அரசியல்

Saturday, July 29, 2017

வைகோவின் பங்களிப்பு காலத்தின் கட்டாயம்!


திட்டமிட்டு செயல்படாமையால் இதுவரைப் பயனற்றுப்போன தன் திறமை, ஆற்றல், அறிவு, தியாகத்தை வகைதொகையாக இனி வைகோ பயன்படுத்தியாக வேண்டும்!
அப்படி இனிமேல் அவர் செயல்பட்டால் மிகப் பெரும் சாதனைகளை, பயனை சமுதாயத்திற்குத் தரமுடியும்.
தமிழரின் கல்வி, வேலைவாய்ப்பு, ஒற்றுமை, பாதுகாப்பு, எழுச்சி, வளர்ச்சி, மதச்சார்பின்மை, சமூகநல்லிணக்கம், சமூகநீதி இவற்றை அடைவதில், அகில இந்திய அளவில் அவர் மகத்தான பணியாற்ற வேண்டியது கட்டாயமாகும்.
மதச்சார்பற்ற அணியைக் கட்டமைக்க அவர் இந்திய அளவில் முயற்சியும் ஒருங்கிணைப்பும் மேற்கொள்ள வேண்டும்.
அரசியலில் வியூகங்கள், நுட்பங்கள், சாதுர்யம் மிக முக்கியம். மனதில் உள்ளதை அப்படியே கொட்டுவது அரசியலில் பெரும் பின்னடைவையேத் தரும்.
காரியமா? வீரியமா? என்றால் அரசியலில் காரியமே முதன்மை!
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போன்ற மதவாத அமைப்புகள் செயல்படும விதத்தை, அதன்வழி தங்கள் ஆளுகையை விரிவுபடுத்தும் நுட்பத்தை கருத்தில் கொண்டால் இது எளிதில் விளங்கும்.
இனமானத்திற்காக தன்மானம் பார்க்காதே என்ற பெரியாரின் ஒற்றைவரி இனத்தின் மேன்மைக்குப் பாடுபடும் எவரும் கட்டாயம் கைக்கொள்ள வேண்டிய கொள்கையாகும்.
தன்மானத்தோடு தன் லாபம் என்பதும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இனத்தின் நலனுக்காக தனக்கு மான இழப்போ அரசியல் ஆதாய இழப்போ ஏற்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே இனத்தைப் பாதுகாக்கவும், உயர்த்தவும் முடியும்.
தன்னைக் கேவலப்படுத்தியவர்களுடன்கூட கூட்டு சேர்தல், தனக்கு இரண்டு இடங்கள் குறைவாகக் கொடுத்தாலும் கூட்டணி முறியக்கூடாது என்பதற்காக அதை ஏற்றல் போன்றவை இந்த அடிப்படையில்தான்.
இன்றைக்குத் தலையாக கடமைகள்:-
1.            மதவாத சக்திகளை அரசியலை விட்டு அப்புறப்படுத்துல். மீண்டும் வராமல் தடுப்பரண் அமைத்தல்.
2.            சமூகநீதி காத்தல்; தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டைக் கொண்டுவரப் போராடுதல்.
3.            மொழியைக் காத்து வளர்த்தல்; இந்தி, சமஸ்கிருதத் திணிப்பைத் தடுத்தல்.
4.            இன இழிவை நீக்குதல், ஜாதியை ஒழித்தல்.
5.            கொள்ளை, சுரண்டல், ஆதிக்கம் போன்றவற்றை அகற்றி, வளர்ச்சியை ஏற்படுத்துதல்.
6.            வேலைவாய்ப்பைப் பெருக்குதல்.
7.            போதை, புகை இவற்றை அறவே தடைசெய்தல்.
8.            நீர் உரிமைகளை மீட்டு நீராதாரங்களைப் பாதுகாத்து நீரின் அளவை அதிகரித்தல்.
9.            விவசாயிகளைக் காத்து உயர்த்துதல்.
10.          தமிழகத்தில் வலிமையான ஆட்சியை அமைத்தல்.
                இத்தனையிலும் வைகோ தனது மிகச் சிறந்த வல்லமையை, சாதனை படைக்கும் பங்களிப்பைத் தர முடியும்; தரவும் வேண்டும். அதற்கான காலம் இதுதான்!
இந்தியா முழுமையும் அவருக்குள்ள அறிமுகத்தை, தோழமையை, பழக்கத்தைப் பயன்படுத்தி மதவாத சக்திகளுக்கு எதிரான ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டும். அதற்கு அவர் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு, தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
தமிழகத்தில் உண்மையான திராவிட அரசியல் கட்சிகள் என்பவை திமுக, மதிமுக மட்டுமே.
அஇஅதிமுக தலைவர்கள் பிஜேபியின் அடிமைகளாய், ஆதரவாளர்களாய் மாறிவிட்டமையால், இன, மொழி உணர்வுள்ள இலட்சக்கணக்கான அஇஅதிமுக தொண்டர்களை சேதாரமின்றி, சோரமின்றி ஒருங்கிணைத்து வைகோ பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
திமுகவும் அதைச் செய்ய வேண்டும்.
இல்லையென்றால் அஇஅதிமுக தொண்டர்களை பிஜேபி என்னும் ஆக்டோபஸ் செரிமானம் செய்துகொள்ள முயலும். எனவே, திமுகவும், மதிமுகவும் கசப்புகளை, கருத்து வேறுபாடுகளை ஒதுக்கித் தள்ளி, கூட்டாக மேற்கண்ட இலக்குகளை வெல்ல வேண்டும்.
திருமாவளவன், கம்யூனிஸ்ட்டுகள் போன்ற ஒத்த கொள்கை உடையவர்களை ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
இந்துத்வா பேர்வழிகள் ஆர்எஸ்எஸ். அமைப்புகளை தன் வழிகாட்டிகளாகவும், சங்கர மடத்தைத் தங்களது தலைமையகமாகவும், களமாகவும் கொண்டு செயல்படுவதுபோல்,
உண்மையான திராவிடக் கட்சிகள் தங்களின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தை வழிகாட்டியாகவும், பெரியார் திடலைத் தங்கள் ஆலோசனைத் தளமாகவும் கொண்டு செயல்பட வேண்டும்.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், செயல்தலைவர் மு..ஸ்டாலின் அவர்கள், மதிமுக தலைவர் வைகோ அவர்கள் மூவரும் அவ்வப்போது ஒன்றுகூடி கலந்து பேசி முடிவெடுத்துச் செயல்பட்டால், தமிழினம், தமிழ்நாடு, தமிழ்மொழி காப்பாற்றப்படும், வளர்ச்சி பெறும்.
வை.கோ. இனி வழுவாது விழிப்போடிருந்து சாதிக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. அவர் பங்களிப்பை உடன் செய்தாக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்! வைகோவால் முடியும்!

+++++

No comments:

Post a Comment