அரசியல்

Saturday, March 20, 2010

‘‘வைக்கம் வீரர்’’ யார்? (ஜெயமோகனுக்கு மறுப்பு) -2

ஆய்வாளர்கள் இருவகை:
1. எது சரியென்று தேடல் மேற்கொண்டு, அரிய தரவுகளைப் பெற்று, ஆய்வு செய்து, உண்மையை, சமரசத்திற்கு இடமின்றி, விருப்பு வெறுப்பு இன்றி வெளியிடுவோர் ஒரு வகை.

2. முன் முடிவு ஒன்றை எடுத்துக் கொண்டு, அதற்குத் தேவையான வகையில், கற்பனைகளை, யூகங்களை, திரிபுகளை, ஆதாரமற்ற செய்திகளைக் கூறியும், தொடர்பில்லா செய்திகளைத் தொடர்புபடுத்தும் முயற்சிகளைச் செய்தும், தனக்குச் சாதகமில்லாத செய்திகளை முற்றாக மறைத்தும் தனது கருத்தை (முடிவை) நிலை நாட்டுகிறவர்கள் மற்றொருவகை.

இவர்களுள் ஜெயமோகன் இரண்டாம் வகை.

இவர் எடுத்துக் கொண்டு நிறுவ வந்தது பெரியார் வைக்கம் வீரர் அல்லர் என்பதே. அப்படியாயின் அந்தக் கோணத்தில் அதற்கான ஆதாரங்களைச் சொல்ல வேண்டும் என்ற கோணத்தில் சொல்லாமல், பெரியாரின் உழைப்பை, தியாகத்தை, தொண்டை, புரட்சியை, உயர்வை, பங்களிப்பை, சாதனைகளை, பெருமையை, புகழை, உலகமே ஏற்றுப் போற்றிய இணையிலாப் பெருமையை ஒட்டு மொத்தமாக மறைத்து, மாற்றி, ஒன்றுமே இல்லை, அவர் ஒரு சாதாரண ஆள். திராவிட இயக்கத்தவர் அவரை ஊதிப் பெருக்கிக் காட்டுகின்றனர் என்கிறார்.

மேலும் “ஈ.வெ.ரா. வரலாற்றைப் பற்றிய புரிதலோ, தன் கருத்துக்களின் விளைவுகள் பற்றிய புரிதலோ இல்லாமல் பேசினார். இன்று சில வரலாற்றாசிரியர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சித்திரம் போலன்றி, பெரியார் என்றுமே ஒரு மாபெரும் மக்கள் தலைவராக இருக்கவில்லை. அவரது கருத்துக்களுக்கு பரவலான சமூகச் செல்வாக்கும் இருக்கவில்லை. திராவிட இயக்கம் அவரது தலைமையில் ஒரு குறுங் குழுவாகவே இருந்தது.”

“இன்றைய திராவிட இயக்கத்தின் நிறுவனராக பின்னால் சென்று பார்ப்பதனாலே ஈ.வெ.ரா. அவர்களின் ஆளுமை இன்றுள்ள வடிவை அடைகிறது என்கிறார் இந்த ஜெயமோகன்.

இதைவிட, பைத்தியகாரப் பிதற்றல் வேறு என்ன இருக்க முடியும்?

மக்கள் செல்வாக்கில்லாதவரா பெரியார்? அவர் கொள்கையை மக்கள் ஏற்கவில்லையா? அண்ணாதான் பெரியாரை பெரியவராக்கினாரா? அற்பத்தனமும், அயோக்கியத்தனமும் இருந்தாலன்றி இப்படி எழுத முடியாது.

1. இன்றைக்கு தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் (பி.ஜே.பி. தவிர) பெரியார் படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்கின்றனவே அதன் அடித்தளம் என்ன? அவசியம் என்ன?

2. இடஒதுக்கீட்டில் எம்.ஜி.ஆர். கை வைத்ததும் மக்கள் அவரைப் புறக்கணிக்க, இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்தி, தன்னைத் திருத்திக் கொண்டு மீண்டும் செல்வாக்கு பெற்றாரே அதன் உட்பொருள் என்ன?

3. பி.ஜெ.பி. என்ன தகிடுதத்தம் போட்டாலும் தமிழகத்திலும் காலூன்ற முடியவில்லையே அதன் காரணம் யார்?

4. உலகத்திற்கே உரித்தான தமிழ் நூல் திருக்குறள் என்று மக்களுக்கு அடையாளம் காட்டி, அதை மாநாடுகள் போட்டு மக்கள் மத்தியில் பரப்பியவர் யார்?

5. இளம் வயது திருமணத்தை எதிர்த்து, விதவைத் திருமணத்தைத் தூண்டும் விதத்திலே செயல்பட்டவர் யார்? அதுவும் தன் குடும்பத்திலே செய்து காட்டியவர் யார்?

6. பெண்ணுரிமைக்காகவே தன் வாழ்க்கையைச் செலவிட்டு பெண்களுக்கென அனைத்து உரிமைகளும் கிடைக்க வழி செய்தவர் யார்? நன்றியுள்ள பெண்கள் அவருக்கு அளித்த பெயர்தானே “பெரியார்” என்ற சிறப்புப் பெயர், பெரியாரைப் பேசாத பெண்ணுரிமைப் போராளிகள் உண்டா?

7. ஆரிய ஆதிக்கத்தை ஒழித்து, ஆரிய பார்ப்பனர்களின் கொட்டத்தை ஒடுக்கியது யார்?

8. இடஒதுக்கீட்டிற்காக இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தத்தை ஏற்படுத்தச் செய்து இலட்சோப லட்சம் ஒடுக்கப்பட்ட மக்கள் உயர வழி செய்தது யார்?

9. மூடநம்பிக்கை ஒழிய மூலைமுடுக்கெல்லாம் மூத்திரப்பையோடு சுற்றி, தன்மானமுள்ள தமிழர்களை உருவாக்கியது யார்?

10. மானம் கெட்ட மணமுறையை மாற்றி சுயமரியாதைத் திருமணத்தை செய்து காட்டி இன்று பெருவாரியான மணங்கள் அப்படி நடக்கச் செய்த சிற்பி யார்?

11. கருவறைக்குள் செல்ல அனைத்து சாதியினருக்கும் உரிமை கிடைத்தது யாரால்?

12. உலக அளவில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் மக்களிடம் ஆழப்பதிந்த கடவுள் நம்பிக்கையை அவர் அகற்றவும் முயற்சித்தார். அதுவும் “மலையை மயிரைக் கட்டி இழுக்கிறேன்; வந்தால் மலை போனால் மயிர்!” என்று அடைவு (முடிவு) அறிந்தே முயற்சித்தார்.

மக்கள் பெருவாரியாகக் கடவுளை கைவிடவில்லை என்பதை மட்டும் வைத்து பெரியார் கொள்கைகளை மக்கள் ஏற்கவில்லை, நிராகரித்தார்கள் என்பது எவ்வளவு பெரிய அறிவீனம்.

கடவுள் நம்பிக்கையை விடமுடியாமல் மக்கள் உள்ளனர் என்பதுதான் உண்மையேயன்றி, கடவுள் நம்பிக்கை ஆட்டங்கண்டு, கலகலத்து நிற்பது நிதர்சன உண்மையல்லவா?

ஆனால், பெரியாரின் பிரச்சாரத்தால் மூடநம்பிக்கைகள், முட்டாள் தனங்கள், சாமியார் பின் செல்லல், மானம் இழத்தல் என்று எத்தனையோ இழிவுகள் இன்று அகலவில்லையா?

கடவுள் இல்லையென்ற பெரியார் கருத்தை மக்கள் பெருமளவு ஏற்காததால் பெரியாரை மக்கள் நிராகரித்ததாகப் பொருளா? பெரியாரின் கொள்கைப் பிரச்சாரத் தொண்டில் கடவுள் மறுப்பு என்பது ஒரு விழுக்காடு மட்டுமே.

ஆனால், மனித நேயத்தோடு அவர் மக்களின் உரிமைக்காக, சமத்துவத்திற்காக, இழிவு அகற்ற அவர் ஆற்றிய தொண்டிற்கு அளவுண்டா?

கடவுள் நம்பிக்கை கொண்ட கோடானு கோடி மக்கள், பெரியாரின் இந்த அளப்பரிய தொண்டுகளை ஏற்று, அவரை அளவு கடந்து மதித்ததை கண்கூடாகக் காணலாமே!

தமிழகத்தில் கடவுளை ஏற்றுக்கொண்ட மக்களில் 90 விழுக்காடு மதிப்பதை விழுக்காடு மக்கள் பெரியாரை அவரது தூய தொண்டிற்காய் மதிக்கக் கூடியவர்களாயிற்றே! பெரியாரை மனமார ஏற்றுக் கொண்டவர்களாயிற்றே!

இன்று பக்தர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் தாங்கள் பெற்றிருக்கும் வாழ்வு பெரியார் போட்ட பிச்சையென்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்களே தெரியாதா?
(தொடரும்)

2 comments:

  1. Super. நல்ல மறுப்பு. வெளங்கிறும்

    ReplyDelete
  2. Super. நல்ல மறுப்பு. வெளங்கிறும்

    ReplyDelete