அரசியல்

Tuesday, March 22, 2016

தினமணியே! நீ திருந்த மாட்டாயா?...

.
பூசணிக்காயை உடைத்து வீணாக்க உபதேசமா? திருஷ்டி கழிய பூசணிக்காயை தெருவில் உடைக்கச் சொல்லி எந்தச்சாத்திரம் சொல்கிறது! உணவுப் பொருளை வீணாக்குவது சட்டப்படி குற்றச் செயல் அல்லவா? மக்கள் விரோத பிரச்சாரத்திற்கு அரைப்பக்கம் செய்தியா?
பூசணிக்காய் அற்புதமான மருத்துவ பயன் தருவதல்லவா? உடலுக்குக் குளிர்ச்சியூட்டி, பித்தம், வறட்சி, மேகநோய் நீக்குதல் போன்ற பல பயன்தருவதல்லவா? வெப்பப்பகுதியில் வாழும் நம்மக்களுக்கு பூசணிக்காய் அருமையான, பயனுள்ள உணவு அல்லவா?
பூசணிக்காய் அல்வா, பூசணிக்காய் புளிக்குழம்பு, பூசணிக்காய் மோர்க்குழம்பு, பூசணிக்காய் வடகம் என்று எத்தனையோ உணவுப்பொருட்களை தயாரிக்க உதவும் உன்னத காய் பூசணிக்காய். உண்டு, உடல் நலம் காக்கவேண்டிய உணவுப் பொருளை வீட்டிற்கு முன், கடைக்கு முன் போட்டுடைக்கும் முட்டாள் செயலைக் கண்டித்து மக்களை நெறிப்படுத்துவதற்குப் பதில் தோஷம் போகும், கண் திருஷ்டி விலகும் என்று பயன் சொல்லி, உணவுப்பொருளை வீணாக்கத் தூண்டும் உம்மீது நீதிமன்றம் தானே முன் வந்து வழக்குத் தொடுக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் அய்தீகம் என்று சொல்லி முட்டாள் தனத்திற்கெல்லாம் முட்டுக்கொடுப்பது சமூக விரோதச் செயலல்லவா? மக்களின் மடமையை வளர்க்கவா பத்திரிக்கை? உங்களுக்கெல்லாம் உளச்சான்றே கிடையாதா?
மக்களே! பூசணிக்காயை விணாக்காதீர் சாலையில் உடைத்து விபத்தை ஏற்படுத்தாதீர். அதைச் சமைத்து உண்டு உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இந்தக் கும்பல் மக்களை முட்டாளாக்கியே, தங்கள் ஆதிக்கம் வளர்த்தக் கும்பல். அவர்களிடம் நாம்தான் விழிப்பாய் இருக்க வேண்டும். அய்தீகம் என்று சொல்லி மக்களின் மடமையை வளர்ப்பது ஆரிய பார்ப்பனர்களின் அயோக்கியத் தனங்களில் ஒன்று. அதை நம்பாதீர்! உணவுப் பொருளை யாகம், படையல், அபிஷேகம் என்ற பெயரில் பாழாக்காதீர். வீணாக்கும் பொருட்களை ஏழைகளுக்குக் கொடுங்கள் அதைவிட சிறந்த வழிபாடு வேறு இல்லை!
அதேபோல் சிதறு தேங்காய் உடைத்து தேங்காயைப் பாழாக்காதீர். தேங்காயை பிச்சைக்கார்ர்களுக்குக் கொடுங்கள்! அவர்கள் வயிறு வாழ்த்தும்!
உணவுப்பொருளை வீணாக்குவதை நீங்கள் நம்பும் கடவுள் ஏற்குமா? பசித்த ஏழைக்குக் கொடுப்பதைத்தான் பகவான் விடும்புகிறார் என்றுதானே உங்கள் பக்தி நூல்கள் சொல்லுகின்றன! அதற்கு எதிராய் செய்யாலாமா? சிந்தியுங்கள்!

No comments:

Post a Comment