அரசியல்

Saturday, March 20, 2010

‘‘வைக்கம் வீரர்’’ யார்? (ஜெயமோகனுக்கு மறுப்பு) -1

* “ஈ.வெ.ரா. வைக்கம் வீரர் அல்லர்’’!

* “ஈ.வெ.ரா. அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார்’’.

* ‘‘அவரது உரைகள் முரண்பாடுகளின் தொகையாக உள்ளன’’.

* ‘‘திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க ஒரு பரப்பிய இயக்கம். பரப்பிய இயக்கம் என்றுமே பொது மேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது... எதிரிகளை உருவாக்கி, அவர்கள்மீது உச்ச கட்ட வசைகளைப் பொழிந்து அந்தக் கருமைச் சித்திரம் முன்பு தன்னை வெண்மையாகக் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு ஹீரோ X வில்லன் என்ற நாடகத் தன்மை தேவையாகிறது.’’

* ‘‘ஈ.வெ.ரா. என்றுமே ஒரு மாபெரும் மக்கள் தலைவராக இருக்கவில்லை’’.

* “திராவிட இயக்கத்தை மக்களிடையே கொண்டு சென்றவர் கவர்ச்சிப் பாவாதியான சி.என். அண்ணாத்துரை அவர்களே’’.

* “காந்திய யுகத்தின் இன்னொரு பெருந் தலைவர் அல்ல ஈ.வெ.ரா.’’

* ‘‘வரலாற்று நிகழ்ச்சிகளைப் பார்க்கையில் அவற்றை எளிமையான தப்பு, சரிகளின் ஆட்டமாக அல்லாமல், சிக்கலான ஊடுபாவுகளின் பின்னலாக உருவகித்துக் கொள்வது உகந்தது’’.

* ‘‘கேரளம் புறத்தொடர்பு இல்லாமல் பழங்குடி மனநிலையை அப்படியே நீட்டித்துக் கொண்ட நிலமாகவே பதினெட்டாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது.’’


அறிவு, நாணயம் அறவே இல்லாமல், மாபெரும் உண்மைகளை முழுப்பூசணிக்காயை பிடிசோற்றில் மறைக்கும் வகையில், உண்மை கலவா அப்பட்டமான பொய்களைக் கூறி, ஒரு பெரும் இமயத்தை மணற்குன்றாகக் காட்ட முயலுவதோடு பெரியார் என்ற மாபெரும் மனிதரின் மதிப்பீடுகளை வரலாறு அறிய வாய்ப்பில்லா இணையதள இளைஞர்களின் மத்தியில் தகர்த்து, தரம் தாழ்த்தும் அற்பத்தனமான அயோக்கிய வழியிலான முயற்சியில் இறங்கியுள்ள ஜெயமோகன் என்பவர் இணையதளத்தில் ஏற்றியுள்ள கருத்துகளே மேற்கண்டவை.

யார் இந்த ஜெயமோகன்?

பெரிய ஆய்வே தேவையில்லை.

“காந்தியும் வைக்கமும்’’ என்ற தலைப்பில் இணையத்தில் (http://www.jeyamohan.in) அவர் எழுதியுள்ள கட்டுரையைக் கூர்ந்து நோக்கினால் யார் இந்த ஜெயமோகன் என்பது அப்பட்டமாக விளங்கிவிடும்.

ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை அடிமனதில் ஏற்றிக் கொண்டு, கண்ணியவான்போல் கருத்துக்கூற முற்பட்டிருக்கும் ஒரு வஞ்சக வேடதாரி இந்த ஜெயமோகன் என்பது, இக்கட்டுரையை இவர் எழுதியுள்ள முறையிலேயே, இம்மியளவும் அய்யத்திற்கிடமின்றி தெளிவாகின்றது.

சங்கர நாராயணன் என்பவர்,
“வைக்கம்’’ போராட்டத்தில் காந்தியின் துரோகம் குறித்து பெரியாரின் மேற்கோளுடன் நிறையவே பேசப்படுகிறது. “வைக்கம் தெருவில் தாழ்த்தப்பட்ட சாதியினர் நடமாட உரிமையை வாங்கிக் கொடுத்தவர் “பெரியார்’’ என்ற வரிகளை சுவர்களிலெல்லாம் காண்கிறோம். உண்மையில் என்ன நடந்தது?’’ என்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முற்பட்ட இந்த ஜெயமோகன் இருபது பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையின் துவக்கத்திலேயே அவர் எழுதியுள்ள அற்ப செய்திகளே மேற்கண்டவை.

இருபது பக்கம் கொண்ட இக்கட்டுரையில்,
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை ‘‘காந்தி’’ என்றும் இராஜகோபாலாச்சாரியாரை ‘‘இராஜாஜி’’ என்றும் மக்கள் அன்போடு அழைக்கும் வகையிலே மதிப்போடு குறிப்பிடுகிற இந்த ஜெயமோகன், கோடானுகோடி மக்களால் உலக அளவில் “அண்ணா’’ என்று அழைக்கப்படும் அந்த அறிஞர் பெருந்தகையை அண்ணாத்துரை என்றே எழுதுகிறார். உலகமே ஏற்றுக் கொண்ட “பெரியார்’’ என்ற மதிப்பிற்குரியவரை ஈ.வெ.ரா. என்று மட்டுமே குறிப்பிடுகிறார். தப்பித் தவறிக்கூட அந்த இருபது பக்கத்தில் எந்த இடத்திலும் பெரியார் என்று குறிப்பிட்டுவிடக் கூடாது என்பதில் திட்டமிட்டு எச்சரிக்கையுடன் இருக்க ஈ.வெ.ரா. என்றே குறிப்பிடுகிறார்.

காந்தியாரை “காந்திஜி’’ என்று எல்லோரும் மதிப்போடு அழைப்பது வழக்கில் இருக்கையில் காந்திஜி என்று அவரைக் கூற மறுக்கும் இந்த ஜெயமோகன் இராஜகோபாலாச்சாரியாரை மட்டும் “இராஜாஜி’’ என்று அழைக்கிறார்.

முழுப்பெயரைச் சொன்னால் சிறுமையா? பகுத்தறிவுப்படி தவறா? என்ற கேள்வி எழலாம். அப்படியாயின் இராஜகோபாலாச்சாரியாரையும் பெயர் சொல்லியிருக்கலாம் அல்லது ஈ.வெ.ரா. என்று பெரியாரைச் சொன்னது போல சி.ஆர். என்று இராஜாஜியை அழைத்து மகிழலாம் அல்லவா? ஏன் அழைக்கவில்லை?

இங்குதான் சனாதன தர்மத்தைத் தாங்கும் இவர்களின் (ஜெயமோகன்களின்) உண்மை உருவம் புலப்படுகிறது. “அண்ணா’’ “பெரியார்’’ ‘‘காந்திஜி’’ என்று கூற மறுக்கும் அவரது உள்ளம் ‘‘இராஜாஜி’’ என்று குறிப்பிட மட்டும் தாராளமாக இடம் கொடுக்கிறது. இது வெறும் பெயர் பிரச்சினையல்ல. இது உளவியல் சார்ந்த அணுகுமுறை. ஓர் ஆள் யார் என்பதை அடையாளம் காட்டும் கருவி. அவர்கள் உணர்வை வெளிப்படுத்தும் தடயம்.

“துக்ளக்’’ சோ இராமசாமி அப்படித்தான் தன்னை நடுநிலையாளர் போலக் காட்டிக் கொண்டு, எல்லோரையும் விமர்சிப்பார். சங்கராச்சாரி அதுவும் பெரியவாள் என்று அவாள் அழைக்கும் சந்திரசேகர சரஸ்வதி சாமியாரை மட்டும் அவர் விமர்சிக்க மாட்டார். இராஜாஜி பெயர் வைத்தால் அதை ஏற்பார். அண்ணா பெயரை வைத்தால் ஏற்க மாட்டார். அண்ணா சாலையென்று பெயர் வைத்தால் அதை ஏற்காது மவுன்ட்ரோடு என்றே எழுதுவார்.

இதுதான் ஆர்.எஸ்.எஸ். அடிமனம் என்பது ஆரிய மனம் அல்லது ஆரிய அடிமனம் என்றும் கொள்ளலாம்.

(தொடரும்)

No comments:

Post a Comment