தின (இன) மலரே!
சிந்தனைச் சிற்பியை சிந்திக்கச் சொல்லும் சிறுமதிக் கூட்டமே!
மேம்புல் மேய்ந்து மேதாவிலாசம் காட்டுவதா?
இந்திய வரலாற்றில் குப்தர்களின் ஆட்சிக் காலம் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. காரணம், சந்திரகுப்த மவுரியரின் ஆட்சிக் காலத்தில்தான் சமணமும், பவுத்தமும் இந்தியாவில் தழைத்தோங்கியது என்று குறிப்பிட்டுள்ள வீரமணியின் வரலாற்று அறிவு பாராட்டுக்குரியது. ஆனால், இந்த அளவிற்கு புலமை இலக்கியத்தில் இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. கி.வீரமணி இனிமேலாவது தமிழ் இலக்கியத்தையும் வரலாற்றையும் ஆழ்ந்து படித்து, சிந்தித்து அதன்பின் இந்து சமயம் குறித்து புத்தகம் எழுத வேண்டும்; செய்வாரா?
எழுதியவர்: என்.நர்மதா, இது உங்கள் இடம் - தினமலர் - சென்னை _ 09.07.2015)
ஆழ்ந்து படிக்க அறிவுரைச் சொல்லும் இந்த அம்மையார், மேம்புல் மேய்ந்துவிட்டு உளறியிருக்கிறார். திரு.கி.வீரமணி அவர்களின் கீதையின் மறுபக்கம் நூலில் கூறியிருப்பதாக இவர் காட்டும் பகுதி முழுமையாக வெளியிடப்படாது மக்களை ஏமாற்ற முதல் இரண்டு வரிகளை எடுத்துக் காட்டியுள்ளார். இதுவே அறிவு நாணயம் இல்லா அயோக்கியத்தனமாகும். எனவே, முழுப்பகுதியையும் கீழேத் தருகிறேன்.
சந்திரகுப்த மவுரியரின் காலத்தில் சமணமும், அசோகர் காலத்தில் பவுத்தமும் தழைத்தோங்கிய பிறகு கி.மு. இரண்டாவது நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் அதாவது மவுரிய வம்சத்து கடைசி மன்னான பிரசுத்ருதனைப் புஷ்யமித்ர சுங்கன் கொன்று ஆட்சியைக் கைப்பற்றியவுடன் வந்த ஆட்சியில் (கி.மு.184க்குப் பிறகு) வேகமாகப் புகுத்தப்பட்ட பல மாறுதல்களில் குறிப்பாகப் பண்பாட்டுப் படையெடுப்புகளில்தான் மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரண்டு காவியங்களின் பாடல்களில் தங்களுக்கு ஏற்ற வகையில் அவைகளில் பல கருததுகளைப் புகுத்தி மக்களிடையே பரப்பியிருக்கக் கூடும் என்று ஃபர்குஆர் (FarQuhar) என்ற ஆய்வாளர் 1971இல் எழுதிய “The Crown of Hinduism” என்ற நூலில் 243, 259 ஆகிய பக்கங்களில் குறிப்பிடுகிறார். மகாபாரத்தை ஆங்கிலத்தில் தொகுத்த அறிஞர்கள் ஹாப்கின்ஸ் என்பவரும் மாக்டொனால்டு என்வரும் இதே கருத்தை ஏற்கின்றனர். - (கீதையின் மறுபக்கம் - 3. அவதாரப் புரட்டு)
மேற்கூறிய பகுதி கி.வீரமணி அவர்கள் கூறியதா? அறிஞர்கள் கூறியதா? அறிஞர்கள் கூறிய கருத்தை திரு.கி.வீரமணி கூறியதா? திரித்துக் கூறுவது மோசடியல்லவா?
தினமலர் என்றாலே அது இனமலர். அசல் ஆரிய நரித்தனங்கள் எல்லாம் அன்றாடம் வெளிவரும். அவர்களே எழுதிக் கொண்டு சென்னை நர்மதா எழுதுகிறார், மதுரை கோதாவரி எழுதுகிறார் என்று போட்டு அரிப்பு தீர்த்துக் கொள்வது அதன் வாடிக்கை!
அதற்கு திரு.வீரமணி அவர்களிடம் உரசுவானேன். திரு.வீரமணி அவர்கள் ஆதாரமின்றி எதையும் பேசக் கூடியவர் அல்ல. அறிவுத் திறன்பற்றி யெல்லாம் விமர்சிக்க உங்களுக்கு ஏது அருகதை! ஒரு விவாத மேடைக்கு ஏற்பாடு செய்யுங்கள்! எது சரி என்று பேசிவிடலாம். அதை விட்டுவிட்டு ஒருதலையாக செய்திகளை அள்ளித் தெளித்து அற்ப ஆதாயம் தேட முயலுவது அடாவடித்தனம் ஆகும்.
கீதையின் மறுபக்கம் நூலில் அவதாரப் புரட்டு என்ற தலைப்பின்கீழ் அறிஞர்களின் கருத்தைக் குறிப்பிடும் திரு.கி.வீரமணி அவர்கள், அதே தலைப்பின் இறுதிப் பகுதியில்,
குப்தர்களின் காலம் புராணிக இந்து மதத்தின் பொற்காலமாக இருந்தது. குப்தர்கள் பாகவதர்களாக (வைணவர்களாக) இருந்தனர். அதனால், விஷ்ணுவின் வாகனமாகிய கருடனைத் தங்கள் அரசின் சின்னமாக வைத்திருந்தனர் என்று கி.வீரமணி அவர்கள் கூறுவதன் மூலம் குப்தர்களின் காலம் சனாதனிகளின், புராணிகளின் பொற்காலம் என்றுதான் குறிப்பிடுகிறார். குப்தர்கள் காலத்தை பொற்காலம் என்று முப்போக்காளர்கள் ஏற்பதில்லை. ஆரிய பார்ப்பன வரலாற்றாசிரியர்கள் தங்கள் ஆதரவு ஆட்சி என்பதால் அதைப் பொற்காலம் என்று உண்மைக்கு மாறாய் எழுதினர்.
எனவே, சந்திரகுப்த மவுரியரின் ஆட்சி சமண, புத்த நெறிகள் பரவிய காலம் அல்ல. அது ஆரிய சனாதனம், ஆதிக்கம் பரப்பப்பட்ட, கோலாச்சிய காலம் என்பதே திரு கி.வீரமணி அவர்களின் கருத்து.
ஒரு பொய்யான தகவலைச் சொல்லி அதன் மீது பசுவைக் கொல்லாதே என்ற கருத்து கி.வீரமணியின் கருத்துக்கு ஏற்றதுபோல் காட்ட முயலுவது கடைந்தெடுத்த கயமைத்தனம் ஆகும்.
புத்தமும், சமணமும் பசுவை மட்டுமே கொல்லக் கூடாது என்று சொல்லவில்லை. எந்த உயிரையும் கொல்லாதே என்று கூறுபவை என்பதை மண்ணுருண்டை மண்டைகள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆரிய பார்ப்பனர்கள் பசுமாட்டை அடித்து சாப்பிட்டதற்கு எத்தனை ஆதாரங்கள் வேண்டும்?
சந்தடி சாக்கில் தாலியைப் பற்றி ஒரு செருகல் செருகியுள்ளீர். தாலிபற்றி விரிவாக விடுதலை, உண்மை ஏடுகளில் விளக்கப்பட்டுள்ளது. தமிழர்க்குத் தாலியில்லை யென்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசன் அவர்களே தமிழர்க்குத் தாலியில்லை என்பதை அறுதியிட்டு உறுதிபட கூறியுள்ளதையும் உண்மை ஏட்டில் வெளியிடப்பட்டுள்ளனர்.
அறிவு நாணயம் இருந்தால், யோக்கியதை இருந்தால், அவற்றிற்கு பதில் சொல். அதை விட்டுவிட்டு அள்ளித்தெளித்தாற்போல் கருத்துக் கூறுவது பித்தலாட்டப் பிரச்சார யுக்தியாகும்.
தாலியகற்றல், மாட்டுக்கறி உண்ணல் இரண்டும் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டதால் ஏற்பட்டக் குடைச்சல் இன்னும் தீராத நிலையில் அதைக் கொட்டித் தீர்க்க கீதையின் மறுபக்கத்தை கிளறியுள்ளது இனமலர்.
ஆய்வுப் பட்டறைக்கு ஆய்வுபற்றி அறிவுரை சொல்லாதீர்!
திரு.கி.வீரமணி அவர்கள் ஆய்வே வாழ்வாகக் கொண்டவர்.
- மஞ்சை வசந்தன்
____
____
