அரசியல்

Sunday, June 4, 2017

இளைஞர்களே! பார்ப்பன ஆதிக்கம் பாரீர்!

- மஞ்சை வசந்தன் பார்ப்பனர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக மதத்தை, கடவுளை, ஜாதிப் பிரிவை, சடங்குகளை தூக்கிப் பிடிப்பர், காத்திடத் துடிப்பர். காரணம், அவர்கள் உயர்வு, ஆதிக்கம், பிழைப்பு அனைத்தும் அவற்றை அடிப்படையாகக் கொண்டவை.
ஆரிய பார்ப்பனர் ஆதிக்கத்தைக் காப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட அமைப்புகளே ஆர்.எஸ்.எஸ். முதல் பி.ஜே.பி. வரையிலான மதவாத அமைப்புகள்.
சாஸ்திரங்களை, மனு முதலான ஸ்மிருதிகளை ஆட்சியாளர்களின் துணையுடன் அமுல்படுத்தி, அனைத்திலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி, மற்றவர்களை அடிமைப்படுத்தினர், இழிவுபடுத்தினர், மற்றவர்களின் உரிமைகளைப் பறித்தனர்.
19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜோதிராவ்பூலே, ஷாகு மகராஜ், நீதிக்கட்சியினர் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் ஆரிய பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராய் உரிமைக்குரல் எழுப்பி, அவர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, ஆரிய பார்ப்பனர் அல்லாதாருக்கு உரிய பங்கை, கல்வி, உத்தியோகங்களில் பெறப் போராடினர். அதன் விளைவாய் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பெற்று, மற்ற மக்களும் கல்வி உத்தியோக வாய்ப்பு களையப் பெற்றனர்; உயர்ந்தனர்.
இதைக் கண்டு கொதித்த ஆரிய பார்ப்பனக் கூட்டம் இடஒதுக்கீட்டிற்கு எதிராய் எத்தனையோ முறை போராடித் தோற்றனர். இடஒதுக்கீட்டால் கல்வித் தரம், நிர்வாகத் திறன், தகுதி, திறமை எல்லாம் கெட்டுவிட்டதாய் கூக்குரலிட்டனர்.
ஆனால், இடஒதுக்கீட்டின் பயனாய் பார்ப்பனர் அல்லாதார் கல்வி, வேலைவாய்ப்புகளில் வாய்ப்பு பெற்று, தங்கள் தகுதியை, திறமையை வெளிப்படுத்தியதோடு, ஆரிய பார்ப்பனர்களின் தகுதியின்மையையும் வெளிப்படச் செய்தனர்.
பள்ளித் தேர்வு, கல்லூரித் தேர்வு, உயர் கல்வி, நிர்வாகத் தேர்வு, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வுகளிலும் பார்ப்பனர் அல்லாதாரே முன்னிலையில் வந்து சாதித்தனர், சாதிக்கின்றனர்.
இப்போதுதான் முதல் தலைமுறையினர் கல்வி, வேலைவாய்ப்புகளை பெறத் தொடங்கியுள்ள நிலையில், இன்னுமா இடஒதுக்கீடு, எத்தனை காலத்திற்கு இடஒதுக்கீடு என்று ஆரிய பார்ப்பனர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
இதைப் பார்த்த பார்ப்பனர் அல்லாதார் சிலரும், இடஒதுக்கீடு ஏன்? இனி தேவை இல்லையே என்கின்றனர். நகரத்தில், படித்த பெற்றோருக்குப் பிறந்த சில அரைவேக்காடுகளின் பிதற்றல் இது.
இடஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உரிமை! அவர்கள் மீள்வதற்கான கருவி! சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான வழிமுறை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இடஒதுக்கீட்டு செயல்பாட்டில் கருத்துக் கூறுவது சிறுபிள்ளைத்தனம்! பார்ப்பனர் அல்லாதாருக்கு இடஒதுக்கீடு எந்த அளவிற்குப் பயன்படுகிறது என்பதை, பார்ப்பனர்கள்தான் அதிகம் அறிந்து வைத்துள்ளனர். அதனால்தான், அவர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். அறுபது ஆண்டுகளுக்கு மேலாய் இடஒதுக்கீட்டை செயல்படுத்தியும் ஆரிய பார்ப்பன ஆதிக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை பார்ப்பனர் அல்லாதார் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பார்ப்பனர்களே வெளியிட்டுள்ள, பார்ப்பனர்கள் பல துறைகளிலும் செலுத்தும் ஆதிக்கத்தை இதோ பாருங்கள் இளைஞர்களே!
இப்போது சொல்லுங்கள்! மக்கள் தொகையில் 4% வீதம் கூட இல்லாத பார்ப்பனர்கள் 60% மேலான வேலைவாய்ப்புகளைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்றால், இடஒதுக்கீடு இல்லாமலிருந்தால் எல்லா இடங்களையும் அவர்களே கைப்பற்றிக் கொள்வர் என்பதுதான் உண்மை!
நீதித்துறையிலே 50% மேல் பார்ப்பனர்களே நீதிபதிகளாக இருந்தால் நாட்டில் எப்படி நீதி கிடைக்கும்? ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்? அரசுத் துறையிலே இவ்வளவு ஆதிக்கம் என்றால் தனியார் துறையில் சொல்லவே தேவையில்லை. தனியார் துறை என்றாலே பூணூல் மயம்தான் என்கின்ற அளவிற்கு அவர்கள் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.
எனவேதான் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்! உடனே அது நடைமுறைக்கு வரவேண்டும் என்று போராடுகிறார்.
பார்ப்பனர்களின் இந்த ஆதிக்கத்தைப் பார்த்தாவது பார்ப்பனரல்லாத இளைஞர்கள் விழிப்பு பெற வேண்டும்.
அரசுத் துறையில் இடஒதுக்கீட்டை முறையாக அமுல்படுத்தி, குறிப்பாக நீதித்துறையிலும், உயர் பதவிகளிலும் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து, தனியார் துறையில் பணிப் பாதுகாப்பு, ஓய்வு ஊதியம், இடஒதுக்கீடு என்று எல்லா உரிமைகளையும் பெறவேண்டும். இல்லையேல், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகும்! அவர்களின் தலைமுறை அடிமட்டத்திற்குச் செல்லும்.
மீண்டும் வர்ணாசிரம கொடுமை வரும்! ஒடுக்கப்பட்ட மக்கள் மீண்டும் சூத்திர நிலையையும், அப்பன் தொழிலையே செய்து மடிய வேண்டிய அவலமும் வரும்!
எதை எதையோ இணையத்தில் பகிரும் இளைய சமுதாயம், தங்கள் எதிர்காலம் குறித்த இதுபோன்ற செய்திகளைப் பகிர்ந்து, தங்கள் உரிமைக்காக ஒன்று சேர்ந்து போராடி, கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைப் பெறவேண்டும்! அதுவே அவர்களின் எதிர்கால தலைமுறையை வாழ்விக்க உதவும்! ஆரிய ஆதிக்கத்தை அகற்றும்!

No comments:

Post a Comment