரஜினி பின்னே செல்வார்களா?

அப்படி என்ன செய்தார் பிராடலா? கீழே படியுங்கள்

சட்டத்தைப் பணிய வைத்த 

சார்லஸ் பிராட்லா

பகுத்தறிந்து சிந்தித்த தனது கொள்கையிலிருந்து மாறாமல் அரசியல் சட்டத்துறை வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றவர் சார்லஸ் பிராட்லா.
இங்கிலாந்தின் நார்த்தாம்டன் பகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்தின் சட்ட விதிகளின்படி, பைபிளைக் கையில் வைத்துக் கொண்டு, கடவுளே என்னைக் காப்பாற்று என்று பதவிப் பிரமாணம் எடுக்க வேண்டும்.
ஆனால், தான் ஒரு நாத்திகர் என பைபிளைக் கையில் வைத்துக் கொண்டு, கடவுளின் பெயரால் பதவிப் பிரமாணம் எடுக்க மறுத்தார் பிராட்லா. இதனால், பிராட்லா நாடாளுமன்றத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று இங்கிலாந்து அரசு அறிவித்தது.
பிராட்லா நாடாளுமன்றத்திற்கு மக்களால் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்பதால், மக்கள் சபையில் அமர வேண்டும் என வாதிட்டார்.
அரசாங்கம் ஒத்துக் கொள்ளாததால் மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இரண்டாவது முறையாக பிராட்லாவே மீண்டும் வெற்றி பெற்றார். இம்முறையும் முறைப்படி பதவிப் பிரமாணம் எடுக்க மறுத்ததால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தவராக மீண்டும் அறிவிக்கப்பட்டார்.
அடுத்து தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலிலும் பிராட்லாவே வெற்றி வாகை சூடினார். நாத்திகர் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் மக்கள் அவரையே தேர்ந்தெடுத்தனர். அவர் மனிதாபிமானியாக இருந்து மக்களுக்குச் செய்த - செய்ய இருக்கின்ற சேவையைத்தான் மக்கள் பார்த்தனர்; பிராட்லாவை வெற்றி பெறச் செய்தனர்.
உலகில் எங்கும் நடைபெறாத மக்களின் இந்தத் தீர்ப்பினைக் கண்ட இங்கிலாந்து நாட்டின் பிரதமர் கிளாட்ஸ்டோன் செய்வதறியாது திகைத்தார். இம்முறையும் பைபிள் இல்லாமல் பதவிப் பிரமாணம் எடுத்தார்.
நாடாளுமன்ற விதிகளை உடைத்தெறிந்தார் என்ற குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றார். பிராட்லாவைச் சிறையில் அடைத்ததற்காக மக்கள் கிளர்ச்சி செய்தனர். 36 மணி நேரம் சிறைவாசத்தை அனுபவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைபிளை வைத்துக் கொண்டு கடவுளின் பெயரால் எடுத்த உறுதிமொழியினை, உளமாற என்று மாற்றி சட்டத்தைத் திருத்தினார்கள். நாடாளுமன்ற உறுப்பினராக அவையில் அமர்ந்தார் பிராட்லா.
இப்போது சொல்லுங்கள், பிராட்லா அரசியல் தலைவரா?
இங்கு அரசியல் அரிச்சுவடியே அறியாமல் தத்து பித்தென்று நித்தம் நித்தம் உளறிக் கொட்டும் கோமாளிகள் அரசியல் தலைவர்களா?

No comments:

Post a Comment