அரசியல்

Monday, July 31, 2017

இந்துக்கள் எல்லோருக்கும் பகவத் கீதை புனித நூலா?


பித்தலாட்டத்திலே பிழைப்பு நடத்தி, பின் பித்தலாட்டத்திலே ஆதிக்கம் செலுத்தி, அதன்பின் பித்தலாட்டத்திலே ஆட்சியும் நடத்துகிறவர்கள் ஆரிய பார்ப்பனர்கள் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் என்பதால், மேனாள் குடியரசுத் தலைவர் .பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் நினைவிடத்தில் அவர் சிலைமுன், பகவத் கீதையை வைத்துவிட்டு, அப்துல் கலாம் பகவத் கீதையை விரும்பிப் படித்தார் என்பதால் வைத்தோம் என்று பித்தலாட்டம் பேசுகின்றனர்.

அப்துல்கலாம் விரும்பிப் படித்தது கீதை மட்டுமா?

எல்லா நூல்களையும்விட, அவர் மிகவும் விரும்பி, மதித்து ஏற்றிப் போற்றிய நூல் "திருக்குறள்". அவர் பைபிள், ஆதிகிரந்தம், புத்த தம்மம் என்று பல மத நூல்களையும் விரும்பிப் படித்துள்ளார். அத்தனை நூல்களையும் அங்கு வைக்க முடியுமா? அப்படியிருக்க பகவத்கீதையை மட்டும் அங்கு வைப்பது அடாவடிச் செயல் அல்லவா?
மதச்சார்பற்ற ஒரு மாபெரும் தலைவர் சிலை முன் மதச் சார்பிலா திருக்குறளை வைப்பதுதானே நேர்மை, பொருத்தம், சிறப்பு. ஆனால், அதைச் செய்யாமல் பகவத் கீதையை வைப்பது, தங்கள் கொள்கையை அவர் மீது திணிக்கும் அநியாயம் அல்லவா?
உலகமே ஏற்றுப் போற்றும் திருக்குறளைவிட பகவத்கீதை சிறந்ததா?
ஒரே கடவுள், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று தங்கள் பாஸிஸ, சனாதனத் திணிப்பு முயற்சிகளின் ஒரு நடவடிக்கையே அப்துல் கலாமிடம் பகவத் கீதையைத் திணித்திருப்பது.
உண்மையும் உள்நோக்கமும் அப்படியிருக்க, உத்தமர்களைப் போல பி.ஜே.பி. கட்சியினர் பேட்டி கொடுப்பது பித்தலாட்டத்திலும் பெரிய பித்தலாட்டம்! அதைவிட பெரிய பித்தலாட்டம் பகவத்கீதை இந்துக்கள் அனைவருக்கும் புனித நூல் என்பது!

பகவத் கீதை இந்துக்களின் புனித நூலா?

இந்து மதம் என்பதே இல்லாத மதம். எது இந்து மதம் என்று கேட்டால் நேர்மையாய், தெளிவாய், உண்மையாய் அவர்களால் பதில் சொல்ல முடியுமா?
இந்தியாவில் பல்வேறு கடவுள்சார் நம்பிக்கைகள் இருந்தன.
சிவனை வணங்குபவர்கள், விஷ்ணுவை வணங்குகிறவர்கள், காளியை வணங்குகிறவர்கள, வீரனை வணங்குகிறவர்கள் இப்படி ஏராளம்.
இதில் சிவனை வணங்குகிறவர்களும், விஷ்ணுவை வணங்குகிறர்களும், எதிர் எதிராய் ஒருவரையொருவர் வெறுத்து, இழிவுபடுத்தி மோதிக்கொண்டார்கள்.
சிவசத்தமே காதில் விழக்கூடாது என்று காதில் மணி கட்டிக்கொண்ட வைணவர் உண்டு.

வைணவர்களிலே வடகலை, தென்கலை என்று இரு பிரிவு. "Y" நாமமா, "U" நாமமா என்று போட்டியிட்டு நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வாதிட்டவர்கள்.
இவர்கள் எல்லோரையும் சேர்த்து இந்து என்று கூறிக்கொள்வதும், இந்து மதம் என்று சொல்லிக்கொள்வதும் மோசடியல்லவா?
இதோ அவர்களின் நடமாடிய தெய்வம் செத்துப்போன சங்கராச்சாரியே கூறுவதைப் பாருங்கள்.
இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றைச் சொல்கிறோம். இதற்கு உண்மையில் இப்பெயர் கிடையாது. நம்முடைய பழைய சாஸ்திரங்கள் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது. ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான்.(தெய்வத்தின் குரல் பாகம்-1, பக்கம்-126)

வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும்ஹிந்துஎன்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், அய்யப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.” (தெய்வத்தின் குரல் பாகம்-1, பக்கம்-267) என்கிறார்.

ஆக, வெள்ளைக்காரன் தன் வசதிக்கு சூட்டிய பெயர்தான் இந்துமம் என்பது. மற்றபடி இந்துமதம் என்று ஒரு மதமே இல்லை. அதைத் தோற்றுவித்தவர் என்ற எவரும் இல்லை. அதற்கென்று ஒரு கொள்கையோ, ஒரு புனித நூலோ இல்லை.
புலால் உண்பவனும் உண்டு, புலால் உண்ணாதவனும் உண்டு; பூணூல் போட்டவனும் உண்டு. பூணூல் போடாதவனும் உண்டு; தீட்டு உள்ளவன் உண்டு, தீட்டு இல்லாதவன் உண்டு. பட்டை போடுபவன் உண்டு, நாமம் போடுபவனும் உண்டு. அப்படியிருக்க இவர்கள் எல்லாம் எப்படி இந்து?

முரண்பட்ட கொள்கை:

ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று என்பவரும் இந்து! ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறு என்று சொல்பவரும் இந்து!
இதில் எது இந்து மதத்தின் கொள்கை?
வைணவர்களுக்கென்று தனி புனித நூல்கள் உண்டு.
சைவர்களுக்கென்று தனி புனித நூல்கள் உண்டு.
வைணவர்களுக்கு திருப்பாவை என்றால், சைவர்களுக்கு திருவெம்பாவை.
சைவர்களுக்கு சைவத் திருமுறைகள் உண்டு; வைணவர்களுக்கு நாலாயிரம் திவ்யப்பிரபந்தம்.

சைவர்கள் சிவன் உயர்வு என்பர், திருமால் சிவனின் பாதத்தை பார்க்கக்கூட முடியாமல் தோல்வி கண்டவர் என்பர்.

வைணவர்கள் திருமாலே உயர்ந்தவர். சிவன் அவருக்கு இணையில்லை என்பர். அப்படிச் சொல்லுகின்ற நூல்தான் பகவத் கீதை.

"ஜனங்கள் தமக்கு இது வேண்டும், அது வேண்டும் என்ற ஆசையினால் அறிவை இழந்து, தம்முடைய ஸ்வபாவத்திற்கு கட்டுப்பட்டு அந்த அந்தத் தேவதைகளுக்காக ஏற்பட்ட விரதங்களுடன் இதர தேவதைகளை (சிவன், காளி, விநாயகர், முருகன் போன்றவை) சரணடைகிறார்கள். அவர்கள் சிரத்தையுடன் அத்தேவதைகளுக்குப் பூஜை செய்தாலும், நானே அமைத்துத் தந்த பலனையே அந்தத் தேவதைகள் மூலம் அவர்கள் பெறுகிறார்கள். ஆனால், அத்தகைய சிற்றறிவு படைத்தவர்கள் சம்பாதித்த அந்தப் பலன் அழியக் கூடியது."  (பகவத் கீதை, அத்தியாயம்-7, சுலோகம் 20, 22, 23)

இப்படி சிவன் முதலிய கடவுளை வணங்குகிறவர்கள் சிற்றறிவுடையவர்கள் என்று கேவலமாய்ப் பேசும் பகவத் கீதை எப்படி இந்துக்களின் புனித நூலாகும்? அது வைணவ நூல்தானே?

பகவத் கீதை 18 அத்தியாயங்கள் கொண்டது. அதில் ஆறு அத்தியாயங்களில் கிருஷ்ணன் பெருமையே பேசப்படுகிறது.
அப்படியிருக்க, அது வைணவ நூலேயன்றி இந்துக்கள் அனைவருக்குமான புனித நூலாக எப்படி ஆகும்?

பகவத் கீதை ஒரு புனித நூலா?

பகவத் கீதை இந்துக்களின் புனித நூல் அல்ல என்பது மட்டுமல்ல, அது ஓர் புனித நூலும் அல்ல.
அதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் அந்த அளவிற்கு மோசமானவை; அநீதியானவை; இழிவானவை.


எடுத்துக்காட்டாகச் சில:

"பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள்" ஆகியோர் தாழ்ந்த பிறவிகள்.
"புண்ணியப் பிறவிகளான பிராமணர்களும் பக்தர்களான ராஜரிஷிகளும்" உயர்ந்த பிறவிகள்.

பகவத்கீதை, ஒன்பதாவது அத்தியாயம் சுலோகம் 32, 33-இல் கிருஷ்ணனே இவ்வாற கூறுகிறார். பெண்களையும், பெரும்பான்மை மக்களையும் இழிவு செய்யும் இந்த நூல் எப்படிப் புனித நூலாகும்?

மேலும்,

"எவனொருவன் மிக்க கெட்ட குணங்களை உடையவனாக இருந்தாலும், மற்றொரு தெய்வத்தையன்றி என்னையே (கிருணனையே) வழிபடுவானேயானால் அவனை நல்லவன் என்றே அறிய வேண்டும்."
"பிரம்மலோகம் வரையில் உள்ள லோகங்களெல்லாம் அழிவுள்ளவையாகையால் அவைகளுக்குச் செல்பவர்கள் மறுபடியும் பிறவி எடுக்க வேண்டும். ஆனால், வைகுந்தம் அடைபவர்கள் மறுபிறவி எடுத்துத் துன்பப்பட மாட்டார்கள்" என்று இந்த சுலோகத்திற்கு விளக்கம் அளிக்க வந்த ராமானுஜர் கூறுகிறார்.

"எப்பொழுதும் என்னைப் பற்றி (கிருஷ்ணனைப்பற்றி) பாடிக்கொண்டும், கடினமான விரதங்கள் இருந்தும், என்னைப் பக்தியுடன் நமஸ்கரித்துக் கொண்டும், எப்போதும் யோகத்தை மேற்கொண்டும் உபாஸனை செய்பவர்கள் மகாத்மாக்கள்" என்று ஒன்பதாவது அத்தியாயம், சுலோகம் 14-இல் கிருஷ்ணன் கூறுகிறார்.

"எனக்கு வெகு இஷ்டமானதைச் செய்தவன் மனிதர்களில் மிகவும் உயர்ந்தவன்.அவனைக் காட்டிலும் சிறந்தவன் இவ்வுலகில் வேறொருவனும் இருக்க மாட்டான்."
(அத்தியாயம் 8, சுலோகம் -69)
"எல்லா தருமங்களையும் விட்டு என் ஒருவனையே சரணமாக அடைவாயாக! நான் உன்னை ஸகல பாபங்களிலிருந்து விடுவிக்கிறேன்."
(அத்தியாயம் 18, சுலோகம் - 66)
இப்படி வைணவக் கடவுளை மட்டும் உயர்த்தி, மற்றக் கடவுள்களை இழிவுபடுத்தும் பகவத் கீதை எப்படி இந்துக்களின் பொது நூலாகவும், புனித நூலாகவும் இருக்க முடியும்?
|
இந்த பகவத் கீதையின் வண்டவாளத்தை வண்டி வண்டியாக அறிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கீதையின் மறுபக்கத்தை விரிவாகப் படிக்கவும்.

- மஞ்சை வசந்தன்

====

4 comments:

  1. //உலகமே ஏற்றுப் போற்றும் திருக்குறளைவிட பகவத்கீதை சிறந்ததா?///////////

    நீங்க ஏற்பீர்களா ? அல்லது திருக்குறள் கூறியதை ஏற்பீர்களா ?

    விஷ்ணுவின் வாமன அவதாரம், கிருஷ்ணர், லட்சுமி, இந்திரன்,ப்ரம்ம, யமன்.. ஆகியோர்களை தான் வள்ளுவர் சொல்கிறார்.

    குறள் - 1103 இல் 'தாமரைக் கண்ணான் ' என யார் சொல்லிறார் ?
    இந்த தாமரை கண்ணன் எந்த கடவுள் ?

    குறள் - 610 இல் 'அடியளந்தான்' என யாரை சொல்கிறார் ?
    இந்த தன அடியினால் (காலால்) உலகை அளந்த இந்த தெய்வம் யார் ?

    'அழல்போலும்மாலைக்குத் தூதாகி ஆயன்
    குழல்போலும் கொல்லும் படை'

    இந்த பாடலில் கூறும் ஆயர்பாடியிலுள்ள ஆயன் என்கிற இடை சிறுவர் யார் ?

    குறள்- 617 இல் 'தாமரையி னாள்.' என்கிற பெண் யார் ?

    எந்த கடவுள் தாமரையில் அமர்த்துள்ளர் ? யார் ?

    குறள் 25 - 'இந்திரனே சாலுங் கரி' என்கிற இந்த இந்திரன் என்கிற கடவுள் யார் ?

    இதையெல்லாம் ஏற்பீர்களா ?

    அதன்பின் வாருங்கள் !

    ReplyDelete
  2. ////“இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றைச் சொல்கிறோம். இதற்கு உண்மையில் இப்பெயர் கிடையாது. நம்முடைய பழைய சாஸ்திரங்கள் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது.
    /////////////////////////////////////////////////////////////////////

    எங்களது தர்மம் 'சனாதன தர்மம்' தான்.

    இந்து என்பது ரிக் வேத ரிஷிகள் பாரத தேசத்தை சேர்ந்தவர்களை அழைத்த ஒரு பெயர் தான் ஸிந்து . அதாவது ஸிந்து நதியை மையமாக வைத்து வந்த பெயர் ! இது மக்களை குறிக்கும் ஒரே பெயர் ! ஆனால் அவர்களது வேத தர்மத்தை குறிப்பிடும் பெயர் "சனாதன தர்மமே"

    ரிக்வேத ரிஷிகள் தாங்கள் வாழ்ந்த பிரதேசத்தை ஸப்த ஸிந்து என்றே அழைத்தனர். அந்தச் சொல்லே ஹப்த ஹிந்து என்று பாரசீக மொழியில் உருமாற்றம் அடைந்தது. சரஸ்வதி = ஹரஹ்வதி, அஸுர் = அஹுர் என்று பல சம்ஸ்கிருதச் சொற்கள் இதே ரீதியில் பண்டைய பாரசீக மொழியில் உருமாற்றம் பெற்றுள்ளன.

    இந்த சொல் உருமாற்றத்திற்கான அகச்சான்றுகள் நமது புராணங்களிலும், ஆகமங்களிலும் உள்ளன.

    விஷ்ணு புராணம், பத்ம புராணம் மற்றும் பிரஹஸ்பதி சம்ஹிதா ஆகியவற்றில் இருந்து பின்வரும் வசனம் கூறுகிறது ..


    ஆஸிந்தோ ஸிந்து பர்யந்தம் யஸ்ய பாரத பூமிகாஹ்
    மாத்ரூபூஹ் பித்ருபூச்சைவ ஸ வை ஹிந்து ரித்திஸ்ம்ரிதாஹ்


    “சப்த சித்துவுக்கும் இந்திய பெருங்கடலுக்கும் இடையில் பாரத பூமி நிலத்தை அவரின் தாய்நாடு மற்றும் தந்தையர் எனக் கருதுகிற எவரும் இந்துவாக அறியப்படுவர் "

    இங்கே பாரத பூமி என்பது இந்தியாவின் உண்மையான பண்டைய புராணத்திலுள்ள பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. "பூமி" என்றால், புவியின் பொருள், பாரத தேசம், பாரத வர்ஷா, இந்தியாவின் நிலம். இதை புராணங்கள், மகாபாரதம் மற்றும் பிற வேத நூல்களில் ஏராளமான வேத குறிப்புகளில் இந்திய பரவலாக பாரத வர்ஷா அல்லது பரத தேசம் மற்றும் இந்துஸ்தான் என குறிப்பிடப்படுகிறது.


    ஹிமாலயன் ஸமாரப்ய யாவ்திந்துஸரோவரம் |
    தன் தேவ்னிர்மிதன் தேஷன் ஹிந்துஸ்தானன் ப்ரசக்ஷ்யதே || - (பிரஹஸ்பதி ஆகமம்)


    “கடவுள் படைத்த நிலப்பரப்பான இமயமலை முதல் தென் பெருங்கடல் வரை இந்துசுதான் என்று அழைக்கப்படுகிறது.” இதில் இந்து என்கிற சொல் இந்துசுதானில் உள்ளது.


    Rig Veda (Nadistuti Sukta नदिस्तुति सूक्त, X.75)


    ஹிந்து என்பதன் அர்த்தம் ஹிம்சையில் துய்ப்பவன் அடுத்தவர் படும் கஷ்ட்டத்தை ஹிம்சையை தான் படுவதாக எண்ணி வருந்துபவனே ஹிந்து.

    இதை ரிக் வேத ஸ்ருதி வாக்கியத்தின் வாயிலாக அறியலாம்.
    "ஹிம்சைச துய்யதாம்ய -ஹிம்துனே அக்ஷகம்""

    ப்ருஹஸ்பதீய சாஸ்திரம், பவிஷ்ய புராணம், காலிகா புராணம், கல்பத்ரும, மாதவ திக் விஜயம், பாரிஜாத நாடகம், சப்த கோஷங்கள் ஆகியவற்றில் ஹிந்து என்கிற சொல் குறிக்கப்பட்டுள்ளதோடு அதற்க்கு மிக உன்னதமான அர்த்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன ...

    "ஹிம்ஸாயா தூயதே யஷ்ச ஸதாசரண தத்பர:
    வேத, கோ, ப்ரதிமா ஸேகி ஸ ஹிந்து முகவர்ணபாக்"
    (புத்த ஸ்ம்ருதி கி.மு. 4ம் நூற்றாண்டு)

    பொருள்: யார் ஹிம்சிக்கப்பட்டாலும் எவன் துக்கமடைகிறானோ, ஒழுக்கமான வாழ்க்கை நடத்துவதில் முனைப்புடன் உள்ளானோ, வேதம், பசு, விக்ரகங்கள் ஆகியவைகளை பக்தியுடன் வழிபடுகிறானோ அவனே ஹிந்து'

    "ஹிமாலயாத் ஸமாரப்ய யாவத் இந்து ஸரோவரம்
    தாத்தேவ நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரஷாத"

    (ப்ருஹஸ்பதீய ஆகமம் கி.மு. 4ம் நூற்றாண்டு)

    பொருள்: ஹிமாலாயம் முதல் ஹிந்து மஹாசஹரம் வரை பரந்து கிடைக்கும் தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த தேசம் ஹிந்துஸ்தானம் என அழைக்கப்படுகிறது.


    " ஜானுஸ்தானே ஜைன ஸப்த ஸப்த சிந்துஸ் ததைவ ச:
    ஸப்த ஹிந்துர்யாவனீய புனர்நேயா குருண்டிகா: "

    ( பவிஷ்ய புராணம் கி.மு. 4ம் நூற்றாண்டு)
    பொருள்: 'ஸ' என்கிற எழுத்து யவனர்கள் (கிரேக்க முதலானவர்கள்) பாஷையில் 'ஷா' என்று திரிகிறது. எனவே தான் 'ஸப்த ஸிந்து' என்கிற வாக்கியம் 'ஷப்த' ஹிந்து என் மாறியது'.


    சம்ஸ்கிருத நூல்களில் தொடங்கிய ஹிந்து என்ற சொல்லின் பயன்பாடு 9-10ம் நூற்றாண்டுகளில் வட இந்திய பிரதேச மொழிகளின் இலக்கியத்தில் அழுத்தமாக இடம் பெற்று விட்டது. பிருத்விராஜனின் பெருமைகளை விவரித்து அவரது அரசவைக் கவிஞரான சந்த பரதாயி எழுதிய பிருத்விராஜ் ராஸோ (11ம் நூற்றாண்டு) என்ற ஹிந்தி வீரகதைப் பாடலில் ஹிந்து என்ற சொல் ஏராளமான இடங்களில் வருகிறது.

    ReplyDelete
  3. சம்ஸ்கிருத நூல்களில் தொடங்கிய ஹிந்து என்ற சொல்லின் பயன்பாடு 9-10ம் நூற்றாண்டுகளில் வட இந்திய பிரதேச மொழிகளின் இலக்கியத்தில் அழுத்தமாக இடம் பெற்று விட்டது. பிருத்விராஜனின் பெருமைகளை விவரித்து அவரது அரசவைக் கவிஞரான சந்த பரதாயி எழுதிய பிருத்விராஜ் ராஸோ (11ம் நூற்றாண்டு) என்ற ஹிந்தி வீரகதைப் பாடலில் ஹிந்து என்ற சொல் ஏராளமான இடங்களில் வருகிறது.


    ”ஹிந்துக்கள் மிலேச்சர் மீது நடத்திய போர்”, “ஹிந்துக்களாகிய நாங்கள் மிலேச்சர்களைப் போல மானமற்றவர்களல்ல” போன்ற வரிகள் இந்த நூலில் விரவியுள்ளன.
    13ம் நூற்றாண்டில் வாழ்ந்த கபீர்தாசர், குருநானக், தாதூ தயால், நாபா தாசர் ஆகிய பக்தி இயக்கக் கவிஞர்களின் பாடல்களில் ஹிந்து, துரக் ஆகிய சொற்கள் முறையே இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் வேறுபடுத்திக் காட்டும் வகையில் பயின்று வந்துள்ளன. பாரதத்தின் கிழக்குப் பகுதியான வங்கத்தைச் சேர்ந்த தர்க்க சாஸ்திர நூல் ஒன்றில்….

    “சிவ சிவா, அவன் ஹிந்துவும் அல்ல யவனனும் அல்ல”
    (சிவ சிவ ந ஹிந்துர் ந யவன:) என்ற சொற்றொடர் காணப் படுகிறது.

    தென்னிந்தியாவை இஸ்லாமியப் படையெடுப்பிலிருந்து காப்பதற்காக 14ம் நூற்றாண்டில் எழுந்தது விஜய நகர சாம்ராஜ்யம். இதனைத் தோற்றுவித்த ஹரிஹர, புக்க சகோதரர்களின் அரசு முத்திரையில் “ஹிந்து ராய ஸுரத்ராண” என்ற பட்டப் பெயர் இடம் பெற்றுள்ளது.

    ராஜபுத்திர மன்னர்களின் ஆவணங்கள் அனைத்திலும் ஹிந்து என்ற பெயர் பெருமிதத்துடன் கூறப்படுகிறது. மகாராஷ்டிரத்தில் தோன்றிய சமர்த்த ராமதாசர் என்ற மகானின் பாடல்களில் “ஹிந்துஸ்தான் பளாவலேம்” போன்ற வரிகள் உள்ளன.

    இவரது ஆசியுடன் சத்ரபதி சிவாஜி அமைத்த சுதந்திர இந்து ராஜ்ஜியம் ”ஹிந்து பதபாதசாஹி” என்றே தன்னை அழைத்துக் கொண்டது.

    ”ஹிந்துவின் குரலையும், ஹிந்துவின் குடுமியையும், ஹிந்துவின் திலகத்தையும், வேத புராணங்களையும் காத்தவன்”
    என்று சிவாஜியைக் குறித்து கவிஞர் கவிராஜ பூஷண் புகழ்ந்து பாடியுள்ளார். வடக்கில் ஆப்கானிஸ்தானம் முதல் தெற்கே தஞ்சை வரை பரந்து விரிந்திருந்தது இந்த மராட்டிய ஹிந்து அரசு.

    தமிழில் தஞ்சை மராட்டியரின் ஆவணங்களிலேயே முதன் முதலில் ஹிந்து என்ற சொல் காணப் படுகிறது.

    சீக்கிய குருமார்களின் பல பாடல்களில் தங்களது அற நெறியை ஹிந்து தர்மம் என்று குறிப்பிடுகின்றனர். குரு தேக்பகதூர் அவர்களை இஸ்லாமிய மத அதிகார வர்க்கம் அச்சுறுத்திய போது, அவர்…
    “என்னுடையது ஹிந்து தர்மம்; உயிரினும் மேலாக இதை நேசிக்கிறேன்”
    (uttar bhanyo dharam ham hindu, ati priyako kima kare nikandu) என்று பதிலிறுத்தார்.

    சீக்கிய மதத்தை வீரர்களின் திருக்கூட்டமாக மாற்றியமைத்து அதற்கு காலசா என்று பெயரிட்ட குரு கோவிந்த சிங் (1666 – 1708) அந்தப் பிரகடனத்தையே ஹிந்து என்ற சொல்லால் அலங்கரிக்கிறார் –
    sakal jagat mein khAlsA panth gAje
    jAge dharam hindu sakal bhaND bhAje

    பற்றி பவிஷ்ய புராணம் இப்படிக் குறிப்பிடுகிறது
    சம்ஸ்க்ருதஸ்யைவ வாணீ து பாரதம் வர்ஷமுஹ்யதாம் |
    அன்யே கண்டே கதா ஸைவ ம்லேச்சா ஹ்யானந்தினோபவன் ||
    ஜாதுஸ்தானே ஜைனசப்த: ஸப்தஸிந்துஸ் ததைவ ச |
    ஹப்தஹிந்துர் யாவனீ ச புனர்க்ஞேயா குருண்டிகா ||

    - பவிஷ்ய புராணம், பிரதிஸர்கபர்வம், 5ம் அத்தியாயம்

    “ஹிந்து தர்மம் வாழ்வதற்காகவும், பொய்மைகள் அனைத்தும் அழிவதற்காகவும் சம்ஸ்கிருத பாஷை அன்னிய பிரதேசங்களில் அங்கு வாழ்வோரையும் இன்புறச் செய்யுமாறு ”யாவனீ”யாக, மிலேச்ச வாணி”யாக மாறுவது”

    இவ்வாறு, கி.மு.4ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டு வரை பாரதத்தின் பல மொழிகளிலும், பல பகுதிகளிலும் ஹிந்து என்ற சொல் ஏற்கனவே ஒட்டுமொத்த சனாதன தர்மத்தை பின்பற்றும் சமுதாயத்தையும் குறித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே பிரிட்டிஷாரும் இந்தச் சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

    எனவே, இந்து என்கிற பெயர் ரிக் வேத முனிவர்களால் பாரத தேச மக்களை அழைத்த பெயர் என அறியலாம், ஆனால் இந்த மக்கள் கடைபிடித்து "சனாதன தர்மம்". நாளடைவில் பாரத மக்களை குறிப்பிடும் இந்து என்கிற பெயர், வேத மதத்தை கடைபிடிக்கும் மக்களையும் 'இந்து' என அழைக்க ஆரம்பித்தார்கள்.

    எனவே, உண்மையான வேத பெயர் ' சனாதன தர்மமே" !

    தே வதந்தி மஹாத்மாநம் கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம் II

    -மஹாபாரதம் - 3.48-267

    ReplyDelete
  4. முட்டாள்தனமாக உள்ள்து

    ReplyDelete