அரசியல்

Showing posts with label வீரசாவர்க்கர். Show all posts
Showing posts with label வீரசாவர்க்கர். Show all posts

Friday, January 15, 2016

அய்ந்து பேருக்கு மனைவி அழியாத பத்தினி போல் அஞ்சி அஞ்சி கெஞ்சியவர் வீர சாவர்க்கராம்!

ஆரிய அகராதியில் அர்த்தமே வேறுதான்!

அய்ந்து பேருக்கு மனைவி அழியாத பத்தினி போல்

அஞ்சி அஞ்சி கெஞ்சியவர் வீர சாவர்க்கராம்!

- மஞ்சை வசந்தன்

1883 மே மாதம் 28ஆம் நாள் மகாராட்டிராவில் நாசிக் அருகில் உள்ள பாகூர் என்ற கிராமத்தில் சித்பவன் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த வினாயகத் தாமோதர் சாவர்க்கர்தான் இந்துமதவெறி கூட்டத்தினாரால் வீரசாவர்க்கர் என்று அழைக்கப்படுகின்றார்.

ஆனால், இவரைப் போன்ற ஒரு முதல்தரக் கோழையை வரலாற்றில் காணவே முடியாது!
ஆரியர்கள் தந்திரமே அதுதானே!

இல்லாத கடவுள்தான் எல்லாவற்றையும் இயக்குகிறது என்பான்!
அய்ந்துபேரின் மனைவியை அழியாத பத்தினி என்பான்!

அதேபோல், இக்கட்டு வரும்போதெல்லாம் அஞ்சியும் கெஞ்சியும், மன்னிப்புக்கு மேல் மன்னிப்பு கேட்டும் மண்டியிட்ட கோழைச் சாவர்க்கரை வீரசாவர்க்கர் என்றனர்.

அஞ்சலும் கெஞ்சலும்:

இதற்கு பெரிய விவாதமோ, ஆய்வோ தேவையில்லை. அவர் செயல்பாடுகளை வரிசைப்படுத்தினாலே அவர் எப்படிப்பட்ட கோழையென்பது தெளிவாய்த் தெரியும்.

கல்லூரிப் படிப்பை இந்தியாவில் முடித்துவிட்டு, பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக இலண்டன் சென்றார். அங்கு பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் பலருடன் தொடர்புகொண்டார்.

1909ஆம் ஆண்டு, இலண்டனில் சர் கர்சன் வைலி என்ற ஆங்கில அதிகாரியைச் சுட்டுக் கொல்லும்படி மதன்லால் திங்ரா என்பவரைத் தூண்டிவிட்டார்.

அதே ஆண்டு இறுதியில் நாசிக் கலெக்டர் எ.எம்.டி.ஜாக்சன் என்பவரைச் சுட்டுக் கொன்றவனுக்கு துப்பாக்கி வழங்கினார்.

ஜாக்சன் இந்திய மக்களை நேசித்தார்; அறிவியல் மனப்பான்மை உடையவர்.
ஆக, இந்த இரண்டு குற்றச் செயல்களிலும் அடுத்தவரை மாட்டவிட்டு தான் தந்திரமாக தப்பித்துக்கொண்ட கோழை இந்த ஆள்.

இவர்களது குற்றச்செயல்பாடுகளைக் கண்டறிந்த பிரிட்டிஷ் அரசாங்கம், இவரது அண்ணனைக் கைது செய்து அந்தமான் சிறையில் அடைத்துவிட்டு, பாரிசில் இருந்த சாவர்க்கரையும் கைதுசெய்யத் தேடியது. 1910இல் கொலைக்குற்றமும், தேசத் துரோகக் குற்றமும் சாட்டப்பட்டு, இலண்டன் விக்டோரியா இரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

அவரை இந்தியாவிற்கு ஏற்றிவந்த கப்பல் பிரான்ஸ் நாட்டின் மார்ஸெ நகரில் நின்றபோது, கப்பலின் ஜன்னல் வழியாகத் தப்பித்து ஓடினர்.

ஆனால், பிரெஞ்சு நாட்டில் மீண்டும் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டார். இரண்டு குற்றங்களுக்கும் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்தமான் சிறையில் 04.07.1911 அன்று  அடைக்கப்பட்டார்.
ஆனால், இந்த வீரர்(-?) என்ன செய்தார் தெரியுமா? பிரிட்டிஷ் அரசுக்குக் கருணை மனு போட்டார். பிரிட்டிஷ் அரசு கருணை காட்டவில்லை.

24.11.1913இல் அப்போதைய கவர்னர் ஜெனரலின் நிர்வாகத்தில் உள்துறை பொறுப்பிலிருந்து ரெனினால்ட் கிராட்டோக் என்பவருக்கு, இரண்டாவது கருணை மனு போட்டார்.

“1906-_1907இல் நிலவிய கொந்தளிப்பான, நம்பிக்கையற்ற சூழ்நிலைமை எங்களை சமாதானம், முன்னேற்றம் என்ற பாதையில் செல்லமுடியாமல் வஞ்சித்து விட்டது. இந்தியாவிலும் மனித குலத்தினதுரும் நன்மையை மனத்தில் கொண்டுள்ள எந்த மனிதரும் குருட்டுத்தனமாக அந்தப் பாதையில் இனி அடியெடுத்து வைக்கமாட்டார். எனவே, பல்வகையிலும் நல்லெண்ணமும் கருணையும் கொண்ட அரசாங்கம் என்னை விடுதலை செய்யுமானால், அரசியல் சட்டவகையான முன்னேற்றத்திற்கும் ஆங்கிலேய அரசாங்க விசுவாசத்திற்கும் மிக உறுதியான ஆதரவாளனாக மட்டுமே இருப்பேன்.

மேலும், அரசியல் சட்டவகையான மார்க்கத்திற்கு நான் மாறி வந்துள்ளது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒரு காலத்தில் என்னைத் தங்களது வழிகாட்டியாகப் பார்த்துவந்த, வழிதவறிப் போன இளைஞர்களை மீட்டுக் கொண்டுவரும். எந்த வகையில் நான் அரசாங்கத்திற்குப் பணிபுரிய வேண்டும் என்று அது விரும்புகிறதோ அதற்குத் தகுந்தபடி நான் பணிபுரிவேன். ஏனெனில் எனது மனமாற்றம் எப்படி உணர்வுபூர்வமானதாக உள்ளதோ அதே போலவே எனது எதிர்கால நடத்தையும் இருக்கும் என நம்புகிறேன்.

என்னை சிறையில் வைத்திருப்பதன் மூலம் பெறப்படுவது, வெளியில் விடுவதனால் கிடைப்பதை ஒப்பிடுகையில் ஒன்றுமேயில்லை.

வலிமையுடையோரே கருணையுடையவராக இருக்க முடியும். எனவே, பாதை தவறிப் போன மகன் அரசாங்கம் எனும் பெற்றோர்களின் கதவுகளுக்குத் திரும்பிவராமல் வேறு எங்கு செல்வான்? இந்த விசயங்களை மாண்புமிக்க தாங்கள் அன்புடன் கருத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.’’
இப்படி கெஞ்சிக் கூத்தாடிய இவர்தான் வீரராம்!

இது மட்டுமல்ல, அந்தமான் சிறையில் என்ன செய்தார் தெரியுமா?

அந்தமானில் சாவர்க்கரின் சக கைதிகளிலொருவராக இருந்தவர் சக்ரவர்த்தி. சாவர்க்கரும் அவரது சகோதரர் கண்பத்தும் (கணேஷ்) சிறைக் கொடுமைகளைக் கண்டனம் செய்து, சிறையில் வழங்கும் உணவை உட்கொள்ளக் கூடாது, சிறையதிகாரிகள் சொல்லும் வேலைகளைச் செய்யக் கூடாது என்ற கைதிகளைத் தூண்டிவிடுகின்றனர். ஆனால், வேலை நிறுத்தத்தில் சேரவேண்டிய தருணத்தில் சாவர்க்கர் அழத் தொடங்கிவிடுகிறார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் தனிமைச் சிறையில் அடைக்கப்பட வேண்டியிருக்கும், வயதான காலத்தில் தன்னால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது என்கிறார். ஆனால், அவரைவிட அதிக காலம் சிறையிலிருந்த, அவரைவிட வயதில் மூத்தவர்களாக இருந்த கைதிகள் பலர் மூன்ற வாரங்களுக்கு மேல் உணவு உட்கொள்ளாமல் இருந்தனர். கைதிகளின் போராட்டம் வெற்றியடைந்தது.

1921இல் அந்தமானிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு, முதலில் ரத்தினகிரி சிறையிலும் பின் ஏர்வாடி சிறையிலும் அடைக்கப்பட்டார்.

அப்போது இவர் தன் குடும்பத்தவரை ஒன்றுதிரட்டி தனது விடுதலைக்கு பலவகையில் முயன்றார்.

சிறையிலிருந்து வெளியே வருவதற்காக “அய்ந்தாண்டுக் காலத்திற்கு அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் எவ்வகையான அரசியல் நடவடிக்கைகளிலும் அந்தரங்கமாகவோ அல்லது பகிரங்கமாகவோ ஈடுபடப் போவதில்லை’’ என்றும் “அய்ந்தாண்டுக் காலத்திற்குப் பிறகும் அரசாங்கம் விரும்பினால்இந்தக் கட்டுப்பாட்டைப் புதுப்பித்துக் கொள்ளலாம்’’ என்றம் ஒரு உறுதிமொழி எழுதித் தருகிறார். இந்த உறுதிமொழியைப் பதிவு செய்யும் அரசாங்கத் தீர்மானம் கூறுகிறது:

திரு சாவர்க்கர் இந்த நிபந்தனைகளுக்கான ஒப்புதலை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். இது அவரது விடுதலைக்கான நிபந்தனையாக இருக்காது என்ற அவரிடம் எடுத்துச் சொல்லப்பட்டபோதிலும் அவர் கீழ்க்கண்ட அறிக்கையை சமர்பித்துள்ளார்: “என்மீது நடத்தப்பட்ட விசாரணையும் அளிக்கப்பட்ட தண்டனையும் நீதியானதும் நியாயமானதும் என்பதை இதன் மூலம் ஏற்றுக் கொள்கிறேன். கடந்த காலத்தில் நாடியது போன்ற வன்முறை வழிமுறைகளை மனதார வெறுக்கிறேன். சட்டத்தையும் அரசமைப்பையும் எனது முழுச் சக்திக்கும் ஏற்ற வகையில் உயர்த்திப் பிடிப்பது எனது கடமை என்று உணர்கிறேன். எதிர்காலத்தில் எந்த அளவுக்கு எனக்கு அனுமதி வழங்கப்படுகிறதோ அந்த அளவிற்கு (அரசியல்) சீர்திருத்தத்தை வெற்றிகரமானதாக்க விருப்பம் கொண்டிருக்கிறேன்.’’

1924இல் கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் ஏரவாடா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்: 1. ரத்னகிரி மாவட்டத்தை விட்டு அரசாங்கம் அல்லது மாவட்ட நீதிபதியின் அனுமதியின்றி எங்கும் செல்லக் கூடாது. 2. அய்ந்தாண்டுக் காலத்திற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் எத்தகைய அரசியல் நடவடிக்கைகளிலம் ஈடுபடக் கூடாது. இந்தக் காலக் கெடுவை அரசாங்கம் விரும்பினால் தொடர்ந்து நீட்டிக்கலாம்.

“எத்தகைய அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை’’ என்ற உறுதிமொழியின் பேரில் விடுதலையான சாவர்க்கர் ‘சும்மா’ இருக்கவில்லை. ரத்னகிரியில் அவரைச் சந்தித்து அவரது ஆதரவைப் பெற்ற பிறகே டாக்டர் எச்.பி.ஹெட்கெவர், 1925இல் ஆர்.எஸ்.ஆர். அமைப்பை நிறுவினார். இதே ஆண்டில்தான் சாவர்க்கர் நான்காவது முறையாக பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் வடமேற்கு எல்லை மாகாணத்தில் வெடித்த வகுப்புக் கலவரம் தொடர்பாக புனெவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘மராத்தா’ என்ற பத்திரிகையின் மார்ச் 1925 இதழில் முஸ்லிம் விரோத - இந்து வகுப்பு வெறிக் கட்டுரையொன்றை சாவர்க்கர் எழுதியிருந்தார். அதனைக் கண்டித்து அரசாங்கம் அவரது விடுதலையை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்ததுதான் தாமதம், உடனே, 6.4.1925இல் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில், ஒரு நீண்ட தன்னிலை விளக்கம் கொடுக்க வாய்ப்புத் தரப்பட்டதற்காக நன்றி செலுத்தும் சாவர்க்கர்’’.

“எனது கட்டுரையில் ‘சுயராஜ்யம்’ என்ற வார்த்தை வருகிற ஒரே இடம், மூன்றாவது பத்தியின் இறுதியில்தான். அந்த வார்த்தை அங்கு குறிப்பிடப்படுவது நானோ அல்லது மற்றவர்களோ ‘சுயராஜ்யம்’ என்பதைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதைக் காட்டவோ சுட்டவோ செய்வதில்லை என்பது வெளிப்படை’’ என்று எழுதினார்.

‘சுயராஜ்யம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்ட ‘வீர’ சாவர்க்கர் மீது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் 1937 வரை நீடித்தன. 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி நடந்த முதல் மாகாண சட்டசபைத் தேர்தல்களில் பம்பாய் மாகாணத்திலும்கூட காங்கிரஸ் பெரும் வெற்றி கண்டிருந்தபோதிலும், உடனடியாக அரசாங்கப் பொறுப்பை மேற்கொள்ள முன்வரவில்லை. இந்து மகா சபையின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவை 10.5.1937இல் சாவர்க்கரை விடுதலை செய்தது.

இவர் ஆங்கிலேயரிடம்தான இப்படி மண்டியிட்டுக் கெஞ்சினார் என்றில்லை,

இந்தியா விடுதலை அடைந்தபின் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், 22.2.1948இல் பம்பாய் நகரக் காவல்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதுகிறார்: அதில், “நான் ஒருபோதும் வெறுப்பை ஊக்குவிக்கவோ முகமதியர்களை முகமதியர்கள் என்பதற்காக அவர்களை வெறுக்கும்படியோ அல்லது அவர்கள்மீது வன்முறைச் செயல்களைப் புரியும்படியோ இந்துக்களை ஒருபோதும் தூண்டிவிட்டதில்லை’’ என்று பச்சைப் பொய் கூறினார்.

எனக்கு இப்போது 65 வயதாகிறது. கடந்த மூன்றாண்டகளாக, நெஞ்சுவலி, நரம்புத்தளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக அடிக்கடி படுத்தப் படுக்கையாக இருக்கிறேன். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நமது புதிய தேசியக் கொடியை ஏற்றுக் கொண்டு அதனை என் வீட்டில் ஏற்றிவைத்தேன். இது எனது ஆதரவாளர்கள் சிலருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது...

எனவே, சந்தேகம் அனைத்தையும் களையும் பொருட்டும் எனது கோரிக்கை மனுவிற்கு வலுச் சேர்க்கும் பொருட்டும் அரசாங்கம் விரும்புகிற எத்தனை காலத்திற்கும் வகுப்பு அல்லது அரசியல் சார்ந்த பொது நடவடிக்கை எதிலும் பங்கேற்க மாட்டேன் என்ற உறுதிமொழியை _ இந்த நிபந்தனையுடன் எனக்க விடுதலை வாங்கப்படுமேயானால் _ தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

இந்தியா _ பாகிஸ்தான் பிரிவினையையொட்டி நடந்த கொடூரமான வகுப்புக் கலவரங்களின் காரணமாக அந்தநத நாடுகளில் உள்ள மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்தியப் பிரதமர் நேருவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுக்குமிடையே 1950இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை இந்துமகாசபை எதிர்த்ததால், நாட்டில் வகுப்புக் கலவரம் மூளும் அபாயம் இருப்பதாக மத்திய அரசாங்கம் கருதியது. சாவர்க்கரும் வேறு முக்கிய இந்துமகா சபைத் தலைவர்களும் ‘1950ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்’ கீழ் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் வைக்கப்பட்டவுடனேயே வழக்கம்போல சாவர்க்கரின் கோழைத்தனம் தலைதூக்கியது. 21.4.1950 அன்று பம்பாய் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் “அரசாங்கம் நிர்ணயிக்கிற எத்தனை காலத்திற்கும் நடப்பு அரசியலில் எந்தவிதப் பங்கும் மேற்கொள்ளாமல் இருப்பதாக’’ உறுதிமொழி எழுதித் தருவதாகக் கூறினார். மேலும், “அரசியல் களத்திலிருந்து தான் விரைவில் ஒய்வு பெறப் போவது அனைவரும் அறிந்த விசயம்’’ என்றும் கூறினார். நீதிமன்றத்தில் அவர் சார்பில் வழக்கறிஞர் கே.என்.தாரப் என்பார் கொடுத்த உறுதிமொழிகள் பேரில் விடுதலை செய்யப்பட்டார்.

இப்படிப்பட்ட கடைந்தெடுத்தக் கோழையைத்தான் வீர சாவர்க்கர் என்கிறது ஆரியப் பார்ப்பனக் கூட்டம். இவருக்குத்தான் நாடாளுமன்றத்தில் சிலை! இதைவிட வெட்கக்கேடு வேறு உண்டா?